Tag: கட்டுரைகள்

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

   Dr.A.Thiagarajah3

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். 

தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி " நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார் " என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வன் விநோதன் கனகலிங்கம் எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில்  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால்  காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

                             நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

                     கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்.

 

"இந்து சமுத்திரத்தின் முத்து" எனவும்,"தெட்சணகைலாயம்" எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் "சிவபூமி" எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.

இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்

                     "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                              தோன்றலின் தோன்றாமை நன்று."   

என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார். 

இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,

                                "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                                       உயிரினும் ஓம்பப்படும்."

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.

    இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.

    இவர் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.

    இப்பெரியார் 1942 இல் "மனைத்தக்க மாண்புடையாள்" அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.

    பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.

    இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.

    கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.

    சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும் 

                              "எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
                                    திண்ணியர் ஆகப் பெறின்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950 ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் "காரைநகர் இந்துக் கல்லூரி"என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் "சயம்பு" என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் "சியவச" நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.

    இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார். 

இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.

    இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் "கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.

    இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,

                       "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
                                  பெருமையுடைத்து இவ்வுலகு"

என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,

                       "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
                           தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

                                                              

 

 

 

காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது

        காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது

1
திண்ணபுரத் தேனே என் திரவியமே உனைப் பிரிந்து
திண்ணையிலிப் பேரேறாய்ப் பொருள் முயங்கித் திரிகின்றேன்- என்
மண்ணை விடுத்தேகி மேற்குலகில் மலக்குற்றேன்! – நானோ
கண்ணையிழந்து கதறுகிறேன்! எப்போநின் கழலடிக்குத் திரும்புவதோ?

2
திரும்புவனோ பரிசில் பரிசில் வாழ்வறுத்து அடிக்
கரும்பன்ன காரைநகர்த் தாயின் மடிச் சுவர்க்கம்!
அரும் பொன்னையீந்து கரிவாங்கும் கண்ணிலியேன்!
திரும்பவுமோர் விதிசெய்வாய் திரும்பிடவே திருவூர்க்கே!

3
திருவூர்;த் தொலைத்து தொரந்தோவிற் தியக்குற்றேன்
பெருவூர் மொன்றியலும் வருவூர்க்கு வழியாமோ? கற்பக
தருவூரான் என் சந்ததியும் நோர்வேயில் நிலைத்து – நீள்
துருவவூரிற் திரிபடைந்த வாழ்வாமோ? திசைகாட்டாய் புலம்புகிறேன்!

4
புலம் பெயர்ந்தேன் பெருமானைப் பிரிந்தேன் முன்னாள்
நலம் நிறைந்த நீற்றை நுதலிட்ட நின்னடியார் நெடுங்கழுவேற்றி 
வலம் குறைத்து நந்தேச நலத்தை இன்றளவும் குழியிட்ட 
வலங் குறைந்தார் சந்ததி வாழிடம் புக்கேன் இலண்டனிலே!

5
இலண்டன் நகராமோ இனியானைப் பிரிந்த எனக்கு நரகாமோ!
செருமெனியின் செல்வமெலாம் திருவாமோ அன்றி எருவாமோ!
திருமேனிப் பொடியுடையாய் திருவருளைத் தாராயோ! சிவகாமி
கருமேனித் தாயே! திருவையாற்றின் தமிழே! கரைசேராய்! 

6
கரைதெரியா நானும் கலக்குற்று அருளுக்கும் பொருளுக்கும்
திரைதெரியா மயங்கித்; திக்கிழந்தேன்! திக்கரைவேல்
வரையேற வாழ்வளித்த தாதையே! வயதாகி வளைந்து
நரைமேவுமுன் நாதியிலியெனக்கு வழிகாட்டு வடகாடே! 

7
வடகாட்டில் நடமாடும் கபாலி! கண்டத்தில் திருவோட்டு
வடமாட விதிர்த்தாடும் வேணியனே! தடங்கொண்ட புலித்தோலா!
விடநாகமாட வெருண்டு விரிசடையிற் கங்கையும் மதியுமாட
படநாகம் பழகும் பதியாம் திண்ணபுரச் சோதியனே!

8
சோதியனே ஆதியிலாய்! சூரிக் குழந்தைக்குச் சுடரீந்தாய்!
ஓதியும் உணரேன் சுவிஸில் சூரிக்கில் சுழியிலுற்றேன் 
பாதியும் விரும்புகிலேன் பாசலில் பெயண் நகரில் வாழ்வு
பாதிக் கிணறு கடந்திளைத்தேன் கைதாராயோ பாராயோ?

9
பார்த்தொருகால் பரிந்தென்னைப் போக்காயோ திண்ணபுரத்
தேரடிக்கால் பெருந்தடத்து அடியழிக்க! திருக்கோயிற் குளமதனில்
நீர்வறற்கால் சிறகடித்துப் புறமேகும் நாரைபோல் ஊர்ப்பிரிந்து 
போருறுங்கால் பேய்களிடை என்தாயேயுனை விடுத்து நீங்கினேனே!

10
நீங்கினேன் தங்கோடை கோவளம் கருங்காலி நின்
பாங்கியுறை பாலவோடை பிட்டியெல்லை வலந்தலை நினைந்து
ஏங்கினேன் கார்த்திகையான்; தாதனே! தாங்கா வலிபொறுத்து எனைத் 
தாங்கியீந்த பூம்பாவை கன்னித் தமிழினி சாதல் சரியோ சாற்று!

11
சாற்றெனக்கு சங்கரனே சரியோ என் செய்கை – ஆழ்கடலில்
காற்றிலிடைப்பட்ட கலந்தான் கவிழ்கையிலே கீச்சொலியோடு 
கூற்றம் பயந்து கரையொதுங்கும் எலியானேன் – கூற்றுவர்தாம்
நேற்றெம் பதி காடாக்கப் பார்த்திருந்து கூசிநிதம் சாகின்றேன்!

12
சாகின்றேன் சிங்கை மலேசியா ஆசியென்று அலைந்து பாவியேன் – நீயோ 
பாய்கின்ற வைகை மண்விட்டோடாமல் செம்மனத்தாய் மண்சுமந்தாய்   
காய்சினத்துப் பாண்டியன் பிரம்படித் தழும்புற்றாய் தாயுமானாய்! 
நோகின்றேன் நாணிநிதம்! நடுநிசியில் நந்தியூர்ந்தவுனை நினைந்து!

13
நினையாததொரு பொழுதோ நின்னை நினைக்குங்கால்
நனையாததொரு விழியோ! பெண்ணை சூழும் திண்ணபுரம்
நிலையானவொரு ஒளியே! அன்னை வீழக் கேழ்ச் சினைகட்கு
முலையானவொரு மருந்தே! எனை மண்ணுக்கு அழையாததேன் தலைவா!

14
தலை கிழக்கில்; பொன்னாலை மைத்துனன் முன் வைத்தாய்!
அலை மேற்கில்; அவனுறங்கத் திருவரங்கம் நீ அளித்தாய்!
தொலை தெற்கில் தீயபெருமரக்கர் திறம்குலைத்தாய்! திரைகடந்து  
தலை வடக்கில் மறைக்காட்டில் மறைந்தொளித்தாய்!

15
மறைந்தோனே மறைந்து மக்கள் மனமிருக்கும் மாயவனே! 
நிறைந்தோனே நிறைந்தும் நிறைகாக்கும் நிறைபொருளே!
உறைந்தோனே ஊர்நினைந்த உத்தமர்தம் உள்ளத்தில்!
நறுந்தேனாம் திருவாசகத்தில் உறைந்தவோர் கருவே!

16
கருவேயென் கருத்தெலாம் கனிந்த கருணையுருவே காரைநகர்த்
திருவேயென் திருப்பதியாம் திண்ணபுரத்துறையும் திரவியமே
மருவேயென் மணியே! மக்கள் சேவையொன்றே மதிப்பளிக்கும்   
குருவேயென் குறைகள் குறையாயோ குருந்தைக் கீழமர்ந்த கோனே!

17
கோனேயென்றும் வானும் வங்கமும் வரையும் வளியும் பரந்து
தானேயன்னும் அரக்கர் செருக்கொழித்தாய்! இன்றெங்கொளித்தாய்!
கானேயென்றும் கதித்த கடலருகே கழுதுகள் தாம்கரித்த – பிணக்குவியல்   
ஊனேயுண்ண ஊமத்தையுறும உறுநரியுமூளையிட ஆடினாய் உருக்கொண்டு!

18
கொண்டாயொருகால் ஆகாயம்! கொடுவிடத்தைக் கண்டத்தில்
விண்டாயொருகால்! கண்டமெலாமதிரப் படைநான்கு மொன்றாய்க் 
கண்டாயொருகால் கரிகால் பனையும் கற்தாழையும் சவுக்கும்
உண்டாயொருகால் திரள் ஆலும் திகழ் திண்ணபுரத் திருவே நீ காப்பு! 

19
காப்பாயே காலச்சுழியில் கருந்தமிழின் கவினும் காத்திரமும்! 
சேர்ப்பாயே கரையெம்மைச் சீரழிந்த மேற்குல் ஆட்பட்டோம்  
தீர்ப்பாயே  தீன்தமிழர் குறை! நிறையழிந்து நிற்கின்றோம் – ஐந்
தேர்ப்பாயும் திண்ணபுரத்தாய்! திரிபுரமெரித்தாண்ட தீன்தமிழே! 

20
தீன் தமிழே நாணிலியாய் நானகன்றேன் நற்தமிழூரை!
கூன் பிறை கேசத்துடையாய் குருதேவா! விழலூரில் – ஐயோ
வீண் பொழுதைக் கழிக்கின்றேன் விரைந்தென் ஊர்சேராய்!
தான் நிகரில் தலைவா! திண்ணபுரம் அமுதூட்டும் தாயே!

 

                                         சொற்பொருள்

பாட்டு 1: திண்ணையிலிப் பேரேறாய் – கட்டுத்தறியற்ற எருதாய்: மலக்குற்றேன் – கலங்கித் திகைப்புற்றேன். பாட்டு 2: பரிசில் பரிசில் – பாரிஸ் நகரில் சிறப்பற்ற: அடிக் கரும்பன்ன – கரும்பில் அதிக சுவையுடைய அடிப்பகுதியைப் போன்ற. பாட்டு 3: வருவூர்க்கு – மரணத்தின் பின் வருபிறப்பில்: கற்பக தருவூரான் – எல்லாச் செல்வங்களும் தரும் ஊர் அல்லது பனைவளம் நிறைந்த ஊர். பாட்டு 4: வலம் – பலம்: நுதலில் – நெற்றியில். பாட்டு 5: செருமெனியின் – ஜேர்மனியின்: திருவாமோ – செல்வமாகுமோ. பாட்டு 6: திரைதெரியா – வேறுபாடு தெரியாமல்: திக்கரைவேல் வரைமேவ – முருகன் மலையேற: தாதையே – தந்தையே: நாதியிலி – தலைமையற்ற நான். பாட்டு 7: கபாலி – கபால மாலை அணிந்த சிவன் (காபாலிக சைவத்தின் பெருங்கடவுள்): கண்டத்தில் – கழுத்தில்;: திருவோட்டு வடம்; – மண்டையோட்டு மாலை: வேணியனே – கங்கையைச் சடையிற்கொண்டவனே: தடங்கொண்ட – வரிகளையுடைய: பழகும் – வதியும். பாட்டு 8: சூரிக் குழந்தைக்கு – தவளும் சூரியனுக்கு: சூரிக், பெயண், பாசல் – சுவிஸ் நாட்டில் காரை மக்கள் அதிகம் வாழும் நகரங்கள். பாட்டு 9: தேரடிக்கால் – தேரின் சக்கரங்களின்: நீர்வறற்கால் – நீர் வற்றுங்காலம்;: புறமேகும் – வெளியேறும்: போருறுங்கால் – போர் சூழ்ந்த காலத்தில். பாட்டு 10: தாதனே: தந்தையே: பூம்பாவை – ஞானசம்பந்தர் பாடலால் உயிர்த்தெழுந்த பெண்: சாற்று – சொல். பாட்டு 11: கலந்தான் – கப்பல்: கூற்றம் – இயமன் அல்லது மரணம்: கூற்றுவர் – கொடியவர்: பதி – வாழிடம். பாடல் 12: செம்மனத்தாய் – செம்மனச்செல்வி: காய்சினத்து – கடுங்கோபமுடைய: நடுநிசியில் – நள்ளிரவில்: நந்தியூர்ந்த – எருதேறிய. பாடல் 13: பெண்ணை சூழும் – பனைகள் நிறைந்த: அன்னை வீழக் கேழ்ச் சினைகட்கு முலையானவொரு மருந்தே – தாய்ப் பன்றி வேடனால் கொல்லப்பட்டது கண்டு அதன் குட்டிகளுக்குப் பாலூட்டி உயிரளித்தவனே. பாடல் 14: மைத்துனன் – விஷ்ணு: திரை – கடல்: மறைக்காட்டில் – தமிழ்நாட்டின் வேதாரண்யம். பாடல் 16: குருந்தைக் கீழமர்ந்த – குருந்தமர நிழல் அமர்ந்த. பாடல் 17: வங்கமும் வரையும் வளியும் – கடலும் மலையும் காற்றும்: கானேயென்றும் கதித்த – எப்போதும் காடு நிறைந்த: கழுதுகள்; – பேய்கள்: கரித்த – கருக்கிய: ஊமத்தை – கூகை: பாடல் 18: கண்டத்தில்; – கழுத்தில்: விண்டு – கொண்டு: உண்டாயொருகால் திரள் ஆலும் திகழ் – ஒருதடவை பாற்கடலிற் திரண்ட ஆலகாலத்தை உண்டாய அல்லது பருத்த அடியையுடைய ஆலமரமுடைய: காப்பு – அடைக்கலம். பாட
ல் 19: கருந்தமிழின்: நிறைவான நிலையான தமிழின்: கவினும் காத்திரமும் – அழகும் உறுதியும்: நிறையழிந்து – சிறப்பழிந்து: பாடல் 20: நாணிலியாய்: வெட்கமில்லாதவனாய்: கேசத்துடையாய்: தலைமுடியில் அணிந்தவனே: தாயே – தமிழர் மதத்தில் ஆண்கடவுளரையும் தாயாகக் காண்பது அவர்தம் தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சி.

ஆக்கியோன்: கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
 
மார்கழி 2015: நன்றியுடன் கனடா காரை வசந்தம் மலரிலிருந்து.

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

p.g.94ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் விருப்பத்திற்குரிய மாணவனும் நாற்பது ஆண்டுகள் எம் கல்லூரியில் நல்லாசிரியராகப் பணியாற்றி இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.ஆர்.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நினைவுப் பேருiரையை பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருந்த பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் உட்பட்ட அனைவரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்திய முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே, 
பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, 
கௌரவ விருந்தினர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.ராசேந்திரன் அவர்களே, 
சிறப்பு விருந்தினர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே,

இக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்களே! அயல் பாடசாலை அதிபர்களே! பழைய மாணவர் சங்கச் செயலாளர் அவர்களே, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் அவர்களே, கல்லூரிக்கு வளஞ்சேர்க்கும் ஆசிரிய மணிகளே, கல்லூரிக்குப் பலமாக விளங்கும் பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, கல்லூரியை மறவாது வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் பழைய மாணவர்களே, பிறந்த மண்ணில் வாழ்ந்து எமது ஊருக்கும் பாடசாலைக்கும் உரமாக இருக்கும் பெற்றோர்களே! கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்களே, அனைவருக்கும் எனது இனிமையான காலை வணக்கம்.

நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக இப்பாடசாலையில் கல்வி கற்று சயம்பு உபாத்தியாயர் அவர்களினாலேயே இப்பாடசாலையில் 1915 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு நாற்பது ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினருக்கு நல்லாசியராகப் பணியாற்றி இன்றும் அவர் நாமம் மறவாத மாணவர்களைக் கொண்ட எனது தந்தையார் அமரர்.ஆர்.கந்தையா மாஸ்ரர் அவர்களின் இளைய மகளாக நானும் இக்கல்லூரியிலேயே கல்வி கற்று இக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணி செய்த காரணத்தினாலோ என்னவோ எனது அன்புக்கும் ஆசிக்குமுரிய எனது மாணவியாகிய இக்கல்லூரியின் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் இந்த நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்டார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.

ஈழமணித்திருநாட்டின் கல்விச் சிந்தனை உலகில் இரண்டு நூற்றாண்டுகளாகச் சைவசமயம் அந்நிய சக்திகளின் அசுரப்பிடியில் அகப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஒரு தலைவன் இன்றி இருளில் தவித்துக் கொண்டிருந்தது. இவ்வேளையில் விடிவெள்ளியாக உதித்தவரே நல்லூரின் நாவலர் பெருமான ஆவார். நாவலரின் காலம் 1822–1879 வரை ஆகும். ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ என்ற நூலில் நாவலரின் கருத்துக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “கல்வி அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” “ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுங்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக் கூடங்களிலேயே அனுப்பி லௌகிக நூல்களையும் நீதி நூல்களையும் சைவசமய நூல்களையும் படிப்பியுங்கள்.”

இவ்வாறான நாவலரின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்றவர் காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள். இவர் மல்லிகை என்னும் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் குட்டிப்புலம்(குமிழங்குளி) என்னும் குறிச்சியில் வாழ்ந்தவரும் ஆவார். இச்செயல்வீரன் ச.அருணாசலம் அவர்களின் காலம் 1864-1920 வரையாகும். சைவம் நீறுபூத்த நெருப்பாக மூடியிருந்த காலத்தில் எங்கள் காரைநகர் மகான் அருணாசலம் அவர்கள் சைவத்தை மூடியிருந்த அழுக்குச் சாம்பலை அகற்றி விட்டார்கள். இச்செயலை உலகம் அறியவில்லை. “இச்சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம” என்று அவரை நேரில் அறிந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசி அறியாத நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். த.கைலாசபிள்ளை அவர்களோ “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர் அருணாசலந்தான்” என்று வர்ணிக்கின்றார்.

ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள் சைவப்பெற்றோரின் பிள்ளைகள் தம் மதம் மாறி ஆங்கிலக் கல்வி கற்று அரச உத்தியோகம் என்ற மாய வலைக்குள் சிக்குவது கண்டு நெஞ்சம் பொறுக்காது புறப்பட்டார். தாம் தமக்கென வாழாது தம் சைவத்திற்கும் தமிழுக்குமாய் வாழத் துணிந்தார். தமது எண்ணத்தை ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை, சு.இராசரத்தினம் போன்ற பெரியாருடன் பகிர்ந்து அவர்களின் யோசனைகளையும் ஏற்று செயலாற்றினார். இப்பெரியார்களைக் காண்பதற்காக அதிகாலையில் காரைநகரில் இருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் செல்வார். செல்லும் வழியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பார்த்து காரைநகர் மாணக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்று மலாய் நாட்டுக்கு சென்று செல்வம் ஈட்டுவது பற்றிச் சிந்தித்து கவலையுற்றார்.

சைவமாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும என்ற எண்ணம் அருணாசல மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்புவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் கருத்தேற்றம் செய்யத் தொடங்கினார். இவரின் கருத்தினால் உற்சாகமடைந்த திரு.கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவினார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்த சயம்பு என்னும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் நிறைந்த ஆசானை அழைத்து வந்தார். திரு.கந்தர் லட்சுமணர் அவர்களின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே நல்லாசிரியர் சயம்பர் ஆவார்.

இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆங்கிலப் புலமை மிக்க பத்திரிகை ஆசிரியரும், ஆசிரியர் சங்க சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியவருமான திரு.N.சபாரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது “சைவப்பாடசாலைகளை அமைப்பதற்காகத் தனது செல்வம் அனைத்தையும் இழந்தவர் காரைநகர் பெருமகன் ச.அருணாசலம் அவர்கள். நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் இப்பெருமகனும் அவருக்கு உதவியாக இருந்த இரு சைவப்பெரியவர்களும் ஸ்ரீமான் சயம்பு அவர்களை சைவத்தின் பாதுகாவலராகக் கண்டனர். ஸ்ரீமான் சயம்பு அவர்கள் இன்று இந்த உன்னத கல்வி நிறுவனத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். (Chief among those who heard the clarion call of Navalar was the late S.Arunasalam of Karainagar who is still immortalized as No.2 to Navalar in founding Hindu School for Hindu Children all over the peninsula spending all his wealth and becoming a pauper in the process. It was he with the assistance of the Late.K.Ledchumananpillai and S.Kandappar two benefactors of the area that founded the School in 1888. The beginnings of the school are yet misty, but the founders, the great Trinity met their man in Saymboo, a Saiva Savant who is now regarded as the Father of this great enterprise.)

சைவப் பாரம்பரியமிக்க எமது ஊர் மக்கள் பரவசப்பட, மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க இவ்வித்தியாசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் ஆசிரியராக இருந்து பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தாம் வேறு வித்தியாசாலை வேறு என்று நினைத்ததில்லை. சைவ சமய பண்பாட்டிற்கு அமையாத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து சைவசமயக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்களை உருவாக்கினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை எனத்தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பநதமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று விளங்கியது.

இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகரதனில்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர் என்று போற்றுகிறார் வித்துவான் F.X.C நடராசா

சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தன்னலங்கருதாது பொதுநல நோக்கோடு ஆங்கிலக் கல்வியைப் போதித்து வந்தார். சயம்புச் சட்டம்பியார் கல்வியை மாத்திரம் மாணக்கருக்கு ஊட்டினவரல்லர். ஒழுக்கத்தையும் கவனித்து வந்தார். சைவாசார முறைப்படி நெற்றியில் திருநீறு பொட்டுடன் மாணாக்கரை வரும்படி கட்டளையிடுவர். வெள்ளிக்கிழமை தோறும் மாணக்கரைக் காலையில் சிவன்கோயிலுக்கு வரவழைத்து கூட்டுவழிபாடு செய்வார்.

ஆங்கிலக் கல்வியைச் சயம்புச் சட்டம்பியார் கவனித்துவர அவருக்கு உறுதுணையாக அம்பலச்சட்டம்பியார் தமிழ்க்கல்வியைப் போதித்து வந்தார். தமிழ் இலக்கியத்தில் திறமைசாலியான அம்பலச் சட்டம்பியார் கணிதத்திலும் வல்லுநர். இந்த ஆங்கில பாடசாலையிற் கற்றுத் தேறிய யாவரும் தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தனர். வித்தியாலயம் படிப்படியாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஊர்மக்கள் உற்சாகமடைந்து ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் நிர்மாணித்துக் வழங்கினர். அவை யாழ் அரச அதிபராகக் கடமையாற்றிய Sir.W.Twynham அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

‘சயம்புச்சட்டம்பியார் என்பவர் காரைநகருக்கு வந்திலரேல் இப்போது காரைநகரிற் பெருங்குடிமக்களாகத் திகழும் மலாய்நாட்டு பெஞ்சனியர்மார் தோன்றியிருக்கவே மாட்டார்கள்.’ என்று காரைநகர் மான்மியம் என்ற நூலில் வித்துவான் F.X.C நடராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். சயம்பு உபாத்தியாயரிடம் ஆங்கிலக் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரச உயர்பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்தனர். காலப்போக்கில் வெளியூர் மாணவர்களும் வந்து கற்கத் தொடங்கினர். மாணவர் தொகை கூடியது. வித்தியாலயத்தின் மனேஜராக திரு.வி.காசிப்பிள்ளை அவர்களும் உள்ளுர் மனேஜராக பெரியார் முத்து சயம்பு அவர்களும் பணியாற்றினர்.

125 ஆண்டுகளைக் கடந்து தளர்வின்றித் தன்னிகரற்ற கல்விப்பணியாற்றி ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது காரை இந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம். இப்பெருமைமிகு கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் இதுவரை காலமும் 25 நல்லதிபர்கள் தமது தடங்களைப் பதித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வளர்ச்சிப்படிகளை நோக்கும்போது

1. இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சிவத்திரு.ஈ.கே.சிவசுப்பிரமணிய ஐயர்B.A அவர்களின் காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைவதைக் கண்ட அரசினர் 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக ஆக்கினர்.

2. பாடசாலையின் வெள்ளி விழா 07.09.1912 அன்று மனேஜர் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. பெரியார் முத்து சயம்பு அவர்கள் 1918 ஆம் ஆண்டில் பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். எனினும் அவரே உள்ளுர் மனேஜராகத் தொடர்ந்து இருந்தார்.

4. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இக்கல்லூரியின் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மனேஜராக பெரும்பணியாற்றி தம்மை இக்கல்லூரிக்கு அர்ப்பணித்த ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

5. முதன் முதலாக எமது காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திருவாளர் பொ.வேலுப்பிள்ளை (பொன்னுடையார் வேலுப்பிள்ளை) அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (இவர் யாழ்ப்பாணம், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய மருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் இ.கனகசுந்தரம், கனடா பல்கலைக்கழக இரசாயனவியல்துறைப் பேராசிரியர் தி.சிவகுமாரன் ஆகியோரின் பேரன் ஆவார்)

6. சிவத்திரு அ.சீதாராமஐயர் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் 1934 ஆம் ஆண்டு J.S.C பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களுள் 13மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் ஒருவர் வடமாகாணத்திலேயே முதற்பிரிவிலும் சித்தியெய்தினர். இதே காலத்தில் இப்பாடசாலையிலிருந்து திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றனர். இதனால் பாடசாலையின் புகழ் மேலோங்கியது.

7. திரு A .கனகசபை B.A அவர்கள் அதிபராகப் பத்து ஆண்டுகள் (1936-1946)பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஸ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் S.S.C வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர் தொகையும் ஐந்நூறைத் தாண்டிவிட்டது.

8. அதியுயர் அதிபர்தர பதவியைப் பெற்ற காரைநகரின் முதன்மைப் பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா வலம் வந்தார். இப்பெருமகன் சேவையாற்றிய காலத்தையே கல்லூரியின் ‘பொற்காலம’; எனப்போற்றலாம் என்று மூதறிஞர் தத்துவக்கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஐந்து ஆண்டுகள்(1941-1945) ஆசிரியராகவும் இருபத்தைந்து ஆண்டுகள்(1946-1970) அதிபராகவம் சேவையாற்றிய இவர் ‘வெள்ளிவிழா அதிபர்’ எனவும் போற்றப்படுகின்றார். இவரின் காலத்திலேயே இக்கல்லூரியின் வைரவிழா 1950.09.19, 20, 21 ம் திகதிகளிலும் பவளவிழா 1963 ஆம் ஆண்டும் முத்துவிழா 1968 ஆம் ஆண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. மலேசியா சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்நிலையம், நடாராஜா ஞாபாகார்த்த மண்டபம் அதனை அண்டிய நிலம் என்பன அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் பெறப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான அக்காலத்தில் விஞ்ஞான ஆங்கிலப்புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். இவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் கல்வித்தரம் உயர்ந்து கல்லூரியின் புகழ் எங்கும் பரவியது. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதிபர் ஆ.தியாகராசா பாடசாலையை கல்லூரி என்ற உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார். (Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was the architect of its collegiate status)

9. அதிபர் திரு P.S குமாரசாமி அவர்கள் குறுகிய காலத்தில் (1970-1971) சீரிய முறையிலும் அதிபர் திரு A.நடராஐh அவர்கள் காலத்தில்(1971-1973) சமயவிழாக்களை நடத்தியும் கல்வி, விளiயாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றும் கல்லூரி விளங்கியது.1971 இல் இவ் வித்தியாலத்தின் கனிஸ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைத்துக் கொள்ளப்பட்டது. திரு.K.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் (1973-1974)கணிதம், பௌதீகவியல் பாடங்களைக் கற்பித்துக்கொண்டே அதிபர் கடமையையும் செய்து கணித விஞ்ஞானத்துறையை மிளிரச்செய்தார்.

10. அதிபர் திரு.K.K.நடராஜா அவர்கள் சிறந்த கணித ஆசிரியராகவம் சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றிய காலத்தில் (1974-1978) 120 வரையான மாணவர்கள் உயர்தரவகுப்பில் கல்வி கற்றனர். இவ்வகுப்புகளுக்கு சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்குத் தெரிவாகச் செய்து கல்லூரியின் புகழை உயர்த்தினார். இவர்காலத்தில் வடக்குப்பகுதி இரண்டு மாடி நிர்வாக மையக் கட்டிடம், நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம், மைதான சுற்று மதில், நீர் சேகரிப்புத்தாங்கி என்பனவும், மைதான புனரமைப்பு என்பனவற்றையும் செய்து கல்லூரியின் பௌதிக வளம் அதிகளவில் விருத்தி கண்டது. 1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம் பெரியார் முத்து சயம்பு அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்பு விழா செய்து கௌரவம் வழங்கியது.

11. அதிபர் திரு.வே.தர்மசீலன் அவர்கள் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியாராகவும் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடனும் பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார். இவர் காலத்தில்(1978-1980) சிறப்பாகப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

12. அதிபர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் குறுகிய காலத்தில் (1981) அதிபர் பதவியை அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். பன்மொழிப்புலமை மிக்க சிறந்த ஆசிரியர். எழுத்தாளர், நாடறிந்த கவிஞருமாவார்.

13. அதிபர் திரு.S.பத்மநாதன் இரு தடவைகள்(1981-1983,1985-1988) இக்கல்லூரியின் அணிசெய் தலைவராகச் சேவையாற்றினார். இவர்காலத்தில் தமிழக அறிஞர்களை அழைத்து பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நடாராசா மண்டபத்தில் சரஸ்வதி கருவறை கோயில் முகப்புத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

14. கல்லூரியில் 25 ஆண்டுகள் அதிபராகவும் பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்தது.

15. அதிபர் சிவஸ்ரீ A.K சர்மா அவர்கள் 1983-1985 வரை அதிபராகப் பணியாற்றினார். புன்னகையும் வசீகர வாக்கும் கொண்ட இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார்.

16. அதிபர் திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்களின் காலத்தில் (1988-1991) இக்கல்லூரி கொத்தணித் தலைமைப் பாடசாலையாக்கப்பட்டது. காரைநகரின் 14பாடசாலைகளின் கொத்தணி அதிபாராக திரு.மு.திருநீலகண்டசிவம் விளங்கினார். பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து கல்லூரியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17. அதிபர் திரு.S.R.S.தேவதாசன் அவர்கள் கல்லூரியின் அதிபராகவும் காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் சேவையாற்றினார். இவரது காலத்தில்(1991-1993) போர்ச்சூழலில் காரைநகருக்கு வெளியே பாடசாலை இடம்பெயர்ந்து இயங்கவேண்டி நேரிட்டமையால் தளர்வு ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும்.

18. கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த திருமதி. தேவநாயகி பாலசிங்கம் பெறுகின்றார். இவர் காலத்தில்(1993-1998) இடம்பெயர்ந்த சூழலில் ஏனைய பாடசாலைகள் போன்று கல்லூரியைத் தளரவிடாது கட்டிக் காத்து 1996 இல் மீண்டும் சொந்த மண்ணில் கல்லூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும்.

19. அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் காலத்தில் (1998-2005)கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்விச்செயற்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது. ஆங்கிலக்கல்விக்கும், கணனிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். கல்லூரி தீவக வலயத்தில் முன்னணிப் பாடசாலையாக விளங்கியது.

20. அதிபர் திரு.கா.குமாரவேலு காலத்தில் (2005-2008) கனிஷ்ட பாடசாலையில் கட்டிடங்களைப் புனரமைத்ததோடு கிணறு அமைக்கப்பட்டு குழாய்நீர் விநியோகம் செய்யப்பட்டது. இவர்காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன.

21. அதிபர் திரு.A.குமரேசமூர்த்தி இக்கல்லுரியின் அதிபராக (2008-2010) சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார்.

22. அதிபர் திரு.பொன் சிவானந்தராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில்(2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஒரு ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது.

23.  2012 இல் ஆயிரம் பாடசாலை செயற்றிட்டத்தில் இக்கல்லூரி சேர்வதற்காக இதன் கனிஷ்ட பிரிவாகிய சுப்பிரமணிய வித்தியாசாலை மீண்டும் தனியாக இயங்கும் ஆரம்ப பாடசாலையாகியது.

