Tag: காரைச் செய்திகள்
காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவர்களின் உதவியுடன் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு 17.03.2017 அன்று பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக் கழக ஆங்கில மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபரான கலாபூசணம், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.. கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், கல்லூரியின் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம்இ கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கலைஇ வணிகமஇ; நுண்கலை ஆகிய துறைகளுக்கு தெரிவாகிய செல்வன் நவரத்தினம் லோகதாஸ், செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன், செல்வி தர்ஜிகா மூர்த்தி, செல்வி ஷஜிதா பாலசிங்கம், செல்வி கஜிந்தினி நதிசீலன், செல்வி ஹீந்துஜா முடிராசா ஆகிய ஆறு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு; கல்லூரியின் பான்ட் அணியின் இசையோடு விருந்தினர்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தேசியக் கொடி கல்லூரிக் கொடி என்பவற்றை முறையே பிரதம விருந்தினர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா அவர்களும் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் மண்டப முன்றலில் ஏற்றிவைத்தனர். கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து அடுத்து மாணவி செல்வி ஜீவிசா சிவசக்திவேல் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கல்லூரியின் பகுதித் தலைவர் திருமதி கலாநிதி சிவநேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து பிரதி அதிபரின் தலைமையுரையும் விருந்தினர்களின் உரையும் கௌரவம் பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் நவரத்தினம் லோகதாஸ் வழங்கிய ஏற்புரையும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய மட்ட போட்டியாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசா இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார்.
அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கும் திட்டத்துக்கு அன்னாரது மகன் திரு.S.P.S.அரிகரன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக உதவி வருவதுடன் இன்றைய நிகழ்விற்கான முழு அனுசரணையினையும் அவரே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் அதற்காக பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இத்திட்டத்தினை சீரியமுறையில் முறையில் நடைமுறைப்படுத்த சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தையும் பாராட்டி நன்றியும் கூறினார். ஆறு மாணவர்களுக்கும் தலா ஏழாயிரம் ரூபா வீதம் ரொக்கப் பரிசிலும் பாராட்டு விருதும் விருந்தினர்களினாலும் பிரதி அதிபரினாலும் வழங்கப்பட்டிருந்தன. கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவர சங்க நிர்வாக சபை உறுப்பினருமான செல்வி சிவரூபி நமசிவாயம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கும் திட்டத்தின் 3வது கட்டமாக இந்நிகழ்வில் திரு.அரிகரனால் வழங்கப்பட்ட உதவி அமைந்திருந்தது. முதற்கட்டமாக க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்கள 2014ம் ஆண்டு 2ம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிற்கும் இரண்டாவது கட்டமாக 2015ம் ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசில்கள் திரு.அரிகரனின் உதவியிலிருந்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி திருக் கோவில் மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2017 அறிவித்தல்!
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி திருக் கோவில் மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2017 அறிவித்தல்!
திருப்பணிகள்,மஹாகும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம் போன்றவை சிறப்புற நிறைவுற பெருநிதி வழங்கி கந்தவேளின் கருணைக்குப் பாத்திரமாகுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்கொடைகளை காரைநகர் இலங்கை வங்கிக் கிளையில் வைப்பில் இடலாம் அல்லது கனடாவில் உள்ள காசிப்பிள்ளை அன்சன்ஸ் ஊடாக அனுப்பிவைக்கலாம்.
