கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30க்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய திருமதி வாசுகி தவபாலன் தலைமையில்; நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் போசகர் திரு.வி.நாகேந்திரம், கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர் திரு.த.பரமானந்தராஜா, செயலாளர் திரு.தி.பிரமேந்திரதீசன், பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உப-பொருளாளர் திரு.மா.கனகசபாபதி, சுவிஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.ஆ.செந்தில்நாதன்;; ஆகியோர் உட்பட சுமார் எழுபத்தைந்து வரையான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர்.
இறைவணக்கம், அகவணக்கத்தினைத் தொடர்ந்து செயலாளர் திரு.க.நிமலதாசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பன முறையே அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், பொருளாளர் திரு.அகிலன் சுந்தரலிங்கம் ஆகியோரினால் சபையில் வாசித்து சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வறிக்கைகள் அடங்கிய பிரதி நூல் வடிவில் வெளியிடப்பட்டு சமூகமளித்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அடுத்ததாக 2015 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
பதவி வழியால் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைவராக இருப்பார். திரு.செ.அருட்செல்வம் உப-தலைவராகவும் திரு.க.நிமலதாசன் செயலாளராகவும், திரு.வி.ஹம்சன் உப-செயலாளராகவும், திரு.சு.அகிலன் பொருளாளராகவும், திரு.த.சற்குணம் உப-பொருளாளராகவும் மேலும் எட்டு நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து தலைவர் திருமதி.வாசுகி தவபாலன் தமது உரையில் புதிய நிர்வாகத்தை வரவேற்பதுடன் பழைய நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்து சபையோர் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் உப-தலைவர் திரு.சி.நேசேந்திரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது வரலாற்றில் எக்காலத்திலும் அழியாத கருங்கல்லிலான சிலைகளின் மகத்துவத்தை விளக்கி ஸ்ரீமான்.முத்து சயம்பு அவர்களிற்கும் கொடைவள்ளல் அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலையினை பாடசாலையில் நிறுவ வேண்டும் எனவும் அதற்கான செலவுகளை தாமே பொறுப்பேற்க முடியும் என்ற கருத்தினையும் முன்மொழிந்து பேசினார்.
திரு.சி.நேசேந்திரம் அவர்களின் கருத்தினை வழிமொழிந்து உரையாற்றிய கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.த.பரமானந்தராஜா இக்கல்லூரியின் வெள்ளிவிழா அதிபராகச் சேவையாற்றி கல்லூரியில் அவரது சேவைக் காலத்தைப் பொற்காலமாகப் பதிவாக்கிய கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலை அமைத்தல் வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்.
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் எமது காரைநகரைச் சேர்ந்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சிந்தனையில் கருக்கொண்டு அமைக்கப்பட்டதே இப்பாடசாலை ஆகும். காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான காரைநகரின் சைவக் கல்விப்பாரம்பரியத்தின் முன்னோடியான மகான் சிவத்திரு.ச.அருணாசல உபாத்தியாருக்கும் கருங்கல்லிலான சிலை எமது பாடசாலையில் நிறுவப்படும்போதே எமது கல்லூரியின் வரலாறு முழுமை பெறும் என்று அறிவுபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது கருத்தினை ஆணித்தரமாக முன்வைத்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலனின் முன்மொழிவினை உள்வாங்கிய சபையினர் மத்தியில் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்கள் கருத்துரைக்கும்போது மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கும் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களுக்கும் சிலைகள் நிறுவும் செலவினை கனடா-காரை கலாச்சார மன்றம் எற்றுக்கொள்வது குறித்து நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்ததுடன் சாத்தியப்படாதவிடத்து கலாநிதி.ஆ.தியாகராசாவிற்கு சிலை நிறுவும் செலவினை தாமே ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலை வரலாற்றில் பதிவாகி என்றென்றும் நினைவு கூரப்படவேண்டிய பெரியார்கள் நால்வருக்கும் கருங்கல்லில் சிலைகள் நிறுவவேண்டும்; என்ற முன்மொழிவுகள் சபையில் ஆட்சேபனையின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை உப-பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களிற்கு எமது சங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும்; இவை தொடர்பான செயற்திட்டங்களுக்கு உதவிகோரப்படும் பட்சத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி கல்லூரியின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்ற பாடசாலையின் பெயரினை காரைநகர் இந்துக் கல்லூரி என்ற பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை திரு த.சற்குணம் அவர்களினால் கொண்டு வரப்பட்டபோது சபையோரின் அபிப்பராயத்தினை தலைவர் கோரியபோது இப்பிரேரணை எதிர்ப்பின்றி; ஏகமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது.
சபையோர் கருத்துரையின்போது கனடா-காரை கலாச்சார மன்ற செயலாளர் திரு.தி,பிரமேந்திரதீசன், யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் திரு.வே.சபாலிங்கம் உள்ளிட்ட பலர் தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
அதிபர் திருமதி வாசுகி தவபாலன் உறுப்பினர்களின் கருத்துகளிற்கும் வினாக்களுக்கும்;; புள்ளிவிபர வரைபடங்களுடன் விரிவாகப் பதிலளித்துப் பேசினார். எமது பாடசாலையின் ஆளணி வளம், மாணவர்கள் மற்றும் வளங்கள் என்பனவற்றை வைத்துக் கொண்டே நாம் அதிஉயர் கல்வித்தரப் பெறுபேறுகளைப் பெறுவதற்காகப் பிரயத்தனம் எடுப்பதாகவும் பாடசாலையின் கல்வித்தர விருத்திக்கான வளங்களை வழங்குவதற்காகவே கல்வித்திணைக்களம் சேவையாற்றுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சிறப்பாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் காத்திரமான பங்களிப்புகளே பாடசாலையின் உடனடித் தேவைகளிற்கும் முக்கியமான திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு பாடசாலையின் சுமூகமான செயற்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற இப்பொதுக்கூட்டம் செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து திரு.ஆ.செந்தில்நாதனின் இறைவணக்கத்துடன் இனிதே நிறைவுற்றது.
புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:
தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம் (ஆசிரியர்)
செயலாளர்: திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்)
உப-செயலாளர்: திரு.வி.ஹம்சன் (வங்கி அலுவலர்)
பொருளாளர்: திரு.சுந்தரலிங்கம் அகிலன் (கூட்டுறவுப் பரிசோதகர்)
உப-பொருளாளர்: திரு.த.சற்குணம் (தொழிலதிபர்)
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
1. திரு.நல்லதம்பி யோகநாதன் (தொழிலதிபர்)
2. திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் (பல்கலைக்கழகவிரிவுரையாளர்)
3. திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் (ஆசிரியர்)
4. திரு.பாலசுப்பிரமணியம் கருணாகரன் (தபாலக அலுவலர்)
5. பிரம்மஸ்ரீ.கு.சரவணபவானந்த சர்மா (ஆசிரியர்)
6. திரு.கயிலாயபிள்ளை நாகராசா (நீதிமன்ற அலுவலர்)
7. திரு.பாலசிங்கம் இராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
8. திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம் (ஓய்வுநிலை அரச அலுவலர்)
உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன்
![OLYMPUS DIGITAL CAMERA](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2015/01/AGP26.jpg?resize=645%2C484)