24. இரண்டாவது பெண் அதிபராகிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின்125 ஆவது ஆண்டு விழா, நாட்டின் மேதகு ஜனாதிபதி வருகை ஆகிய வரலாற்று நிகழ்வுகளை குறுகிய காலத்தில் எதிர்கொண்டு சிறப்பாக நிறைவேற்றினார். பௌதீக வளவிருத்திகளாக மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், பல்லூடக மண்டப விருத்தி, நிறுவுநர் சயம்பு சிலை புனரமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச சாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மிகவும் பாதுகாப்பும் அழகும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த சூழலாக மாறியுள்ளது. மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பரீட்சைகளில் சித்திபெறும் சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு இணையான ஆளுமை விருத்திச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர். புலம்பெயர் பழையமாணவர்களின் பார்வை எம் கல்லூரியின் பக்கம் திரும்பியுள்ளது. பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை, கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்காக 1.5 மில்லியன் ரூபா கனடாவில் வதியும் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். தீவகவலயத்தில் தொடர்ந்து முன்னணி வகித்துவரும எம்கல்லூரி விரைவில் ஒரு தேசியபாடசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறுகுபோல் வேரூன்றி ஆல் போல் தளைத்து காரைநகரின் கலங்கரை விளக்கமாக அறிவொளி வீசும் பழமையும் பாரம்பரியமும் மிக்க இக்கல்லூரியில் பணியாற்றிய நல்லதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லரென இக்கல்லூரியைத் தேசிய மட்டங்களில் கூட போட்டிபோடக் கூடிய நிலைக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களே! உங்கள் வாழ்நாளில் பாடசாலைக் காலம் பொன்னானது. அன்பு, அடக்கம், நேர்மை ஆகிய அணிகலன்களை அணிந்து மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி உயர்ந்த எண்ணங்களை எண்ணி விடாமுயற்சியுடன் உழைத்து உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கனிவாக வேண்டுகின்றேன்.

ஆசிரியர்களே! உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கற்பித்தலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் இக்கல்லூரியில் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது. மேலும் இவ்வாறு சாதனை படைத்து கல்லூரிக்கு வளஞ்சேர்க்க உங்களை வாழ்த்துகின்றேன். பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியை மறவாது உங்கள் ஆதரவை வழங்கி வருவது இக்கல்லூரிக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவினை நான் போற்றுகின்றேன்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே! குறுகிய காலத்தில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற உங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கல்லூரியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடராசப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

To Thine own self be True.
உனக்கு நீயே உண்மையாய் இரு.

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி 
வணக்கம்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா 
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் 
ஆங்கிலத்துறை 
காரைநகர்

அறிந்தும் அறியாமலும்

 ஒருநாள் யாழ் பல்கலைக்கழக முதுமாணி விரிவுரை அறையில் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவில் வருகிறது. என்னவென்றால் காரைநகர் மக்கள் வியாபாரத்தில் உச்ச நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் முதல்நிலை வர்த்தகர்களாக உள்ளனர். ஒரு வகை சார்ந்த வியாபாரம் என்று இல்லாமல் பல்வேறுபட்ட வகையான வியாபாரங்களையும் செய்தும் அதில் வெற்றியடைவதும் அவர்களின் இயற்கையாக காணப்படுகின்றது. அவர்கள், வியாபாரம் சார்பான முது வணிகமாணி, முது வியாபார நிர்வாகமாணி பல்கலைதுறைசார் அறிவு கொண்டவர்களே வியக்கும் வண்ணம் தங்கள் வியாபாரத்தினைச் செய்து கொள்கின்றார்களே? என்று அவ்வறையில் கலந்துரையாடும் அளவிற்கு எம்மவர்கள் பெருமைப்படக்கூடியவர்களாக வியாபாரத்தில் காணப்படுகின்றனர்.


             காரைநகர் மக்கள் கல்வியிலும், வியாபாரத்திலும், விவசாயத்திலும், கடவுள் நம்பிக்கையிலும், ஊர்ப்பற்றிலும், தமிழ்ப்பற்றிலும், அரசியலிலும் மற்றும் நிர்வாகத்திலும் தம்பங்கை தகுதியுடன் வழங்கி வரலாற்றில் இடம் பிடிப்பவர்களாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் தொடர்ந்தும் வாழ்பவர்கள் ஆவார்.PHOTO


          "காகம் பறக்காத இடமும் இல்லை காரைதீவான் கடை வைக்கா இடமும் இல்லை". காகம் பறந்ததோ இல்லையோ காரை தீவான் கடை வைத்தான் என்றால் அது மிகையாகாது. இதற்கிணங்க   போக்குவரத்து வசதி வளர்ந்து, வியாபித்துள்ள இக்காலத்தில் மட்டுமன்றி கால்நடையாக மாட்டுவண்டிக்காலம் தொட்டு இன்று வரை நாடு கடந்தும், கண்டம் கடந்தும் தங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் வருகின்றனர்.


             இலங்கை வரைபடத்தில் காணப்படுகின்ற இடங்கள் யாவும் தங்கள் வியாபாரங்களை செய்து வந்தனர் வருகின்றனர். காலி, மாத்தறை, மாவனல்ல, பதுளை, உறுவான்வெல, பண்டாரவளை, மூதூர்,திரிகோணமலை, வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, பரந்தன், சாவகச்சேரி, சுன்னாகம், சங்கானை, அனுராதபுரம், பொலனறுவை, கலகா, கல்கமுவ, பசறை, புத்தளம், மட்டக்களப்பு, வாழைச்சேனை, கிரான், இங்கினியாகல, கண்டி, முத்தையன் கட்டு, நெடுங்கேணி, நெல்லியடி, பாணந்துறை, நுகேகொடை, இ ங்கிரியா, கம்பளை, பேராதனை, கதிர்காமம், குருநாகல் போன்ற இடங்களை தங்கள் பெயர்களுக்கு முன்னால் கொண்டவர்களாக ஊரவர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள்.


           தற்போது கனடா, லண்டன், சுவிஸ், ஜேர்மனி, இந்தியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, நோர்வே, அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளில் வாழும் எம்மவர்களும் வியாபாரத்தினை அங்கே தொடங்கி அதனை திறம்படச்செய்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து கப்பல் ஓடுவது, விமானம் ஓடுவது எனப் பல தளங்களில் தங்களின் வியாபாரத்தினை விஸ்தரித்து நிற்கின்றனர்.


        இவ்வாறான பல தளங்களில் தங்கள் வியாபாரத்தினை செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றபோதும் ஏன் பெரியளவிலான இலங்கை முழுவதும் கிளை பரப்பிய ஒரு நிறுவனமாக அல்லது பல்வேறுவகையான இடங்களில் கிளைபரப்பிய நிறுவனமாக அல்லது பல்வேறு நாடுகளில் கிளை பரப்பிய நிறுவனமாக இல்லாமல் இருப்பது ஏன்? என்பதுதான் முக்கியமாக எழுகின்ற கேள்வியாக உள்ளது.


        வியாபாரம்  செய்யும் திறன் மட்டும் தான் வியாபாரம் செய்பவர்களாகிய முதலாளிமாரிடம் இருந்ததா? என்றால் இல்லை எனலாம். அவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய கல்விமான்களாக, பட்டதாரிகளாக உருவாக்கியும் உள்ளார்கள். அவர்களை அத்துறைக்குள் கொண்டு வராமல் விட்டுள்ளார்கள். ஏன் தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்து உயர்த்த முயற்சிக்கவில்லை? படித்தவர்கள் கூட பெற்றார் செய்த வியாபாரத்தை தொடரவில்லை. இது ஏன்? 


       பெரியளவிலான வியாபாரத்தை செய்த பெரும் முதலாளிகளின் பிள்ளைகள் வியாபாரத்தை தொடர்ந்த போதும் அவர்கள் ஒற்றுமையாக இல்லாமல் தனித்தனியாகவே தொடர்ந்தார்கள் ஏன்? இதற்கு எல்லாம் காரணம் என்ன?


      மேற்கூறிய கேள்விகளுக்கெல்லாம் பதில்களாக பின்வருவனவற்றை முன்வைத்து இக்கட்டுரையை தொடரலாம் என எண்ணுகின்றேன்.


1.    துறை சார் நிபுணத்துவம் பெற்றுக்கொள்ளாமை 
சில்லறை வர்ததகம், புடவை வர்த்தகம், மருந்தகம், அரச ஒப்பந்தம், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள், கட்டடப்பொருள் விற்பனைகள், தங்க நகை வியாபாரம், விவசாய கிருமி நாசினி விற்பனை, வாகன உதிரிப்பாக விற்பனை, கத்தரித்தோட்டம், மிளகாய்த்தோட்டம் என பல்வகை வியாபாரங்களை தனித்தனியே செய்தாலும் அத்தொழிலையே தொடர்ந்து செய்து
நிபுணததுவத்தை அல்லது அத்தொழில் சார்ந்த நவீன தொழிநுட்பத்தை உள்வாங்கியவர்களாக எந்தவொரு நபரும் காணப்படவில்லை. அது மட்டுமன்றி அத்தொழிலின் தன் அனுபவ நிபுணதுவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தவில்லை. அல்லது பின்னைய தலைமுறை முன்னைய தலைமுறையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை எனலாம்.

2.    செய்கின்ற தொழிலையே செய்கின்றமை
ஒருவர் சில்லறை வர்த்தகம் செய்பவராக இருந்தால் அவரது சகோதரர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அச்சில்லறை வர்த்தகத்தையே முன்னவர் செய்த அதே முறைமையைக் கைக்கொண்டு தொடர்ந்து செய்து வருகின்றமை.

3.    வாடிக்கையாளர் சேவையில் சிறப்புத்தேர்ச்சியின்மை
எம்மவர்கள் தங்கள் வியாபாரத்தில் கடினமான உழைப்பின் உச்சப்பயன்பாட்டை வழங்கி வியாபாரத்தை செய்கின்றனரே தவிர அவ்வியாபாரத்தின் பல்வேறுபட்ட தகவல்களையும் அனுபவங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வாடிக்கையாளர் சேவையை விருத்தி செய்கின்ற திறன் காணப்படாமை. அதாவது ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் வேலைபெற்றுக்கொள்ளுகின்ற கருத்தியல் மட்டுமே கொண்டு அவர்களை வளம்படுத்தி, வருமானத் திருப்திப்படுத்தி அகநிலை சந்தோச நிலையில் வைத்திராது கடமையை பெற்றுக்கொள்ள முயலுதல். இதனால் ஊழியச் சுழற்சி ஏற்பட்டு விசுவாசமும், தொழில் பழகும் ஆர்வமும், ஈடுபாட்டுடன் வியாபாரத்தில் பங்குகொள்ளும் தன்மையும் இல்லாமல் போகின்றது.

4.    தொழிலை விஸ்தரிக்காமை அல்லது ஆபத்தை எதிர்கொள்ளாமை
உதாரணமாக புடவை வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் அவ்வர்த்தகத்தை அதேயளவில் ஆண்டாண்டு காலத்திற்கு தொடர்ந்து நடத்தி வருதலை குறிக்கும். ஏனெனில் அவ்வர்த்தகத்தை விஸ்தரித்தால் கொண்டு நடாத்துவது கடினமென்றும் விசுவாசமான ஊழியர்களைப் பெற்றுக்கொள்வது கடினமென்றும் தங்களுக்குள்ளேயே குறுகிய வட்டமாகச் சிந்தித்து ஆபத்தை எதிர்கொள்ளுகின்ற தன்மையை மிகக்குறைந்த மட்டத்தில் பேணுகின்ற பண்பு எம்மவர்களிடையே உள்ளது.

5.    வியாபாhர நிறுவனங்கள் 80 வீதத்திற்கும் அதிகமானவை தனியுடமையாக காணப்படுகின்றமை
பங்குடமையாகவோ, கம்பனியாகவோ வியாபார நிறுவனங்களை உருவாக்கினாலும் அதன் பங்காளர்களாகவோ, பங்குதாரர்களாகவோ தங்கள் குறுகிய குடும்ப அங்கத்தவர்களை மட்டும் கொண்டதாக இருக்கும். இக்காரணியும் வியாபார நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கு தடையாக உள்ளதொன்றாகும்.

6.    ஒரு நபர் மிகுந்த கஷ;டநிலையிலிருந்து தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்ட வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு தன் படிப்பு, தன் சந்தோஷம், தன் ஆசாபாசங்கள், தன் திருமணம் போன்ற இன்னோரன்ன தியாகங்களை குடும்ப முன்னேற்றத்திற்காக பங்களித்து வெற்றிகரமான வியாபார நிறுவனத்தை நடாத்தி வர இவரின் உதவியுடன் வாழ்க்கையின் புதிய பரிணாம வெளிச்சத்தைக் கண்டவர்கள் அவர் நடத்திய வியாபாரத்தை இழிவாகப் பார்க்கின்ற தன்மை அல்லது அவரையே இழிவாக நடத்துகின்ற தன்மை, இவற்றின் மூலம் அக் குறித்த நபர் தன் தொழிலை இழவாகப் பார்த்து அடுத்த தலைமுறைக்கு அதனை இட்டுச் செல்வதில்லை.

7.    ஒற்றுமையின்மை அல்லது தங்கள் சகோதரங்களுடன் முரண்பட்டு வெளியேறல் அது அவர்களது பிள்ளைகளுக்கும் பரவி தொடர்கின்றமை.
ஒரு குடும்பத்தில் ஜந்து பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவர்களது தகப்பனாரால் தொடரப்படும் வியாபாரத்தினை ஜந்து பிளளைகளும் முரண்பட்டு தனித்தனி வியாபார நிலையங்களாக மாற்ற இத்தன்மை அவ் ஜந்து பிள்ளைகளின் பிள்ளைகள் காலத்திலும் தொடர்ந்து பிரிந்து செல்லுகின்ற தன்மை வியாபார விரிவாக்கும் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகின்றது.

8.    வாழ்க்கைத்துணை ஒத்துழைக்காமை
ஒரு வியாபாரம் செய்கின்ற ஒருவர் வீட்டில் வருகின்ற மருமகன் அல்லது மருமகள் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் குடும்ப ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையை குலைப்பதில் முன்னின்ற பல சம்பவங்கள் அவர்களது வியாபார எதிர்காலத்தையே பாதித்த தன்மைகள் உண்டு.

9.    வைத்தியத்ததையும், பொறியியலையும் முதன்மையாக எண்ணுதலும் தான் செய்கின்ற வியாபாரத்தினை குறைவாக மதிப்பிடுகின்ற தன்மை
பல வியாபாரிகள் தங்கள் பிள்ளைகளை நல்ல வைத்தியனாக அல்லது பொறியியலாளனாக வரவேண்டுமென்று விருப்பப்படுகின்ற தன்மை காணப்படுகின்ற அதே வேளை தான் செய்கின்ற அதே தொழிலை விஸ்தரித்து மேம்பட முன்வராமை.

10.    தன் அடுத்த தலைமுறைக்கு சிக்கனம் சொல்லி வளர்க்காமை
அடி மட்டத்திலிருந்து அசுர வேகத்தில் வியாபார வெற்றியை அடைந்தவர்கள் அதே வேகத்தில் வெற்றி கொண்டு வேகநடை போட வியாபாரத்தில் தங்கள் பிளளைகளை தயார்ப்படுத்தவில்லை. அது மட்டுமன்றி தாங்கள் பட்ட கஷடத்தை பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாதென்று அளவுக்கதிகமாக அவர்களது விருப்புக்களை நிறைவேற்றுகின்றமையும் கண்டிப்பும் சிக்கனமும் ஊட்டப்படாமல் செல்லமாக வளர்க்கப்படுகின்ற தன்மையும்.

11.    கோவில்களுக்கு அதிகமாக செலவழித்தல்
தாங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற வருமானத்தின் 40, 50 வீதத்தைக்கூட கோவில்களுக்காக செலவளிக்கின்ற தன்மை காணப்படுகின்றமை.  தங்களது பொருளீட்டலில் காணப்படுகின்ற அறச் செயற்பாட்டிற்கு முரணான தன்மையினால் தான் பயம் கொண்டு இவ்வாறான தர்ம காரியங்களில் ஈடுபடுகின்றார்களா? அல்லது அவர்களது தொழிலின் அறமற்ற தன்மையை சொல்லி நிற்கின்றதா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது. இஸ்லாத்தில் இவ்வாறான தன்மை இல்லை.

12.    தலைமைத்துவத்தில் பெருந்தன்மை இன்மையும் தன்னை விஞ்சக்கூடாது என்ற குறுகிய மனப்பாங்கும் ஆழமாக ஊன்றி வளர்ந்தமை. இதனால் நல்ல தலைமைத்துவத்தை வழங்கி வியாபாரத்தை விஸ்தரித்து குடும்ப உறவுகளை வலுப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியாமை காணப்படுகின்றது. அத்துடன் வருமானத்துக்கு விஞ்சிய பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து தங்கள் வியாபாரத்தை குறுகிய காலத்துக்குள் நிறைவுறுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

மேற்கூறிய காரணங்கள் காரைநகர் வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தை பல்தேசியக் கம்பனியாக அல்லது பல கிளைகள் பரப்பிய ஒரு நிறுவனமாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு தடையாக உள்ள பலமான காரணிகளாகும். இது காரைநகர் வர்த்தகர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? அல்லது தமிழ் வர்த்தகர்களுக்கும் பொருந்துமே என்ற வாதம் ஏற்புடையதன்று. ஏனெனில் எம்மவர்கள் தங்கள் கடின உழைப்பின் உச்சத்தில் அத்தளத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தினை வழங்க வல்லவர்களாக காணப்படுகின்ற ஒரு சிறப்புத்தன்மை எம்மவர்களிடம் உள்ளது. ஆனால் அதனை குழுமமாகப் பயன்படுத்தாமல் தனியனாகப் பயன்படுத்துகின்ற பரிதாபம் மட்டுமே மிச்சமானதாகக் காணப்படுகின்றது. காரைநகர் வர்த்தகர்களே! அவர்கள் சார்ந்த தலைமுறை உறவுகளே! நாடு கடந்து கண்டம் கடந்தும் வாழும் எம் உறவுகளே! புதிதாக சிந்திப்போம். தலைமுறைக்கு புது உறவு சொல்வோம். கூட்டாக இயங்கி "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற மூத்தோர் வார்த்ததைக்கு வாழ்வின் வடிவம் கொடுப்போம்.

திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி

        திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி
                                     – எஸ்.கே.சதாசிவம் –

image001
    யா/காரைநகர் இந்துக் கல்லூரியில் (கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம்) பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றியதன் பயனாக காரைநகர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டவர். பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தலில், கற்பித்தல் நுட்பங்களைக் கையாண்டதுடன் தேவைப்படும் உபகரணங்களையும் தன் முயற்சியினால் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர். 

    தன் கல்லூரிக் காலத்தில் மெய்வல்லுனர் நிகழ்வுகள், மற்றும் உதைபந்தந்தாட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றியமையினால் தொடர்ந்தும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு அக்கறையுடன் உழைத்தவர்.

    காரைநகரில் இருந்து 1983ல் இடமாற்றம் பெற்று சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் விஞ்ஞானபாட சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றினார். கற்பித்தலில் சிறப்பான அணுகுமுறை. பாடம் தொடர்பான தெளிவான அறிவு. நிறைவான சிந்தனை, சிரமம் பாராது கருமம் ஆற்றும் பண்பு ஆகியன கல்வி உலகில் திரு.சோமாஸ்கந்தனுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தன. க.பொ.த.சாதாரண தர விடைத்தாள்கள் திருத்தம் செய்கின்ற குழுவில் பிரதம புள்ளியிடும் பரீட்சகராக கடமையாற்றினார்.

    வட்டுக்கோட்டை வட்டாரப் பாடசாலைகளின் மெய்வல்லுனர் நிகழ்வுகளின் செயலாளராக நீண்ட காலமாகக் கடமையாற்றினார்.

    கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடத்திய மத்தியஸ்தர் பரீட்சையில் சித்திபெற்று இரண்டாம் தர மத்தியஸ்தராகவும் (Class – II Referee) மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய ஆரம்பிப்பாளர், நேரங்கணிப்பாளர், மைதான சுவட்டு நிகழ்வுகளின் நடுவர் தேர்வுகளில் சித்திபெற்று விளையாட்டுத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.

    1965ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியமனம் பெற்று காரைநகருக்கு வருகைதந்த சோமாஸ்கந்தன் அன்றைய காலத்தில் காரைநகரில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தங்கும் அல்லின் வீதியில் அமைந்துள்ள விடுதியில் 1970 வரை வசித்தார். 

    திரு.சோமாஸ்கந்தன் கடமையேற்ற வேளை காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், சிறந்த ஓட்ட வீரரும் உதைபந்தாட்ட வீரருமான திரு.ஆ.குமாரசாமி இந்தியாவில் Y.M.C.A. யில் விளையாட்டுத்துறைப் பயிற்சியை நிறைவு செய்து விளையாட்டுத்துறை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருவரும் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருந்தமையால் கல்லூரியின் விளையாட்டுத்துறை உன்னத நிலையை நோக்கி நகர்ந்தது.

    கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் அமெச்சூர் மெய்வல்லுனர் சங்க (Amateur Athletic Association) விதிகளுக்கமைவாக நடைபெறுவதை திரு.சோமாஸ்கந்தன் உறுதி செய்தார். (மைதான சுவட்டு நிகழ்வுகளுக்கு மைதானத்தை தயார்செய்தல், போட்டி நடைபெறும் ஒழுங்குமுறை) 

    விளையாட்டுப்போட்டி தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள், மைதான சுவட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பெற்ற திறனை (புறப்படுகை, நிறைவு செய்தல், அஞ்சல் கோல் பரிமாற்றம், எறிதல், பாய்தல், விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக போட்டியில் பங்குபற்றல்) ஏனைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு கொள்வதற்கான வகையில் அமையும்.

    விளையாட்டுப் போட்டி அழைப்பிதழின் இறுதிப்பக்கத்தை சாதனையாளர் பட்டியல் அலங்கரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சாதனைகள் ஏற்படுத்தப்படும்பொழுது போட்டி முடிவு கிடைத்தவுடன் சாதனையாளரின் சாதனை விபரம் அறிவிக்கப்படும். பரிசளிப்பு நிகழ்வின் போது விஷேட பரிசில்கள் வழங்கி சாதனையாளர் கௌரவிக்கப்படுவர். 

    விளையாட்டுப் போட்டிப் பணிகள் ஆரம்ப தினத்திருந்து சுவடுகள் அமைத்தல் விளையாட்டுப்போட்டி முடிவடைந்த பின் அனைத்து தளபாடங்களையும் பாடசாலை வளாகத்திற்குள் எடுத்துச் செல்வது வரை சுயமாகச் செயலாற்றும் மாணவர் அணி பணிக்காகக் காத்திருக்கும். 

    விளையாட்டுப்போட்டிகளுக்கு குறிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய தகுதி பெற்றவர்கள் அலுவலர்களாகப் பணியாற்ற அழைக்கப்படுவர். விளையாட்டுத்துறையில ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டியில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதன் மூலம் தகுதி வாய்ந்த அலுவலர்குழாம் ஒன்றை திரு.சோமாஸ்கந்தன் உருவாக்கினார்.

    1970களின் நடுப்பகுதிகளில் யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடத்திய மெய்வல்லுனர்ப்போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது. தனி வீரர்களுக்கிடையிலான மெய் வல்லுனர் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை எதுவென தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை மைதானத்தில் காணப்பட்டது. இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற 4x100m, 4x400m  அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் காரைநகர் இந்துக்கல்லூரியின் அஞ்சல் ஓட்டக் குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை அகன்று யாஃகாரைநகர் இந்துக் கல்லூரியின் முதலாம் இடம் உறுதி செய்யப்பட்டது. 

    விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதம கல்வி அதிகாரி திரு.எஸ்.தங்கராசா அவர்கள் உரையாற்றும் பொழுது கிராமியப் பாடசாலை ஒன்று நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலையும், சமூகமும் விளையாட்டுத்துறையில் காட்டுகின்ற அர்ப்பணிப்பும், அக்கறையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார். 

    1934ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் (All Ceylon Inter School Alhletic Meet) திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் தேசிய ரீதியில் பரிசு பெற்ற கல்லூரியின் முதல் மாணவர்கள்.

    திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பின்வரும் மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசியப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பெற்றனர். 

இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிகள் 

திரு.செல்வரத்தினம் இராதகோபாலன் 1973ஆம் ஆண்டு போட்டியில் 100மீற்றர் உயரம் பாய்தல் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கமும் 1974ஆம் போட்டியில் 100மீற்றரில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்த சற்குணநாதன் 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 200மீற்றர், 400மீற்றர், 400 மீற்றர் தடை தாண்டல், ஈட்டி எறிதல், தட்டெறிதல், முப்பாச்சல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி 400 மீற்றர் தடை தாண்டல் நிகழ்ச்சியில் பரிசு பெற்றார்.

    திரு.சபாரத்தினம் கோவிந்தராசா 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 100மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல் நிகழ்வுகளில் பங்குபற்றினார்.

    திரு.திருநாவுக்கரசு யோகராஜா 1977 – 1982 வரை நடைபெற்ற போட்டிகளில் 1500மீற்றர். 3000 மீற்றர் நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் யாழ் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு இலங்கைப் பாடசாலை உதைபந்தாட்ட அணித்தெரிவிற்கான போட்டிகளில் பங்குபற்றினார்.

    பாடசாலை மாணவர்களின் பயிற்சி நிறைவடையும் வரை பொறுமையுடன் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும் பழைய மாணவர்கள். கழகங்களின் வீரர்களுடன் உதைபந்தாட்டத்தில் பங்குபற்றுவார். இவர்களுக்கு விளையாட்டுக்குத் தேவையான பயிற்சிகள், சட்டவிதிகள் பற்றி போதனை வழங்கப்படும். மாலை முடிவடைகின்றது. வீடு செல்ல வேண்டும் என்கின்ற அவசர நிலை என்றுமே திரு.சோமாஸ்கந்தன் முகத்தில் தெரிவதில்லை. திரு.சோமாஸ்கந்தன் பாடசாலைக்கு வெளியே வாழ்ந்த காரைநகர் இளைய சமூதாயத்தின் நன்மதிப்புக்கும் பாத்திரமானவர்.

    திரு.சோமாஸ்கந்தன் சிறந்த பயிற்றுனராக ஊக்குவிப்பாளராக திகழ்ந்தமையினால் அவர் காலத்தில் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காணப்பட்டது. இதன் பயனாக அவர்களின் பணிக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இளைய தலைமுறை விளையாட்டுத் துறையில் தகுதி பெற்றது. 

    பாடசாலைக்கு வந்தோம். படித்தோம், விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம், விளையாடினோம் என்ற நிலையை மாற்றி ஒரு அசைவு நிலையை ஏற்படுத்தியவர். 

    திரு.சோமாஸ்கந்தனிடம் விஞ்ஞானம் கற்றோம், விளையாட்டுப் பயின்றோம் என்று சொல்கின்ற மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து செயற்படும் விழிப்பு நிலையை அவதானிக்கலாம்.

 காரை நலன்புரிச்சங்கம் லண்டன் திரு. சோமாஸ்கந்தன் இடமாற்றம் பெற்றுச்சென்று  30 ஆண்டுகள் கடந்த பின்னர் தனது இருபத்தைந்தாவது ஆண்டு "காரை சங்கமம்" விளையாட்டு நிகழ்விற்கு திரு.சோமாஸ்கந்தன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிப்பதன் மூலம் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் ஏற்படுத்திய அசைவின் உணர்வு இன்று வரை உணரப்படுகின்றதே என்பதே பொருளாகும்.

சங்க காலத்தில் இசை மரபு

Parama  ST

  கவின் கலைகளில் இசைக்கலை புனிதமானது. மனித நாகரிகம் வளர்ச்சியடைய முன்னரே இசைக்கலை ஒரு தனிமொழியாக விளங்கியது. மொழிமூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத காலத்திலேயே மனிதன் தன் உணர்ச்சிகளை ஓசைமூலம் வெளிப்படுத்தினான்.

இவ் ஓசைகளே இசைதோன்றக் காரணமாய் இருந்தன. மகிழ்ச்சியை ஆரவாரித்தும் பயத்தை இரைந்தும் துன்பத்தை ஓலமிட்டும் மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான். இவ்வாறு இனிமையற்ற ஓசை தவிர்ந்த ஏனையவை நாதம் என அழைக்கப்பட்டன. இந்த நாதமே இசைக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த வகையில் சங்ககால இசைமரபு பற்றி நோக்குவோம்.
 
சங்ககாலத்தில் ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய பண்களும் இருந்தன. அவையாவன குறிஞ்சிப்பண் முல்லைப்பண்- மருதப்பண்- நெய்தற்பண-; பாலைப்பண் என்பவையாம். விபுலானந்தர் தனது நூலில் பன்னிரண்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது ஆயர்பாலை எனவும், நாற்பத்தெட்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது சதுரப்பாலை எனவும், தொண்ணூற்றியாறு கால ஸ்வர நரம்புகளை உடையது திரிகோணப்பாலை எனவும் குறிப்பிடுகின்றார். இவை பின்பு ரி-க-த-நி- தமிழிசையில் தத்தம் கைக்கிளை- விளரி- தாரம் என்னும் ஸ்வரஸ்தானங்களுடன் இணைந்து பதினாறு பண்களாயின. இவை ஒவ்வொன்றும் அகம், புறம், அருகு, பெருகு என்றும் நான்கு பேதமடைந்து அறுபத்துநான்கு பண்களாயின என்றார்.
 
மேலும் குறிஞ்சி நிலத்திற்குரிய தோற்கருவியாக பிறையும் மருதநிலத்திற்குரிய தோற்கருவியாக முழவும் முல்லை நிலத்திற்குரிய தோற்கருவியாக ஏறு கோட்பறையும் புல்லாங்குழல், நெய்தல் நிலத்திற்குரிய கருவியாக விளரியாழும், நாவாயப்பம்பை முதலியவையும் தோற்கருவியாக தடியும் இசைக்கப்படுகின்றது. பட்டினப்பாலை என்னும் சங்கநூல் காவிhப்பூம்பட்டின பண்டகசாலையில் யாழ்கள் இருந்தன என்று கூறுகிறது.
 
பரிபாடல் என்பது பண்ணுடன் கூடிய எழுபது இசைப்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். பரிபாடல் முழுவதும் இசைப்பாடல் ஆகும். இதனைப் பாடிய புலவர்கள் பதின்மூன்றுபேர் இவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர், இப்பாடலில் குறிப்பிட்டுள்ள பதினொரு பாடல், பண், பாலை, யாழ் என்னும் இவற்றுள் ஐந்து பாடல் பண் நேர்திறம் என்றும் குறிப்பிட்டுன்ளது. யாழ், குழல், முழவு, பாட்டு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பெரிய தொகுதியாக பரிபாடல் விளங்குகிறது. பரிபாடலில் பண் வழக்கு தற்போது மறைந்துவிட்டது.
 
எட்டுத்தொகையைச் சேர்ந்த புறநானூற்றில் பண்கள் பற்றியும் வேய்ங்குழல், ஆம்பற்குழல், சீறியாழ், பேரியாழ், தண்ணுமை, பெருவாத்தியம், முழவு முதலிய இசைக்கருவிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப்பண்ணும் இசைக்கப்படும் மரபு இருந்திருக்கிறது. தவிர புறநானூற்றில் நடுகல் வழிபாடு இருந்திருக்கிறது. போரிடும் வீரனுடைய சிறப்புக்கள் கொடை, புகழ், வீரம் என்பவைபற்றி பாடற் பொருள் அமைந்திருந்தது. இத்தகைய பாடல்களை ஒத்தவையே ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுப்படுத்தல் என்பது வழிப்படுத்தல் ஆகும். பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் மன்னர் கலைஞர்களை எவ்வாறு ஆதரித்தனர் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. வெறியாட்டு எனப்படும் ஆடலுடன் கூடிய பாடல் முருகன் பெயரில் பாடப்பட்ட இசை வடிவமாகக் காணப்படுகின்றது.
 
இசைத் தமிழின் அடிப்படை இலக்கணம் பற்றிய குறிப்புக்கள் இடைச்சங்க நூலாகிய தொல்காப்பியத்திலும் கடைச்சங்க நூலாகிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு கீழ்க் கணக்கு நூல்களிலும் காணப்படுகிறது. மேலும் தொல்காப்பியத்தில் பண்ணத்தி பரிபாடல் முதலிய இசைப்பகுதிகள் காணப்படுகின்றன. கலிப்பாவினுள் தாழிசைப் பகுதி இசைப்பாட்டாக உள்ளது.
 
பத்துப்பாட்டு பாடல்தொகுதி நூல்களில் பாணர்- விறலியர்-கூத்தர்- பொருணன் என்ற நால்வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர்கள் யாவரும் இசைக்கலையிலும் இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். பொருநர் ஆற்றுப்படையில் கூறப்பட்டுள்ள வில்யாழே யாழில் தோற்றமாக இருந்திருக்கிறது. யாழில் தோற்றத்தின் ஆரம்பநிலை வில்யாழிலிருந்தே தோற்றம் பெற்றது.
 