காரைநகர் இலங்கை வங்கி கணக்கு இலக்கம்- 78238705
காசிப்பிள்ளை அன்சன்ஸ் தொலைபேசி இலக்கம் – 416 267 8221
தொடர்புகளுக்கு:
இலங்கை – தி.ஸ்ரீஸ்கந்தராசா (தொ.இ :0770870903)
இங்ஙனம்
கருங்காலி, காரைநகர் தர்மகர்த்தாவும், திருப்பணிச்சபையினரும்
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017
எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற இரண்டாம் அமர்வு 07.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் திரு வு. அகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கௌரவ விருந்தினர் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். மேலும் சபாநாயகர் வருகையுடன் சபை அமர்வு இடம்பெற்றது. இவ் அமர்வில் பத்து அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், அமைச்சர்கள் ஆகியோருக்கு அவர்களது பெற்றோர்களால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை
தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை
கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷட விரிவுரையாளர்
மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று"
புகழ்பூத்த கல்விமான்களும், பணபலம் படைத்த வணிகப் பெருமக்களும் நிறைந்து வாழும் காரைநகர் என்ற அழகிய கிராமத்தை, நேசித்து, காதலித்து வாழ்ந்த பெருந்தகைகளுள் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் முதலிடம் பெறுகின்றார். அவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அமரர் அவர்கள் காரைநகர் மண்ணுக்காக, மக்களுக்காக, காரைநகர் இந்துக் கல்லூரிக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகான். நிறைந்த கல்வி அறிவும், சிறந்த ஆளுமைப் பண்புகளும், சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் கொண்ட அதிபர் தியாகராசா அவர்கள் தனது மண்ணுக்கும், மக்களுக்கும், காரைநகர் இந்துக்கல்லூரிக்கும் சேவை செய்வதற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழித்தவர் என்றால் அது மிகையாகாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தன்னால் இயன்றவரை மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பதை காரைவாழ் மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. இந்தச் சேவை மனப்பாங்கு, அவரை அரசியலில் ஈடுபடுவதற்கு மேன்மேலும் உத்வேகத்தை வழங்கியது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக பல இன்னல்களை எதிர் கொள்வது போல அதிபர் தியாகராசாவும் காரை வாழ் மக்களுக்காக பல இன்னல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். இந்த மனநிலையே அவரது மரணத்தையும் நிச்சயித்தது என்பதை இங்கே ஆணித்தரமாக கூறிவிடமுடியும்.
ஆசிரியராக, அதிபராக, காரைநகர் இந்துக்கல்லூரியில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்துக்கல்லூரியில் பௌதீக வளங்களையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக் கொடுத்து ஒரு சிறந்த மாணவ பரம்பரையை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
இவர் அதிபராகப் பொறுப்பேற்ற வேளையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், யாவற்றையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் கண்டார். காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, பாடசாலையை ஒரு சிறந்த 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை அன்னாருக்கு உண்டு. பாடசாலையில் பல புதிய வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூல்நிலையம், புவியியல் அறை போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவித்து, மாணவர்களின் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் மலேசியா சென்று பாடசாலைக் கட்டிடங்களுக்காக நிதி சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. திரு. தியாகராசா அவர்களின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர்.
கல்வியில் எவ்வளவு திறமையாகத் திகழ்ந்தாரோ அதேமாதிரி விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் காட்டினார் உதைபந்தாட்டத்திலும் சங்கீதக்கலையிலும் மிகவும் ஈடுபாடுடையவர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவை செய்த அதிபர் அவர்கள் தனது படிப்பிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். M.A, M.Lit பட்டத்தை முடித்த அவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
தன்னலமற்ற சேவையாளராகவும், மன உறுதி கொண்டவராகவும் விளங்கிய தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மாத்திரமல்ல, அரசியலில் ஈடுபட்டு காரைநகர் மண்ணுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தவர்.அதிபர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஓய்வு பெற்றுக் கொண்ட அதிபர் அவர்கள் வட்டுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து, தளபதி அமிர்தலிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிவாகையும் சூடிக்கொண்டவர்.
கலாநிதி தியாகராசா அவர்கள் பரந்த சிந்தனையாளர் மாத்திரமன்றி சிறந்த சமூகசேவையாளருமாவார். ஊருக்கும், நாட்டுக்கும் உதவ வேண்டும் என்ற பேராசையில் அரசியல்வாதியாக மாறினார். அவரது கொள்கை சோசலிசக் கொள்கையாகும். தமது தொகுதியையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாகும்.
பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு மின்சார வசதி, குடிநீர், குழாய்நீர் விநியோகம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார். காரைநகர் சிவன்கோவில் வீதி (புதுறோட்), கோவளம் வெளிச்சவீடு வீதி, ஆகிய இரண்டையும் கிராமசபை நிருவாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவுக்கு மாற்றம் செய்தார். கோவளம் வெளிச்சவீடு வீதி அகலமாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன்கோவில் வீதி, கோவளம் வீதி ஆகிய இரண்டிற்கும் பேரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அவருடைய காலத்தில் காரைநகர் தபாற்கந்தோருக்கு புதிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. வியாவிலில் ஓர் உபதபால் நிலையம் திறக்கப்பட்டது. காரைநகரில் ஓர் கிராமிய வங்கி திறக்கப்பட்டது மாத்திமல்ல கட்டிடம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்டது.
