காரைநகரில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்
இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
எஸ்.கே.சதாசிவம்
இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ள “இலகடி வளவு” என்று அழைக்கப்படும் காணி சிதம்பரம் சிவபுரி மடத்தின் ஆதனம். 1936 ஆம் ஆண்டு சிதம்பரம் சிவபுரி மட ஆதீனத்தின் இலங்கைப் பிரதிநிதி தம்பிரான் அடிகளால் 99 வருடக் குத்தகை அடிப்படையில் பாடசாலை நடாத்துவதற்காக வழங்கப்பட்டது. சைவ பரிபாலன சபையின் தலைவர் நியாயதுரந்தர் திரு. தி. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களால் வருடந்தோறும் காணி வாடகையாக ரூபா.10/= செலுத்தப்பட்டது. இப்பாடசாலையானது 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரால் காரைநகர் கிழக்கு (இலகடி) இந்து தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
“இக்காலப்பகுதியில் திரு. ஏ. கனகசபை காரை இந்து ஆங்கில வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அப்போது பாடசாலையின் வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த Feeding School சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் இலகடியில் கோவிலுக்குச் சொந்தமான காணியில் Feeding School இயங்க ஆவன செய்தார். மேலும் உள்ளுர் வாசிகளின் உதவியுடன் தேவையான கட்டிடங்களை அமைப்பதற்கு ஆவன செய்தார்” என Your Country and Your College எனும் நூலில் திரு ஆசைப்பிள்ளை அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சயம்பு மலரில் “அந்த நாள் ஞாபகம்” எனும் தலைப்பிலான கட்டுரையில் பழைய மாணவன் திரு. ந. செல்லையா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் 3 ஆம் வகுப்புச் சித்தியடைந்த பிள்ளைகளைத்தான் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்க முடியும். ஆகவே தமிழ்ச் சைவப் பாடசாலைகள் இல்லாததை உணர்ந்த பெரியார் எங்கள் ஆங்கிலப் பாடசாலை Feeding School மாணவர்களுக்கு ஒரு சைவ தமிழ் தேர்ச்சிப் பாடசாலை ஆரம்பிக்க திட்டமிட்டார். தமிழ் பாடசாலை கீற்றுக் கொட்டிலில் அம்பலச் சட்டம்பியார் தலைமையில் ஆரம்பமானது. சயம்பர் ஆரம்பித்த தமிழ் ஆங்கிலப் பாடசாலை தான் பின் இலகடிக்கு மாற்றப்பட்டு நல்லதம்பி மாஸ்டர் தலைமையில் சிறப்புப் பெற்றது.” இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கியது.
26.03.1936 ஆம் ஆண்டு இந்து சாதனப் பத்திரிகையில் இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் தொடர்பாக பின்வரும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. காரைநகர் இந்துக் கல்லூரி ஆதாரப் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் 21.03.1936 சனிக்கிழமை பி. ப. 6.00 மணிக்கு இந்து ஆங்கில வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அத்தருணம் திரு. சி. செல்லையா அவர்கள் தலைமை வகித்தனர். முதலில் இரு மாணவிகள் வந்தனப் பாட்டுப் பாடினர். இரண்டாவதாக தலைமை ஆசிரியர் அவர்களால் பாடசாலை அறிக்கை வாசிக்கப்பட்டது. மூன்றாவதாக மாணவர்கள் பாட்டு, சம்பாஷனை, நடித்தல், மதப் பிரசங்கம், கோலாட்டம் முதலிய அப்பியாசங்களைச் செய்து காட்டி சபையோரை மகிழ்வித்தனர். நான்காவதாக தலைவர் அவர்களால் மாணவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது. பின் இந்து ஆங்கிலப் பாடசாலை தலைமை ஆசிரியர் திரு.ஏ.கனகசபை B.A அவர்கள் பெற்றோரும் பாடசாலையும் எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்கள் சமயக் கல்வி எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ ச. நவநிதி கிருஸ்ணபாரதி அவர்கள் மகாத்மா காந்தி அடிகள் எனும் விடயமாகவும் சிறந்த உபநியாசங்கள் செய்த பின் தலைவர் குறிப்புரை கூறினார். தiமை ஆசிரியர் கூறிய வந்தனோ உபசாரத்தோடு கூட்டம் இரவு 9.00 மணியளவில் இனிது நிறைவேறியது.