பேரியாழ் இருபத்தொரு நரம்புகளையும் – மகரயாழ் பத்தொன்பது நரம்புகளையும் – சகோட யாழ் பதின்மூன்று நரம்புகளையும் – செங்கோட்டு யாழ் ஏழு நரம்புகளையம் உடையது. யாழை முதலில் கரிகாம்போதியில் (அதாவது செம்பாலை எனக் கூறுவர்) இசைத்து பின்பு கிரக பேதத்தினால் மத்திமத்தை சட்சமாகக் கொண்டு சங்கராபரணமும் இசைக்கப்பட்டது.
 
இவ்வாறாக சங்ககாலத்தில் பல்வேறு நூல்களிலும் இசைபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த இசையே பிற்காலத்தில் இசைவளர்ச்சி தமிழிசை வளர்ச்சி இரண்டிற்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை. 

சங்க காலத்தில் காணப்பட்ட பண்களும் அவை சுட்டும் நூல்களும்

பண்கள்                                           நூல்கள் 
1.    ஆம்பல்பண்                நற்றிணை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு

2.    காஞ்சிப்பண்                மலைபடுகடாம் – புறநானூறு,
                                                சிறுபாணாற்றுப்படை

3.    சாமரப்பண்                    சிறுபாணாற்றுப்படை

4.    குறிஞ்சிப்பண்            மலைபடுகடாம், நற்றிணை, திருமுருகாற்றுப்படை

5.    செவ்வழிப்பண்        அகநானூறு, புறநூனூறு, மதுரைக் காஞ்சி

6.    நைவளப்பண்            குறிஞ்சிப்பாட்டு- பரிபாடல், சிறுபாணாற்றுப்படை

7.    பஞ்சுரப்பண்               ஐங்குறுநூறு

8.    படுமலைப்பண்        நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு

9.    பாலைப்பண்              பரிபாடல், பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுப்படை,                                          பொருணாராற்றுப்படை

10.    மருதப்பண்                     மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்

சங்க இசைக்கருவிகளும் அவை சுட்டும் நூல்களும்

இசைக்கருவிகள்                                 நூல்கள்

1.    யாழ்                     புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, 
                         பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருமுருகாற்றுப்படை, பொருனா ஆற்றுப்படை,       சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம்

2.    கின்னரம்                                    பெரும்பாணாற்றுப்படை

3.    குழல்               பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து

4.    சங்கு                           திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பதிற்றுப்பத்து

5.    தம்பு                                 ஐங்குறுநூறு, பரிபாடல், மலைபடு கடாம்

6.    தண்ணுமை                நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

7.    முழவு              குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு

8.    முரசு           மதுரைக்காஞ்சி, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து, அகநானூறு

9.    பறை        புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, மலைபடு கடாம், சிறுபாணற்றுப்படை
        
இராகசுரபி. செல்வி. பரமேஸ்வரி கணேசக்கம்பர் 
முதுநிலை விரிவுரையாளர், 
இசைத்துறை, 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நன்றி: சயம்பு மலர் – 2005

 

 

தமிழிசை மூவர் இசைப்பணி – ஓர் ஒப்புநோக்கு

Parameswary

இந்திய சங்கீதத்தில் நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புடன்கூடிய இசைவடிவங்களுள் மிகப் பழமையான இசைவடிவங்கள் தேவார பதிகங்களாகும். தேவார முதலிகள் காலத்தின் பின் 16, 17, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழிசை மூவர் என அழைக்கப்படும் சீர்காழிமூவர் முத்துத்தாண்டவர் மாரிமுத்துப்பிள்ளை – அருணாசலக கவிராயர் ஆகியோராவர். இவர்கள் மூவரும் தமிழிசைக்கு வித்திட்டவர்கள். இவர்களின் கீர்த்தனைகளே பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றி தமிழிசையை வளர்ப்பதற்கு முன்னோடியாக அமைந்தன என்று கூறினால் மிகையாகாது.

கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் எனப்போற்றப்படும் தியாகராஜசுவாமிகள் சியாமாசாஸ்திரிகள் – முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் தமிழிசை மூவர் காலத்தால் பெரிதும் பிற்பட்டவர்களாவர். தமிழிசை மூவரின் செல்வாக்கு பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றக் காரணமாய் அமைந்தது.

முத்துத்தாண்டவர் (1560 – 1640) 

17 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் சிறந்து விளங்கிய வாக்கேயகாரர் முற்காலத்தில் கீர்த்தனைகளில் பல்லவியும் சரணங்களுமே இடம்பெற்றிருந்தன. பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அமைப்பு முறையில் முதன் முதலில் கீர்த்தனைகளை இயற்றியவர் முத்துத்தாண்டவராவார். எனவே தான் கீர்த்தனை மரபின் தந்தை எனப்போற்றப்படுகின்றார். இவர் பாடிய கீர்த்தனைகள் அனைத்தும் சிதம்பர நடேசர் மீது பாடப்பட்டவையாகும். தாண்டவர் கீர்த்தனைகளில் நடனத்திற்கேற்ப சொற்கட்டுக்கள் அமைந்திருக்கும். நீண்ட தாளக்கோர்வைகள் கொண்டமைந்ததாக இவரது சொற்கட்டுகள் அமைந்திருந்தன. உதாரணமாக 'ஆடிய வேடிக்கை பாரீர் என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. இது சாருகேசி இராகத்தில் அமைந்தது. சரணப்பகுதியில் நீண்ட சொற்கட்டு கொண்டதாக அமைந்துள்ளது.

முத்துத்தாண்டவரைப் பின்பற்றியே கோபாலகிருஸ்ணபாரதியார், பாபநாசம் சிவன், சுந்தானந்தபாரதியார், நீலகண்டசிவன் மாரிமுத்துப்பிள்ளை ஆகியோர் சிவதாண்டவத்தை வர்ணித்து சொற்கட்டுகளோடு கூடிய கீர்த்தனைகளை அமைத்தனர்.

இவர் பூலோககைலாயம் என்ற தொடர்மொழியை முதலடியாக கொண்டு கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தார். இவர் இயற்றிய கீர்த்தனைகள் 60 பதங்கள் 25 தெருவாறானோ என்ற கமாஸ் இராக பதம் பிரபல்யம் வாய்ந்தது.இடது பாதம் தூக்கி ஆடும் (கமாஸ்) மாயவித்தை செய்கிறானே. அம்மபவாணன் – (கரகரப்பிரியா) ஆடிக்கொண்டார் (மாயாமாளவகௌளை) இப்பாடலின் சரணத்தில் இரட்டித்த கால சாகிர்த்தியம் அமைக்கப்பட்டுள்ளது. 

'ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத் தேர் ஆட'

இதில் ஆட என்னும் பதம் இறுதியில் வருகின்றது. இம்முறை சம்பந்தர் தேவாரத்திலும் காணப்படுகின்றது. 

'சடையா யெனுமால் சரண்நீ எனும்மால் 
விடையா யெனுமால் வெருவா விழுமால';

இவருடைய கீர்த்தனைகளில் சைவசித்தாந்தக் கருத்துக்களும் பழைமையான வரலாறுகளும் சொற்சுவை, பொருட்சுவை, எதுகை மேனை, தொடை ஆகியவை நயங்கள் கொண்டவையாகவும் விளங்குகின்றன.

அருணாசலக் கவிராயர் (1711 – 1779)

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மயூரத்தை அடுத்துள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தருமபுரத்திலுள்ள சைவமட்டத்தில் தங்கி சமயநூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவர். தமிழ்இலக்கண இலக்கியங்களிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவர் கற்ற நூல்களில் கம்பராமாயணரும் திருக்குறளும் குறிப்பிடத்தக்கவை. இதுவே பிற்காலத்தில் இராமநாடக கீர்த்தனைகள் இயற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவை. இராமநாடகக் கீர்த்தனைகளில் சூழ்நிலைக்கேற்பவும் பாத்திரங்களின் குண நலனுக்கேற்பவும் இசைவடிவங்களைப் படைத்துள்ளார். இவ்வாறாக 197 கீர்த்தனைகளை அமைத்துள்ளார். இவை தவிர கொச்சகம், விருத்தம் தரு கலிப்பா, கலித்துறை திபதைகள் தோடயம் என பல்வேறு பாவினங்களைக் கையாண்டுள்ளார். இவை தவிர சீர்காழி தலபுராணம் சீர்காழிக்கோவை அசோமுகி நாடகம் என்பவைகளையும் இயற்றியுள்ளார்.

அருணாசலக் கவிராயருடைய இராமநாடகக் கீர்த்தனைகள்

இராமருடைய புகழைப் பாடுவதனால் இராமநாடகக் கீர்த்தனை என பெயர் கொடுத்துள்ளார். கவிராயர் இராம நாடகக் கீர்த்தனைகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டு 19 ஆம் நூற்றாண்டில் பெருவழக்கிலிருந்தது. இராம நாடகத்தை கீர்த்தனைகளாக இயற்றியமைக்கான காரணங்கள்.

1. இதுவரையில் இராமநாடகத்தை கீர்த்தனையாக எவரும் செய்யாமை
2. கீர்த்தனை பாமரமக்களும் கேட்டு இன்புறும் வடிவம்
3. இராக தாளங்களை குறிப்பதற்கு இரு இசையாளர் உதவியமை

இந்நூல் தமிழ் நாடக நூல் என்று சொல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. மேடை நாடகத்திற்கும் ஹரிகதை முறையில் மேடை பிரசங்கம் செய்வதற்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் தெலுங்கிலும் தமிழிலும் புராணக்கதைகள் இதிகாசக்கதைகள் என்பன மராட்டிய ஹரிகதைப் பாணியில் கீர்த்தனைகளாக இடையோடுபாடப்பட்டு கதாகாலட்சேப முறையில் மன்னர்கள் முன்னிலையில் அரசவையில் பாடப்பட்டு வந்துள்ளன. இதனால் இவருடைய இராமநாடக கீர்த்தனைகளுக்கும் பெருவரவேற்பு இருந்து வந்தது.

இராமாயணம் கவிதை நாடகம் சொற்பொழிவு திரைஇசை கதாகாலசேபம் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிவந்தன. அருணாசலக் கவிராயரும் கம்பர் இயற்றியது போன்றே இராமாயணத்தை ஆறு காண்டங்களாகப் பிரித்துள்ளார். பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிஸ்கிந்தா காண்டம், சுந்தரா காண்டம், யுத்த காண்டம் என்பவையாகும். 12,000 பாடல்களாக இராமாயணத்தை கம்பர்பாட இயற்றமிழ் செய்யுட்களை கொண்ட பல விருத்தப்பாக்களை தொடக்கமாக கொண்டும் தமிழில் 197 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

எடுத்துக்காட்டாக சுந்தரகாண்டம் என்னும் பகுதியை நோக்கின் தோடையம், திபதைகள், தருக்கள் கொச்சக்கம், கலித்துறை ஆகிய பாவினங்களைக் கையாண்டு பாடல்கள் 268 அமைந்துள்ளன. கீர்த்தனைகள் தரு என்ற பெயரில் குறிப்பிடுகிறார். இதில் வசனங்கள் வருவதில்லை. தரு என்னும் கீர்த்தனைப் பகுதி முழுவதும் பாத்திரங்கள் பேசிப்பாடி ஆடுகின்ற பகுதிகளாகும். தருக்கள், வர்ணனைத்தரு, வாக்குத்தரு, புலம்பல்தரு எனபலவகைப்படும். அவற்றும் சிலவற்றை காண்போம். 

தருக்கள் 

1. பாய்ந்தானே அனுமன் நாதநாமக்கிரியை ஆதிதாளம்
2. எட்டு நாளையே பாரும் அம்மா 
  இராவணன் போரும் இவன் ஊரும் – சாரங்கா ஆதிதாளம்

அசோகவனத்தில் இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதாதேவி தனது உள்ளக் குறுமலை திரிசடையோடு முறையிடும் சந்தர்ப்பத்தில் சோகத்தை வெளிப்படுத்த திபதையை பயன்படுத்தியுள்ளார்.

3. ஐயா நானொரு பெண்பிறந்த கதையை 
  யாருடனே சொல்வேன் திரிசடையே – நீலாம்பரி இராகம் ஆதிதாளம். 

இராவணர்காக் கண்ட அனுமன் தனது போபத்தினை வெளிப்படுத்தும் போது அடானா இராகத்தினை கையாண்டுள்ளார்.

இந்த இராவணைக் கண்டு சும்மா போனால்
என்ன அனுமன் நானே – அடானா ஆதிதாளம்

எனவே பாத்திரங்களின் குணநலனுக்கேற்ப பொருத்தமான இசைவடிவாக்கப்படைத்தல் இவரின் இசை நுட்பமாகும். தனது 60 வது வயதில் தமிழ்நாடு முழுவதும் இராமகதையை இனிதாய் தமிழில் பாடியவர். பல இசைவடிவங்களை கொண்ட முதல் தமிழிசை நாடகமாக இராமநாடகம் விளங்குகிறது.

மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1782)

இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாரிமுத்தாப்பிள்ளை சிதம்பரத்திற்கு வடக்கே அமைந்துள்ள தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே கீர்த்தனைகளை இயற்றும் ஆற்றல் பெற்றவர். நடராஜப் பெருமான் கனவில் தோன்றி இவ்வூருக்கு ஒரு பிரபந்தம் இயற்றும்படி கேட்க இவரும் இறைவன் திருவருனை வியந்து 'புலியூர் வெண்பா' என்னும் நூலைப்பாடி முடித்தார். இவைப் பாடல்களில் இவ்வளவு பொருட்சுவை உடைய பாடல்களைக் காண்பதரிது. இறைவனை நிந்திப்பது போன்று அமைந்த கீர்த்தனைகள் நிந்தாஸ்துதி எனப்படும். இவை இவர் கீர்த்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நடராஜ பொருமான் மீது பாடிய பாடல்கள் ஐம்பது என்று கூறப்படுகின்றது. இவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை இருபத்தைந்து ஆகும். முத்துத் தாண்டவர் பாடல்களிலும் நிந்தாஸ்துதி கீர்த்தனைகளைக் காணலாம். தாண்டவரைப் பின்பற்றியே மாரிமுத்தாப்பிள்ளை நிந்தாஸ்துதி கீர்த்தனைகள் இயற்றியதாகக் கூறப்படுகின்றது.

இவர் தமது 12 வது வயதிலேயே உமையவள் மீது உமையவள்மாலை என்னும் பிரபந்தம் இயற்றினார். அதன் பின் புலியூர்வெண்பா எனும் வருணாபுரி ஆதிமூலகர் குறவஞ்சி, ஆதி மூலகர் நொண்டி நாடகம், அநீதி நாடகம புலியூர் சிங்கார வேலர் பதிகம், விடங்கேசர் பதிகம், நடராஜ பெருமான் மீது ஐம்பது பாடல்கள் இரதபந்தம் முதலிய சித்திரக் கவிகள் பல்வித வர்ணங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சீர்காழி அருணாசலக்கவிராயரும் இவரும் ஒரு காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனைகள் 

1. என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா – வேளாவளி; இராகம் ஆதி தாளம். (நிந்தாஸ்துதி)

2. ஒருக்கால் சிவசிதம்பரம் – ஆரபி இராகம் – ஆதி தாளம்

3. எந்நேரமும் ஒரு காலை – தோடி இராகம் ஆதி தாளம் (நிந்;தாஸ்துதி)

4. காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே – எதுகுலகளம்போதி ஆதி

5. என்ன காரியத்துக்கு இப் பேயாண்டிமேலே – இச்சை கொண்டாய் மகளே – தர்மவதி இராகம்

6. ஏதுக்கித்தனை மோடிதான் – சுருட்டி இராகம் – ரூபக தாளம்

முடிவுரை

இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற இம்மூவரும் சீர்காழிப் பதியிலே தோன்றியமையினால் சீர்காழி மூவர் என அழைக்கப்பட்டனர். இவர்களுள் முத்துத்தாண்டவரும். மாரிமுத்தாப்பிள்ளையும் தில்லைநடராசரைப் போற்றிப் பாடினார்கள். மாரிமுத்தாப்பிள்ளை பூலியூர்வெண்பாவை சிதம்பரத்தலம் சம்பந்தப்பட்ட 100 பாடல்களைப் பாடியள்ளார். மாரிமுத்தாப்பிள்ளையின் சமகாலத்தவராக திருப்புகழ் பாலபாரதி என்ற கவிஞர் மாரிமுத்தாப்பிள்ளையின் புலமைத் திறன்போல் முழுதும் தெளிந்த மனம்போல் எங்கும் காணவில்லை என்று பாடுகின்றார். இவரைப் போலவே அருணாசலக் கவிராயரும் சீர்காழிக்கு அருகே உள்ள மாயுரத்தை அடுத்த தருமபுரம் சென்று அங்கிருந்த சைவ ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர்களிடம் சமயக்கல்வியும் வடமொழியும் கற்றிருந்தார். இம்மூவர்களது பாடல்களினாலும் தமிழ் சேர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கின்றது. தமிழ் இசைச் சங்கத்தினால் இவரது கீர்த்தனைகளை இசை ஆய்வாளர்களும் கலைஞர்களும் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளனர். இவர்களது பாடல்களினால் தமிழ் இசை என்றும் வளம்பெறும் என்பது திண்ணமாகும்.

உசாத்துணை நூல்கள்

1. தமிழிசை தொன்மையும் பெருமையும், தொகுதி – 1 இசைத்துறை தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2006.

2. தென்னக இசையியல் னுச.வு.P.செல்லத்துரை, வைகறைப்பதிப்பகம், திண்டுக்கல் 5ம் பதிப்பு, 2005

3. இசையும் பிறநுண்கலைகளும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2005

4. தமிழிசைக் கலைக்களஞ்சியம், 4ம் தொகுதி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2000.

இராகசுரபி. பரமேஸ்வரி கணேசக்கம்பர் 
சிரேஷ்ட விரிவுரையாளர், 
இசைத்துறை, 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நன்றி: காரை நிலா – 2014

அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி கணேசக்கம்பர் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இன்னிசைக் கச்சேரி வழங்குவதற்காக கனடாவிற்கு கலைப்பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்பான கட்டுரைகள் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் எமது நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவத ஆண்டு நிறைவினையொட்டி வெளியிடப்பட்ட 'காரை நிலா' சிறப்பு மலரில் இடம்பெற்ற இக் கட்டுரை இரண்டாவாதாக எடுத்து வரப்படுகின்றது.

 

காரை மாதாவிற்கு பெரும் புகழ் சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் என்.கே.கணேசன்

Karai_N.K.Kanesan

கலைஞர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள். சிலர் பிறவிக் கலைஞர்களாகவே தோன்றுகிறார்கள். சிலர் தமது முயற்சியால் ஆற்றலால் ஆளுமையால் பார் போற்றும் கலைஞர்களாகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரே உச்ச நிலையை அடைகிறார்கள். மக்களின் மனதில் இடம் பிடித்துக்கொள்கின்றார்கள்.

இது அவர்களது கலைகளில் கண்ட தனித்துவம் திறமை ரசிகர்களை சுண்டியிழுக்கும் பாங்கு; மற்றது இங்கிதம் என்று கூறுவார்களே. கலைஞர்களிற்கு இது மிக அவசியமாகிறது. எத்துணை திறமையிருந்தும் அவரிடம் இங்கிதம் – மனிதனுடன் பண்பாக அன்பாக பழகும் பாங்கு இல்லாதவிடத்து அவர் ஒரு புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவார்.

இந்நிலையில் நாம் இங்கு நினைவுகூர வந்திருக்கும் நீத்தார் பெருமை கூறவந்திருக்கும் இசை அறிஞர் பூரண தகமைகளை கொண்டிருந்த இசை அறிஞர் என்றே கூறவேண்டும். இசைநாத மணி, இசைச்சக்கரவர்த்தி மறைந்த நாதஸ்வர வித்துவான் காரையம்பதி என்.கே.கணேசன் இசை உலகிற்கு அரும்பணியாற்றியவர். வாழும்பொழுதே கௌரவிக்கப்பட்டார். பல இளம் கலைஞர்களிற்கு உதாரணமாக இருந்தவர். இவர் பெருமை கூறி அஞ்சலி செலுத்துவது நமது கடமைப்பாடுகளில் ஒன்றாகும். 

இதனைத் தவறாது இவ்விசை வேள்வியில் சேர்த்துக்கொண்ட கம்பன் கழகத்தினை முதற்கண் பாராட்ட வேண்டும். நாதஸ்வர வித்துவான் என்.கே.கணேசன் அவர்களது இழப்பு இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இவ்வருடம்(2001ஆம் ஆண்டு) யூலை மாதம் 28ஆம் திகதி மரணமெய்தினார். 

காரைநகரையே பிறப்பிடமாகக் கொண்டவர் இவர். முதலில் தந்தையார் நல்லகண்ணு கம்பரிடமும் பின்னர் மூளாயைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் அமரர் ஆறுமுகம் அவர்களிடமும் பின்னர் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் அமரர் ரசா அவர்களிடமும் நாதஸ்வர இசையை முற்றாகவும் முறையாகவும் கற்றார். 

அளவையூர் நாதஸ்வர சக்கரவர்த்தி கலாசூரி என்.கே.பத்மநாதனை சம்பந்தியாக கொண்டார். இந்திய நாதஸ்வர தவில் வித்துவான்களோடு ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவ காலத்தில் இணைந்து வாசித்து பாராட்டைப்பெற்றவர். இவரது வாசிப்பு தனித்துவமானது. கேட்போர் மனதை கவரும் தன்மையது என்று கேள்விப்பட்டுள்ளேன். தமிழகத்தின் பிரபல தவில் மேதைகளான அரித்துவாரம் மங்களம் A.K.பழனிவேல் திருவானப்புத்தூர் T.A.கலியமூர்த்தி திருச்சேரை முத்துக்குமாரசாமி போன்றோரால் ஈழத்துச் சிதம்பரத்தில் பாராட்டப்பெற்றவர்.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் கூத்தபிரான் வீதியுலா வருங்காலத்தில் நாதஸ்வரம் வாசிப்பதை தமது முக்கிய கடமையாகக் கொண்டவர். அமரர் கணேசன் அவர்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் ஆஸ்தான வித்துவானாக நாதஸ்வர மாமேதையாக 40 ஆண்டு காலமாக இருந்தவர். நாடு போற்றும் நன் மக்களையும் பெற்று இன்று நாதஸ்வர மேதையாக பல பட்டங்களையும்பெற்று காரை மாதாவிற்கு புகழ் சேர்த்த என்.கே.கணேசன் அகவை 53 வரை வாழ்ந்தவர். 

நாதஸ்வர கலாநிதி நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனும் பல பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார். காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பிகையின் ஆஸ்தான வித்துவானுமாவார். இலங்கை வானொலிக் கலைஞராக பங்குபற்றியவர். இவரது பிள்ளைகளும் நாதஸ்வரம் தவில் வாய்ப்பாட்டில் புகழ்பூத்து நிற்கிறார்கள். சென்ற ஆண்டுகூட(2000ஆம் ஆண்டு) கம்பன் விழாவிற்கு வருகை தந்த மாம்பழம் சிவா குழுவினரை ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவத்திற்கு வாசிக்க வைத்த பெருமை அமரர் கணேசனையே சாரும். 

1975ல் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் வாசித்த பாராட்டைப் பெற்றவர். இந்தவகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வம்சத்து வழித்தோன்றலான திரு.நல்லக்கண்டு செல்லையா சம்பத்துவின் தம்பி நல்லக்கண்டு கயிலாயக்கம்பரின் மகனாகப் பிறந்து ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர் வரிசையில் இடம்பெற்று தனது தெய்வீக இசைமூலம் இசைப் பணியாற்றி ஈழத்துச் சிதம்பர ஆஸ்தான வித்துவானாகவிருந்த நாதஸ்வரமேதை அமரர் என்.கே.கணேசன் அவர்களது மறைவு தமிழ் மக்களிற்கும் கலைத்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொழும்பு கம்பன் கழகம் 2-12-2001 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய இசை வேள்வியின்போது கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை.

நன்றி: மூதறிஞர் பண்டிதர் தத்துவகலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்

பதிப்பாசிரியர்: அருள்நெறித்தொண்டர் அமரர் கே.கே.சுப்பிரமணியம்

அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி(பரமா) கணேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்ளும்பொருட்டு கனடாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்புபட்ட தகவல்கள் கட்டுரைகள் இவ்விணையம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் மேற்குறித்த கட்டுரை முதலாவதாக எடுத்து வரப்படுகின்றது.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி யஸ்மின் நவரட்ணராஜா.

SWISS LOGO

காரைநகரின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியன

     சைவத்தையும் தமிழையும் போற்றி வளர்த்ததில் வட இலங்கைப் பிரதேசத்தில் குறிப்பாக யாழ்ப்பாண பிரதேசம் தனக்கே உரிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியை எடுத்து நோக்குகையில் சமய, சமூக, பொருளாதார அம்சங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

                       "பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால்
                                           ஆற்ற விளைவது நாடு"

 என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகைய கேடுதல் இல்லாதாகிய மிகுதியான விளைச்சலை உடையதாகியதாகவும் விளங்கும் பெருமை மிக்கதே இச்சிவபூமியாகிய காரைநகர். யாழ்ப்பாணத்தில் வடமேல் திசையில் 22 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் காரைதீவானது தற்போது காரைநகர் என வழங்கப்பட்டு வருகின்றது. சப்த தீவுகளின் அணிகலனாய் விளங்கும் காரைநகர் புராதன காலத்தில் காரைச்செடிகள் மிகுந்து காணப்பட்டமையினாலும் இங்கு வாழ்ந்த மக்கள் காரைக்குடிகள் என்று அழைக்கப்பட்டதாலும் இது காரைதீவு எனப்பெயர் பெற்றது. பின்னர் இலங்கையின் ஏனைய சில பிரதேசங்களும் காரைதீவு என வழங்கப்பட்டமையினால் பல்வாறான இடைஞ்சலை தவிர்ப்பதற்காக என இப்பிரதேசம் ஆங்கிலேயரால் காரைநகர் என குறிப்பிடப்பட்டது.

  இத்தீவானது மேற்கிலும் வடக்கிலும் இந்தியாவுடன் தொடுகடலான பாக்கு நீரிணையும் கோடை காலங்களில் வற்றுகின்ற தன்மையுடையதான பொன்னாலைக்கடலாலும் தெற்கில் அகலம் குறைந்த ஆழம் மிக்க ஊர்காவற்றுறைக் கடலும் சூழ்ந்த தனித்துவமான பிரதேசமே காரைநகர். பண்பாட்டு மரபைப் பேணும் இயற்கைச் சூழல் கொண்ட காரைநகர் பிரதேசம் 7 கிலோமீற்றர் நீளமும் 4 ½ கிலோமீற்றர் அகலமும் உடையது.

  இத்தகைய சிறப்பிடமான காரைநகர் கல்வி, கலை, கலாச்சாரம் என்பவற்றில் தடையற்ற சிகரமாய் மிளிர்ந்ததற்கு காரைநகர் தந்த பெரியோர்கள் சாட்சி. திரு.ச.அருணாசலம் உபாத்தியாயர், காரைப்புலவர் ஏறு பிரம்மஸ்ரீ கார்த்திகேயப்புலவர், நாகமுத்துப்புலவர், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள், சுப்பிரமணிய தேசிகர் போன்ற பெரியார்கள் இம்மண்ணில் வாழ்ந்து மடிந்துள்ளனர். காரைநகரின் சிறப்பும் தனித்தன்மையும் இன்னும் போற்றப்பட வேண்டியது இன்றியமையாததொன்றாகும். இத்தகைய பெரியோர் பற்றிய ஆய்வுகள் முழுமைப்படுவதும் காலத்திற்குக் காலம் இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதும் அவசியம். காரைநகரின் வளர்ச்சிக்கு இத்தகு பெரியோரின் பெயர்கள் நிலைக்கப் பெயரிடுவதும் பொது இடங்களில் திருவுருவச்சிலை அமைத்துப் பேணுவதும் இவர்கள் ஆக்கிய நூல்களைப் பாதுகாத்தலும் எம் அனைவரதும் முக்கிய கடமையாகும். இன்று வலந்தலையில் அமையப்பெற்றுள்ள சயம்பு வீதி மற்றும் யா/கலாநிதி.ஆ.தியாகராஜா.மத்திய.மகா.வித்தியாலயப் பகுதியில் அமைந்துள்ள சயம்பரின் சிலை மற்றும் இப்பாடசாலையின் கட்டடங்கள் பெரியார் நடராஜா மற்றும் சயம்பரினையும், பாடசாலையின்பெயர் மதிப்புமிகு தியாகராஜா அவர்களை நினைவு கூருவதைப்போல் காரைநகரின் ஏனைய பிரதேசங்களும் பகுதிகளும் இப்பெரியார் பெயர் கூறினால்தான் வருங்கால சமுதாயம் வளம்பெறும் வகையில் பெரியார் கனவு மெய்ப்படும். 

        மேலும் சுமார் 22 சதுர கிலோமீற்றர் பரப்பளவினையுடைய இப்பிரதேசமானது ஒன்பது கிராமசேவையாளர் பிரிவினையும் 94 கிராமங்களையும் 3600 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 12000 பேர் தற்போது இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்கின்ற குடும்பங்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் தமது சீவனோபாயத்திற்காக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

       நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட இச்சிறுதீவு கடற்றொழிலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு கொண்டு சென்றே விற்பனையாகின்றன. இதனால் உள்ளுர் நுகர்வானது வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது. காரைநகரில் ஐந்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் காணப்பட்டு வருகின்றது. எனவே வெளியூர் மீன் விற்பனையை இவர்கள் தம் கவனத்தில் எடுக்க வேண்டும். வெளியூரில் மேற்கொள்ளப்படும் விற்பனையை நம் ஊரில் அதற்கேற்ப பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளுர் வருமானம் உயரும் என தெளிவாகின்றது.

         மேலும் காரைநகரில் கல்வி விருத்தியானது ஓரளவு திருப்தியான நிலையை எட்டியபோதும் பெரும்பாலான மாணவர்கள் யாழ்நகர் நோக்கி கல்வி நடவடிக்கைக்காக செல்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் காரைநகரில் சகல வளங்களும் சேர்ந்த பாடசாலைகள் காணப்படுகின்றன. இங்கு செயற்படுகின்ற 15 பாடசாலைகளில் சுமார் 2000 மாணவர்கள் கல்விகற்று வருவதுடன் சுமார் 200 ஆசிரியர்கள் கல்வி போதித்து வருகின்றனர். அத்துடன் சில தனியார் கல்வி நிலையங்களும் கிழவன்காடு கலாமன்றமும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே வெளியூருக்கு கல்விக்காகச் செல்லும் மாணவர்கள் எமது பிரதேசத்திலேயே கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். எமது பிரதேச பிள்ளைகள் வெளியூர் பாடசாலைகளில் பெறும் பெறுபேற்றை எமது ஊர்ப் பாடசாலைகளில் பெற்றால் அது எமது பிரதேசத்திற்கே பெருமை சேர்க்கும் விடயம் ஆகும்.

       மேலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் எமது பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்பதுடன் மேலதிக கல்விக்காக யாழ்நகர் நோக்கிச் செல்லும் நிலை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. காரைநகரின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் போக்குவரத்து இடரினைத் தவிர்க்கவும் எமது பிரதேசத்திலேயே உயர்தர மாணவர்களுக்கான கல்விநிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கு வளமான ஆசிரியர்களைப் பெற்று வழங்குவதன் மூலம் காரை மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்த முடியும்.