அவர் தனது பாராளுமன்றப் பதவிக் காலத்தில் குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும். சுயநலம் பாராது பொதுநல எண்ணத்துடன் செயற்பட்ட அமரர் அவர்கள் தனது அறுபத்தைந்தாவது அகவையில் அகாலமரணத்தைத் தழுவிக் கொண்டது. யாராலும் ஜீரணிக்க முடியாத மாபெரும் துயரச் சம்பவமாகும்.
நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னுடன் அழைத்துக் கொள்வான் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போலவே அமரர் தியராகராசாவையும் இறைவன் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும். அவர் அகாலமரணத்தைத் தழுவாது இருந்திருந்தால் எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைத் தொடர்ந்தும் செய்திருப்பார். அவருடைய இழப்பு காரைநகர் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஓர் பாரிய இழப்பாகும்.
அவருடைய நல்ல எண்ணங்களும், உயர்ந்த சிந்தனைகளும் இப்பிரபஞ்சத்தில் நிலைத்து, நிறைந்து நின்று சிறந்த சேவையாளர்களையும், கல்விமான்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், தியாகிகளையும் உருவாக்கும் என்பதே உண்மையாகும்.
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
13 – 03 – 2017
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா காட்சிகள்!
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மாசி மக பெருவிழாவின் தேர்த்திருவிழாவில் 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசம் வானைப்பிளக்க வர்ணபகவான் மழை பொழிய அம்பாள் தேரிலே வலம்வந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
அம்பாளுக்கு புதிய சித்திரத்தேரினையும் தொடர்ந்து புதிய தேர் முட்டியையும் பல மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுத்த தேர்த் திருவிழா உபயகாரரான சண்முகம் சிவஞானம் அவர்களுக்கு 'காரை பாரிவள்ளல்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
காரைநகர் அபிவிருத்தி சபை வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்!
காரைநகர் அபிவிருத்தி சபை
வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்
மேற்படி எமது சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27.03.2017 திங்கட்கிழமை அன்று காரைநகர் அபிவிருத்திச் சபையின் நூலகத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.அன்றைய தினமே புதிய நிர்வாகசபை தெரிவும் நடைபெறும்.
சபையின் யாப்பின்படி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் சபையின் வருடாந்த அங்கத்துவ பணத்தையோ அல்லது ஆயுட்கால அங்கத்துவ பணத்தையோ 25.03.2017 க்கு முன்னர் சபையின் காரியாலத்தில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
குறிப்பு:- பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தலைவர்
காரை அபிவிருத்தி சபை
KDS GM NOTICE
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி திருக் கோவில் மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2017 அறிவித்தல்!
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி திருக் கோவில் மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2017 அறிவித்தல்!
திருப்பணிகள்,மஹாகும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம் போன்றவை சிறப்புற நிறைவுற பெருநிதி வழங்கி கந்தவேளின் கருணைக்குப் பாத்திரமாகுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்கொடைகளை காரைநகர் இலங்கை வங்கிக் கிளையில் வைப்பில் இடலாம் அல்லது கனடாவில் உள்ள காசிப்பிள்ளை அன்சன்ஸ் ஊடாக அனுப்பிவைக்கலாம்.
காரைநகர் இலங்கை வங்கி கணக்கு இலக்கம்- 78238705
காசிப்பிள்ளை அன்சன்ஸ் தொலைபேசி இலக்கம் – 416 267 8221
தொடர்புகளுக்கு:
இலங்கை – தி.ஸ்ரீஸ்கந்தராசா (தொ.இ :0770870903)
இங்ஙனம்
கருங்காலி, காரைநகர் தர்மகர்த்தாவும், திருப்பணிச்சபையினரும்
காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவியேற்று கடமையாற்றி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டு காலமாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி அதிபராக மாற்றாலாகிச் சென்றமையை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி.சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons) Dip.In Ed. ,SLPS-3 அவர்கள் பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சிவந்தினி வாகீசன் தமது தொடக்கக் கல்வியை வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையிலும் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றவர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியாகிய திருமதி.சிவந்தினி வாகீசன் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தவர் ஆவர். பாடவிதானச் செயற்பாடுகளுடன் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக் குழு பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்த ஒர் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியை ஆவார்.
