கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்
சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை
(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.