                  
                                                                            அத்துடன் 2010ஆம் ஆண்டு வரை யா/கலாநிதி.ஆ.தியாகராஜா.மத்திய.மகா.வித்தியாலயத்தில் மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி பெறும் சாதக நிலை காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய மாணவர்கள் பெரிதும் ஆங்கில மொழிமூல கல்வியை விரும்புவதால் மீண்டும் காரைநகர்ப் பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கல்வியை ஆரம்பிக்க வேண்டும். இத்தகைய கல்விப் பணிகளை மேற்கொண்டால் காரைநகரின் வளர்ச்சி கல்வியில் உச்ச நிலையினை அடைய முடியுமென்று தெரியவருகிறது. மேலும் காரைநகரில் காணப்படும் பாலர் பாடசாலைகள் மற்றும் நவீன கற்றல் செயற்பாடுகளுடன் கூடிய காரை கிட்ஸ் பார்க் பாடசாலையும் இயங்குகின்றன. காரைநகர் முன்பள்ளிகளின் அபிவிருத்தியில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் மற்றும் கனடா காரை நலன்புரிச்சங்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவருகின்றது. மேலும் பாடசாலை நூலகங்களுடன் வியாவில் ஐயனார் ஆலய நூலகம், புதுவீதியில் மாணவர் நூலகம் என்பனவும் மாணவர் கல்வி வளர்ச்சியில் பங்களிப்பினை வழங்கி வருகின்றது. மேலும் இங்கு நூலக வசதிகளில் இலத்திரனியல் கணினி நிலையங்கள் அமைக்கப்பட்டால் மாணவர்களின் வாசிப்பு அறிவும் கணினி அறிவும் மேம்படையும் என தெரிகின்றது. எனவே காரைநகர் கல்வி வளர்ச்சிக்கு இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததொன்றாகும்.

             தொடர்ந்து சுகாதாரத்தைப் பொறுத்தமட்டில் எமது பிரதேசத்தில் ஒரு பிரதேச வைத்தியசாலையும் ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்றும் உள்ளது. மேலும் ஓரிரு தனியார் மருந்தகங்களும் காணப்படுகின்றன. எனினும் இப்பிரதேச மக்களுக்கு சுகாதார வசதியின்மை தொடர்ந்தும் நிலவி வருகின்றது. ஆயள்வேத வைத்தியசாலை ஆரம்பிப்பதற்குரிய நிலம், கட்டடம் மற்றும் ஏனைய வசதிகளை லண்டன் மற்றும் கனடா நலன்புரிச்சங்கங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியசாலை ஒன்றும் களபூமி விளானையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நலன்புரிச்சங்கங்களின் உதவியோடு நடமாடும் மருத்துவ முகாம்களின் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. எனவே மக்கள் இதனைப் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

         காரைநகரில் வங்கிச்சேவையைப் பொறுத்தமட்டில் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன தமது கிளைகளை காரைநகரின் மேற்கு வீதியில் அமைத்து தமது சேவைகளை வழங்கி வருகின்றன. இவர்களது சேவைகளில் சேமிப்பு மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமன்றி கடன் வசதிகளும் சிறப்பிடம் பெறுகின்றன. அந்த வகையிலே விவசாயக்கடன், மீன்பிடிக்கடன், சுயதொழிற்கடன், வாழ்வாதாரக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் உதவியுடன் மக்கள் தமது சுயதொழிற் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமுர்த்தி வங்கி, கிராமிய வங்கி என்பனவும் மக்களுக்கான கடன் வசதிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கான விதைகள், பசளைகள், வியாபார உபகரணங்கள், தென்னங்கன்றுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் கோழிக்குஞ்சுகள் என்பனவற்றையும் வழங்கி மக்களின் சுயதொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. எனினும் இச் சுயதொழில்கள் வீட்டுப்பாவனையுடன் மட்டும் நின்றுவிடாது பொருளியல் ரீதியிலும் வளர்ச்சி பெறவேண்டிய வசதிகளை பிரதேசசபை மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் உள்ளுர் வியாபாரத்தை மேம்படையச் செய்ய முடியும். 

            இத்துடன் சமூக சேவைகளை நோக்கும்போது 15 கிராம அபிவிருத்திச் சங்கங்களும் 5 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் 10 இற்கு மேற்பட்ட சனசமூக நிலையங்களும் உள்ளன. அத்துடன் 14 விளையாட்டுக்கழகங்களில் 06 கழகங்களின் செயற்பாடுகள் பதிவின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. இவை மட்டுமல்லாமல் 03 இளைஞர் மன்றங்கள் காணப்படுவதுடன் காரைமத்தி மேம்பாட்டுக்கழகம், ஓய்வூதியர் சபை, மணிவாசகர் சபை, யோகா ஆரணியம், களபூமி கலையகம், காரைநகர் அபிவிருத்திச்சபை மற்றும் ஒளியகம் போன்ற பொது அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. இவ் அமைப்புக்கள் மூலம் பலவாறான சேவைகள் மற்றும் பண்ணிசை, பேச்சு, கவிதை, நடனம், நாடகம் போன்ற போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. முதியோர் மற்றும் கணவனை இழந்த பெண்களிற்கான கொடுப்பனவுகள், சுயதொழில் ஊக்குவிப்புக்கள், மாணவர்களுக்கான மேலதிக இலவசக்கல்வி போன்றவற்றை கனடா, பிரான்ஸ் மற்றும் லண்டன் போன்ற காரை நலன்புரிச்சங்கங்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்டுடன் இச் செயற்பாடுகள் தொடர வேண்டும். இதற்காக இயங்காத நிலையில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு பிரதேசசபையின் அனுமதி பெற்று இயங்க வேண்டும். உதாரணமாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தை எடுத்துக் கொண்டால் இக்கழக உறுப்பினர்கள் மிக குறைந்தளவு தொகையிலேயே காணப்படுகின்றனர். இக்கழக பிரதேசத்தில் மாணவர்கள் ஏராளமானோர் இருந்தபோதிலும் அவர்கள் கழக செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகிறது. எனவே பிரதேசசபை, காரை அபிவிருத்திசபை மற்றும் இளைஞர் கழகங்கள் மூலம் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடாத்துவதன் மூலம் இது போன்ற கழகங்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

        மேலும் காரைநகரின் போக்குவரத்து நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டோமானால், பிரதான சுற்று வீதியும் 92 உப வீதிகளும் அமைந்துள்ளன. உபவீதிகளில் பெரும்பாலானவை புனரமைக்கப்பட்டு வரும் போதிலும் சில வீதிகள் இன்னும் இடங்கலுள்ளாகிய நிலை காணப்பட்டு வருகின்றது. உதாரணமாக சந்தம்புளியடி வீதி, களபூமி கல்லொழுங்கை போன்ற வீதிகள் இன்னும் புனரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இதனை பிரதேச சபையின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இவற்றை சீர்செய்ய வேண்டும். இது பிரஜைகளாகிய எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். இவை மட்டுமல்லாது காரைநகருக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துச் சேவை திருப்திகரமானதாகவே அமைந்துள்ளது. அவ்வகையில் காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் பிரதானம் பெறுகின்றன. இவ்வகையில் போக்குவரத்து சிறப்பிடம் பெற்றாலும் காரைநகர், யாழ்ப்பாணம் 782, 786, 784 இலக்கப்பாதைகள் புனரமைக்கப்படவில்லை. யாழ்ப்பாண வீதிகளெங்கும் காப்பெற் வீதிகளாக புனரமைக்கப்பட்டு வரும்போது காரைநகரில் எந்தவொரு வீதியும் இதுவரை காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவில்லை. அத்துடன் பொன்னாலைப்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், இப்பாலத்தில் இரவுநேர மின்விளக்குகளை ஒளிரவிட்டால் இவ்வாறான விபத்துக்களை தவிர்க்க முடியும.; இதனையும், பிரதேச சபையினரதும் ஊரக்கு தொண்டாற்றுவோரதும் கவனத்திற்கும் கொண்டுவர வேண்டும். 
        காரைநகரின் குடிநீரைப் பொறுத்தவரையில் ஆலங்கன்றடி உள்ளிட்ட ஐந்தாறு கிணறுகளும் பிரித்தானிய நலன்புரிச்சங்க குடிநீர்ப் பவுசர்களுமே மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதுடன் வரட்சிகால குடிநீர் விநியோகத்தை பிரதேசசபையும் மேற்கொண்டு வருகின்றமை காரைநகர் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும். 

மேலும் காரைநகரின் சைவப்பணி குறிப்பிடத்தக்கது. ஆலய சபைகளுடாக சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பெரியார் அருணாச்சலரின் வாக்கு மெய்ப்படுவதைக் காணலாம். இந்நிலை மேலும் வளர்ச்சி பெற வேண்டும். 

அந்த வகையிலே காரைநகரின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியன என்று தொகுத்து நோக்கும்பொழுது கல்வி, சுயதொழில், போக்குவரத்து, சமயம், பண்பாடு, சமூகம் என அனைத்து வகைகளிலுமே வளர்ச்சி பெற்ற அறிவும் பண்பாடும் நிறைந்த ஒரு நற்சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டியது இன்றியமையாததொன்றாகும். எனவே மாணவரிடம் விழுமிய பண்புகளை வளர்த்தல், மொழி, பண்பாடு, சமய, கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றைப் பேணுதல், பொது அமைப்புகளில் தொண்டாற்றுதல், வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல், திருப்பணிச்சபைகள் அமைத்தல், மாதந்தோறும் கலை, பண்பாட்டு நிகழ்வுகளை நடாத்துதல், கூட்டு வழிபாடுகள் நடாத்துதல், நூற்தொகுதிகள் பேணுதல் போன்ற சமூக தொண்டுகளில் ஈடுபட்டு எமது பிரதேசத்தை மிளிரச் செய்யும் நோக்குடன் செயற்பட வேண்டும் என உறுதி பூண்டு திண்ணிய மனத்துடன் ஒவ்வொருவரும் இயன்றளவு முயலுதல் வேண்டும்.


                                          "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

                                                                         ***நன்றி***

kadduraipoddi  05 20140001

புலம்பெயர் தேசத்திலிருந்து எமது ஊருக்கான அபிவிருத்தி

PHOTO

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு எனினும் பொன்னாலைப் பாலத்தினால் நகரானது எமது காரைநகர். அகிலம் போற்றும்  ஈழத்து சிதம்பரதத்தினையும், மேலும் பல கோவில்களையும், இருகல்விச் சாலைகளையும் மற்றம் பல பாடசாலைகளையும், குடிமனைகளையும், நெல்வயல்களையும், தரைவைநிலங்களையும் கொண்டது எமது ஊர்.  வடக்கு மேற்குக் கடற் பகுதிகள் ஆழமான பெருங்கடலின் பகுதியாக இருக்கவும்  தெற்கு,கிழக்குப் பகுதிகள் யாழ்ப்பாண கடல் நீர் ஏரியின் பகுதிகளாகவும் ஏழு கிலோமீற்றர் நீளமும், நான்குஅரை கிலோமீற்றர் அகலத்தையும் தன்னகத்தே கொண்டது காரைநகர் என்னும் அழகிய கிராமம்.
 
          காரைநகரின் இன்றைய மக்கள் தொகை 11000க்கு மேற்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முன்னர் 30000க்கு மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர். 1991ஆம் ஆண்டு இடம்பெயர்வு ஏற்படாதிருப்பின் இன்று 40000 மக்களைக் கொண்டு இருக்கலாம். 

                                  "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் 
                                      வாய்நாடி வாய்ப்பச் செயல்"
குறள்

         நாட்டில் ஏற்பட்ட இன்னலகளின்; இடப்பெயர்வு காரணமாக நாம் இன்று பூமிப்பந்தில் இலங்கையின் பிறமாவட்டங்கள், இந்தியா,கனடா,  ஐக்கியராச்சியம் (இலண்டன்), யேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குறிபிடத்தக்களவு பரந்து வாழ்கின்றோம். அருட்செல்வம், கல்விச்செல்வம், பொருட்செல்வம், நிறைந்த எமது கிராமம் இயற்கை அழிவுகளை சந்தித்ததில்லை. 1991ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு காரணமாக வயற்காணிகளில்  உரிய பருவங்களில் நெல் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்படவில்லை. மழைநீர் தேக்கப்படாத காரணத்தால்; நன்னீருக்கான ஊற்று அற்றுப்போயுள்ளது. இதனுடைய தாக்கம் இன்னும் தீரவில்லை. முதற் கட்ட நடவடிக்கையாக நன்னீருக்கான நிரந்தர தீர்வு வழிமுறைகளைக் கண்டறிதல் வேண்டும். மனித வாழ்வின் அன்றாடத்தேவையாக இருப்பது நன்னீர். இதைச் சரிவர புரிந்து கொண்டு நாம் செயல் படுவோமானால் மீள் குடியேற்றத்திற்கான மக்கள் தொகையும், அபிவிருத்தியும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

       காரைநகரின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருப்பது புலம்பெயர் அபிவிருத்திச்சங்ககளின் பங்களிப்புக்களும் உழைப்பக்களும் ஆகும். ஊள்ளுரிலும் வெளிநாடுகளிலும் மிக்க கடின உழைப்பு நல்குபவர்களும் மூலதனம் உடையவர்களும் பலர்  இருக்கின்றனர். கடல்வளம், நிலவளம் (நெற்செய்கை), பனைவளம், சிறு-சிறுநடுத்தர கைத்தொழில்கள் இயற்கை துறைமுகத்தின் அமைவிடம், சீநோர் தொழிற்சாலை என்பன சிந்தனைக்குரியன. மேலும் எமது ஊருக்கான கைத்தொழில் முயற்சிகளுக்க  புலம் பெயர் அபிவிருத்திச் சங்கள்புலம்பெயர் தேசத்திலுள்ள எமது கிராமத்து அமைப்புக்கள் ஓரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல் வேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் அபிவிருத்திக்கான அத்திவாரம் ஆகும்.

           எமது கிராமத்தின் இயற்கை எழில்மிகு துறைமுகத்தின் அமைவிடத்தினால் வியாபாரத்துறையில் நாம் முன்னணி வகித்து வந்துள்ளோம். தென்இந்தியாவுடன் ஆன்மீக வியாபார, தொடர்புகள் இருந்ததாக வரலாற்றச்சான்றகள் கூறுகின்றன. "திரை கடல் ஓடியும்  திரவியம் தேடு" என்று எமது கிராமத்தவரின் வியாபாரத்துறை தென் இலங்கை முழுவதும் ஆக்கிரமித்திருந்த காலத்தில் கிராமம் பொருhதார விருத்தியடைந்திருந்தது. மேலும் எமது ஊர் விவசாயிகளும், அரச ஊழியர்களும், கிராம அபிவிருத்திக்கு முக்கியமானவர்களே. 

                      எமது கிராமத்தில் நிதிவளம் படைத்த முயற்சியாளர்கள் இருக்கின்ற பொழுதும், இவர்கள் உற்பத்தி துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்வதற்கு எமது கிராமத்து உறவுகளின் உழைப்பு பல நாடுகளில் வலுப்பெற்று இருக்கின்றது.  எம் மக்கள் கிராம அபிவிருத்திக்கு  வேண்டிய தொழில்சார் நிறுவனங்களில் கூடுதலாக பணிபுரிகின்றார்கள். இவர்களுடைய தொழிநுட்பங்களைப்பெற்று எமது கிராமத்திற்கான கைத்தொழில் மையங்களை நிறுவலாம். கிராமத்தின் அபிவிருத்தி என்பது தனிமனித வருமானத்தை  அதிகரிக்கச்செய்வதாகும். 

                                            காரைநகர் மக்கள் சைவ சமயத்திற்கும் தமிழ்க்கல்விக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து வந்துள்ளனர் என்பது சமய குரவர் பெயரிலும் பாடசாலைகள் உள்ளமையினால்  புலனாகின்றது. "கண்ணுடையர் என்பர் கற்றோர்" பொறியிலாளராக பட்டம் பெற்று ஊருக்கு சேவை செய்த ஐயம்பிள்ளை வெற்றிநாதன் அவர்களை நாம் மறப்பதற்கில்லை. மேலும் தொழில்சார் நிபுணத்துவம் பெற்றவர்களும், கலாநிதிகளும் பல உலக நாடுகளில் பணிபுரிகின்றார்கள்.  இவர்கள் தங்களின் பங்களிப்புக்களையும் ஆலோசனைகளையும் புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது கிராமத்தின் சபைகளுக்கும், மன்றங்களுக்கும் வழங்கினால் நாம் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு ஏதுவாக இருக்கும். 

           உலகம் அறிவுசார் நவீனத்தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் சமகாலத்தில் பயணிக்கிறது;. இதனுடன் எமது கிராமத்தையும் முன் நகர்த்துவது புலம்பெயர் தேசத்திலுள்ள அனைவரதும் தலையாயகடமையாகும். தொழிற் கல்வியை நாம் ஊக்கப்படுத்துவதன் மூலமே கிராம அபிவிருத்திக்கு வழிகோலும் முயற்சியில் ஈடுபடலாம். நிலவளம், கடல்வளம், பனைவளம் ஆகியவளங்களை மனித உழைப்பு என்ற கருவியினாலும் நவீன தொழில்நுட்பங்களினாலும் அபிவிருத்தி செய்யலாம். புலம் பெயர் தேசத்திலுள்ள சபைகளும், மன்றங்களும் முதல் ஐந்து வருடத்திற்கு 200 இளையோருக்கான தொழில்கல்வி பயிற்சி வழங்கி அதனுடாக கிராமத்திலுள்ள மூலப்பெருளில் இருந்து உற்பத்தி பொருட்களை தயார் செய்கின்ற கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி இளம் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கலாம். 

                 எமது கிராமத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதும், அன்பளிப்புக்கள் வழங்துவதும் அபிவிருத்தியல்ல.  மாறாக தனிமனித வருவாயை அதிகரிப்பதன் மூலமும், கிராமத்தில்லுள்ளோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்துவதன் மூலமும், ஊரில் சிரமதானப்பணிகளை நிறைவேற்றுவதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது மூலமாகவும்  நாம்  அபிவிருத்தி பாதையில் செல்லலாம். இலங்கையின் பிற மாவட்டங்களில் வாழ்கின்ற எமது கிராமத்து உறவுகளையும் இணைப்பதன் மூலமும் அபிவிருத்தி என்ற இலக்கை நாம் அடையலாம்.

                                 குஞ்சி யழகுங்  கொடுந்தானைக் கோட்டழகும்
                                  மஞ்ச ளழகும் மழலை – நெஞ்சத்து
                                  நல்லம்யா அமன்னு நடுவு நிலைமையாற்
                                  கல்வி யழகே யழகு.  
                                                                          –    நாலடியார்
                     
                                                                 நன்றி

                                                                                                      காரை நிலாவுக்காக
                                                                          சுவிற்சர்லாந்திலிருந்து காரை மைந்தன்.

 

         

 
           
      

 

“நான் அறிந்த காரைநகர் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம்03

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி லோகராசன் கஜவதனி

        நான் விரும்பும் காரைநகர் பெருமான் ஆ. தியாகராசா ஆவார் இவர் ஆடம்பரமற்ற தோற்றம், கம்பீரமான நடை, தூய்மையான நெஞ்சம், துணிவு கொண்ட எண்ணம், எடுத்ததை முடிக்கும் ஆற்றல், எளிமையான வாழ்வு என்பவற்றை அணிகலனாகக் கொண்டு மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டெனப் பணியாற்றிய பெருந்தகை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமையாற்றிய திரு.ச. ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியருக்கு கனிஷ்ட புத்திரனாக 1916ம் ஆண்டு ஏப்ரல் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட்டு வயதில். இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் பேரன், பேத்தியுடன் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இந்தியாவில் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில்  கல்வி கற்பதற்கு அவரது தந்தையார் அனுப்பிய போது வயது குறைவு காரணமாக சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றார்.

1932இல் சீனியர் பரீட்சையிலும் 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும்,1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம் .ஏ பரீட்சையிலும் சித்தி பெற்றார் 1938ம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றதன் பின்னர் 1940ம் ஆண்டு வரை  சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார் 1941 இல் எம்.லிற் பட்டத்தை பெற்று இலங்கை திரும்பிய  தியாகராசா காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ஏற்றார். இவர் கல்வி பயிலும் காலத்தில் வறாக்கி அணி வீரர், சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

திரு. தியாகராசா இந்தியாவில் கல்வி பயின்ற காலமானது தன்னலம் துறந்து பூசல்களை விடுத்து மக்களும் தேசகக்தர்களும் தேச விடுதலைக்காக காந்திஜி தலைமையில் அணி பெற்ற அனுபவங்களுடன் காரைநகர் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942 இல்  ஆடம்பரம், நவநாகரிகம் துளியும் கிடையாத திரு.சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணைவியாகக் கொண்டார். தியாகராசாவின் கருத்தறிந்து நடந்து  கணவரின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தார் மகேஸ்வரி

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.ஏ. கனகசபை பீ.ஏ. அவர்கள் 1945 இல் ஓய்வு பெற திரு.ஆ.தியாகராசா 16.04.1946 இல் அதிபரானார். இவர் பதவி ஏற்ற ஆரம்ப காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

    காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்ககள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5ம் வகுப்புடன் கல்வியை  இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் கரைநகர் இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார் 1915இல் பழைய டிஸ்னெ;சரிக்கு எதிரே ஆரம்பிக்கப்பட்டு ஆங்கில மொழி மூலம் 7ம் ஆண்டு வரை கல்வி வழங்கிய அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையின் (சாமி பள்ளிக் கூடம்)
மாணவர் தொகை குறைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் காரைநகர் மேற்குபகுதியில் வசித்த மாணவர்களும் காரைநகர் இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினர். கல்லூரிக்கு மிக அதிகமான  மாணவர் அனுமதி கோரியமை தியாகராசாவுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

இச் சாவாலை பல முயற்சி செய்து இலகுவாக முறியடித்தர். அதாவது மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கு மேசையோ, இடவசதியோ, இருக்கவில்லை, கற்பிற்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. ஏந்த வித பாகுபாடும் இன்றி மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்.

    இவர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்கு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தை கட்டினார் காரை பெற்றோர்களின் உதவியுடன் மேசை வாங்குகளை இந்துக்கல்லூரி  சபையினரின் அனுசரனையுடன் நல்ல அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆவன செய்தார்.

காரைநகர் சாமி பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலனுக்காக ஆங்கிலப்பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள் கல்விஆர்வலர்கள் வர்த்தக பிரமுகர்கள்  ஆகியோர் தீர்மானித்ததன். சார்பாக இப்பாடசாலையின் ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகாராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது. ஆதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு பாடசாலையை மீண்டும் ஆரம்பித்தரார். 

திரு.தியாகாராசாவை யாழ்ற்ரன் கல்லூரி அதிபராக பதவியேற்குமாறு பலர் வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரி முன்னிலை எய்த வேண்டும்; என்பதற்காக அக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதி உயர் திரு ந. நடராஜா சி. ஆவர்களின் திடீர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கமா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபா செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டது மண்டபம் அமைக்கும் பணியில் தியாகராசா செயற்பட்டார். அத்துடன் தியாகராசா பாடசாலைக்கு பின்புறமாக இருந்தார் காணியையும் திருமதி தங்கம்மா நடராசா அவர்களுடம் தர்ம ஆதனமாகப் பெற்று மைதானத்தை அமைத்தார். 

இரசாயனம், பௌதிகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனியான கூடாரங்களை அமைத்தார். இவை உயர் தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வு கூடங்களாக விளங்கினார் .

1955ல் மனையியல் ஆய்வுகூடம் ஆய்வு கூடம் திருமதி என்.ரி.சம்மந்தன் அவர்களும் 1956ல் புதிய நூலகம் புவியல் அறை என்பன மனேஜர் திரு.ரி. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களும.; இருவருடைய காலத்தில் திறந்த வைக்கப்பட்டன.

தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரில் 1950ஆகஸ்ட் 19 திகதி முதல் 21 திகதி வரை மூன்று நாட்கள் கல்லூரியல் வைர விழாவும். 1963 பவள விழாவும் 1968 இல் முத்து விழாவும் கொண்டாடினார்.

1919இல்  ஸ்தாபிக்கப்பட்ட காரையூனியன் மலாய சங்கத்தின் உறுப்பினர்கள் காரைநகருக்கு வருகை தரும் போது பாடசாலைகளுக்கு உதவிகள் வழங்கினார். தியாகராசா மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து 'சமயம்பு ஞாபகர்த்த கட்டிடத்தை அமைத்து கீழ் மாடியில் வகுப்பறையும், மேல் மாடியில் நூலகத்தையும் கட்டினார்.

        இவருடைய சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆராம்பிக்கப்பட்டு பல்கழைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆன்யை கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சிறப்புத்தார் அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்றாகும்.

    கல்வித் திணைக்களத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டபோதும் அவற்றினை நிராகரித்து தான் வளர்த்த நேசித்த கல்லூரியின் தரத்தை சிறப்பு தரத்திற்கு உயர்த்தி தனக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்ந்த கல்லூரிகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரியையும் உயர்த்திய  பெருமைக்குரியவர் இவர் ஆவார்.

திரு. தியாகராசா சிறப்புத்தார் பதவியில் உயர்நிலை சம்பளங்கள், ஓய்வூதியம் என்பனவற்றுக்கு காத்திராது 02.04.1970ல் ஓய்வு பெற்ற மாணாக்கர் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக பணியாற்றி பெற்ற அனுபவங்களை வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியின் அக்கறை செலுத்தினார். இலங்கை பல்கலைகழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். இப் பல்கலைக்கழகம் 1974ல் பரமேஸ்வரா கல்லூhயில் ஆரம்பிக்கப்பட்டது. இது மட்டுமல்ல இவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து யாழ்ப்பாண கல்லூhயில் விஞ்ஞான பாட படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தில் இன்னொரு பிரிவை ஆரம்பித்தார்.

    1979 ஆண்டு இந்திய சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு இலங்கையும் தென்னாசியாவில் பொருளாதார ஒத்துழைப்பு என்ற நூலை எழுதினார். இந் நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கலக பொருளியல் துறை தலைவர் கலாநிதி தியாகராசா இந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் வகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான தென்னாசிய சம்மேளனம் உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவரின் புலைமைமிற்க அனுகூல முறையும் அரசியல் அனுகூல முறையுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந் நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும், அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

1981ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபை தேர்தலில் போட்டியிட்டார் இதன் காரணமாக 24.05.1981ல் பின்னிரவில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட வேளையில் மரணத்திரைக்குள் மறைந்தார். அன்னாரின் பூதவுடல் காரைகநரைச் சுற்றி எடுத்துவரப்பட்டு வலந்தரை சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை மூடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானது.

வேணன் அணைக்கட்டுக்கு நீர் ஏந்தும் பிரதேசம் கடல் கடல் மண்ணும் களி மடண்ணும் சேர்ந்த மணல்தன்மையுடைய பிரதேசம் என்பதால் புற்கள் முளைப்பதுக்கு ஏது நிலை எதுவும் இல்லை அப்பகுதியும் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தானம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமை காரைநகர் , பொன்னாலை, தாம்போதிய வழியே செல்லும் மக்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது இது பூமாதேவிதான் உத்தமபுத்திரனை நினைவில் தாங்கி வைத்திருக்கிறதற்கான சான்றாகும்.

     "ஊழிய பெரியனுந் தாம் பெயரார்"   

      என்ற முதுமொழிக்கு இலக்காணவர்

         "சொல்லுதல் யாருக்கும் எளிய" அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவர் வாக்கிற்குச் சவால் விடுத்து சொல் வல்லவனும்,  சோர்வு இல்லாதவனும் சொன்னதை செய்ய வல்லவனும் யான் என்பதை வாழ்ந்து காட்டினார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்தரும் பணியை செய்தவர்டகளை என்றுமே மறக்கக் கூடாது என்பதற்காக இப்போதும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் எனும் காரைநகர் இந்து கல்லூரியில் "வரலாற்று அதிபர்" எனும் பெயருடன் வாழ்ந்து வருகிறார். இத்தகைய பெருமையுடைய தியாகராசாவின் வாழ்க்கை பாதையை பின்பற்றி நாமும் வாழ்வில் முன்னேறுவோம்.

                          கலாநிதி ஆ.தியாகராசா M.A.M. Lit. (வெள்ளி விழா அதிபர்)
                                                          (1946-1970)

Thejakaraja PHOTO

kadduraipoddi  06 20140001

 

 

“நானறிந்த காரைநகர் பெரியோர் கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம் 02

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி டிலானி கார்த்திகேசு


இலங்கை திரு நாட்டிலே வட மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலே எண்திசை புகழும் அருளின் நிறைந்த காரைநகரிலே வலந்தலை சுட்டில் அறிவுக் கண்ணை திறக்கும் அறிவுக் கூடமாக யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் உள்ளது. இன்று அப் பாடசாலையானது தனது காரைநகர் இந்துக்கல்லூரி என்னும் பெயரை யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என மாற்றியமைக்கு காரணம் திரு.ஆ.தியாகராசா அவர்களினால் ஆற்றப்பட்ட தன்னலம் அற்ற சேவையே ஆகும். தற்போதும் இவரது மகள் திருஆ..தியாகராசா அவர்களின் நினைவாக காரைநகரில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி பணம் வழங்குவது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்வாறான புகழும் பெருமையும் கொண்ட திருஆ..தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமை ஆற்றிய திரு.ச.ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியாரின் செல்வப்புத்திரனாக 1916ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கினங்க ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட'டு வயது வரை மலேசியாவிலேயே கற்றார். பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பேரன் பேத்தியுடன் இருந்து இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே இந்தியாவில் உள்ள கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஸ்பாரதி பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வயது குறைவாக காணப்பட்டமையால் சென்னை அடையாறு கலாசேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்றார். தனது பதினாறாவது  வயதில் அதாவது 1932இல் சீனியர் பரீட்சையிலும் பதினெட்டாவது  வயதில் அதாவது 1934இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும் இருபதாவது  வயதில் அதாவது 1936 இல் பீ.எ பரீட்சையிலும் 22ஆவது வயதில் அதாவது 1938இல் எம்.ஏ பட்டமும் பெற்றதன் பின்னர் 1940வரை சிங்கப்புர் மருத்துவக்கல்லூரியில் கல்வி பயின்றார் 1941இல் அதாவது 25ஆவது வயதில் எம்.லிற் பட்டத்தை பெற்றார். பின்னர் இலங்கை திரும்பிய தியாகராசா அவர்கள் காரைநகரில் உள்ள இந்துக்கல்லூரி அதாவது தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் இக் கல்லூரி கடமையாற்றிய காலம் "பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது. இவர் கல்வி பயிலும் காலத்தில் ஹாக்கி அணிவீரர் மற்றும் சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தியாகராசா அவர்கள் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் இந்திய தேசத்திற்கான விடுதலைக்கான அண்ணல் காந்திஜி தலைமையில் அணிவகுத்து போராடியவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன்னலம் துறந்து புசல்களை விடுத்து மக்களும் தேசபக்தர்களும் தேசவிடுதலைக்காக போராடி பெற்ற அனுபவங்களைக் கொண்டு தன் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942ம் ஆண்டு தனது 26ஆவது வயதில் ஆடம்பரமும் நவநாகரீகமும் துளியும் கிடையாத திரு.சிவகுநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணையாக கொண்டவர். தியாகராசா அவர்களின் வெற்றிக்கு மிக பக்கபலமாக காணப்பட்டதுடன் தியாகராசா அவர்களின் கருத்தறிந்து நடந்து கொண்டார்.

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.கனகசபை அவர்கள் 1945இல் ஓய்வு பெற திருஆ.தியாகராசா அவர்கள் 16.04.1946 இல் அதிபராக கடமையேற்ற காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகரில் சிரேஷட பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி மட்டுமே திகழ்ந்தது. இதனால் ஏனைய பாடசாலையில் தரம் 5ம் வகுப்புடன் இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் காரைநகர் இந்துகல்லூரியில் அனுமதி கோரினர். 1915இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையில் மாணவர்தொகை வெகுவாகக் குறைவடைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றும் காரைநகரில் உள்ள மேற்கு பிரதேச மாணவர்களும் இந்துக்கல்லூரிக்கு அனுமதிகோரி வந்திருந்தனர். இக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அணுமதி கோரியமை பெரும் சவாலாக காணப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பிற்பதற்கு ஆசிரியர்களோ வாங்கு மேசைகளோ இடவசதியோ இல்லை இதனால் உடனடியாக ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு தேவையான வாங்குமேசைகளை பெற்றோர்களிடமும் அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இந்துக்கல்லூரி சபையின் அனுசரனையுடன் பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக காரைநகரில் மேற்குபகுதியில் உள்ள மாணவர்கள் அணைவரும் இந்துக் கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதனால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைசேர்ந்த பெற்றோர்களும் கல்விமான்களும் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகராசாவின் வீட்டிலே நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப் பாடசாலைக்கு அதிபராக கடைமையாற்றுவதற்கு திரு க.கனகசபை அவர்களும் ஆசிரியர்களாக கடைமையாற்ற திருவாளர் கு.பொன்னம்பலம்  மு.சீவரத்தினம் ஆகிய மூவரையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு கடைமையாற்ற விடுவிக்கப்பட்டார். திரு தியாகராசா அவர்களை யாழ்ற்ரன் கல்லூரிக்கு அதிபராக கடைமை ஏற்குமாறு காரைநகர் மேற்கை சேர்ந்த பல வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக் கல்லூரி முன்நிலை எய்ய வேண்டும் என்பதற்காக அக் கோரிக்கையை நிராகரித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா K.C அவர்களின் திடிர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபத்தையாயிரம் செலவில் நடராசா ஞாபகார்த்த மண்டபம் அமைத்தார். இம் மண்டபம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்.  "கோபுரம் இல்லாத கோயில் தான் பாடசாலை" அதற்கினங்க மண்டபத்திற்கு தேவையான ஓடுகள் இல்லாதவிடத்து "தனது வீட்டு ஓட்டினை எடுத்துவந்து கட்டினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்." இம் மண்டபத்தை கட்டுவிக்க திரு.ஆதியாகராசா அவர்களுடன் இனைந்து மிகவும் உழைத்த ஒருவர்தான் திரு.வீ.தம்பிப்பிள்ளை ஆவார். இவர்களால் கட்டப்பட்ட நடராஜா ஞாபகார்த்த மண்டபமானது யாழ்ப்பாணத்திலேயே மிகவும் பெரிய அகலமான மண்டபம் என கூறுகின்றனர். 19.08.1950இல் கௌரவ நீதிஅமைச்சர் DR.L.A.ராஜபக்ஸ அவர்களால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள காணியை தர்மஆதாரமாக பெற்று பாடசாலைக்கு மைதானம் அமைத்தார்.