இவர் கல்லூரியின் முன்னாள் உப-அதிபரும், கவிஞருமாகிய அமரர்.சி.பொன்னம்பலம் அவர்களின் பெறாமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாம் கல்வி கற்ற பாடசாலை மீதும் தாம் பிறந்து வளர்ந்த ஊர்மீதும் பற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானையும் வேண்டுகின்றது.
யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்
யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்
யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 17.01.2017 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டிகள் கல்லூரி முன்றலிலே ஆரம்பித்து காரைநகர் சுற்றுவீதியூடே முழுமையாக ஓடி நிறைவேற்றப்பட்டது.
முதல் 5 இடங்களையும் பெற்ற வெற்றியாளர்கள்
ஆண்கள்
நிலை மாணவர் பெயர் இல்லம்
1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் க.கஜந்தன் நாவலர் இல்லம்
3ம் இடம் ப.தவக்குமார் நாவலர் இல்லம்
4ம் இடம் சி.ராகுலன் இராமநாதன் இல்லம்
5ம் இடம் க.ஐங்கரன் இராமநாதன் இல்லம்
பெண்கள்
நிலை மாணவர் பெயர் இல்லம்
1ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
2ம் இடம் ம.பவித்திரா இராமநாதன் இல்லம்
3ம் இடம் ந.சாந்தினி நாவலர் இல்லம்
4ம் இடம் சு.சரணியா இராமநாதன் இல்லம்
5ம் இடம் பு.தர்மினி நாவலர் இல்லம்
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு காரைநகர் மணிவாசகர் சபையினரால் காரைநகர்ப் பாடசாலை மாணவர்கட்கிடையே நடாத்தப்பட்ட பேச்சு, பண்ணிசை, கதைகூறல், மனனம் ஆகிய போட்டிகள் யாழ்ற்ரன் கல்லூரியில் 20-02-2017 திங்கட்கிழமை பி.ப.1.30 க்கு ஆரம்பமாகி நடைபெற்றன.
காரைநகர் மணிவாசகர் சபை
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு காரைநகர் மணிவாசகர் சபையினரால் காரைநகர்ப் பாடசாலை மாணவர்கட்கிடையே நடாத்தப்பட்ட பேச்சு, பண்ணிசை, கதைகூறல், மனனம் ஆகிய போட்டிகள் யாழ்ற்ரன் கல்லூரியில் 20-02-2017 திங்கட்கிழமை பி.ப.1.30 க்கு ஆரம்பமாகி நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், போட்டி நடுவர்கள், போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வினை மணிவாசகர் சபைத்தலைவர் ஆரம்பித்து வைத்தார். இவை ஆரம்பப் பாடசாலை மாணவர்கட்கான போட்டிகள் இடைநிலைப்பிரிவு மாணவர்களில் போட்டிகள் 22-02-2017 நடைபெறும்.
மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரின் இலக்கியத்தை காரை மண் தந்துள்ளது! ‘காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்’ அறிமுக விழாவில் ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ லலீசன் உரை
மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரின் இலக்கியத்தை காரை மண் தந்துள்ளது!
'காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்' அறிமுக விழாவில் 'செந்தமிழ்ச் சொல்லருவி' லலீசன் உரை
காரைநகர் அன்னை இன்று இன்னும் அக மகிழ்கின்றாள். எந்தத் துறை சார்ந்தாலும் அந்தத் துறை சார்ந்து முதன்மையானவர்களைத் தந்த மண்ணாக காரைநகரைப் பார்க்கின்றோம். அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தப் பதியானது மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரது இலக்கியத்தைத் தந்துள்ளது. அத்தகைய இலக்கியங்கள் அழியாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்கின்ற நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் இந்த நூல் பதிப்பாக்கம்செய்து வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய சிறந்த வரலாற்றுப் பணியாகும்.