சைவ பரிபாலன சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய இப்பாடசாலையில் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள் நடைபெற்றன. 6 ஆம் வகுப்பிற்கான கல்வி கற்பதற்கு மாணவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்றனர். இக்காலப்பகுதியில் இந்தப் பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாகக் கருதப்பட்டது. காரைநகர் இந்துக் கல்லூரி நிர்வாகம் இப்பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் உதவிகளும் வழங்கி வந்தது. 1960 களின் முற்பகுதியில் பாடசாலை அதிபர் வசிப்பதற்காக இல்லம் அமைப்பதற்கு சைவ பரிபாலன சபை அனுமதி வழங்கியது.
திரு. க. நல்லதம்பி அவர்களின் சேவைக் காலத்தில் அவரது முயற்சியால் காரைநகர் வர்த்தகர்களின் நிதி உதவி மூலம் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. 1960 இல் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட போது இப்பாடசாலை அரசுடைமை- யாக்கப்பட்டது. திரு. க. நல்லதம்பி 1936 முதல் 1963 வரை 27 ஆண்டு காலம் தொடர்ச்சியாகச் சேவையாற்றி மீண்டும் 1966 முதல் 1970 வரை அதிபராகக் கடமையாற்றினார். இப்பாடசாலையில் சராசரி 150 மாணவர்கள் கல்வி கற்றனர். 4 முதல் 5 வரையிலான ஆசிரியர்கள் சேவையில் இருந்தனர். திரு. க. நல்லதம்பியைத் தொடர்ந்து திருவாளர்கள் சுப்பிரமணியம், ஜெகசோதி,. க.தில்லையம்பலம், நடராசா, திருமதி.த.துரைராசா ஆகியோர் கடமையாற்றினர்.
1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது இப்பாடசாலை இடம்பெயர்ந்து கொத்தணி அமைப்புப் பாடசாலைகளுடன் இணைந்து 1991 ஆம் ஆண்டு மே 10ந் திகதியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டு திருஞான சம்பந்தர் வித்தியாசாலையிலும் இயங்கியது. 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதிபர் திருமதி. த. துரைராசா ஓய்வு பெற்றமையாலும் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்
இல. பெயர் காலம்
01 திரு. க. நல்லதம்பி
02 திரு. சுப்பிரமணியம்
03 திரு. க. நல்லதம்பி
04 திரு. ஜெகசோதி
05 திரு. க. தில்லையம்பலம்
06 திரு. நடராசா
07 திரு. க. தில்லையம்பலம்
08 திருமதி. த. துரைராசா 03..10.1994
03..10.1994 முதல் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/1-1.jpg?resize=645%2C431)
![](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/2-1.jpg?resize=645%2C430)
காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
எஸ்.கே.சதாசிவம்
1855 ஆம் ஆண்டு அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை காரைநகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தெல்லிப்பளையில் அமெரிக்கன் மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தராதரமுள்ள ஆசிரியர் திரு. நாத்தான்வேல் இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து திருமதி.முத்தம்மா ஜேக்கப் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் ஊரி, பிட்டியோலை, வேரப்பிட்டி போன்ற தூர இடங்களிலிருந்தும் சடையாளிப் பாடசாலைக்கு அண்மைய சூழலில் வாழ்ந்த மாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்பதற்காக இணைந்து கொண்டார்கள்.
1938 ஆம் ஆண்டு திரு. போல் ஜோனா தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பாலர் வகுப்பு முதல் சிரேஸ்ட பாடசாலை தராதர வகுப்புக்கள் வரை நடைபெற்றது. 250 க்கும் – 300 க்கும் இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். மாணவர்கள் கலை, இலக்கியம், நடனம், நாட்டியம் போன்ற தமிழர் பண்பாட்டுக் கலைகளைக் கற்பதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். இது தொடர்பான விழாக்கள் பாடசாலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. போல் ஜோனா பெற்றோர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த அதேவேளை பெற்றோர்கள் சில தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தினார்.