உயர்தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வுகூடங்களாக இரசாயனம் பௌதீகம் விலங்கியல் உயிரியல் மற்றும் மனையியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்களை அமைத்ததோடு புவியியல் நூலகம் என்பவற்றுக்கு அறைகளைக்கட்டுவித்தார்.

பாடசாலை வரலாற்றுச்சான்றாக அமையும் காரைநகர் இந்துக்கல்லூரி எனும் சஞ்சிகை 1948இல் வெளியிடப்பட்டது. மற்றும் 1953, 1957, 1959ம் ஆண்டுகளில் "சயம்பு" எனும் கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது. எமது பாடசாலையின் வரலாற்றுச்சுவடுகளாக இச் சஞ்சிகை காணப்படுகின்றன. மற்றும் வைரவிழா பவளவிழா முத்துவிழா என விழாக்களும் இவரது காலங்களில் கொண்டாடப்பட்டவையாகும்.

திரு.தியாகராசா அவர்கள் மலேசியா சென்று பழையமாணவர்களிடம் நிதி சேர்த்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்து கீழ்மாடியில் வகுப்பறையையும் மேல்மாடியில் நூலகத்தையும் அமைத்தார். இம்மண்டப அமைப்பு பணியில் ஆ.தியாகராசாவுடன் திரு.த.அருளையா அவர்களும் ஈடுபட்டார்.

திரு.தியாகராசாவின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிறப்புத்தர அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இந்துக் கல்லூரியும் ஒன்றாகும். கல்விதிணைக்களத்தால் உயர்பதவி வழங்கப்பட்ட போதிலும் தான் வளர்த்த நேசித்த பாடசாலையை சிறப்புத்தரத்திற்கு(1AB) உயத்தினார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த பாடசாலைகள் வரிசையில் இந்துக்கல்லூரியை உயர்த்திய பெருமைக்குரியவர்.

திரு.தியாகராசா அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை அரவணைத்து சென்றமை கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. கல்வி போதனையிலும் பண்புடனும் பணிவுடனும் செயற்பட ஒழுக்கம்மிக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அல்லும்பகலும் அமரர் தியாகராசாவின் உள்ளம் ஈடுபட்டிருந்தது. கல்வி திணைக்களகத்தில் காத்திரமான பணிகளைப்பெறுவதற்கு அதற்கு பொருத்தமான பெற்றோர்களை அனுப்பி கருமம் ஆற்றினார். கல்லூரி உள்ளக நிர்வாகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தலையிட எத்தனித்த சமயத்தில் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிநின்றார்.

சமூகம் எதிர்பார்த்த கல்வியை வழங்கியமையால் நகர்புற பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வது அரிதாக காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக காணப்பட்டமையால் பிரத்தியோக வகுப்புக்கள் செல்லவேண்டிய தேவையிருக்கவில்லை. திரு.தியாகராசா அவர்கள் சிறப்புதர பதவியில் உயர்நிலை சம்பளம் ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970இல் மாணாக்கர்களின் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக கடைமையாற்றி பெற்ற அனுபவங்களைக் கொண்டு வட்டுகோட்டைதொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கடைமையாற்றிய காலத்தில் வட்டுகோட்டைதொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவனம் செய்தார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் செலவழிக்காத வருடத்தின் இறுதி மாத ஆரம்பத்தில் பெற்று வருடம் முடிவடைவதற்கு முன்னர் பல நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடையமாகும். இவற்றை உரிய காலங்களில் நிறைவேற்றியமையால் அதிபர் திரு.K.K.நடராஜா யாழ்மாவட்ட 1AB பாடசாலை அதிபர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.W.D.C.மகதந்தில்ல அவர்களால் பாரட்டப்பட்டார். இதுவே இவர் இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது பணியை தொடர்ந்து செய்தார் என்பதற்கு சான்றாக அமைகிறது. க.பொ.த(உ.த) வகுப்புக்களில் 150இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். வட்டுகோட்டை மூளாய் சுழிபுரம் மாவடி ஊர்காவற்றுறை போன்ற அயற்கிராம மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து கல்வி கற்றமை என்பது சிறப்பான விடையமாகும். அமரர் திரு.தியாகராசா அவர்கள் கல்வி மேல் கொண்ட பற்று உறுதிக்கு அதிபர் திரு. K.K.நடராஜா செயல் வடிவம் கொடுத்தார்.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கéர்வமான கருத்துக்களை முன்வைத்தார். கல்வி அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்தி கல்வியாளர் என்ற தகமையில் சிறப்புடன் பேணிவந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1979ம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாhதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென்ஆசியா சம்மேளனம் உதயமாவதந்கு முன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நூலின் கருத்திற் கொள்ளப்பட்ட வைசார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதிஆ.தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெருகின்றது. திருஆ..தியாகராசா அவர்கள் மிக்க கவனத்தையும் ஆக்க பூர்வமான பரிசீலனைகளையும் விடயங்களின் எல்லா அம்சங்களிலும் செலுத்தினார். கலாநிதிஆ.தியாகராசாவின் புலமைமிக்க அனுகுமுறையும்  அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடுமிக்க இந்நூல் "பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆடம்பரமற்ற தோற்றமும் கம்பீரமான நடையும் தூய்மையான நெஞ்சும் துணிவுகொண்ட எண்ணம் எடுத்ததை முடிக்கும்ஆற்றல் என்பவற்றை அணிகலனாக் கொண்டு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என பணியாற்றிய  திரு.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ்.மாவட்ட சபை தேர்லில் போட்டியிட்டதால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அன்னாரின் பூதவுடல் வலந்தலைச்சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை முடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானார். அப் பகுதியில் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடதக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமையை காரைநகர் பொன்னாலை தாம்போதிய வழியேசெல்லும் மக்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது பூமாதேவி தன் உத்தம புத்திரனை நினைவில் வைத்திருக்கினறமைக்கு சான்றாகும்.

                               "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
                                       சொல்லியவண்ணம் செயல்"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு சவால் விடுத்து சொல்லவல்லவனும் சொன்னதைச் செய்பவனும் யான் என்பதை பறைசாத்தியவர் ஆவார். அமரர் தியாகராசா அவர்களை "வரலாற்று அதிபர்" எனவும் அழைக்கப்பட்டார். இன்றும் அவரது சேவையை நினைவுகூறும் முகமாகவும் பாராட்டும் முகமாகவும் நன்றிகூறும் முகமாகவும் அவரது கல்லூரிக்கு அவரது பெயரை அழைக்கின்றனர். அமரர் திரு.தியாகராசா அவர்கள் இறையடி சேர்ந்தாலும் அவர் எமது ஊருக்காக ஆற்றிய சேவை மறக்கமுடியாதவொன்றாகும்.

                                                                            * * *

                                                       ஆக்கம்: டிலானி கார்த்திகேசு
                                                           தரம்: 12 A/L 2016 COM
                   பாடசாலை: யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

kadduraipoddi  07  20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வன் வினோதன் கனகலிங்கம்.

                              நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

                         கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்.

"இந்து சமுத்திரத்தின் முத்து" எனவும்,"தெட்சணகைலாயம்" எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் "சிவபூமி" எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.

இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்

                     "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                              தோன்றலின் தோன்றாமை நன்று."  
 

என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார். 

இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,

                                "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                                       உயிரினும் ஓம்பப்படும்."

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.

    இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.

    இவர் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.

    இப்பெரியார் 1942 இல் "மனைத்தக்க மாண்புடையாள்" அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.

    பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.

    இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.

    கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.

    சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும் 

                              "எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
                                    திண்ணியர் ஆகப் பெறின்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950 ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் "காரைநகர் இந்துக் கல்லூரி"என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் "சயம்பு" என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் "சியவச" நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.

    இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார். 

இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.

    இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் "கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.

    இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,

                       "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
                                  பெருமையுடைத்து இவ்வுலகு"

என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,

                       "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
                           தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

                                                               நன்றி.

    

kadduraipoddi  08  20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று காரைத்தென்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி டினோஜா நவரட்ணராஜா.

 SWISS LOGO

          காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது

                            அருளால் பொருளால் அறிவால்

 

          காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது அறிவால்

எமது ஊரான காரைநகர் நலம் நிறைந்து நாலா புறமும் கடலால் சூழ்ந்துள்ள இயற்கையின் எழில் கொஞ்சும் நிலவளமும் நீர் வளமும் நிறைந்த தமிழர் தம் கலையையும் கலாசாரத்தையும் இன்றும் பேணிக்காத்து வரும் தனித்தன்மை இழக்காத மண்மணம் காக்கும் புனித பூமியாகும்.

இத்தகைய வளம்மிக்க எமது காரைநகர்ப் பிரதேசமானது அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. இவ் நன்நிலையானது பண்டைய காலம் தொட்டு இன்று வரையிலும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அறிவாலும் அருளாலும் பொருளாலும் சிறந்து விளங்கும் எம் காரைநகர் மக்கள் அன்று தொட்டு இன்றுவரை பெரிதும் சிறந்து விளங்குவது அறிவினாலேயே ஆகும். 

                       "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு"

என்ற சான்றோர் வாக்கிற்கு இணங்க கல்வி கரையற்றது ஆகும். இத்தகைய கல்வி சமூகத்தின் அனைத்து வினைத்திறனையும் உயர்நிலைக்குச் செலுத்துவதாகும். இன்றைய காலகட்டத்தில் தெளிவான திருத்தமான ஆரோக்கியமான சிந்தனைகளையே இவ் உலகம் வரவேற்கின்றது. இத்தகைய மதிப்பு மிக சவால்களை புத்தி சாதுரியத்துடன் எதிர்கொள்ள கூடிய வகையில் ஒவ்வொரு பிரஜைகளும் இருத்தல் வேண்டும். அந்த வகையிலே  காரைநகரில் எம்மவர்கள் அனைவரும் சமூகத்தவரால் அடையாளங் காணப்பட்ட அறிஞர்களாக பெரியோர்களாக உள்ளனர்.

கல்வியில் சிறந்த காரைநகரில் அறிஞர்களும், புலவர்களும் நிறைந்து காணப்பட்ட காரணத்தால் கல்வி கற்ற பண்பாடுமிக்க சமுதாயம் உருவாகியது என்று சொன்னால் மிகையாகாது. இத்தகைய புண்ணிய பூமிதனில் மக்கள் சிறந்து விளங்குகின்றார்கள் என்றால் அதற்கு அருளையும் பொருளையும் விட அறிவே பிரதானம் ஆகும்;. இத்தகைய அறிவு  இன்று வரை இச் சிறு தீவு வரலாற்றில் இடம்பெறுகின்றது என்றால் அது மிகையாகாது. அறிவு சார் விடயங்களை நோக்குவோம்.

முதலில் அறிவு என்றால் என்ன என்பதனை நோக்கினால், அறிவு என்பது ஒரு மனிதனின் கல்வியறிவு, அறப்பண்பு என்பனவே அறிவாகும். மனிதனின் வினைத்திறன், அவனது அறிவு, ஆன்மீகம், ஒழுக்கம் ஆகியவற்றின் விருத்தியே சமூகத்தின் வெற்றியை ஈட்டும் அடிப்படை அம்சமாகும். உலகம் போற்றும் உண்மைத் திருக்குறளில்,

"பின்னால் நடப்பதை முன்கூட்டியே தன் 
        மதிநுட்பத்தால் அறிந்து கொள்வது அறிவு"
 என்றும்,

"பிறர் கூறும் கருத்துக்களின் நன் 
        நுட்பத்தை காண்பது அறிவு" என்றும்,

"ஒருவன் தான் சொல்லுகின்ற கருத்தை பிறர் எளிதில் புரிந்து    கொள்ளுமாறு விளக்கமாகச் சொல்வது அறிவு" என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உண்மைப்பொருளை நோக்குகையில், அறிவு என்பது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த செயற்பாடாகும். இவ்வகையில் காரைநகர் மக்கள் சிறந்து விளங்குவது பெரிதும் அறிவினாலேயே ஆகும்.

திரு.து.கார்த்திகேசுப்புலவர், பண்டிதர் சிவஸ்ரீ.பஞ்சாட்சரக்குருக்கள், திரு.ந.நாகமுத்துப் புலவர் போன்ற பெரும் புலவர்களாலும், மேலும் தமிழும் இந்து சமயமும் ஓங்க பல படைப்புக்களை வழங்கிய புலவர் சுப்பையா, க.வைத்தீஸ்வரக்குருக்கள், சுப்பிரமணிய தேசிகர், காரை.செ.சுந்தரம்பிள்ளை, அ.அருளம்பலவாணர், எவ்.எக்ஸ்.சி.நடராசா, ஆகியோர் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் கூடவே எம் சைவ சமயத்தையும் வளர்த்த பெரியோர்களாகவும், மேலும் திரு.அலன் ஆபிரகாம் அம்பலவாணர் மருத்துவ துறையிலும், திரு.இ.கனகசுந்தரம், திரு.தி.சிவகுமாரன்;, திரு.ஜி.பரமேஸ்வரன், திரு.வே.இராமகிருஸ்ணன், திரு.நடராஜா மற்றும் சிறிஸ்கந்தராஜா போன்றோர் மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்துறையிலும் தொல்பொருள் துறையிலும், சிறந்த அறிஞர்களாக உள்ளனர். இந் நிலை அடைய அவர்கள் கற்ற கல்வியே பெரிதும் பிரதானம் ஆகும். இதை விடுத்து அருள்தான்  பிரதானம் என்றோ இல்லை பொருள்தான் பிரதானம் என்றோ இருந்திருந்தால் இவர்கள் இன்று வரலாற்றில் இடம் பெற்றிருக்க முடியாது. இவ்வாறு காரை மக்களின் உயர்நிலைக்கு வித்திடும் காரைநகரின் கல்வி நிலையில் காணப்படுமாற்றினை நோக்குவோம்.

காரைநகரில்  பதினைந்து பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் பின்வரும் பாடசாலைகளான யா/கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய.மகா.வித்தியாலயம் மற்றும் யா/யாழ்ற்றன் கல்லூரி என்பவற்றில் க.பொ.த உயர்தரம்; வரையிலும்; மேலும் பின்வரும் பாடசாலைகளான யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் மற்றும் யா/வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றில் க.பொ.த சாதாரணதரம் வரையிலும் உள்ளன. ஏனைய பத்து பாடசாலைகளும் தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி கற்கும் பாடசாலைகளாக உள்ளன. இவை மட்டுமல்லாமல் 14 பாலர் பாடசாலைகளும் 15 விளையாட்டு கழகங்களும், மாணவரின் கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் கல்வியானது உலகின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய இளம் சமுதாயத்தை முன்பள்ளியில் இருந்தே வளர்த்தெடுக்கும் நன்நிலை காரைநகரில் காணப்படுகின்றது.

 இவை மட்டுமல்லாமல் எமது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எம் உறவுகள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எம் காரைநகர் மக்கள் இவ்வாறு அயற் பிரதேசங்களிலும் எம் நாட்டிலும் புகழ் பெற காரணம் அவர்களின் அறிவு நிலையே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய காலகட்டத்தில் பாடசாலை மற்றும் சமூக உறவானது மிகவும் முக்கியமானதொன்றாகும். இவ்வுறவு மேலும் வலுப்பெற கற்ற அறிவார்ந்த சமூக குழுவினர் நேர் மனப்பாங்குடனும், நன்னிலையான சிந்தனைக்கண்ணோட்டத்திலும் இருக்க வேண்டும். இவ் நிலையை எமது பிரதேசத்துடன் ஒப்பிட்டு நோக்குகையில் ஏனைய பிரதேசத்தினை விட காரைநகரில் சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையிலான உறவு நன்நிலையிலேயே உள்ளது என தெரிய வருகின்றது.

இவ்வகையிலே காரைநகர் சிறந்து விளங்குவது பெரிதும் அறிவினாலேயே ஆகும். காரை மக்களுக்கு அருளையும் பொருளையும் விட அறிவே பிரதானம் ஆகும். அத்துடன் சிறந்த அறிவுள்ள எதிர்கால தலைமுறையையே நாளைய சமூகம் எதிர்பார்க்கின்றது. ஏனெனில் ஒரு வளமான சமூகத்தை ஒரு அறிவு நிறைந்த தலைமுறையினரால் மட்டுமே பேணிப்பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறையினரிற்கு கையளிக்க முடியும். இவ் வகையில் காரைநகர் அருளினாலும் பொருளினாலும் சிறந்து விளங்கினாலும் எம் ஊரினை வழிப்படுத்துவது ஒவ்வொரு அறிவு நிறைந்த தலைமுறையினரே. 

மேலும் ஒரு தனிமனிதனது முன்னேற்றத்திற்கு அறிவே பிரதானம் ஆகும். எவ்வகையில் எனில் ஒரு மனிதனானவன் தனது வாழ்விலே பணம் பொருள் செல்வத்தையோ அல்லது இறை மற்றும் பெரியாரின் அருளையோ பெற வேண்டுமெனில் அவற்றை பெறும் நன் மார்க்கத்தை அறிந்திருத்தல் இன்றியமையாத தொன்றாகும். ஆகவே இவற்றையெல்லாம் இவ்வுலகில் பெறும் வழிகளை அறிவிப்பது அவன் அறிந்த அறிவே ஆகும். எனவே காரைநகர் மக்கள் சிறந்து விளங்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அருளையோ பொருளையோ விட அவர்களின் நல்லறிவே ஆகும். 

அவற்றுடன் காரைநகரில் இளந் தலைமுறையினர் நல்ல அறிவைப்பெறும் வழிகள் ஏராளம் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதாக மாணவர்களின் வாசிப்புத்திறனை விருத்திசெய்ய பாடசாலை நூலகங்களுடன் மேலதிகமான திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் காரைநகர் பிரதேச சபை நூலகம், வியாவில் ஐயனார் ஆலய கணபதீஸ்வரக் குருக்கள் நூலகம் என்பன மட்டுமன்றி கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் புதிதாக ஆரம்பிக்;கப்பட்ட மாணவர் நூலகம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான நூலகங்கள் இத்தனை செலவுடன் அமைக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம் எதிர்கால சமுதாயம் அறிவின் சிகரத்தை தொடவேண்டும் என்பதனாலேயே ஆகும்.

இவை மட்டுமல்லாமல் தற்பொழுது தீவக வலயத்தில் தனியொரு கோட்டமாக காரைநகர்க் கோட்டம் காணப்படுகின்றது. அத்துடன் காரைநகர்க் கல்விக்கோட்டம் ஏனைய தீவக கல்விக்கோட்டத்தை விட மிக சிறப்பியல்பு வாய்ந்த கோட்டமாக காரைநகர்க் கல்விக் கோட்டம் காணப்படுகின்றது. அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகின்றமையும் காரைநகர் மாணவர்கள் அறிவார்ந்த விடயங்களில் ஆர்வம் செலுத்துகின்றமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றுடன் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறைகளிலும் காலத்திற்கு காலம் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றார்கள். 1934 இல் கனிஸ்ட விடுகைப்பத்திர பரீட்சையில் வடமாகாணத்தில் முதற்தரத்தில் சித்தியடைந்த ஒரே ஒரு மாணவன் காரைநகர் இந்துக்கல்லூரி மாணவனாவான். அத்துடன் எம் பிரதேச மாணவர்கள் அன்று தொட்டு இன்று வரை அனைத்து துறைகளிலும் சாதனையை நிலைநாட்டிய வண்ணம் உள்ளனர். மேலும் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தகவல் தொடர்பாடற் தொழில் நுட்ப துறை சார்ந்த மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி மாணவர்களில் மூன்று மாணவர்கள் வெள்ளிப்பதக்கங்களையும் ஏனைய ஆறு மாணவர்கள் திறமைச்சித்தி பெற்றமை குறிப்பிடதக்கது. இதன்மூலம் தெரிய வருவதாவது, காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது அறிவினாலேயே ஆகும்.

இத்துடன் காரைநகர் மக்கள் ஒழுக்கம், சமய விழுமியங்கள், ஆளுமை விருத்தி, சமூக மயமாக்கல் என்பவற்றிலும் தம்மை விருத்தி செய்து புதுமைகாண் உயிர்ப்பு அமைப்பாக காரைநகர் சமூகத்தை வளர்த்தெடுக்க முயல்கின்றனர். இதற்கு அவர்கள் அறிந்த அறிவே ஆதாரம் ஆகும். மேலும் காரைநகரின் அருள் சார்ந்த விடயங்களை நோக்குகையில் சைவ வித்தியா விருத்திச் சங்கம், காரைநகர் சைவ மகா சங்கம், களபூமி ஆரணிய நிலையம் போன்ற அமைப்புகளும் ஆன்மீக தியான கருத்தரங்குகள், திருவாசக திருமுறைகள் ஓதுதல், சைவ தமிழ் போட்டிகளை நடாத்துதல், ஆலயங்களில் நூற்தொகுதிகள் பேணுதல் போன்ற சைவ தமிழ் சார் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. காரைநகரில் எதற்காக இவ்வாறான செயல்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்குமிடத்து இங்கு ஒரு சமயப்பற்றுள்ள அருளார்ந்த சமயம் ஒன்று உருவாக வேண்டும் என்பதனாலேயே ஆகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் காரைநகரில் இடம்பெற அறிவே பிரதானம் ஆகும். எவ்வாறெனில், இச் செயற்பாடுகள் இங்கு இடம்பெற வேண்டும் எனும் சிந்;தனையை ஊருக்கு தொண்டாற்றும் தொண்டர்களுக்கும் புலம்பெயர் அமைப்புகளிற்கும் வழங்கியது அவர்களின் அறிவே ஆகும். எனவே இவ் வகையில்; நோக்கும் பொழுது காரை மக்கள் பெரிதும் சிறப்புற்று விளங்குவது அறிவினாலேயே ஆகும்.  

காரைநகர் மக்கள் பழமைப்போக்குகளை விட  புதுமை தேடுதலிலேயே அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள். பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், மற்றும் பெரியோர்கள் அனைவருமே கல்விகற்ற விருத்தி அடைந்த சமுதாயத்தினை வளர்த்தெடுத்து அதன் மூலம், அருளிலும் செல்வத்திலும் செழித்த தலைமுறைகளை உருவாக்க வேண்டுமென்றே செயற்படுகின்றார்கள். ஆயினும் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு காரைநகர் மக்கள் அறிவால் மட்டும் தான் சிறந்து விளங்குகின்றார்கள் என்று நாம் கருதிவிடக்கூடாது. காரைநகர் மக்கள் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படை வழிகோலியது அவர்களின் அறிவே ஆகும். ஆயினும் இதற்கு துணைக் காரணிகளாகவே அருள், பொருள் என்பன காணப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையினரதும் பாடசாலை மட்டத்தில் கல்வி விருத்தியானது ஆய்வுகள் அபிவிருத்திகள் பெறுபேறுகள் என்பற்றின் மூலம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் விளைவுடன் தொடர்புபடுகின்றது. அந்த வகையில் பிரஜைகள் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட வளர்ச்சியுமே பிரதேசத்தின் வினைத்திறனை தீர்மானிக்கின்றது. எனவே ஒவ்வொருவரதும் அறிவார்ந்த உள்ளக வெளியக காரணிகள் சமூகத்தை வளர்தெடுக்கின்றது. இவ்வாறான அறிவின் நோக்கம் என்னவென்று நோக்குவோமெனில், 

"இயற்கையுடன் முரண்படாமல் அதன் தோற்றப்பாடுகளினை உணர்ந்து அதனுடன் ஒட்டிவாழ்தல் விலங்கிடப்படாத மனச்சாட்சியுள்ள மனிதன் தோன்றல் எனவும், வாழும் தகைமையும், வாழ்வதற்குத் தகைமையும் பெற்றவராக்கப்படல் கல்வியின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது."

இதன் மூலம் தெரிய வருவதாவது சமூகத்தில் மேன்மையான எண்ணம், கீர்த்தியான செயல், புகழுடைய தொலைநோக்கு என்பவற்றிற்கு வளர்ச்சி அடைந்த அறிவு படைத்த பிரஜைகள் தேவை. சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான வளம் அருளோ பொருளோ அல்ல, அறிவே ஆகும். எதிர்காலத்திலும் அறிவே காரை மக்கள் வளர்ச்சியின் பிரதான வளமாக இருக்கும். அறிவு பெறுகின்ற முக்கியத்துவத்தின் காரணமாக 21ம் நூற்றாண்டில் சமூகம் ' அறிவு சார் சமூகம்' எனும் பெயரை பெறுகின்றது. இவற்றின் அடிப்படையில் நோக்கும் பொழுது காரைநகர் மக்கள் பெரிதும் அருளையும் பொருளையும் விட அறிவினாலேயே சிறந்து விளங்குகின்றனர் என்றும் இவ்வாறாக அருளும் பொருளும் மனிதரின் அறிவிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிய வருகின்றது. எனவே காரைநகர் மக்கள் வையத்தில் சிறந்து விளங்க அறிவே பிரதானம் ஆகும்.

                         "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                          *****நன்றி*****

kadduraipoddi  04 20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று காரை இளஞ்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி சாந்தினி கனகலிங்கம்.

        SWISS LOGO                       

                       நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

       பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர்

"இந்துமா சமுத்திரத்தின் முத்து" எனவும் "தெட்சணகைலாயம்" எனவும் "சுவர்ணபூமி" எனவும் 'குபேரபூமி' எனவும்  வர்ணிக்கப்படும் ஈழமணித் திருநாட்டின் சிகரமாக வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் மேற்பால் உள்ள ஏழு பெரும் தீவுகளில் இயற்கை எழிலும் கடலாற் சூழப்பட்டு நீரரண் பொருந்தி இயற்கை பாதுகாப்புடையதும், பழமையும், பெருமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஈழத்துச்சிதம்பரம் என்றும் புண்ணிய திருத்தலத்தை தன்னகத்தே கொண்டு அமையப்பெற்ற ஊரே காரைநகர் ஆகும். இவ்வூர் மக்கள் கல்வியால் உயர்ந்தும், செல்வத்தால் செழித்தும், சைவம் வளர்த்த சான்றோராக, செந்தமிழ் காவலர்களாக, திருப்பணிச் செம்மல்களாக தம் மண்ணின் பெருமையை பேணி வந்துள்ளார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நான் அறிந்த பெரியார் பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் ஆவார்.

இப் பெரியார் கந்தர்ப்பர் சுப்பிரமணியத்திற்கும் பார்வதிக்கும் சிரேஷ்ட புதல்வராக 1865 ஆம் ஆண்டு காரைநகர் சக்கலாவோடையில்

                                "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                                            தோன்றலின் தோன்றாமை நன்று"

           என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க பிறந்தவரே பேராசிரியர் அலன் ஆபிராம் அம்பலவாணர் ஆவார். இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும், சிறந்த கணித மேதையாகவும், தமிழிசை வல்லுனராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும், சைவத் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடனும் கிறிஸ்தவ கீதங்களை நெஞ்சுருகிப் பாடுபவராகவும், ஒழுக்கமானவராகவும் விளக்கினார். இவர்

                                       "உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
                                                        எண்ணப்பட வேண்டாதார்"

         என்ற வள்ளுவனின் வாக்கை மக்களுக்கு புரிய வைத்து மது ஒழிப்பிற்காக போராடினார். அத்தோடு இனிமையான சுபாவம் உடையவராகவும் எளிய ஆடைளை (வேட்டியும்,கோட்டும்) அணிபவராகவும் கீழைத்தேய, மேலைத்தேய மொழி, பண்பாடு, நாகரிகம் என்பவற்;றை அறிந்தவராகவும் தனது மனதிற்கு சரியெனப் பட்ட கருத்துக்களை அஞ்சாது துணிவுடன் முன்வைப்பவராகவும் தனிப்பட்ட பசுமை, கருத்து, முரண்பாடுகளுக்கு இடமளியாது சிந்திக்க வல்லவராகவும் விளங்கினார்.

    இப் பெரியார் 1876 ஆம் ஆண்டில் பரவிய கொள்ளை நோய் காரணமாக தாய், தந்தையரை இழந்தார். பின்னர் சிறிய தந்தையரான கந்தப்பர் சரவணமுத்தின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். திண்ணைப் பள்ளியில் கல்வியில் கல்வியை ஆரம்பித்த அம்பலவாணர் தொடர்ந்து கார்த்திகேசு ஐயரிடம் கல்வியைக் கற்றார். தெல்லிப்பளை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணக்கல்லூரியில் பணியாற்றிய பொழுது Senior Local Matriculation. FA, BA பரீட்சைகளில் சித்தி பெற்றார்.

    இப் பெரியார் சுப்பர் சங்கரப்பிள்ளை மகள் முத்தாச்சியை திருமணம் செய்து இரண்டு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றெடுத்தார். முத்தாச்சியின் மரணத்தைத் தொடர்ந்து பொன்னையா தையல்முத்தை இரண்டாம் தாரமாக மணந்தார்.

    யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்பம் முதல் வானசாஸ்திரம் கற்பிக்கப்பட்டு வந்தமை இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தன் வாழ்நாள் பூராகவும் வானியலைப் பொழுது போக்காக கருதினார். வான் மண்டலத்தையும் விண்மீன்களையும் காரைதீவில் இருந்தே இம் மாமேதை ஆய்வு செய்தார். வசதிகளும் வாய்ப்புக்களும் படைத்த மேற்கத்தைய நாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நவீன கருவிகளின் உதவிகளுடன் கணிப்பிட்டுத் தெரிவிக்கும் எதிர்வுகூறல்களை காரைநகரில் தனது இல்லத்தில் தன் மாணவர்களின் உதவியுடன் நெடிது ஓங்கி வளர்ந்த 'கற்பகதரு' என அழைக்கப்படும் பனை மரங்களுக்கிடையே பரண் அமைத்து பிரபஞ்சத்தை ஊடறுத்துப் பார்க்க வல்ல திருவிழிகளால் பார்த்தும் மதிநுட்பம் மிக்க கணிப்பீடுகளாலும் தீட்சண்யம் மிக்க எதிர்வு கூறல்களாலும் படங்களின் உதவியுடனும் விளக்கி ஹேலிஸ் வால்வெள்ளி ஆனது 1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் காலை 9.00 மணிக்கும்; 10.00 மணிக்கும் இடையில் பூமிக்கு மிக அண்மையில் தோன்றும் என நிகழ முன்னரே தெரிவித்தார்.

    இப் பெரியாரின் கட்டுரையும் கணிப்புகளும் கிடைக்கப்பெற்ற பிரித்தானிய ஆராய்ச்சி கழகம் (Royal Astronomical Society) ஆராய்ச்சிப் பெறுபேற்றின் சாதனைகளை ஏற்றுக்கொண்டு 1911 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் Follow of the Astronomical Society (F.R.A) சான்றிதழை வழங்கி தமது கழகத்தின் உறுப்பினராக்கி பெருமை கொண்டது. 1921 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியா வானியல் ஆராய்ச்சிக்கழகம் (Royal Astronomical Society) அகரவரிசைப்படி வெளியிட்ட பட்டியலில் இப் பெரியாரின் பெயர் முதலில் காணப்படுகின்றது. வானியல் ஆராய்ச்சிக் கழகத்தில் (Royal Astronomical Society) அங்கத்துவம் பெற்ற முலாவது இலங்கையரும், எட்டாவது ஆசிய நாட்டவரும் என்கின்ற பெருமையை எம் பெரியார் பெற்றுக்கொண்டார்.