இவ்வாறு சென்ற 12-01-2017ல் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றிருந்த 'காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்' வெளியீட்டு விழாவில் ஆய்வுரை வழங்கிய கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' ச.லலீசன் தெரிவித்தார். புலவரின் பாடல்கள் சிலவற்றை எடுத்து அவற்றிற்கான பொருள்களையும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளையும் சுவை படக்கூறியதுடன் அவ்வப்போது பாடல்களுடன் தொடர்புபடுத்தி காரை மண்ணின் மகத்துவத்தினை எடுத்துக் கூறிய இவரது உரை சபையின்கண் சமூகமளித்திருந்த அறிஞர்களை மட்டுமல்லாது சாதாரண மக்களையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.
லலீசன் தமது ஆய்வுரையில் மேலும் தெரிவித்ததாவது:
ஒரு ஊரிலே பிச்சைக்காரன் ஒருவன் மர நிழலின் கீழேயிருந்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம் அம்மா பிச்சை! ஐயா பிச்சை! என யாசித்துக்கொண்டிருந்தான். இந்த யாசித்தலுக்கு அந்த ஊரே உதவி செய்தது. திடீரென அந்தப் பிச்சைக்காரன் அந்த இடத்திலேயே இறந்து விட்டான். ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி தங்கள் ஊரிலே பிச்சை எடுத்தவனுக்கு என்ன கைமாறுசெய்யலாம் என சிந்தித்தார்கள். இந்த ஊரிலே வாழ்ந்து இந்த ஊரிலே பிச்சை எடுத்து இந்த ஊர்ச் சோற்றை உண்டு உடம்பு வளர்த்த பிச்சைக்காரனை அந்த இடத்திலேயே அடக்கம் செய்து விடலாம் என முடிவு செய்தார்கள். அந்த இடத்தில் குழி தோண்டும்போது அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. குழியிலிருந்து தங்கப்பாளங்கள் மிதந்து வந்தன. பிச்சைக்காரன் தனது காலடியிலே தங்கப்பாளங்கள் இருந்துள்ளன என்பதை மறந்து அல்லது மறைத்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம் அம்மா பிச்சை! ஐயா பிச்சை! எனக் கேட்டுக்கொண்டிருந்தானே! என்ன கோலம் இது என வியப்புற்றனர்.
ஒரு விதத்தில் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான்! சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் என மரபார்ந்த இலக்கியச் செல்வமும் செழுமையும் எங்களுடைய மொழிக்கு இருக்கிறது. அதன் வழி பயின்ற ஒரு மரபுக் கவிதைச் செல்வம் எங்களிடம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விடுத்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம யாசகம் கேட்பதைப்போல கவிதை யாசகம் கேட்டு இலக்கிய யாசகம் கேட்டு வாழ்கின்ற மனிதர்களை இன்று பார்க்கின்றோம்.
ஒரு குழியிலே இருக்கக்கூடிய இன்னொரு தங்கப் புதையலாகத் தான் காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகளைப் பார்க்கின்றேன். அத்தகைய பெரும் செல்வத்தை காரைநகரிலே வாழ்ந்த புலவர் ஈழத்து இலக்கிய அன்னைக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.
இவரது கவிதையோட்டத்தை பார்க்கின்றபோது மிகச் சில பாக்களைத்தான் இவர் பாடியிருப்பாரா எனக் கேட்கத் தோன்றுகின்றது. நிச்சயமாகவில்லை. இந்த நுர்ல் 75 பக்கங்களைக்கொண்ட சிறிய கையடக்க நுர்லாக மலர்ந்திருக்கிறது. இவருடைய சேகரிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும். துரதிஷ்டவசமாக அவை எமது கைக்கு கிடைக்கவில்லை.
புலவருடைய பேரனார் அரிதில் முயன்று வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இந்த இலக்கியங்களைப் பெற்று அழகுற நூலாக தொகுத்திருக்கின்றார். 2009ல் இந்த நூல் அழகாக வெளிவந்துள்ளது. என்னுடைய குருநாதர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் மிகச் சிறப்பான அணிந்துரையை இந்நூலுக்கு வழங்கியுள்ளார்.
இவருடைய பாடல்களை பொருள்பட உரைப்பதிலே இரண்டு வகுதிகளை உள்ளே பார்க்கின்றேன். ஒன்று சமூகம் சார்ந்தது. மற்றையது பக்தி அல்லது சமயம் சார்ந்தது. சமூகம் சார்ந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருப்பார் எனக் கருதினாலும் அக்காலத்து யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் நிலை குறித்துப் பாடிய ஒரு கும்மி மாத்திரம் கிடைத்திருக்கின்றது. அந்தக் கும்மி ஒன்றே புலவருடைய பாட்டுத் திறத்தினை எங்களுக்கு பறைசாற்றுகின்றது.
