கனடா காரை கலாச்சார மன்ற அனுசரணையில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை மூலமாக பயனாளிகளுக்கு மரக்கன்று விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்ற அனுசரணையில்  ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை மூலமாக பயனாளிகளுக்கு  மரக்கன்று விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

Oct 1, 2018 அன்று காரைநகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவையால் பல்வேறு விதமான சேவைகள் மக்களுக்கு  கிடைக்கப்பெற்றன.  இதற்கான நெறிப்படுத்தல்  ஒழுங்குகளை   காரைநகர்  பிரதேச செயலகம் மேற்கொண்டது.  காலை 8 மணி முதல்  ஆரம்பமான இப்பணி மாலை 4.30 மணிவரை இடம்பெற்றதாகவும்  இதில் 1650 பொதுமக்கள் கலந்த பயன் பெற்றதாகவும்  பிரதேச சபை பதிவுகள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம்  நடைபெற்ற “உத்தியோகபூர்வப்பணி” நடமாடும்  சேவை மூலமாக   சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல்,  பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெறல், பிறப்பு  அத்தாட்சிப் பத்திரப் பெயர் மாற்றம் சம்பந்தமான விடயங்கள், காணி உறுதி சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் காணி உறுதி பெற்றுக்கொள்ளல்,  மரண சான்றிதழ் பெறல்,  காலந்தாழ்த்திய பிறப்பு,  விவாக,  இறப்புப் பதிவுகள் மற்றும் வீட்டுக் கடன் வசதிகள்,  முதியோர் அடையாள அட்டை வழங்கல்,  சமுர்த்திக் கொடுப்பனவு,  மதத் தலங்களைப் புத்துயிரூட்டல்,  காணி உரிமை சம்பந்தமான பிரச்சினைகள்,  கல்விக் கருத்தரங்குகள்,  மற்றும் கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கல்,  தென்னங் கன்றுகள் மற்றும் வேறு மரக் கன்றுகள் வழங்கல்,  இலவச மருத்துவ சேவை,  மூக்குக் கண்ணாடி வழங்கல் கிராமப்புறப் பாதைகள் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களுக்குத் தீர்வு  உள்ளிட்ட ஏராளமான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருந்தது.

இந்த சேவைகளை செயற்படுத்த காரைநகர் பிரதேச செயலகத்துடன் இணைந்து  காரைநகர் அபிவிருத்திச் சபை,  வர்த்தகர்கள்,  புலம்பெயர் உறவுகள் மற்றும் மன்றங்கள் அனுசரனை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடா காரை கலாசார மன்றத்தின்  அனுசரணையுடன்  500 பயனாளிகளுக்குப் பயன்தரு பழமரக் கன்றுகள் அதாவது தென்னங்கன்று, தேசிக்காய் மற்றும் மாதுளை  போன்றவை  வழங்கப்பட்டன .  இதற்கான உதவுதொகையாக ரூபா 50,000 மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.   அன்றைய தின நிகழ்வில்  மன்றத்தின் தலைவர் கலந்து கொண்டதுடன்  பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை அன்பளிப்பும் செய்தார்  என்பதும் குறிப் பிடத்தக்கதாகும்.

காரைநகர் தந்த பெருமகனார்  கனகநாயகம் அவர்கள் தேக்கு மரக்கன்றுகளை வீடுகள்  தோறும்  அன்பளிப்பு செய்து  மரங்கள்  இயற்கையின் விருட்சம் என்பதை விதந்துரைத்தார்.   அதேபோன்று  கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய  பயன்தரு மரங்கள்  விநியோகம் மூலமாக மக்களும்,  சூழலும்  பயன் பெறும்.