    இவர் 1910 ஆம் ஆண்டு ஹேலி வால்வெள்ளி வரவுரைத்து சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி எமது கிராமத்துக்கு சர்வதேச அந்தஸ்த்தைப் பெற்று சர்வதேசத்தை எம்பால் ஈர்க்க வைத்த உலகப்புகழ் பெற்ற எம்பெரியார் 'விஞ்ஞானத்துறையில் ஈழத்தமிழரின் முன்னோடி' என்றால் மிகையாகாது. இவரின் காலத்தில் வாழ்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பையும் விஞ்சி மதிநுட்பம் வாய்ந்ததும் மிகச் சரியானதுமாக இவரின் ஆராய்ச்சி அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

    ஹேலி வால்வெள்ளி வரவுரைத்தல் தொடர்பான விரிவுரைகளின் போது இவரின் திறமை தொடர்பாக இரண்டு விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். 1910 சித்திரை மாத நடுப்பகுதியில் வால்வெள்ளியை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என்பதை வரைபடங்களின் உதவியுடன் விளக்கினார். ஆனால் ஏனைய வானிலை ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு விரைவாக தோன்றும் என எண்ணவில்லை. உண்மையாகவே டாக்டர் வூல்ப் முதன் முதலாக படத்தில் 1909 செப்ரெம்பர் 11 இல் அவதானித்தார். 1909 செப்ரெம்பர் 19 இல் பேராசிரியர் பேர்னகாம் தொலைநோக்கு கருவி மூலம் அவதானித்தார். 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ம் நாள் இவர் வெற்றுக் கண்களால் கண்ணுற்று வால்வெள்ளியை எங்கு பார்வையிடலாம் என கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். 1910 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18,19,25 திகதிகளில் பம்பாய், இங்கிலாந்து, ஆகிய இடங்களில் வால்வெள்ளியை பார்க்கக் கூடியதாக இருந்தது. Royal Astronomical Society 1704 இல் காணப்பட்ட வால்வெள்ளியை அவதானித்து ஆய்வு செய்து அவ் வால்வெள்ளி 1758 இல் மீண்டும் தோன்றும் என எதிர்வு கூறினார். 1758 இல் ஹேலி அமரத்துவம் எய்திய போதும் தோமஸ் ஹேலியின் தீர்க்க தரிசனத்திற்கு மதிப்பளித்து அவருடைய நாமம் சூட்டப்பட்டது. 1834 இல் இவ் வால்வெள்ளி மீண்டும் தோன்றியது.

    தூமகேது அல்லது புகைவெள்ளி அல்லது வால்வெள்ளி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வால்நட்சத்திரம் என்பது ஏனைய கிரகங்களைப் போன்று சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றது. இவற்றின் சுற்றுப்பாதைகள் சமீபத்திலுள்ள கிரகங்களினால் மாற்றமடைகின்றன. இதன் காரணமாக வால்வெள்ளி எப்போது தோன்றும் எவ்வளவு காலம் பார்க்கமுடியும் என்பவற்றைக் கணிப்புச் செய்வது கடினமானதாகக் கருதப்படுகின்றது.

    வால்நடசத்திரங்கள் நீள்வளையப்பாதையில் சுற்றிக் கொண்டு சூரியனுக்கு அண்மையில் வரும் போது பிரகாசமாகத் தோன்றுகின்றன. சூரியன் உதயமாகும் விடியற் காலையிலும் அஸ்தமனமாகும் அந்தி வேளையில் நீண்ட வாலுடன் கூடிய பிரகாசமான வெள்ளியாக பூமியில் உள்ள மக்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும். 1910 இல் வால்வெள்ளி தோன்றும் என முன்னரே எம் பெரியார் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் தெரிவித்ததன் மூலம் இலங்கையரை விசேடமாக யாழ்ப்பாணத்தவரை இவ் வால்வெள்ளியை பார்ப்பதற்கு தயார்ப்படுத்தினார். 1986 இல் ஹேலிஸ் வால்வெள்ளி மீண்டும் தோன்றியது.

    எமது காரை மண்ணின் மைந்தனும் சிறந்த வானியல் ஆராய்ச்சியாளனும் எம் பெரியாருமான பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணரின் விண்ணியல் சார்ந்த கட்டுரைகளில் ஆரம்ப பாடசாலைகளில் வானசாஸ்திரத்தின் இடம் ஹேலியின் வால்வெள்ளி, உஷ்ண வலய வான் மண்டலம், வான்மண்டலத்தின் அதிசயங்கள் என்பன பிரபல்யம் ஆகின. இக்கட்டுரைகள் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் வான்சாஸ்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்பன தொகுக்கப்பட்டு விசேட வெளியீடாக 1985 இல் யாழ்ப்பாணக்கல்லூரியால் வெளியிடப்பட்டது. எம்பெரியார் பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணரின் ஆக்கங்களாக கணிதநூல், மதுவிலக்கு கும்மி மற்றும் கிறிஸ்து கீர்த்தனைகள் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். இவர் 'உதயதாரகை'இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.

     எம் பெரியாரினால் பாவிக்கப்பட்ட தொலைநோக்கு கருவி (Telescope)யாழ்ப்பாணக்கல்லூரி பௌதீக ஆய்வு கூடத்தில் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் 1974 வரை பாவிக்கப்ட்டது. இத் தொலைநோக்கு கருவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
    எம் பெரியார் பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் அவர்கள் காரைநகர் மணற்காட்டைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ கா.சி.மகேசசர்மாவின் உதவியுடன் பஞ்சாங்கங்களையும், கோள் கணிப்புக்களையும் அறிந்து வானசாஸ்திரக் கணிப்புக்களையும் வெளியிட்டார்.

    இவர் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழை நேசித்தார். இதனால் பண்டிதர் என அழைக்கப்பட்டார். அத்தோடு இவர் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தில் அங்கத்தவர் ஆனார்.இவர் பொய்யாமொழிப் புலவனின்,

                                            "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
                                                              எய்துவார் எய்தாப் பழி"

     என்ற வாக்கிற்கிணங்க சிறந்த மனவலிமை உடையவராகவும் ஒழுக்கத்தில் குன்றினால் குறைவு ஏற்படும் என்பதை நன்கு அறிந்து ஒழுக்கத்தில் குன்றாது வாழ்ந்தமையும் சீரிய சிந்தனைகளை உடையவராக இருந்தமையுமே இவர் சிறந்த சாதனையாளனாக மாறுவதற்கு அடித்தளமாக விளங்கின.

    இவர் தினமும் காலையில் 6.30 மணிக்கு காரைநகரில் இருந்து மாட்டுவண்டியில் புறப்பட்டு 8.00 மணிக்கு யாழ்ப்பாணக்கல்லூரியை சென்றடைவார். மாலையில் 3.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.00 மணிக்கு காரைநகருக்கு வந்தடைவார். வயலுக்குச் செய்வதும், உழுவதும், அறுவடை செய்வது முதலிய தொழில் செய்பவர்களுடன் பணி செய்வதை மனதிற்கு மகிழ்ச்சியாக கருதினார். இவர் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களின் சுக துக்கங்களிலும் தவறாது கலந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த போது 1922 ஆண்டு யூன் மாதத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 1922 ஆம் ஆண்டு யூலை மாதம் 7 ஆம் நாள் காரைவாழ் மக்கள் மட்டுமல்லாது இந்த உலகத்திலுள்ள அனைத்து மக்களும் கண்ணீர் சொரிய மரணத் திரையால் மறைக்கப்பட்டார்.

    இம் மேதையின் வாழ்வும் பணியும் இறைவனின் பெருமையையும், ஆச்சரியங்களையும், படைப்புக்களையும் பரிசோதிப்பதாக காணப்பட்டது. கணித சாஸ்திரத்திரதிலும் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என்னும் ஐந்து இலக்கியத்திலும் மட்டுமன்றி வான்சாஸ்திரத்தையும் முற்றாகக் கற்று வால்வெள்ளியின் தோற்றத்தை முன்கூட்டியே கூறியும் இசைத்துறையிலும் பேச்சுத்துறையிலும் மிகுதியாக அறிவு பெற்று பாரோர் புகழ கணித மேதையாகத் திகழ்;லி;ந்தான் பெரியார் அல்லின் ஆபிரகாம் என்று ஈழத்துச்சிதம்பர புராணத்திலே வருகின்ற

                                                 "எண்ணூலி லெழுத்தேமுத லைந்தியலி
                                                  லின்புதரு மிலக்கி யத்தில்
                                                 விண்ணூலின் பரப்பளந்து புகை வெள்ளி
                                                 வரவுரைத்த வித்தை தன்னிற்
                                                  பண்ணூலிற் சொற்பொழிவிற் பழுத்த மதி
                                                  மிகப் படைத்துப் பாரோரேத்த
                                                எண்ணூற்பே ராசானா யிலங்கினனா
                                                   வல்லினெ பிரகா மேந்தல்"

    எனும் பாடல் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது.

                                           "ஈன்ற பொழுதில் பெரி(து) உவக்கும் தன்மகனைச்
                                                          சான்றோன் எனக் கேட்டா தாய்"

என்ற வள்ளுவனின் ஈரடி வாக்கிற்கு இணங்க எம் காரை மாதாவை உலகம் போற்ற வைத்த மைந்தனும் சிறந்த வானியலாளனும் எம் பெரியாருமான பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணரின் புகழ் நிலவிருக்கும் வரை உலக மக்களின் நீங்காது நினைவிருக்கும்.

                                                                            நன்றி.

 

kadduraipoddi 03 20140001(NEW001)

மாசி மாதத்தில் மாசிமகம், மகாசிவராத்திரி

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. இந்நாள் சிவனிடத்து அன்பு பூண்டு ஒழுகுபவர்களுக்குச் சிறந்த நாளாகும். மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தித் திதியில் சிவபெருமானைக் குறித்து அனுட்டிப்பதே சிவராத்திரி விரதமாகும். இந்நாளில் உபவாசம் இருப்பதுடன் இரவு முழுவதும் நித்திரையின்றி விழித்திருந்து சிவன் வழிபாட்டிலும் சிவபூசையிலும் ஈடுபடுதல் வேண்டும்.

           ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெரும் சோதியாம் பரம்பொருளாகிய சிவபெருமான் அகங்காரம் இல்லாது அன்போடு வழிபடுபவர்களுக்கு காட்சியளிப்பார் என்பதை உணர்த்தி நிற்கும் விரதம் சிவராத்திரி விரதமாகும். நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்வதோடு பஞ்சாட்சர செபம் செய்தல்,சிவபுராணம் படித்தல், கேட்டல் என்பவற்றில் இரவைக் கழித்தல் வேண்டும். உபவாசம் இருக்க இயலாதவர்கள் நீரோ பாலோ அருந்தலாம். உபவாசம் மேற் கொண்டோர் அடுத்த நாட்காலையில் நித்திய கருமங்களை முடித்து சூரியோதயத்தின் பின்பு ஆறு நாளிகைக்குள் சிவனடியாரோடு பாராயணம் செய்தல் வேண்டும். பின்பு பகலில் நித்திரை செய்தல் ஆகாது. இரவில் பலகாரம் சாப்பிடலாம். இரவு முழுக்க கண்விழித்திருக்க முடியாதவர்கள் லிங்கோற்பவகாலம் இரவு 11.30 மணிதொடக்கம் 12.15 மணிவரையாவது கண் விழித்திருப்பது விசேடம்.

சிவராத்திரியின் பூசை முறைகள்:

சாமம்                            அபிஷேகம்        பூச்சு                 மலர்கள்                      நிவேதனம்

 

முதலாம்சாமம்      பஞ்சகவ்வியம்    சந்தனம்     வில்வம்,தாமரை     பச்சைப்பயற்று
                                                                                                                                    பொங்கல்.

 

இரண்டாம்சாமம்    பஞ்சாமிர்தம்         அகில்             துளசி,தாமரை              பாயாசம்

 

மூன்றாம்சாமம்   கொம்புத்தேன்  பச்சைக்கற்பூரம்  மல்லிகை,வில்வம்  எள்அன்னம்

 

நான்காம்சாமம்     கருப்பஞ்சாறு        குங்குமப்பூ       நந்தியாவர்த்தம்     சுத்தான்னம்        
                                                                                                   நீலோற்பவம்        
மாசிமகம்:

சந்திரன் சிம்மராசியில் மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாள் மாசி மகவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது அம்பிகைக்கு உகந்த நாளாகும். மாசிமகம் விரதம் இருப்பவர்களுக்கு மறுபிறவியில்லை. விரதம் ஏற்று அன்னதானம் செய்தால் ஆண்பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பர்.

தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் என்னும் திருவிழா மாசிமாதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அம்பிகை தக்கன் மகளாகத் தோன்றிய நாள் மாசிமகமாகும்.

ஓப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தெய்வம் சிவபெருமான்! 
பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மகா மகத்திருவிழா நிகழும் ஒரே தலம் தமிழ்நாட்டுக் கும்பகோணம். ஆந்தப் பெருவிழாவின் தோற்றம்,சிறப்பு,பயன்,பண்பு ஆகியவற்றை விளக்கி 1982ஆம் ஆண்டில் கவிஞர் தமிழ்நம்பி இயற்றிய பக்திப்பாடல் இவ்வாறு அமைகின்றது.

குயில்பாடும் கும்பகோணம் கோயில் கண்டேன்
கும்பேஸ்வரப் பெருமானின் வடிவம் கண்டேன்
அமுதகுடம் உடைந்ததனால் அமைந்த லிங்கம்
அருள்பொழியும் கும்பகோண அழகு லிங்கம் 
                                                                                     குயில் பாடும்!

முகாமக விழாவினால் மங்கலம் பொங்கும்
மாசிமகத் திருநாளில் உண்மை விழங்கும்
நவநதிகள் தூய்மை பெறும் நல்லநாளிது
நன்மை எல்லாம் உலகில் பெற நமக்கு வாய்த்தது
                                                                                    குயில் பாடும்!!

புன்னிரண்டு ஆண்டிற்கொரு இனிய திருவிழா
படுகின்ற துயர்மாற்றும் தெய்வத் திருவிழா
தென்னானுடைய சிவன் அருளும் திருவிழா
தீவினைகள் தீர்வதற்கு நடக்கும் ஒருவிழா
                                                                                    குயில் பாடும்!!!

 

                                                                        நன்றி

                                                                                                                இங்ஙனம்
                                                                                                 மாதம் ஒரு கட்டுரை
                                                                  சுவிற்சர்லாந்தில் இருந்து சிவத்தொண்டன்.

 

 

           

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று இளவறிஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வன் நிசாந்தன் ஜெபாலசிங்கம்

SWISS LOGO

மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்.

          "மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஓரு மிருகம்" என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் "ஊர்"; என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள் அவ்விடம் "நகரம்" என்றழைக்கப்பட்டது. இவ்வாறு தனி மனிதர்கள் சமூகமாகிவிட்டார்கள். தனி மனிதனுக்காக நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாகின. சம்பிரதாயங்களில் புனிதமெனக் கருதப்பட்டவை தருமங்களாயின தருமங்களும், சம்பிரதாயங்களும் ஒன்றிணைந்து வாழ்க்கைக் கோட்பாடுகள் வலுப்பெற்று சமுதாயம் நிலைபெறத் தொடங்கியது.

      "சக்தி இல்லையேல் சிவம் இல்லை" என்ற சைவ சித்தாந்த கோட்பாட்டின் நிமித்தம் எது எவ்வாறாயினும் இந்த சமுதாயம் நிலைபெறத் தேவையான உறவுகள் வலுப்பெற மாதர் என்கின்ற மகா சக்தியானது அவசியமாகின்றது. ஆகவே மாதர் இல்லையேல் மனித சமுதாயமானது இல்லை என்பதே வெளிப்படை உண்மை. இத்தகைய மகா சக்தியான மாதர்கள் பல்வேறு காலகட்டங்களில் வௌ;வேறு முறைகளில் இழிவு செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

      மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைக்கு எம்முடைய தமிழப்;பெரு இலக்கியங்களும் சான்றுபகர்கின்றன. இராமாயணம் என்பது மகாகாவியம். கம்பருடைய கைவண்ணத்தால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்மொழியின் தனிப்பெருமையினை வெளிப்படுத்தும் தெய்வகாவியமாக திகழ்கின்றது. பக்திவெள்ளம் பாயும் இந்தக் காவியத்தில் சீதை என்கின்ற பெண் கொடுமைகளுக்கு உட்படுகின்றாள். கணவனே கண்கண்ட தெய்வம் என்கின்ற பத்தினியும், தருமத்தைப்பேணும் பதிவிரதையுமாகிய சீதை இராமனுடன் கானகம் செல்கிறாள், கானகத்தில் இராவணன் என்கின்ற அரக்கனால் கவர்ந்து செல்லப்படுகிறாள். இருப்பினும் கவர்ந்து சென்ற இராவணன் ஒரு சிவபக்தனாக இன்றும் போற்றப்படுகின்றான். கவர்ந்து செல்லப்பட்ட சீதைக்கு கற்புப் பரிசோதனை இராமனால் நடத்தப்படுகிறது. இதனால் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கித்தவித்த தரும பத்தினியாகிய சீதைக்கு ஆறுதல் வார்த்தை கூறாமல் அக்கினிஸ்நானம் செய்யப் பணிக்கப்படுகிறது. பின் அயோத்தி மாநகரில் கர்பணிப் பெண்ணாகிய சீதையை ஊரான் ஒருவனின் சொல்கேட்டு கானகத்திற்கு விரட்டுகின்றான் இராமன். ஆயினும் இராமன் உத்தம புருஷனாக, அவதார மூர்த்தியாக போற்றப்படுகின்றான். இருப்பினும் கற்புநெறி திறம்பாத பதிவிரதையாகிய சீதைக்கு இழைக்கப்பட்ட கொடுமையினை இன்றைய சமுதாயம் மறந்துவிட்டது. மறுத்துவிட்டது.

          மாதர் இழிவுசெய்யப்பட்ட கோரச்சம்பவம் அகலிகையின் கதையினை ஆழமாய் அலசிப்பார்த்தால் தெளிவாகும். தன்னுடைய கணவனை உள்ளத்தில் இருத்தி எந்நாளும் பூஜிக்கின்றாள் முனி பத்தினியாகிய அகலிகை தேவர்களின் அதிபதியாகிய இந்திரன் அகலிகையின் அழகினைக்கண்டு மயங்குகின்றான். எனவே பொய் சேவல் வேடம்தரித்து முனிவனை குடிசையிலிருந்து வெளியேற்றுகின்றான். பின் முனிவனுடைய வேடம்தரித்து அகலிகையின் முன் தோன்றி அவளுடன் உடலுறவு கொள்கின்றான். முக்காலம் உணர்ந்த முனிவனுக்கே பொய்ச் சேவலினை உணரமுடியாத பொழுது பாவம் அந்தப் பேதைப்பெண் எவ்வாறறிவாள் வந்தவன் இந்திரன் என்பதனை. இருப்பினும் உள்ளத்தால் கற்பு நெறிதவறாத பேதைப்பெண்ணாகிய அகலிகைக்கு கல்லாக காலத்தைக் கழிக்கும்படி சாபம் இடப்படுகின்றது. ஆயினும் உள்ளத்தாலும், உடலாலும் குற்றம் இழைத்த தேவேந்திரனுக்கு சாபவிமோசனம் அழிக்கப்பட்டு இன்றும் அவன் தேவர்களின் அதிபதியாகவே போற்றப்படுகின்றான். எனினும் உள்ளத்தால் கற்புநெறி பிறழாத அகலிகைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முதலைக் கண்ணீர் வடிக்கக்கூட எவரும் இல்லை. புராணங்களும், இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் பெண்கள் பல்வேறுவிதமாக இழிவுசெய்யப்படுவதைப் போலவே நிகழ்கால உலகிலும் பெண்களை இழிவு செய்து பலவீனப்படுத்தும் முறையானது இன்றும் தொடர்கிறது.

                     ஆரம்ப நூற்றாண்டுகளில் பெண்களுக்கு கல்விச்சுதந்திரமும், கருத்துச்சுதந்திரமும் மறுக்கப்பட்டது. கரும்புத் தோட்டத்திலே வேலைபுரிந்த ஆபிரிக்க கறுப்பர்களைப் போலவே கொத்தடிமைகளாகவே மதிக்கப்பட்டனர். இல்லத்தரசிகள் என்றழைக்கப்பட்ட அவர்களுக்கு ஆணாதிக்க சமூகத்தில் பெயரளவிலேயே உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. உரிமைகளும், விடுதலையும், சுதந்திரமும் மாதருடைய பயணத்தில் புதுமைப்பெண் என்கின்ற புரட்சிக்கருத்தை துளிர்விடவைத்த உத்தம புருஷன் மகாகவி பாரதியாவார். அவருடைய புரட்சிப்பாதையில் பல புதுமைப்பெண்கள் வழிநடக்க வழிவகுத்தார். பெண்களுக்காக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில்

              "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை – என்று
                   எண்ணியவர் மாண்டுவிட்டார்"
             "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும்
                       விந்தை மனிதரும் தலை கவிழ்ந்தார்"

                                                                என்றும் வீரமுழக்கமிட்டு பெண்களுக்காக கல்வியினை வரப்பிரசாதமாக பெற்றுக்கொடுத்த வீரகவிஞர் பாரதி என்றால் அது மிகையாகாது.

                 "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட – பார்வையும்
             நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த
      ஞானச் செருக்கும் இருப்பதால் தில்லை மாதர் திறம்புவதில்லையாம்"

 என்று கவிதைகளில் நனவுலகம் படைத்து பெண்களுக்கென்று சம உரிமையினைக் கொடுக்க அரும்பாடுபட்டு புதுமைப்பெண் என்ற புதுவுலகம் காண வழிவகுத்து பெண்களின் உரிமைக்கு புத்துயிர் அளித்தார். புதுமைப்பெண்கள் நனவுலகில் தம் கால்தடங்களை பதித்தாலும் அவர்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் இன்னும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. அதற்கு சிறந்த உதாரணமாக சீதனக்கொடுமையினைக் குறிப்பிடலாம்.

            தனியுடைமைப் பொருளாதார அமைப்பின் தோற்றத்தோடு உருவாகிய பெண்ணடிமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவிவரும் பொருளாதார கலாசார நடைமுறைகளுள் சீதனமுறையும் ஒன்று. சமுதாய உழைப்பிலிருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களாக போகப்பொருளாக – வீட்டு அடிமைகளாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பில் இது பெரு வழக்காகியது. அதிகாரத்தை இழந்த பெண்ணுக்கு புகுந்த இடத்தில் சிறு அந்தஸ்த்தை, கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் முறையாக இது பரிணமித்தது.

         அன்று சமயச் சடங்குகளிலும், திருமண வைபவங்களிலும் கோதானம், பூதானம், என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அஃறினைப் பொருட்களோடு ஒன்றாகப் பெண்களைக்கருதி கன்னிகாதானம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். இவ்வழக்கம் இன்றும் எம்மிடையே நிலவிவருகின்றது. பெண்களின் பெற்றோருக்கு வெகுமதிகள் கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவியது. இதனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். சீதனமுறை சமூகத்தில் ஊறிப் பழகிவிட்ட ஒரு நடைமுறை, இதனை ஒழிக்க முடியாது "மனமாற்றம்"  "பொருளாதாரவளர்ச்சி" "சமுதாயமாற்றம்" இவைகளின் பின்தான் இது சாத்தியமாகும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் எமது சமூகத்தில் நிலவிவருகின்றன.

                          "நல்ல விலை கொண்டு நாயைவிற்பார் அந்த
                                நாயிடம் யோசனை கேட்பது உண்டோ
                          கொல்ல துணிவு இன்றி நம்மையும் அந்நிலை
                                  கூட்டி வைத்தார் பழி கூட்டி விட்டார்"

                        என்று பாரதியார் பாடியதற்கிணங்க சீதனமுறையால் மாதர் இழிவுபடுத்தப்படும் நிலை நன்கு வெளிப்படுகின்றது. மாற்றப்பட முடியாதவை என்று எமது சமூகம் கருதிய பல்வேறு நடைமுறைகள் எமது கண்களின் முன்னால் மாற்றமடைந்துள்ளன. பெண்கள் தம் விழிப்புணர்வை மேலும் வளர்ப்பதுடன், மானிடநேயம் கொண்ட ஒரு புதிய சமுதாய மாறுதலை விரும்புகின்ற கல்வியாளர்கள், கலை இலக்கியத்துறையினர் அனைவரும் இச் சீதனமுறையை ஒழிப்பதில் துணைநின்றால் மக்களின் ஒத்துழைப்புடன் பெண் ஒடுக்குமுறையின் பொருளியல் வடிவங்களின் ஒன்றான சீதனத்தை இல்லாமல் ஒழிக்க முடியும்.

                     எந்த வகை ஒடுக்குமுறையும் முன்னதாகப் பண்பாட்டுத்தளத்தில் கட்டமைக்கப்பபட்டுவிடுகிறதது. பெண்களை இரண்டாந்தரநிலையில் வாழப் பழக்கிவிட்டதில் வேறெந்த வழிமுறையைக் காட்டிலும் பண்பாட்டு வடிவம் அதிகம் பங்களித்துள்ளது. தழிழர் சமூகத்தில் அதற்குரிய இடங்களை அலசுவதாக அமைகின்ற கருப்பொருட்களை ஆராய்ந்து பார்த்தால் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற வக்கிரங்களையும், அடக்கு முறைகளையும் இலகுவாக துணியமுடியும். நாளாந்தம் சுமக்கும் வளிமண்டலத்தின் நிறை உணரப்படாமை போலவே பண்பாட்டின் பேரால் நிகழும் ஒடுக்குதல் சகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் தகர்த்துக் கட்டமைக்கும் புதிய பண்பாட்டு மிகப்பிரதானமாய் பெண்விடுதலை சார்ந்து அமையும். அது மூடத்தனமான சகித்தலுக்கு அப்பால் கடந்தகாலத்தை விமர்சன பூர்வமாய் அணுகி மரபின் பேரால் ஒடுங்கிக் கிடத்தலை நிராகரிக்கும்.

                        "கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
                             கடைததேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
                           புல்லென்றே நினைக்கின்றீர் மனைவி மாரைப்
                              புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்"

                                      என்றார் பாரதிதாசன் இதற்கேற்பவே இவ்வுலகில் பெண்கள் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு இழிவுசெய்யப்படுகின்றார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக டெல்லியில் நடந்த கோரச்சம்பவத்தைக் குறிப்பிடலாம். இதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை ஒட்டி, பெருகிவரும் வல்லுறவுக் குற்றத்தை தடுப்பது குறித்து சட்டம், பண்பாடு ஆகிய இரு தளங்களில் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. நடந்துள்ள குற்றத்தின் கொடுPரம் காரணமாக வல்லறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. பிரச்சினை அதிகமாக இருப்பதால், வல்லுறவுக் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக்கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
                         தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூட சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளது, ஆலைகள் முதல் தொழில்நுட்பதுறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத்தொடங்கிவிட்டார்கள் இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் டெல்லி சம்பவம் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத்தடைக்கற்கள் தான் எனவே "பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்"
"இச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாகத்தண்டிக்க வேண்டும்" என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வரையுள்ள எல்லா அறிவு ஜீவிகளின் பொதுவான கருத்தாக நிற்கிறது. எனவே நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே மாதரை இழிவுபடுத்தும் செயல்களில் ஒன்றாகிய வன்புணர்வுகளை கொழுத்தும் வழிமுறையாக திகழ்கின்றது.

     பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் அதிகமாயிருப்பது மட்டுமல்லாமல் மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலினை முன்னெப் போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன சினிமாக் களங்களில் ஒரு போகப்பொருளாக பார்க்கப்படும் பெண்கள் இன்று உழைபிலும் கவர்ச்சிப் பாகமாகவே மதிக்கப்படுகின்றனர்.பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக் கூட பாத்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்றும் அந்த பயணம் தொடருகின்றது. பெண்கள் ஒரு மதுபான விடுதிகளிலும், இருபதுக்கு இருபது  கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும், அமெரிக்காவின் பாலியல் வக்கிர பத்திரிகை குழுமம் இந்தியாவில் ஆரம்பித்திருக்கும் நிறுவனங்களிலும், ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கீழான வேலைகளைச் செய்கின்ற இழி நிலைக்கு பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதைவிடக் கொடுரம் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் கவ்வாத்து பறிக்கும் பணியினில் கொத்தடிமைகளாக முதலாளிவர்க்கத்தால் மிதிக்கப்படும் இழிவான நிலைக்கு பெண்கள் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

                பெண்ணியம் என்ற பதம் பலவாறாக விளங்கவும், விளக்கவும்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பெண்ணியம் என்பது எல்லா இடத்தும், சமூகத்தளத்திலும் குடும்பத்தளத்திலும் ஆண்,பெண் ஆகிய இரு பாலருக்கும் முழுமையான சமத்துவம் என்பதை அடிப்படையாகக் கற்றுக்கொள்கிறது. பெண்ணியம் பற்றி பேசும் பெண்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் பெண்கள் அமைப்புகளும், ஊடகங்களும் இன்றைய காலகட்டத்தில் அதிகாரத்திற்கு அடிபணிகின்றன. மேல்தட்டு மக்களின் பணத்திற்கு விலைபோகின்றன. பெண்கள் மீதான அடக்குமுறை, பெண்ணுரிமை போன்ற விடயங்களை பேசம் போது உயர்மட்ட பெண்களின் பிரச்சினைகளை மட்டுமே பேசும் பாங்கு இவற்றிடம் காணப்படுகின்றது. அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருக்க இவை செய்யும் சமரசமே இதுவாகும். இந்த அறியாமை அவர்கள் பங்குபற்றும் விவாதங்கள், உரையாடல்களில் வெளிப்படுகின்றது."பெண்கள் சமத்துவத்துடனும் சம உரிமைகளை உடைய சுதந்திர மாதர்களாகவே இருக்கின்றார்கள், இதற்கு மேல் என்ன உரிமை தேவைப்படுகின்றது"என்பது போன்ற வாதங்களெல்லாம் இவர்களால்தான் முன்வைக்கப்படுகின்றது. ஆகவே பெண்களின் ஒடுக்குமுறைகளை அடக்கும் ஆயுதங்களாகிய பெண்ணுரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பெண்கள் மீது நிகழும் வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளுக்கும், சமூகத்தில் நிலவும் ஏனைய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஒருமைப்பட்டு போராட முன்வரவேண்டும். இதே போன்று ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புக்கள் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

        இவ்வாறு கடந்தகாலங்களிலும், நிகழ்காலத்திலும் பெண்கள் உடல்ரீதியாகவும், உளரிதீயாகவும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு இழிவுபடுத்தப்படுகின்றனர். இத்தகைய இழிவினை கொழுத்த வேண்டுமாயின் நாம் மேற்கூறியவாறு பெண்விடுதலைக்கான போராட்டத்தை சமூகவிடுதலைக்கான ஒரு போராட்டமாக இணைக்க வேண்டும். ஏனெனில் எந்தவொரு சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தனித்து மேற்கொள்ளப்படும் போது அது போராட்டச் சக்திகளையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்பதையும் நியாயமான ஒவ்வொரு போராட்டமும் மற்ற நியாயமான போராட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கின்றன என்ற உண்மையையும் மனத்திலிருத்துவது பெண்களின் உரிமைகள் பற்றிய அக்கறையுள்ள அனைவரதும் கவனிபிற்குரியது. மேலும் இன்றைய சூழலில் பெண்கள் பலவழிகளில் ஒடுக்குதல்களைச் சந்திப்பதற்கான நிலைமைகளே வளர்ந்து வருகின்றன. எனவே அவை அனைத்தையும் எதிர் கொள்ளக் கூடிய பெண்விடுதலைக்கான நேரிய சிந்தனையும் உறுதியான செயற்பாடும் தேவையாகின்றது. அத் தேவையை நிறைவு செய்ய பெண்கள் சிந்தனைத் தெளிவுடனும் செயலூக்கத் திறனுடனும் கூடிய பெண்கள் வெளிவர வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் சம நோக்குடைய ஆண்களும் இப்போராட்டத்தில் பங்குபெறவேண்டும் அப்பொழுதே இப்போராட்டம் வெற்றியினை ஈட்டும். இதற்கு உதாரணமாக பெண் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் சொத்தின் மீதான உரிமையை பெண்ணுக்கு சார்பாகவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் முகமாகவும் பருவமடையும் முன்பெண்னை மணமுடிக்கும் மூடத்தனத்தை எதிர்க்கவும், விதவைகளுக்கு மறுமணம் செய்யும்  இயக்கத்தை படைப்பிலக்கியமாக்கவும் முனைப்பாக இருந்து போர்க்குரலை உயர்த்திய புதிய கலாசாரத்தின் முன்னோடியான பாரதி பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் மற்றும் சின்னப்பாரதி போன்றோர் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான பன்முகப்பட்ட போராட்டங்களை எழுச்சியுறச் செய்தனர்.