ஸ்ரீமான் சிதம்பரப்பிள்ளை நெவின்ஸ், வித்துவசிரோன்மணி ந.ச.பொன்னம்பலபிள்ளை ஆகியோருடைய தடத்திலே பயணித்த காரணத்தினால் அவர்களுடைய சொற்களைக் கேட்டுத்தான் புலவருடைய தமிழ் நடை பயில்கின்றது. புலவருடைய சொல்லாட்சி மிக அற்புதமானது. அவருடைய நாவிலே சரஸ்வதி நர்த்தனமாடுவதைப்போல புலவர் தனது சொல்லாட்சியை மிக அழகாகக் கையாண்டுள்ளார். புலவரிடத்தில் சொல்லாட்சியுடன் பொருளாட்சியும் இருந்திருக்கிறது. சொல்லாட்சியையும் பொருளாட்சியையும் ஒன்றுசேர சங்கமிக்கச் செய்து பயணிக்கின்ற வல்லமை நாகமுத்துப் புலவருக்கு கைவந்த கலையாகவுள்ளதைப் பார்க்கின்றேன். சமயம் சார்ந்து பதிகங்கள், ஊஞ்சல்கள், பக்திரசக் கீர்த்தனைகள் என பல பாடல்களை இவர் தந்திருக்கின்றார். ஆனால் தமிழ் மாணவன் என்ற வகையில் என்னை மிகவும் கவர்ந்தது சமூகம் சார்ந்து இவர் தந்திருக்கின்ற கலிகால வேடிக்கைக் கும்மியாகும். ஒரு புகைப்படப்பிடிப்பாளன் எப்படி ஒரு நிகழ்வினை புகைப்படம் எடுத்து அம்பலப்படுத்துகிறானோ அதேபோன்று 1925ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து மக்களுடைய நிலையினை புகைப்படப்பிடிப்பாளன் போன்று இக்கும்மிப்பாடல்கள் ஊடாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். புலவருக்கு நிறைந்த திருக்குறள் ஆட்சியும் இருந்துள்ளது என்பதை திருக்குறளை இக்கும்மிப் பாடல்களிலே பொதித்து வைத்ததன் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது.
ஒரு காலத்தினுடைய ஆட்சிபெற்ற இலக்கிய வடிவமாக கும்மிப் பாடல்கள் இருந்திருக்கிறது. மனதிலே தோன்றுகின்ற எண்ணங்களை ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்ற சிறப்பான வடிவமாக கும்மி இருந்துள்ளது. அந்தவகையிலே நாகமுத்தப் புலவர் அவர்கள் இதனை சிறப்பான முறையில் கையாண்டுள்ளார்.
அந்நிய நாட்டினிற் பீயேப் பட்டம் பெற்ற
ஆசார்பிர சங்கரைக் கூட்டிவந்து
இன்னிய செந்தமிழைப் பறங்கிப் பாடைக்
கேற்றுகின்றாரேடி ஞானப்பெண்ணே.
என்ற பாடல் மூலமாக புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ இந்த மண்ணுக்கு பிரசங்கிகள் வருவதை புலவர் விரும்பவில்லை என்பதை அறியமுடிகிறது. பண்டிதர் அருளம்பலவனாரின் திருவாசக உரை, பதிற்றுப்பத்து உரை, வித்துவான் F.X.C.நடராசாவின் இலக்கிய வரலாற்றுச் செய்திகள் என்பனவற்றை உலகமே காரைநகரைப் பார்த்துத்தான் அறிகிறது. அப்படியென்றால் காரைநகருக்கு எதற்காக பிற ஊர்களிலிருந்து அறிஞர்கள் வரவேண்டும் என்கின்ற நியாயமான கேள்வி புலவரிடம் தொக்கி நிற்பதைப் பார்க்கிறேன்.
சொல்லுங் கருவிநூல் கற்றாரல்லர் கலை
தோய்ந்த விடய மறிந்தாரல்லர்
அல்லும் பகலும் பிரசங்க மென்றுதுண்
டச்சிட் டளிக்கின்றார் ஞானப்பெண்ணே.