1946 ஆம் ஆண்டு அளவெட்டியைச் சேர்ந்த திரு. சிதம்பரப்பிள்ளை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 ஆம் வகுப்பு வரை கற்கும் பாடசாலையாக பாடசாலை மாற்றமடைந்தது. மீண்டும் சிறிது காலத்தின் பின் திரு. போல் ஜோனா அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக 9 ஆம் வகுப்பு வரை பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெறலாயின. நெசவுப் பாடம் பாடசாலையில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உயர் கல்வி கற்க முடியாத மாணவர்கள் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது.
1960 களில் ஆங்கிலப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற மனோபாவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் காணப்பட்டது. இதனால் 6 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுச் சென்றனர். 1 முதல் 5 வகுப்பு வரையிலான ஆரம்ப பாடசாலையாக இப்பாடசாலை மாற்றம் பெற்றது. 1962 ஆம் ஆண்டு மிஷனரி பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட பொழுது அரசாங்கப் பாடசாலையானது. 1971 இல் திரு. போல் ஜோனா ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து திரு வைத்திலிங்கம் பதில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமதி. பாக்கியம் ஐயம்பிள்ளை பதில் அதிபராக நியமிக்கப்பட்டு 1975 இல் நிரந்தர நியமனம் பெற்றார். நீண்ட காலத்திற்குப் பின்னர் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றனர். பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியீட்டினர். பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி என்பன கிரமமாக நடைபெற்றது. ஆசிரியர் பற்றாக்குறையின் மத்தியிலும் மாணவர்களுடைய கல்வி செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தது.
1991 இன் ஆரம்பத்தில் 53 மாணவர்கள் கல்வி கற்றனர். போர்ச்சுழல் நிலவியமையினால் 1991 மார்ச் இறுதிப்பகுதியில் பாடசாலை வளாகத்தைக் கைவிட்டனர். 1991 ஏப்ரல் முதல் வாரத்தில் விமானக்குண்டு வீச்சினால் பாடசாலை முற்றாக அழிந்து போயிற்று.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆந் திகதியில் இருந்து காரைநகர் பாடசாலைகள், கொத்தணி அமைப்புப் பாடசாலைகள் என இணைந்து இயங்கிய போது சிறிது காலம் வட்டு இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் பிரப்பன்குளம் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கலாநிதி. ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலய கனிஸ்ட பிரிவுடன் சேர்ந்து இயங்கியது.; 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை ஓய்வு பெற்றமையாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. காரைநகரில் பாடசாலை இயங்கிய போது பேணப்பட்ட ஆவணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கியபோது பேணப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிய ஊர்காவற்றுறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை கையளித்தார்.
கடந்த காலங்களில் காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, அயற் பாடசாலைகளில் அன்றும் இன்றும் உள்ள மாணவர் எண்ணிக்கை என்பன அறிக்கையிடப்பட்டதுடன், பாடசாலையின் அண்மிய சூழலில் மீள் குடியேற்றம் நடைபெறாமை போன்ற காரணங்களை நியாயப்படுத்தி காரைநகர் கல்விக் கோட்டத்தை காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் கட்டுவதற்கான முன்மொழிவுகள் கல்வித் திணைக்களத்திற்கு 2015 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் எழுத்து மூலமான ஒப்புதலும் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டமையினால் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடரவில்லை. காரைநகர் கிராமத்தின் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் நூற்றாண்டு வரலாற்று பெருமை மிக்க பாடசாலை கைவிடப்பட்ட நிலையில் அழிவுற்று வருவதைத் தற்போது காணக்கூடியதாக உள்ளது.
காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்
இல. பெயர் காலம்
01 திரு. நாத்தான்வேல் 1919 – 1938
02 திரு. போல் யோனா 1938 – 1946
03 திரு. சிதம்பரப்பிள்ளை 1946 – சிறிது காலம்
04 திரு. போல் யோனா 1946 – 1971
05 திரு, வைத்திலிங்கம் 1971 – 1972
06 திருமதி. பா. ஐயம்பிள்ளை 1973 – 14.03.1994
14.03.1994 இல் இருந்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/B.jpg?resize=645%2C471)