       எது எவ்வாறாயினும் பெண்ணின் ஆளுமை விருத்தியடைவதன் மூலமே சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் சிறப்படைய முடியும். அப்பொழுது மட்டுமே கற்பெனப்படுவது சொற்திறம்பாமை என்ற பொருள் கோடலை அர்த்தமுள்ளதாக்கமுடியும் எனவே பண்பாட்டின் பெயரால் மாதர் தம்மை இழிவு செய்யும் கருத்தாடல்களை ஒழித்து பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை தீர்க்கமான வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் வகுத்து மக்கள் விடுதலையின் தவிர்க்கவியலாத ஒரு பகுதியாக அதனை வளர்த்தெடுப்பதுடன் ஒரு சமூகத்தின்
வளர்ச்சி மட்டத்தை பெண் வகிக்கும் இடத்தைக் கொண்டே மதிப்பிடமுடியும் என்ற உண்மையை அனைவருக்கும் உணரச்செய்து மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்த ஒன்றிணைவோம்.

                                     "பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
                                          பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்,
                                        ஏட்டு மறவினில் ஆணுக் கிங்கே பெண்
                                             இளைப்பில்லை காணென்று கும்மியடி"

                                                                               நன்றி
  
        
   
                kadduraipoddi 01 20140001


 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று இளவறிஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன்

kadduraipoddi 02 20140001

 

    மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொழுத்துவோம்

மாதர் எனும் சொற்பதம் பெண்களைக் குறித்து நிற்கிறது. பெண் என்றால் யார்? அவள் எத்தகைய குணங்களைக் கொண்டவள்? மிகவும் மெல்லிய நுண்மையான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நாற்குணங்களைக் கொண்டவள். பெண் என்றாலே அடக்கம், பணிவு என்ற பொருட்களும் சேர்ந்தே வரும். ஆனால் அவற்றை வைத்து பெண்ணியத்தை அடக்கியாள முற்படுதல் அபத்தமானது. பெண்களை அடக்கு முறை என்ற குழியினில் தள்ளி அங்கே அவர்களை சிறைவைத்து விட்டனர். ஆண்டாண்டு காலமாக அச்சிறையில் பெண்கள் அடைந்து அடிமையாய் வாழ்கின்றனர். இவ்வாறு மாதரை அடக்கியாழும் அடக்குமுறைக்குள் இருந்து பெண்கள் எப்போது விழித்தெழுந்து அச்சிறையினை உடைத்தெறிந்து வெளியே வருகின்றனரோ அப்போது தான் பெண்ணியத்தின் விடுதலை கைகளில் கிடைக்கும். மாதரை அடக்கியாழ்பவரை அறிவினால் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களே முதல் தங்களின் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். வீணான பயங்களையும், மடமையையும் தூக்கியெறிந்து வீரப்பெண்ணாக முன்வரவேண்டும்.

                                              "மாதர் தம்மை இழிவு செய்யும்
                                               மடiமையை கொழுத்துவோம்" 

                             என்று பெண்ணியத்துக்காக குரல் கொடுத்தான் ஒரு ஆடவன். அவர் தான் மகாகவி பாரதியார். ஒரு ஆணாக இருந்து கொண்டு பெண்ணியத்தின் சீரழிவு கண்டு நெஞ்சு பொறுக்காது பெண்களுக்காக பேனா எடுத்து போர் செய்தவர் பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதை உலகில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர் மகாகவி ஆவார். சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது என்ற புதிய தளம் நோக்கி கவிதையை அழைத்துச் சென்றவர். பெண் விடுதலை பற்றித் தன் கவித்துவத்தை நிலைநாட்டியவர். பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை அவர்களும் சுவாசிக்க வேண்டும் என்பதில் மகாகவி பெரிதும் அவா கொண்டார். 

                                 "அறிவு கொண்ட மனித உயிர்களை 
                                  அடிமையாக்க முயல்பவர் பித்தராம்"

                                 எனும் பாடல் மூலம் ஆணும் பெண்ணும் நிகரானவர்கள் என்றும் அவ்வாறு கொள்வதனால் தான் இவ்வுலகம் மேன்மையடையும் என்பதனையும் கூறியுள்ளார்.

பாரதி வாழ்ந்த காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் பெண்ணோ ஆணுக்குக் கீழே அடிமைப்பெண்ணாக காணப்பட்டாள். ஆணுக்கு ஆண் அடிமையாக இருப்பதைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமையாய் இருப்பதே பெரியதொரு அநியாயம்.

                                   "மனித ஜாதியில் ஆணுக்குப் பெண் 
                                   அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதைப் போல
                                    இதர ஜந்துகளுக்குள்ளே கிடையாது"

                                 என்று மகாகவி கூறியுள்ளான். ஏனைய விலங்கினங்கள் எதுவுமே பெண்ணை அடிமைப்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே பெண்ணை அடிமைப்படுத்தியுள்ளான் என்பதை மிகவும் தெளிவான முறையில் நிறுவியுள்ளார் பாரதி.

பெண்ணியத்தின் நிலமை அன்று மக்களோடு இருக்கவில்லை, மாக்களோடு ஒப்பிட்டு நோக்கும் தன்மையதாய் இருந்தது. இதை பாரதி 

                              "நல்ல விலை கொண்டு நாயை விற்பாரந்த 
                                 நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? 
                              கொல்லத்துணிவின்றி நம்மையும் அந்நிலை 
                                     கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார்"

                                                                                                                என்று கூறுகிறார்.இங்கு 

பெண்ணியத்தின் நிலைமை தௌ;ளத தெளிவாகின்றது. வெறும் பதுமைகளாகவும் உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளாகவுமே இச்சமுகம் பார்க்கிறது. பெண்களுக்கு எதிராக எண்ணற்ற கட்டுப்பாடுகள், நடைமுறைகள், கொடுமைகள் பல நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் வாயிருந்தும் பேசமுடியாத ஊமைகளாகவே இன்று நடமாடுகின்றர்;;;;. தமது எண்ணக்கருத்துக்களையோ, பிரச்சனைகளையோ மனம் விட்டு வெளியே கூறமுடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அதற்காக பெண்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு கிடைத்த விடுதலையால் எந்தவொரு பயனும் இங்கு இல்லை என்பதை

                       "தாதரென்ற நிலைமை மாறி ஆண்களொடு பெண்களும் 
                           சரிநிகர் சமனாக வாழ்வம் இந்நாட்டிலே"

                                 என்று கருத்துரைத்துள்ளார். அதே அதிகாரத் தோரணையிலே 

                            "மாதர் தம்மை இழிவு செய்யும்
                          மடைமையைக் கொழுத்த வேண்டும்"

                                                                                                    என எச்சரிக்கிறார்.
நாணமும் அச்சமும் நாய்களுக்குத்தான் இருக்கவேண்டும். அவை பெண்ணியத்திற்கு அவசியமில்லை. அவர்களுக்கு ஞான நல்லறத்தையும், வீர சுதந்திரத்தையும் காக்கின்ற நல்ல குடிப்பெண்ணின் நற்குணங்கள் இருக்க வேண்டும். ஒளவைப்பிராட்டியார,;

                    "முனைமுகத்து நில்லேல்"   என்றும் 
                 "போர்க் களத்தில் முன்னாலே நிற்காதே"

                                    என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் பாரதி ஒரு ஆணாக இருந்தும் 

                             "முனைமுகத்து நில்" என்றும் 
                                       "தையலை உயர்வு செய்"

                                 என்றும் பாடியுள்ளார். பாரதி காலத்துப்  பெண்கள் ஏறக்குறைய ஒரு நடைப்பிணம் போல உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வீட்டுச்சிறைகளிலே சிறைவைக்கப்பட்டு இருந்தனர். பெண் என்றால் அடங்கித்தான் இருக்கவேண்டும் என்ற நிலை அன்றைய காலம் தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது.

பெண் இயல்பிலேயே கொடூரமானவள், சுதந்திரத்தைப் பெற அருகதை அற்றவள் என்றும் ஆணுக்குப் பெண் அடிமை என்ற எண்ணங்களினால் பெண்ணின் அறிவைச் சுரண்டி மேன்மை பெற இயலாமல் முன்னோர்களின் வாய்மொழி சட்டத்திலும், மூடநம்பிக்கை ஆணைகளும் விதிக்கப்பட்டு பாசி படர்ந்த கலாசார குட்டைக்குள் தள்ளப்பட்டாள். பட்டங்கள் ஆளச் சொன்னதனாலோ, சட்டங்கள் செய்யச்சொன்னதனாலோ, அச்சம், மடம், நாணம் நாய்களுக்கு வேண்டும் என்று உரிமைக்குரல் கொடுத்தனாலோ முதல் பெண்ணியவாதி ஆகவில்லை. அதற்கு மாறாய் பதிய சேவை செய்பவளாகவும், ஆண் மக்களைப் பெருக்கும் இனவிருத்திக்குரிய கருவியாகவும் பாடுகின்ற புலவர்களுக்கு கிளியாகவும், அன்னமாகவும,; தென்றலாகவும், மலராயும், உணர்ச்சியற்றவளாயும், அஃறிணைப் பொருளாகவும் நடமாடிய பெண்ணுக்குள் ஞானத்தைக் கண்டவர் பாரதி. 

                    "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்- புவி
                       பேணி வளர்த்திடும் ஈசன்
                      மண்ணுக்குள்ளே சில மூடர்
                      நல்ல மாதரறிவைக் கெடுத்தார்"

                                 என பெண்ணிய சிந்தனையை மேலும் நிலைநாட்டினார்.

பெண் என்பவள் வெறும் ஒருத்தியல்ல. அவள் ஒரு அர்த்தநாரி. ஆணில் பெண் சரிபாதி. முழுமுதற் கடவுளான ஈசனே பார்வதிக்கு தன்னில் சரிபாதியைக் கொடுத்த பின் ஆடவர் மட்டும் ஏன் பெண்ணவளை பின்னுக்குத்தள்ள முனைகின்றனர். பெண்ணின் பெருமைகளை அறியாத மூடர்களாய் அவளை அடக்கி ஆழ்வதையே தொழிலாய் கொண்டனரோ…? 

                            "சிவன் நீ  சக்தி உன் மனைவி,
                             விஷ்ணு நீ  லக்ஸ்மி உன் மனைவி,
                             பிரம்மா நீ சரஸ்வதி உன் மனைவி" 

                                                        என்ற வரிகள் ஊடாக இவை புலப்படுகிறது.

                             "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
                               மாதவம் செய்திட வேண்டுமம்மா"

                                    என கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களும் உரைத்துள்ளார். 

                    "தற்காதத்;து கொண்டான் பேணித் தகை சான்ற
                              சொற்காத்து சோர்விலாள் பெண்"

                                 என வள்ளுவனும் தனது 56வது குறளில் மொழிந்துள்ளார். ஒரு வண்டியின்இரு சக்கரங்களும் சுழல்கின்ற பட்சத்தில் தான் அது முறையான பாதையில் பயணிக்கும். வெறுமனே ஒரு சக்கரம் மட்டும் பயணிப்பதென்றால் அது இயலாது போகும். அவ்வாறு இருக்கயில் பெண்ணைத் தனித்து விட்டுவிட்டு ஆண் மட்டும் எவ்வாறு வாழ்வினில் பயணிக்க முடியும். பெண்ணவளின் உள்ளத்தை சற்றுப் பரிந்து பார்க்க முயன்றால் அவளின் அவாவையும் சுதந்திர வேட்கையினையும் தெரிந்துகொள்ளல் எளிதாகும்.

பெண்ணவள் தனக்கென கல்வியை பெற்றுக் கொள்ள வேண்டும். துணை அவள் கொண்ட கல்வி. கல்வி எங்கு இருக்கிறதோ அங்கு இருக்கிறது பலம். கல்வி என்பது ஒளி, பிரகாசம் அதை கைப்பற்றுவோர் ஒளியில் திளைப்பர். கல்வியின் முழுமையான நோக்கம் மனதை வளப்படுத்துவதாய் இருகக் வேண்டும். உள்ளத்தை உயர்த்தும் கல்வி ஏழை, செல்வந்தன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற என்ற எந்தவொரு வேறுபாடும் காட்டாது கற்பிக்கப்பட வேண்டும். எல்லோரும் கல்வி கொண்ட மாந்தரானால் ஒளி வீசும் எதிர்காலம் இன்றே நம் கண்களில் அலைமோதும். அத்தகய கல்வி இருபாலருக்கும் பொதுவானது. 

ஆடவருககு மட்டும் தான் கல்வி வேண்டும் அவர்கள் மட்டும் தான் உயர வேண்டும் என்று யார் கூறியது. ஏன் மடமை கொண்டு படுகுழியில் நீங்கள் உங்கள் அறிவற்ற தன்மையினால் வீழ்ந்துகொள்கின்றீர்கள்.

                   "ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால்
                   அறிவிலோங்கி இவ் வையகம் தழைக்குமாம்"

                                 என்று பாரதி பெண்ணின் சமத்துவம் பற்றி கூறியதோடு மட்டும் நின்றுவிடாமல் 
'பெண்களுக்குக் கல்வி' என்ற கருத்தையும் முன்வைக்க தவறவில்லை. "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்……….."
என்று பாரதி பாடியமை இதைப்புலப்படுத்துகிறது.

மேலும் பாரதி

                 "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென
                   எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்.
                  வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
                   விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்"

                                 என பெண்களின் கல்வி தொடர்பாக அக்கறைக்குரல் கொடுத்துள்ளார். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் நிறைந்த புலமையடைய வேண்டும். ஒரு ஆண் படித்தால் அது அவன் குடும்பத்திற்கு மட்டுமே பயனுடையதாகின்றது. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது அந்த முழுச்சமுதாயத்திற்குமே பயன் தரும் என்பதை யாவரும் உணரவேண்டும்.

இன்று பெண்கள் இல்லாத அவர்கள் நுழையாத துறையே இல்லை எனலாம். சமயற்கலை, தையற்கலை, நடனக்கலை, வரைகலை, ஆசிரியத்துறை, வைத்தியத்துறை, விண்வெளித்துறை என எந்தத்துறையில் பெண்ணவளின் பங்களிப்பு இல்லை. இத்தனைக்கும் அவள் ஒரு ஜீவனாக இருந்து தன் வேட்கையினால் கல்வியினால் பல்வேறு துறைகளிலும் சாதித்துக் கொண்டு இருக்கின்றாள். இது தெரியாமல் பெண்களுக்கு கல்வி தேவையில்லை. அவளுக்கு சோறு ஆக்கி போடவும், பிள்ளை பெறவும் தெரிந்திருந்தால் போதும் என நினைப்பது கற்ற இளைஞர்களின் பேதமை கொhண்ட பேதை மனது என்று தான் கூற வேண்டும். 

உலகில் பல்வேறு துறைகளிலும் அபாரமாக முன்னேறி வரும் இந்த காலகட்டத்திலும் கூட எங்கோ ஒரு மூலையில் பருவமெய்திய பெண்களை பாடசாலைக்கு அனுப்பாது விடும் மடமை கொண்ட செயன்முறை நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றது என்றால், இதுவரை நாம் பெற்ற வெற்றிகளோ மேற்கொண்ட கண்டுபிடிப்புக்களோ பயனற்றதாகி விடுகின்றது.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம். 

                 "எட்டுமறிவனில் ஆணுக்கிங்கே பெண்
                இளைப்பில்லை கானொன்னு கும்மியடி"

                                 என்று தன்பாடல் மூலம் பாரதி பெண்களை எழுச்சி பெற செய்தார். சாதம் மட்டுமன்றி சரித்திரமும் படைக்க முடியும் பெண்களால் எனவும், சட்டங்கள் செய்யவும் முடியும் என்று உலகெங்கிலும் உள்ள பெண்களின் மனதில் மறைந்து இருந்த அவாவை தன் பாட்டின் மூலம் வெளிக் கொண்டந்தார். இவ்வண்ணமே 

                        "கற்பது பெண்களுக்கு ஆபரணம்
                       கொம்புக் கல்வைத்த நகை தீராதரணம்"

                                                                                             என பாரதிதாசனும்,

                           "கற்கை நன்றே கற்கை நன்றே
                           பிச்சை புகினும் கற்கை நன்றே"

                                                                                                 என நறுந்தொகை இலக்கியமும் பகிர்கின்றது. பெண்கள் இரவு பகல் பாராது கமுயற்சித்து பெண்கள் தமக்குள் இயற்கை அறிவை மிகவும் உன்னத நிலைக்கு கொணர்ந்து விடுதல் எளிது. பெண்களின் பங்கு இல்லாவிட்டால் கல்வி முழுமையடையாது. 

                      "பெண்களின் அறிவை வளர்த்ததால்
                      வையகம் பேதமை அற்றிடும் காணீர்"

                                                                                               என பெண்களுக்கான கல்வி வலியுறுத்தப்படும் போது பெண்கள் தமக்கான கல்வியை பெறுவதில் ஆர்வமாய் இருக்க வேண்டும். கல்வி கொண்டு பெண்கள் பாரினை ஆழ்ந்திட வேண்டும். ஆணுக்கு என்றும் சளைத்தவள் அல்ல பெண் என்பதனை கல்வியின் மூலமாய் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இன்றய நிலையில் பெண்கள் வேலைகளுக்கு சென்று தங்களின் நிலையினை முன்னய நிலையில் இருந்து எவ்;வளவோ முன்னோக்கி கொண்டு வந்துவிட்டனர். அந்த வகைளில் தொழில் புரியும் ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாக நடமாடுன்றாளா என்றால் பெருமளவில் இல்லை என்ற பதில்தான் எமக்கு எட்டுகின்றது. காரணம் என்னவெனில் வேலைபுரியும் தளங்களில் ஏற்படும் நெருக்கடி, தொந்தரவு, துஸ்பிரயோகம் தான். பெண்ணானவள் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்ட நிலைக்குள் இருந்து வெளியே வந்தும் இப்போது துஸ்பிரயோகங்களால் உருக்குலைந்து கொண்டு இருக்கின்றாள். பெண்ணை ஒரு உயிருள்ள ஜீவனாக பாக்காது அவளை ஒரு அன்னியப் பொருளாக, காமம் தீர்க்கும் அழகு பெட்டகமாகவுமே பார்க்கின்றனர். வீட்டுச் சூழ்நிலை காரணமாக தொழில் புரியும் எத்தனையோ பெண்கள் பல காம வெறியர்களின் நச்சரிப்புக்கு இடையே தன்; வறுமையை கருத்திற் கொண்டு சகிப்புத்தன்மையோடு வேலை பார்க்கிறாள். 

அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த 35ஆண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவிற்கு ஆளுமைத்திறன் படைத்தவர்களாக வளர்ந்திருக்கின்றனர் ஆனால் பெண்களை மட்டும் தட்ட நினைக்கும் ஆண்கள் பாலியல் ரீதியாக அவர்களை துன்பறுத்துகின்றனர். எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை உணர்ந்துள்ள ஆண்கள் அவர்களின் பெண்மையை குறிவைத்து தாக்குகின்றனர். இது போன்ற சவால்களையும் சந்தித்து வரும் பெண்கள் படிப்போ வேலையோஎல்லாவற்றிலும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றனர்.

தற்சமயம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் 1911ஆம் ஆண்டு மாரச் 19ஆம் திததி ஆகும். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் ஆண்களுக்குச்சமனான சுதந்திரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். இடைவிடாத பல்வேறு போராட்டங்களுக்கு பின் 1921ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஜ.நா பிரகடனடப்படுத்தியது.                                                                                                                                                                                           
பெண்கள் இன்றைக்கு மருத்துவராக, பொருளியல் வல்லுனராக, ஆசிரியராக, விமானமோட்டுபவராகவும் பணிபுரிந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் சி.இ.ஒ பதவியைக் கூட பெண்கள் தான் வகிக்கின்றனர். அவர்களின் ஆளமைத்திறன் அதிகம்.இலங்கையில் ஸ்ரீமாவே பண்டாரநாயக்கா, சுசந்திக்க ஜெயசிங்க, இந்தியாவில் ருக்மணி லட்சுமி பாய், இந்திராகாந்தி, ஜெயலலிதா, சோனியாகாந்தி உள்ளிட்ட பெண் தலைவர்களின் ஆளுமைத்திறன் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளது.அமைதியாகப் பிறந்து, வாழ்க்கை முழுவதையும் குழந்தைகளின் கல்வி, உலக அமைதி, பெண்ணுரிமைப் போராட்டங்களுக்காக தன்னை அர்ப்பணித்தவராக மரியா மொண்டிசோரி திகழ்கிறார். இவர் 'கல்வித்தாய்' என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க பெண்ணுரிமைப் போராளியாக சூசன் பி.அந்தோனி விளங்கினார். Women’s Temperance Movement  என்ற இயக்கத்தையும் பெண்களுக்கான பத்திரிகையையும் ஆரம்பித்தவர்களுள் ஒருவர். அமெரிக்க ஜக்கிய நாடுகளிலும் ஜரோப்பாவிலும் சுற்றுப்பயணம் செய்து, பெண்ணுரிமையை வலியுறுத்திப் பேசியவர். ஆண்டுக்கு சுமார் 100மேடைகளில் முழங்கியுள்ளார். 

உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு பற்றி யாவருக்கும் தெரியும். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம்;;, பொருளாதாரம் போன்ற சேவைகளுக்காக மேரி கியூரி, ஜரின் ஜோலியட் கியூரி, லிண்டா பெக், நெலி சாக்ஸ், வங்காரி மாதாய், அன்னை தெரேசா போன்ற இன்னும் பலர் நோபல் பரிசுகளை வென்ற பெண் சாதனையாளர்கள் என்று எண்ணிப்பார்க்கும் போது பெண்களின் பெருமை உலகை எட்டுகிறது.  

பெண்கள் தமது ஆளுமைத் திறனைக் கொண்டு முன்னேறி வந்தும்கூட இன்னும் அவள் எத்தனையோ பல கஷ்டங்களையும் சகிக்க வேண்டித்தான் ஆகியுள்ளது. காரணம் அவர்கள் வேலைத்தளங்களில் எத்தனையோ பாலியல் அவஸ்தைகளையும் சகித்துக்கொண்டால் தான் பணிபுரிய முடியும் என்பது வகுக்கப்படாத சட்டமாக மாறிவிட்டது. ஓர் ஆண் தன் பணியில் முன்னேறிச் சென்றால்,அவனது திறமை காரணம் என்று சொல்லிப் புகழும் உலகம், அதுவே ஒரு பெண் சாதித்தால் 'வேறுவழியில் சாதித்தாள்' என சிறிதும் ஈரமில்லாது புறம் பேசும். இதை எண்ணிப்பார்க்கும் போது பேண்ணவளின் சுதந்திரம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது….? என மனம் பதைபதைக்கிறது.

 சாலையில் கடந்து போகும் பெண்களை எல்லாம் இரசித்துவிட்டு செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர் தான். அவளை நெருங்கி மன ஆளத்தை பார்க்கும்போது அவளை ரசிக்க முடியாது, மாறாக அதிர்ந்துபோகத் தான் முடியும். ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை எத்தனை என்பது அவளுக்கு மட்டும் தான் புரியும். நாம் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப்பாலுக்கு தப்பியவளாகவோ, ஒருகண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்புமாக வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி விவாகரத்து கோரியவளாகவோ, குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராக காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து துயரத்தை சுமந்து வாழ்பவளாகவோ……. இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பறுந்த நிலையில் புகுந்த வீட்டில் மெஷின்களாக இயங்கவேண்டிய சூழ்நிலை அன்று மட்டும் இருக்கவில்லை, நவீனயுகம் என்று சொல்லும் தற்காலத்திலும் கூட நடந்தேறுகிறது தானே என்று எண்ணிப்பார்க்கும் போது இன்று பாரதியின் புதுமைப்பெண் எங்கே போய்விட்டாள்….? ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டுக்கொடுமைளை நிகழ்த்தும் வக்கிரபுத்தி உள்ளவர்களின் கெடூரங்களில் இருந்து பெண்ணியத்தை காப்பாற்ற என்ன வழி….? 

சமுதாயத்தில் சம அந்தஸ்த்து எனக் கருதப்படக்கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லை, அநீதி, அராஜகங்களில் இருந்து விடுபட என்ன தீர்வு உள்ளது….? 

இந்ந கேள்விகளுக்கெல்லாம் பதிலைத்தேடாமல் வெறுமனே கோசங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக்கொள்வதில் என்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்று தான் சொல்ல வேண்டும்;. பாரதியின் வீரப்பெண்மணி எப்போது நம் கண்முன்னே வீரநடை போடுவாள்.

                      "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
                          நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
                            திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                           செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"

                                                                                        என்ற பாரதியின் கூற்றுப்படி பெண்கள் எதற்கும் அஞ்சாது நெஞ்சினில் துணிவினையும், பார்வையில் தெளிவினையும் நிலைநிறுத்த வேண்டும். அடக்கியாள எண்ணும் அகோரிகளை இரு கண்களின் பார்வை கொண்டே பொடிப்பொடியாக ஆக்கவேண்டும். பெண்களை இழிவாக நினைப்பவர்க்கும், கைப்பொம்மைகள் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் அவளின் சக்தி எத்தகையது என்பதை காட்ட வேண்டும். பத்துத்திங்கள் தன் கருவினில் பத்திரமாய் நமை தாங்கிச்சுமந்தவளும் ஒரு பெண் தான். தன் வலியை மறைத்து கருவை சுமையாக எண்ணிடாது பூப்போல கருவை சுமந்தவளும் அவள் தான். அவளுக்கா சக்தி இல்லை என்கிறீர்கள். பெண் என்பவள் மென்மையானவள் தான். ஆனால் அந்த பூவுக்குள்ளும் பூகம்பம் வருமென்பதை மறந்துவிட வேண்டாம். அழகாய், சாந்தமாய் மனதைக் கவரும் கடலும் ஒரு பெண் தான். அதே கடல் தான் கோரம் கொண்டு சுனாமியாய உயிர்களை வேட்டையாடியது. இப்போது எண்ணிப்பார்க்க அதிசயமாகத்தான் இருக்கும் அதே கடல் தானா இது என்று. 

நவீனம் நோக்கி உலகம் உருண்டுகொண்டு இருக்கும் தறுவாயில் இனியாவது சற்றே பழமையை விட்டுத்தள்ளி, புத்திஜீவிகளாக நடக்க முனைவோம். சமுகத்தில் பெண்களையும் உயிருள்ள ஜீவனாய் பாவித்து அவளுக்கான சுதந்நதிரத்தையும், உரிமைகளையும் மறுத்திடாது நல்கிட வேண்டும். பெண்ணானவள் வீறுகொண்டு எழுந்தால் யாராலும் யாராலும் தாங்கிட முடியாது என்பதற்கு கண்ணகி ஓர் எடுத்துக்காட்டாகும்.

எனவே பெண்கள் நம் கண்கள். மாதர் குலத்தின் சுடர் தீபங்கள் என்பதை என்றும் எம் மனதினிற் கொண்டு பழைய பேதமைகளில் இருந்து விடுபட்டு வையகம் போற்றும் பெண்மையை நாமும் போற்றுவோமாக.

                                             வாழ்க பெண்ணினம்
                                              வளர்க சமுதாயம்.

                                                                              முற்றும்.
உசாத்துணை நூல்கள்.

1.    பாரதியார் பாடல்கள்.
2.    நாளிதழ்கள்.
3.    பாட புத்தகங்கள் .
4.    சில இணையதளங்கள்.

kadduraipoddi 02 201400012014 dezebernewsaathi 403 (Copy) 2014 dezebernewsaathi 406 (Copy) 2014 dezebernewsaathi 408 (Copy) 2014 dezebernewsaathi 409 (Copy) 2014 dezebernewsaathi 411 (Copy) 2014 dezebernewsaathi 414 (Copy)

நாவலருக்கு அடுத்து வைத்து போற்றப்பட்ட காரைநகர் ஆசான் அருணாசல உபாத்தியார் (31.10.1864 – 17.1.1920)

Saiva

நாவலரின் செயற்பாடுகளால் பெரிதும் கவரப் பெற்றவர் காரைநகர் தந்த செயல் வீரன் ச.அருணாசல உபாத்தியாயர் ஆவார்.  சைவப் பெற்றோரின் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற அருணாசல உபாத்தியாயரின் எண்ண மேலீட்டினால் உருவானதே காரைநகரில் சைவப் பாடசாலைகள் அமைக்கும் செயல்.

மகான் அருணாசல உபாத்தியார் சைவப்பாடசாலைகள் அமைக்கும் தமது திட்டத்தை எமது ஊரில் வாழ்ந்த சைவப் பெருமக்களை அணுகிக் கருத்தேற்றம் செய்து அவர்களின் ஆதரவுடன் காரைநகரில் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை(கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்), வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலை ஆகியனவற்றைத் தோற்றுவித்தார். 

காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான மகான் சிவத்திரு.ச.அருணாசல உபாத்தியாயர் அவர்கள் காரைநகரின் சைவக் கல்விப்பாரம்பரியத்தின் முன்னோடி ஆவார். 

'காரைநகர் மடந்தை தவம் வாய்த்ததென வந்தானோர் கரும வீரன் ' என்று அருணாசல உபாத்தியாயர் பற்றி புலவர்மணி சோ. இளமுருகனார் எழுதிய ஈழத்துச் சிதம்பர புராணம் கூறுகின்றது. அதில் வரும் இன்னொரு பாடல்(134) பின்வருமாறு.

                        சைவர்களி னாதரவும் பெருநிதியு
                            மரசினர்தஞ் சார்புங் கொண்டு
                      மைவளருங் கண்டத்தான் சமயநெறி
                           வளர்ந்தோங்க மாசில் பள்ளி
                   மெய்வகையிற் பன்னூறு நிறுவினனால்
                            நாடெங்கு மெய்ம்மை யுள்ளச்
                     சைவனரு ணாசலற்குச் சிலையாகித்
                           தமிழ்போலத் தழைத்து வாழி.

பொருள்: சைவத் தொண்டர்களின்  உதவியும், அவர்கள் கொடுத்த பெரிய செல்வமும், அரசினரின் உதவியும் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, நீல மைபோலும் நஞ்சு பரந்த கழுத்தை உடைய சிவபெருமானது  சைவசமய ஒழுக்கம் மிகவும் வளர்ச்சி அடைய, குற்றமில்லாத பாடசாலைகள் பல நூற்றை, உண்மையான  முறைமையோடு கட்டுவித்தான்.  உண்மை உள்ளத்தை உடைய சைவனாகிய அருணாசலத்தாருக்கு, அப்பாடசாலைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்ட நினைவுச் சிலைகளாக விளங்கி, என்றும் அழியாத தமிழ்மொழி போலத் தழைத்து வாழ்வனவாக.

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் 95 ஆவது நினைவு நாள் கடந்த மாதம் 17 ஆம் திகதியாகும். 

அத்தினத்தை முன்னிட்டு செயற்கரிய செயல் செய்த எமது ஊரைச் சேர்ந்த கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றி காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்டவரும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பிரதி அதிபரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதலாவது தலைவருமாகிய அமரர்.சி.தம்பிராசா ஆசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே எடுத்து வருகின்றோம். 

       நாவலருக்கு அடுத்து வைத்து போற்றப்பட்ட காரைநகர் ஆசான் அருணாசல உபாத்தியார்
                                                                                        சி.தம்பிராசா
                                                                              ஓய்வுநிலை பிரதி அதிபர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியிலம் சமய, சமூக விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இப்பின்னணியில் வாழ்ந்த, பெருமகன் நாவலரின் ஆளுமைத்திறனால் கவரப்பட்ட பலரும் அவர் வழியில் நின்று பணியாற்றினார். 

இக்காலப்பகுதியில் காரைநகர் மக்கள் சிலர் அமெரிக்க மிசனரிமாரால் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலே ஆங்கிலம் கற்று கிறிஸ்தவர்கள் ஆயினர். காரைநகர் அருணாசல ஆசிரியர், ஆறுமுகநாவலரின் அண்ணர் மகன் திரு தம்பு கைலாசபிள்ளையைச் சந்திப்பதற்கு வட்டுக்கோட்டை வழியாக நடந்து செல்லும் பொழுது அது போன்று ஒரு ஆங்கிலக் கல்லூரி காரைநகரில் உருவாக வேண்டுமென்று எண்ணுவார். அந்த எண்ணக்கருதான் திரு முத்து சயம்பு பெரியாரின் ஆங்கில வித்தியாசாலையின் தோற்றத்திற்கு உறுதுணையாக அமைந்தது. 