எனக் கூறுகின்ற அந்தக் காலத்துப் பிரசங்கிமாரின் நிலை இந்தக்காலத்து எம்மவர்க்கும் பொருந்தும் என நான் நினைக்கின்றேன். கருவி நூலினைக் கற்றவானால் தான் ஒழுங்கான முறையில் வார்த்தைகளை செப்பமுடியும் என்கின்ற செய்தியை இப்பாடல் ஊடாக ஆணித்தரமாக வலியுறித்தியுள்ளார்.
எமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் தமிழ்ப் பிரதேசங்கள் படிப்படியாக பறிபோய்கொண்டிருப்பதாகும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சந்ததி விருத்தியின்மை காணப்படுகிறது. இதனைப் புலவர் 1925ஆம் ஆண்டே தீர்க்கதரிசியாகவிருந்து கங்கணம்கட்டி ஒரு செய்தியை பின்வரும் கும்மிப்பாடல் மூலமாகச் சொல்லியிருக்கின்றார்.
பன்னும் முன்னாட் பெண்கள் பன்றிக் குட்டிபோட்ட
பான்மை பலமகர் பெற்றெடுத்தார்
மன்னுமின் நாளி லிரண்டொன் றிணிவில்போய்
மாளக் கொடுக்கின்றார் ஞானப்பெண்ணே.
காரைநகர் மக்கள் இணுவில் வைத்தியசாலைக்குச் சென்று இரண்டொரு பிள்ளைகளைப் பெற்ற பின்னர் நிறுத்தி விடுகிறார்களே! என தனது வேதனையை இப்பாடலில் பதிவுசெய்திருக்கிறார்.
'படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில' என்பது போல அநியாயங்களைச் செய்துவிட்டு அதற்குப் பரிகாரம் தேடுவதுபோல் சிவார்ச்சனை செய்கின்றார்களே என்ற புலவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக பின்வரும் பாடல் உள்ளது.
முன்னுஞ் சிலர் பஞ்ச பாதகங்கள் செய்து
முற்பணங் கையிலிருப்பதனாற்
பன்னும் சிவார்ச்சனை செய்து நிவாரணம்
பண்ணுகின்றாரேடி ஞானப்பெண்ணே.
காரைநகர் நாமுத்துப் புலவருடைய பாடல்கள் மண்ணோடு மண்ணாகிப் போகாமல் கறையானுக்கு இரையாகாமல் தீக்கு இரையாகி காற்றோடு காற்றாக கலக்காமல் அவருடைய பேரனார் கனக சிவகுமாரன் வரலாற்றிலே போற்றக்கூடிய மிகச் சிறப்பான பணியினைச் செய்திருக்கின்றார்.
புலவருடைய நாமம் இந்த வையகம் உள்ளவரை தமிழ் உள்ளவரை வாழும். தமிழ் மாணவர்களுடைய ஆய்வுப் பொருளாக நாகமுத்துப் புலவர் அமையவேண்டும். புலவர் குறித்த ஆய்வுகள் செழிப்படையவேண்டும். தமிழ் ஆர்வலர் என்ற வகையிலும் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுப்பவன் என்ற வகையிலும் என்னை இங்கு அழைத்து நாகமுத்துப் புலவரை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நான் ஆய்வுரை செய்தேன் என்பதைக் காட்டிலும் இதனூடாக இந்த நூலினை நூறு தடவைகள் படித்து புலவரை அறிந்துகொண்டேன்.
கடந்த ஆண்டு இந்த மண்டபத்தில் நடைபெற்ற 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த அருணாசல உபாத்தியாயர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. ஆயினும் கனடா சைவ சித்ததாந்த மன்றத்தினுடைய தலைவர் சிவநெறிச்செல்வர் விசுவலிங்கம் அவர்கள் சிக்கெனப் பிடித்து கொழும்புக்கு அழைத்து என்னைப் பேசவைத்தார். அதன் தொடர்ச்சியாக எமக்கிடையே பாசப் பிணைப்பு உருவானது. இதன் காரணமாக சைவ ஆசிரியர் கலாசாலைகளின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட காரைநகர் பெற்றெடுத்த செல்வத்தை உணர்ந்துகொண்டேன். அதன் பயனாக தினக்குரல் ஆண்டு மலரிலே அருணாசல உபாத்தியாயர் குறித்த கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. அதேபோன்று நாகமுத்துப் புலவரைப் பற்றி தெளிவுறுவதற்கு இன்றைய அறிமுக விழா வழிசெய்திருக்கின்றது.
யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்
யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்
2017 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 2017.02.03 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கானது காரைநகர் சுற்றுவீதியூடாக முழுமையாகவும், பெண்களுக்கானவை துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து களபூமி வலந்தலைச்சந்தியூடாக கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் ஓட்டத்தை முழுமையாக முடித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்
ஆண்கள்
மாணவர் பெயர் இல்லம்
1. செ.நிறோசன் நாவலர் இல்லம்
2. வி.மனோகரன் இராமநாதன் இல்லம்
3. பே.கஜரூபன் இராமநாதன் இல்லம்
4. கி.கனிஸ்ரன் விபுலானந்தன் இல்லம்
5. ந.கரிகரன் விபுலானந்தன் இல்லம்
பெண்கள்
மாணவர் பெயர் இல்லம்
1. ந.ரஞ்சினி நாவலர் இல்லம்
2. பு.தர்மினி நாவலர் இல்லம்
3. ம.பவித்திரா இராமநாதன் இல்லம்
4.ந.சாந்தினி நாவலர் இல்லம்
5.ந.கயல்விழி நாவலர் இல்லம்
காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு
கடந்த ஆகஸ்ட் 2016 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.
காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
வர்த்தகபிரிவு
மாணவர் பெயர் பெறுபேறு மாவட்டநிலை
செல்வி டிலானி கார்த்திகேசு – A B C 131
செல்வி தீபிகா நவரத்தினம் – A 2B 155
செல்வன்.தர்மகுலசிங்கம் நாகரஞ்சன் – A B C 221
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை – A B C 240
கலைப்பிரிவு
மாணவர் பெயர் பெறுபேறு மாவட்டநிலை
செல்வி யாழினி நடேசு – 2B C 314
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் – 3B 362
செல்வன் கனகலிங்கம் வினோதன் – B 2C 413
செல்வி தேவராசா றோமிலா – A B S 506
தொழினுட்பப்பிரிவு
மாணவர் பெயர் பெறுபேறு மாவட்டநிலை
செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன்- B C S 79
செல்வி நிரோஜினி பாலகிருஸ்ணன்- 2 C S 160
செல்வி காயத்திரி புவிராஜசிங்கம் – 3S 265
செல்வி பிரசாளினி சிவசுப்பிரமணியம் – 3S 284
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் இரண்டாம் கட்டமாக காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வழங்கப்பட்டது.
காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு த.பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறுமிடத்து அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதனையடுத்து காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை செயலாளர் கனக சிவகுமாரன் அவர்கள் காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவில் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியினை கரைநகர் அபிவிருத்திச் சபையிடம் கையளித்து அதன் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குமாறு கேட்டிருந்தார்.
அவருடைய கோரிக்கைக்கமைய கற்றல் உபகரணங்கள் பாடசாலை மாணவர்களில் இரண்டாவது தொகுதியினருக்கு வழங்கப்பட்டது. அடுத்த தொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 9ம் திகதி மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற உள்ள கும்பாபிஷேக தின சங்காபிஷேக உற்சவத்தின் போது வழங்கப்பட உள்ளது.
காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான 03.02.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகல்,இரவுத் திருவிழாக் காட்சிகள்.
காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான 03.02.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகல்,இரவுத் திருவிழாக் காட்சிகள்.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் வெள்ளிக்கிழமையும் இடம்பெற உள்ளது.
யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்
யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்
யாழ்ற்ரன் கல்லூரியின் நிறுவுனர் தினம் 02.02.2017 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONION) அவர்களும்சிறப்பு விருந்தினராக அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோயில் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ மேருகிரிசர்மா (YARLTONION) அவர்களும் , கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். "நாவலரின் சைவப்பாரம்பரியம்" என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.
யாழ்ற்ரன் கல்லூரியினை 1961 இல் அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த சைவ வித்தியாபரிபாலன சபையின் கல்லூரி முகாமையாளராக சேவையாற்றிய அமரர்கள் S.கணபதிப்பிள்ளை (தலைப்பா), K.S.வேலுப்பிள்ளை, K.S. சோமசுந்தரம், A.T. ஆறுமுகம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.