இதே காலப்பகுதியில், அருணாசல ஆசிரியர், வியாவில் சைவபரிபாலன விததியாசாலை தோற்;றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தார். மேற்படி இரு பாடசாலைகளிலும் வேதனம் இன்றி ஆசிரியராகக் கடமையாற்றினார். திரு சயம்பு சட்டம்பியாரின் விடாமுயற்சியாலும், ஊக்கத்தினாலும், திருஞானசம்பந்த நாயனார் வித்தியாசாலையும், திரு கா. வேதக்குட்டி ஐயரின் சகாயத்தினால் வியாவில் சைவபரிபாலன பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்து கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற பேராசை அருணாசல ஆசிரியரை, ஆசிரியத் தொழிலில் நிரந்தரமாக விட்டு வைக்கவில்லை. 

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சென்று சைவ அபிமானிகளையும், செல்வந்தர்களையும் கண்டு தனது எண்ணத்தை விளக்குவார். தம் எண்ணம் நிறைவேறாவிடின் திரும்பத் திரும்பச் சென்று அவர்களை தம் எண்ணத்திற்கு இசைய வைப்பார். திரு அருணாசல ஆசிரியரின் விடாமுயற்சியால் மட்டுவில் கமலாசினி வித்தியாசாலை, கரணவாய் மாணிக்க வித்தியாசாலை, வல்வை சிவகுரு வித்தியாசாலை, அனலைதீவு சதாசிவ வித்தியாசாலை என்பன ஆரம்பிக்கப்பட்டன. 

அருணாசலம் அவர்களின் தூண்டுதலாலும், விடாமுயற்சியாலும் புதிது புதிதாக யாழ்ப்பாணத்து கிராமங்களில் தோன்றிய சைவப்பாடசாலைகளின் வேகத்திற்கு ஈடாக போதிய சைவ ஆசிரியர் உருவாகவில்லை. இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு சைவ ஆசிரிய கலாசாலை உருவாக்க வேண்டிய எண்ணம் தோன்றியது. 

உண்டி கொடுத்து உறையுள் கொடுத்து கல்வி கற்பித்த இரு பெரியார்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் நாவலரின் தமையனார் தம்புவின் மகன் கைலாசபிள்ளை அவர்கள், மற்றையவர் அருணாசல உபாத்தியாயர், கைலாசபிள்ளைக்கு பூர்வீக சொத்தும் உத்தியோகமும் இருந்தது. அருணாசல ஆசிரியர் தெல்லிப்பளை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராக பயிற்சி பெற்றவர் மதம் மாற மறுத்ததன் காரணமாக பயிற்சிக் காலத்தை பூரணமாக முடிக்கவில்லை. இவரின் பூர்விக சொத்தும் கொஞ்சம் அவற்றை விற்றாவது சைவ ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். என்று யாழ்ப்பாணமும், கொழும்பும் அலைந்தவர். விடியமுன்னரே திரு கைலாசபிள்ளையின் வாசலில் அவர் கதவு திறக்கும் வரை குந்தியிருப்பார். இவரின் சமயத் தொண்டும், தமிழ் தொண்டும் பேருக்கும் புகழுக்கும் அல்ல சமய வாழ்க்கையே இவரின் சிந்தனை, நினைவு எண்ணமெல்லாம்.
 
தனது சொந்தக் கிராமத்தில்(காரைநகரில்) ஆரம்பித்த சைவ ஆசிரிய கலாசாலை வித்தியா பகுதியின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. சோதனை மேல் சோதனை வந்த போதும் தனது விடாமுயற்சியால், தனது எண்ணத்தைக் கைவிடாது வண்ணர்பண்ணை நாவலர் வித்தியாசாலையின் ஒரு பகுதியில் அதனை நடத்தி வந்தார். 
    
இக்காலப்பகுதியில் சட்ட சபை உறுப்பினர்களான் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி ஆகியோரின் உதவியுடன் வாதாடி 1916 இல் கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலையைப் பெற்றுக் கொண்டனர். 
    
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக சைவர்களும் ஏனைய கிறிஸ்தவர்களும் கற்கும் போதனா பாடசாலையை உருவாக்கிய பெருமை, காரைநகர் சைவ ஆசான், தமிழ்த்தொண்டன் பெருமகன் அருணாசல ஆசிரியரையே சாரும்.
    
சைவஆசிரியர்கள் உருவாவதும், கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் உதயமாவதும் கத்தோலிக்க பாதிரியாருக்கு புதிய தலையிடியைக் கொடுக்க 1920இல் அரசாங்கம் ஒரு புதிய பாடசாலை, மற்றொரு பாடசாலைக்கு அரை மைல் தூரத்துக்குள் தொடங்கக் கூடாது என்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. இதனால் புதிதாகத் தோன்றும் சைவப் பாடசாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட, ஒழுங்கான வேதனத்தை பெறதா சைவ ஆசிரியர்கள் பாதிரிமாரை சரண்அடையும் நிலை எற்பட்டது. இந்த நேரத்தில்த்தான் சைவப்பாடசாலைகளுக்கு உயிர் கொடுத்தவர் சட்ட மேதையான 'இந்து போட்' இராசரத்தினம் அவர்கள் ஆவர். 1920இல் அருணாசல ஆசிரியர் மறைவுக்குப் பின்னர் இந்துப் பாடசாலைகள் பலவற்றைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் திரு.சு.இராசரத்தினம் அவர்கள். 

அருணாசல ஆசிரியரின் எண்ணக் கருவில் உருவான ஆங்கில பாடசாலை, 1888 ஆண்டு ஆவணித் திங்களில் மகன் திரு முத்து சயம்பு அவர்களால் கிடுகுக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட காரைநகர் இந்து ஆங்கில பாடசாலை ஆகும். சயம்பு ஆசிரியரின் தனது உடல், பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணம் செய்து கண்ணும், கருத்துமாக வளர்;த்த பாடசாலை காலக்கிரமத்தில் திருஞானசம்பந்த நாயனார் ஆங்கில பாடசாலை எனப்பெயர் பெற்று 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக உயர்வு பெற்றது. 

அதிபர் திரு.A.கனகசபை அவர்களின் பத்தாண்டு காலத்தில் ஆங்கில புலமைமிக்கவர்களாலும் ஏனைய சேவை உணர்வு மிக்க ஆசிரியர்களாலும் சிரேஸ்ட பாடசாலையாகி, காரைநகர் இந்துக்கல்லூரியாக உயர்வு பெற்றது. 

இவ்வாறு கல்லூரி உயர்வதற்கம் யாழ்ப்பாணத்தில் சைவக் கல்விப் பாரம்பரியம் தழைத்தோங்குவதற்கும் வழிவகுத்த அருணாசல உபாத்தியாரை நாம் என்றென்றும் நினைவு கூர்வோமாக.  

நன்றி: 
சயம்பு மலர்
2005

 

 

மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.

Nadesar

மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. 

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாக்ரபாதர் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம். தில்லை வந்து நெஞ்சுருகப் பாடி திருவாசகத்தேனைப் பொழிந்த மாணிக்க வாசகர் நடராஜரிடமே ஜ்யோதிப் பொருளாய் மறைந்த தினமும் திருவாதிரை திருநாளே. 

இந்த நாளில்; ஸ்ரீ நடராஜரைத் தரிசித்க வழிபட்டு வர நம் இன்னல்கள் யாவும் அகன்று வாழ்க்கை இனிமையாகும். 

மாணிக்க வாசகர் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்யச் சென்றார். திருவெம்பாவை என்ற 20 பாட்டுக்கள் உதிர்ந்தன. இதனை விடியற்காலையில் நேம நியமங்களுடன் ஓதுவது பாடிக்களிப்புறுவது வழக்கம். 

நாமெல்லாம் சீவன். சிவனே பரமாத்மா. சீவனுக்கு ஆதாரம் சிவன். நாம் பசு. நமக்கெல்லாம் பதி சிவன். 

விடியற்காலையில் துயில் நீக்கி நன்னீராட்டி தூயமனத்துடன் மற்றவர்களை தூங்காதே எழுந்திரு என அறை கூவி எழுப்பி ஆண்டவனது புகழ்பாட அழைத்துக் கூடிப் பாடி நெகிழும் நெறி தான் திருவெம்பாவை. 

திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது என்றாலும் சிவனடியார்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அதே போல் கனடாவிலும் கோயில் என்றவுடன் எமக்கெல்லாம் பெரியகோயில் என்று அழைக்கப்படும் றிச்மண்ட்கில் தான் நினைவுக்கு வருகிறது. சிதம்பரத்தில் மணிவாசகப்பெருந்தகை கண்ட நடனத்தை அந்தத் தாண்டவத்தை பாதத்தை தனது 14வது திருவெம்பாவையில் பாடி மகிழ்கிறார்.   

காதர் குழையாட பைம்பூன் கனலாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப்புனலாட சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றை தார்பாடி 
ஆதிதிறம் பாடி அந்தமாமாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்.

கடைசி 20வது திருவெம்பாவையில் திரும்பத் திரும்ப ஆண்டவனது பாதமலர் செந்தளிர் பொற்பாதம் பூங்கழல் இணைஅடி பொன்மலர் புண்டரீகம் என்று பாதங்களில் மார்கழி நீராடிப் போற்றுகிறார். 

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்.
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்.

ஓவ்வொரு அடியிலும் ஆண்டவனது அடிகளைப் பணிந்து போற்றி சரணாகதி தத்துவத்தை அறிந்து புரிந்து உணர்ந்து அருளுக அருளுக என விழைகிறார் திருமாணிக்கவாசகர். அவருக்காகவா பாடினார். சிவனார் திருவண்ணாமலையில் அவரிடம் உந்தி உட்கொண்டு நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்று தானே பாவை பாடினார். 

பதஞ்சலியும் வியாக்ரபாதரும் மட்டுமா ஆனந்தத் தாண்டவம் பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டுமா ஆடினான். குகை நமசிவாயருக்கும் அல்லவா ஆடினான். 

'அம்பலவா! இன்னொருக்கால் ஆடினால் ஆகாதோ?
உம்பரெல்லாம் கண்டது உனக்கு ஒப்பாமோ? சம்புவே!
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஏற்றுப் பதஞ்சலிக்குமே…..'

அந்த ஆடல் வல்ல அம்பலவாணணின் ஆனந்த தாண்டவத்தை நாமும் இன்று பார்த்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி களிப்புடன்  தரிசித்து 'களி' உண்டு ஆனந்தப் பரவசம் எய்தி!

ஆருத்ரா தரிசனத்தைப் போல்…..!!! அந்த அற்புதத்தை ஆனந்தத்தை அதிசயத்தை அபிஸேகத்தை …. பால் அபிஸேகமோ….. தயிர் அபிஸேகமோ…. நெய் அபிஸேகமோ……. சந்தன அபிஸேகமோ….குங்கும அபிஸேகமோ…. பன்னீர் அபிஸேகமோ…….. தேன் அபிஸேகமோ……..பஞ்சாமிர்த அபிஸேகமோ……..குடம் குடமாக……..தாரை தாரையாக….வாழ்க்கையின் இனிப்பு வேர்வைத் துளிகளின் உப்பில் இருக்கிறது என்பது போல……….தீஸ்தருக்கு இந்த உஸ்ஸிக் குளிரிலும் வியர்;த்து…

ஏனெனில் சிவன் அபிஸேகப்பிரியர். உலகிலேயே நடராஜர் அபிஸேகம் போல் எங்கும் அபிஸேகங்கள் நடப்பதில்லை. 

சுக்ல யஜுர் வேதத்தில்
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூரணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும் பூர்ணம் அப்படியே இருக்கிறது' என்று சொல்லியிருப்பதைப்போல! 

ஆனந்த மயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் உள்ள நடராஜப் பெருமானிடம் இருந்து நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும் கூட அவரிடம் உள்ள ஆனந்தம் கடுகளவும் குறையப் போவதில்லை.

பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. 'எல்லாம் அவன் செயல்' என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம். 
இப்படியான பக்குவநிலை வாய்க்க இறைவனுக்கான வழிபாடுகளும் பணிவிடைகளும் உதவி செய்யும். 

அன்னையாய் குழந்தையாய் காதலனாய் தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும் அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம் செய்து கொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு சுகானுபவம்.  

இறைவனின் திருநடனத்தை நாவுக்கரசர் போற்றுவதைப் பாருங்கள். 

சுற்றிப்பறக்கும் சடைமுடி அதில் பதிந்து இருக்கும் சுட்டி
திலகம் தவழும் நெற்றி வில்லைப் போல வளைந்த புருவம்
எடுப்பான மூக்கு ஆனந்தம் தவழும் அமைதியான புன்னகை கூடிய திருமுகம் மடிப்புக்களுடன் கூடிய கழுத்து திரண்ட தோள்கள் எடுப்பான மார்பு வளைந்த இடுப்பு தூக்கிய திருவடி அகந்தையை அடக்கி அழுத்தும் மற்றொரு திருவடி தீமைகளைப் பொசுக்கும் தீ அஞ்சேல் என முழுங்கும் உடுக்கை எனக் காட்சி தரும் நடராஜப் பெருமானை திருவாதிரையன்று தரிசித்தோர் மனம் அமைதி பெறும்.

இந்த நடராஜரின் திருநடனத்தை காண வாருங்கள் என ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அழைக்கிறார்……….

கூற்றிருக்கும் மடலாழிக் குரிசின் முதலோர்
இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்……………

நாம் இருக்கும் இடத்தில் கனடாவில் எம்மை எல்லாம் ஆட்டுவிப்பவன் ஆடினான்……….நாம் அவன் பெயர் சொல்லி புகழ் சொல்லி மலர் தூவி…………
காரை கனடா வாழ் மக்கள் நாம் அவனை அபிஸேகித்தோம் மலர்களால் அழகு படுத்தினோம் பண் இசையால் பரவசப்படுத்தினோhம் நாதஸ்வரம் மேளம் என இறைவா! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! காரை மக்களுக்கு இது நீ இட்ட கட்டளை! எல்லோர் செவிகளிலும் இது ஏன் கேட்கவில்லை? பிறவிப் பிணியா! அப்படி என்றால் நீ பெரு மருந்தல்லவா! இது தெரியாமலா? இந்த உண்மை புரியாமலா?  இந்த மாயை விலகட்டும்! மூடிய இருள் அகலட்டும்! கச்சி ஏகம்பனே! ஏகம்பனே! 2015ல் உன் சந்நிதியில் ஓர் தாய் பிள்ளையாய்! தொப்புள் கொடியாக! இறைவா! சிதம்பரேசா! சிற்றபேசா! நீ ஆட்டுவிக்கிறாய் நாம் ஆடுகின்றோம். அந்த ஆட்டத்தில் எம் அல்லல்கள் எல்லாம் ஓடட்டும். ஓர்; ஊராய் ஒற்றுமையாய் உன்னைத் தாலாட்ட வரம் தா! வரம் தா! வரம் தா! வேண்டாம் எமக்கு வரட்டுக் கௌரவம்! நாதா ஈஸா தேவா ஸ்ரீ நடராஜப் பெருமானே!

Written By : Ranjson Kanapathippillai (Realtor)

மூன்று தசாப்தங்கள் கடந்து காரைநகரில் கலைப் பணியாற்றும் களபூமி முத்தமிழ் பேரவை

1கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அருள் பெற்று கல்வியோடு செல்வமும் நிறைந்து வளம் கொழிக்கும் களம் பல கண்ட பதி காரைநகரின் கிழக்குப் பகுதியான களபூமிப் பதியாகும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த களபூமிப் பகுதியில் சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தளராது கலைப்பணி செய்து வருகின்றது களபூமி முத்தமிழ் பேரவை என்றால் அது மிகையாகாது.  

சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானப் பட்டதாரியான அமரர்.ஆறுமுகம் நடராசா(மைசூர் நடராசா) அவர்கள் கலைகள் பிறந்த தமிழ்நாட்டில் கல்வி கற்றமையினாலோ என்னவோ கலைத்தாகம் கொண்டவராக இருந்தமை ஒன்றும் ஆச்சரியமில்லை. 

கொழும்பு இரஞ்சனா பதிப்பக உரிமையாளர் அமரர் ஆறுமுகம் நடராசா அவர்களுக்கு வித்துவான் F.X.C நடராசா அவர்களுடன் நட்பு ஏற்படவே அவரிடம் எமது ஊரான காரைநகர் பற்றிய ஒரு நூலை ஆக்க வேண்டும் என்ற தமது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'காரைநகர் மான்மியம்' என்ற நூலை வித்துவான் F.X.C நடராசா அவர்கள் எழுதினார். அந்நூலை அமரர்.ஆ.நடராசா அவர்களே தமது சொந்த செலவில் பதிப்பிட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இது அமரர்.ஆ.நடராசா அவர்களின் ஊர்ப்பற்றையும் சமூக உணர்வையும் புலப்படுத்துகின்றது. 

செல்வந்தராhன அவரின் பாரியார் திருமதி.இராசமலர் நடராசா அவர்களும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியோடு கலைகளையும் பயின்று சிறந்த மாணவியாக விளங்கியவர். 

கல்வியும், கலைத்தாகமும், சமூக உணர்வும் தாராள மனம் படைத்த தனவந்தருமாகிய திரு.திருமதி. நடராசா இராசமலர் தம்பதிகளினால் காரைநகரில் உள்ள இளம் தலைமுறையினருக்கு நுண்கலைகளைப் பயிற்றுவித்து ஊக்குவிப்பதற்காக 1978 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதே களபூமி முத்தமிழ் பேரவை ஆகும். இதுவே காரைநகரில் முதன் முதலாக நுண்கலைகளைப் போதித்து வந்த மன்றம் என்ற பெருமையுடன் விளங்குவதுடன் இன்றும் அதன் சேவையைத் தொடர்கின்றது.  

இளையவர்கள் இசை, நடனம் ஆகிய கலைகளைப் பயிலவும் அவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொண்டு வரவும் என அமைக்கப்பட்ட முத்தமிழ் பேரவையில் இத்தம்பதிகள் தமது உறவினர், அயலவர் பிள்ளைகளை இணைத்து இசை, நடன வகுப்புகளைத் தொடங்கினர்.  இணுவிலைச் சேர்ந்த பிரபல இசை ஆசிரியை  சங்கீத பூசணம் செல்வி.மதிவதனம் ஞானசம்பந்தர் இசை வகுப்புகளை நடத்தி வந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரிகளான நடனக்கலைமணி செல்வி.மீனா பரந்தில்ராஜா, நடனக்கலைமணி செல்வி.தமயந்தி பரந்தில்ராஜா ஆகியோர் பரதநாட்டியத்தையும் பயிற்றுவித்து வந்தனர்.

இவ்வாறு பயின்று வந்த சிறார்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும் அதனை எமது ஊரவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் திருமதி.ந.இராசமலர் அவாகளின் தந்தையார் பிரபல வர்த்தகர் திரு.ஏ.எஸ்.ஆறுமுகம் அவர்கள் வீட்டுமுன்றலிலும் பாலாவோடை அம்மன், திக்கரை முருகன் கோயில்களின் மண்டபங்களிலும்; பின்னர் பாடசாலை மேடைகளிலுமென முத்தமிழ் பேரவையில் பயின்று வந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அக்காலங்களில்(1980களில்) தொடர்ச்சியாக அரங்கேறி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வந்தன.

முத்தமிழ் பேரவையில் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், நடன வகுப்புகளில் மாணவர்கள் உற்சாகமாக இணைந்து கொண்டு பயின்று வந்தனர். இக்காலப் பகுதியில் இசை வகுப்புகளை சங்கீத வித்துவான் ஸ்ரீரங்கநாதன் அவர்களும் வயலின் வகுப்புகளை இசைக்கலைமணி செல்வி.ஜெகதாம்பிகை முருகையா அவர்களும் நடன வகுப்புகளை நடனக்கலைமணி சாராதா முருகையா அவர்களும் தொடர்ந்து நடனக்கலைமணி செல்வி.அன்னபூரணி முத்துக்குமாரு(திருமதி.அ.சத்தியமூர்த்தி) அவர்களும் பயிற்றுவித்து வந்தனர். 

மாணவர்கள் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளையும், மிருதங்க இசை நிகழ்ச்சிகளையும் சின்னஞ் சிறார்கள் காவடி, கோலாட்டம், கும்மி போன்ற கிராமிய நடனங்களையும், பரத நாட்டிய நடனங்களையும் பல அரங்குகளில் உற்சாகமாக வழங்கி வந்தனர்.

நுண்கலை வகுப்புகளை தமது சொந்த இடத்திலேயே நடத்தி வந்ததுடன் பயிற்றுவிக்கும் நுண்கலைத்துறை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை தமது சொந்தப் பணத்திலேயே திரு.நடராசா தம்பதியினர் வழங்கி வந்தனர். முத்தமிழ் பேரவையில் கலை பயில வரும் மாணவர்களுக்கு பொருளாhதரம் ஒரு தடையாக அமையவில்லை. ஏனெனில் மாணவர்கள் கலை வகுப்புகளுக்கான கட்டணங்களை தம்மாலியன்றவாறு வழங்குவதேயன்றி எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. அத்துடன் நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான நடன உடைகளை தையற்கலை பயின்றவரான திருமதி.ந.இராசமலர் அவர்கள் தாமே செலவுகளைப் பொருட்படுத்தாமல் தயாரித்து வழங்குவது வழமையாகும். 

முத்தமிழ் பேரவை தனது மற்றொரு பணியாக பாலர் பாடசாலை ஒன்றையும் நடாத்தி வந்தது. இப்பாலர் பாடசாலைக்குப் பொறுப்பாசிரியராக செல்வி.சாந்தினி சோமசுந்தரம் அவர்கள் பணியாற்றினார். 

இக்காலப்பகுதியில் காரைநகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வாரிவளவு நல்லியக்க சபையானது கல்வி, கலை, விளையாட்டு என பல்துறைகளிலும் காரைநகர் வாழ் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் வகையில் சேவையாற்றி வந்த சபையாகத் திகழ்ந்தமையை காரைநகர் வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். இச்சபையின் தொண்டராக அரும்பெரும் தொண்டாற்றி கலைஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், என அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர் 'பட்டுமாமா' என்று அன்பாக அழைக்கப்படும் அமரர்.பத்மநாதன் என்றால் மிகையாது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைநகர் வாரிவளவு நல்லியக்க சபை தனது பணிகளின் ஒர்; அங்கமாக வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து கலைப்பணி ஆற்றியமையை காரை மைந்தர் எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாது. 

அந்த வகையில் வாரிவளவு நல்லியக்கச் சபையினால் நடத்தப்பட்டு வந்த கலைவிழாக்களில் முத்தமிழ் பேரவை மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேறி பலரது பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்ளத் தவறுவதில்லை.  காரைநகரில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வரும் நிகழ்வுகளில் முத்தமிழ் பேரவை மாணவர்களின் நிகழ்வுகள் முதன்மை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காலப்போக்கில் முத்தமிழ் பேரவை நிர்வாகி அமரர்.நடராசா அவர்களின் மறைவானது மன்றத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது. இருந்தும் துணைவியார் திருமதி.இராசமலர் நடராசா அவர்கள் மன்றத்தை நடராசா முத்தமிழ் பேரவை எனும் பெயரில் நடாத்தி வந்தார். 

மாணவர்களின் நிகழ்வுகளை அரங்கேற்ற ஓர் அரங்கு தேவையென தமது சொந்தப்பணத்தில் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 'நடராசா மன்று' எனும் அரங்கு அமைத்து தந்தையார் அமரர்.ஏ.எஸ். ஆறுமுகம் அவர்கள் தலைமையில் பல அறிஞர்கள், கலைஞர்கள் முன்னிலையில் பேரவை மாணவர்களின் கலைநிகழ்வுகளை அரங்கேற்றி திறப்புவிழாவினை 02.06.1989 அன்று நடாத்தியிருந்தார். 

முத்தமிழ் பேரவையில் கலை பயிலும் மாணவர்கள் கோயில் திருவிழாக்களின்போது கலைநிகழ்வுகளை வழங்கிவருவது மக்களுக்கு கலைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் மக்கள் நல்ல அறநெறிக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. 

யாழ் பல்கலைக் கழகத்தின் இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் இராகசுரபி.பரமேஸ்வரி கணேசக்கம்பர் மற்றும் பிரித்தானியாவில் இசைஆசிரியையாகப் பணியாற்றும் இசைக்கலைமணி கமலாசோதி கோபாலபிள்ளை ஆகியோரும் களபூமி முத்தமிழ் பேரவையில் இசை பயின்று இன்று இசைத்துறையில் பிரபல்யம் மிக்க கலைஞர்களாக பிரகாசிக்கும் மாணவிகளாவர். 

காரைநகர் மக்கள் இடம்பெயர நேரிட்டபோது பேரவையின் பணிகள் தடைப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் மன்றத்தின் நிர்வாகி திருமதி.இராசமலர் நடராசா அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அகில இலங்கை கம்பன் கழகத்தாருடன் இணைந்து நான்கு ஆண்டு காலமாக தமிழ் இலக்கியப் பணிகளையும் கலைநிகழ்ச்சிகளையும் உற்சாகமாக ஒருங்கிணைத்து நடத்தி முத்தமிழுக்கான தனது சேவையைத் தொடர்நதார். 

அக்காலப்பகுதியில் உள்நாட்டு அரசியல் நிலை காரணமாக பொருளாதாரத் தடை ஏற்பட்டது. மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியிருந்த காலத்தில் (1992-1995) எரிபொருள் செலவின்றி செலுத்தக் கூடிய ஒரு முச்சக்கர மிதிவண்டியை தயாரித்து தானே செலுத்தியவாறு யாழ்நகரில் வலம் வந்து சமூக சேவைகளைச் செய்து தமீழீழப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான பெண்மணியாக காரைநகர் களபூமி திருமதி.ந.இராசமலர் அவர்கள் திகழ்ந்தார்.  

நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இயங்காமல் இருந்த காரைநகர் முத்தமிழ் பேரவை சுமூக நிலை தோன்றி காரைநகரில் மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்க (1996) ஓரிருவரின் ஆதரவுடன் தனது பணியைத் தொடர்ந்தது. பேரவையின் தலைவராக திருமதி.நடராசா இராசமலர் அவர்களும் செயலாளராக திருமதி.பரமேஸ்வரி பொன்னம்பலம் அவர்களும் பொருளாளராக பாலாவோடை தமிழ்கலவன் பாடசாலை அதிபர் திருமதி.சர்வாம்பிகை உலககுருநாதன் அவர்களும் பேரவையின் நிர்வாகசபையில் சேவையாற்றி வருகின்றனர். 

இசைக்கலைமணி திருமதி.அனிதா திருஞானசம்பந்தர் இசையைப் பயிற்றுவித்து வருகின்றார். பிரபல நடன ஆசிரியர் நடனக்கலைமணி திருமதி.பிரியதர்சினி வாகீசன் அவர்கள் பேரவையின் ஆலோசகராகவும் இருந்து வருகின்றனர். 

பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோயிலிலும், திக்கரை முருகன் கோயிலிலும் திருவிழாக் காலத்தில் கலைநிகழ்வுகளை வழங்கியும் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் பேரவையின் விழாவை நடத்தியும் சிறார்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வட-இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தி பேரவை தனது கலைப் பணிகளை தளராது தொடர்கின்றது. 

கலைப்பணியோடு நின்றுவிடாது சமூகப்பணியையும் முத்தமிழ் பேரவை நடத்தி வருகின்றது. எமது ஊரில் நீண்டகாலம் அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணியாற்றிய திரு.திருமதி. விநாசித்தம்பி தம்பதிகளின் சேவைநலன் பாராட்டு விழாவை பேரவை நடத்தியிருந்தது. 

இன்னல்கள் என்ன வந்தாலும் இன்றும் சொந்த மண்ணில் வாழ்ந்து சேவையாற்றிவரும் மருத்துவர் செல்வி.நகுலேஸ்வரி ஆறுமுகம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைக் கௌரவித்து அண்மையில் முத்தமிழ் பேரவை விழா எடுத்திருந்தது. 

நாட்டின் நற்குடிமக்களை ஒர் அரசு எவ்வாறு கௌரவித்துப் பாராட்டுகின்றதோ அவ்வாறே களபூமி முத்தமிழ் பேரவையும் எமது ஊரில் வாழ்ந்து சேவையாற்றும் சேவையாளார்களையும், கலைஞர்களையும் பாராட்டி மதிப்பளிக்கின்றது.

காரைநகர் களபூமிப் பகுதியில் இயங்கிவரும் பாடசாலைகளான சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம், பாலாவோடை தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியனவற்றில் மாணவர் எண்ணிக்கை குறையாமல் ஊர்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் தொடர்பான கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் சேவையாற்றுகின்றது முத்தமிழ் பேரவை என்பதனையும் குறிப்பிடவேண்டும்.  

பேரவையின் இன்னுமோர் சேவையாக இலவச ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரும் அவருக்கு வேதனம் வழங்க நிதியும் கிடைக்கப் பெற்றால் அச்சேவையைத் தொடங்கலாம் என்று சிறிதும் தயக்கமின்றித் தெரிவித்தார்; பேரவையின் தலைவர் திருமதி.ந.இராசமலர் அவர்கள். 

இவ்வாறு கலைப்பணியோடு, சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி என தனது பன்முகப் பணிகளையும் மிகுந்த சமூகப் பொறுப்புடனும் ஒர் அசாத்தியத் துணிச்சலுடனும் கடந்த 36 ஆண்டு காலமாக ஆற்றி வரும் களபூமி முத்தமிழ் பேரவையை வாழ்த்திப் பாராட்டாமல் இருக்கமுடியாது. 

எமது சமூகத்துப் பெண்களுக்கு ஒர்; எடுத்துக்காட்டாகத் தள்ளாத வயதிலும் தளராது; பணிசெய்து வரும் 'மலர் அக்கா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேரவையின் தலைவர் திருமதி.ந.இராசமலர் அவர்களின் அர்ப்பணிப்பையும் ஆளுமையையும், தாராள மனதையும இன்னமும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டியது எமது ஊரான காரைநகர் மக்களின் தார்மீகக் கடமையாகும்.  

                                                                                                                                                                                                             காரை மதி

123

 

கனவில் இருந்து நிஜத்திற்கு………… இருளில் இருந்து வெளிச்சத்திற்கு………………..

கனவில் இருந்து நிஜத்திற்கு…………

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு………………..

எழுத்துருவாக்கம்: ரஞ்சன் கணபதிப்பிள்ளை

நன்றி: ஈழநாடு

 

கனவில் இருந்து நிஜத்திற்கு……..….

பகுதி-1-இங்கே-அழுத்துக

பகுதி-2-இங்கே-அழுத்துக

பகுதி-3-இங்கே-அழுத்துக

 

கனவில் இருந்து நிஜத்திற்கு…………

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு………………..

இங்கே-அழுத்துக

 

பகுதி-1-இங்கே-அழுத்துக

பகுதி-2-இங்கே-அழுத்துக

பகுதி-3-இங்கே-அழுத்துக

 

சாந்தாகாரம் புஜக சயனம்……….

சாந்தாகாரம் புஜக சயனம்……….
நான் வேதங்களையோ ஆகமங்களையோ படித்ததில்லை. புராணங்களும் இதிகாசங்களும் பாசுரங்களும் கூட எனக்குப் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விஸ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் சாந்தாகாரம் புஜக சயனம். பத்மநாபம் சுரேஷம் என்று தொடங்கும் இந்த வரிகள் என்னுள் சாகாவரம் பெற்றுவிட்டன.
என் மாணவப் பருவத்தில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் தசாவதாரம் படம் பார்த்ததோ கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்ததோ அன்றி என் பூர்வஜென்ம புண்ணியமோ எதுவாக இருந்தால் என்ன உடலும் உள்ளமும் கிருஸ்ண பரமாத்வோடு ஜக்கியமாயிற்று. இல்லை! பெருமாளே, நீயே கதி என சரணாகதி அடைந்தது. அபயம் கேட்டு அடைக்கலமானது. அவன் பாதாரவிந்தங்களை தஞ்சம் ஆக்கி நெஞ்சம் பற்றியது.
பலமுறை முயன்றும் பெருமாளின் தேரில் என் கைகள் வடம்பிடிக்கவில்லை. தோள்கள் அவனை சுமக்கவில்லை. இத்தனைக்கும் எனக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளி 45 நிமிடங்கள் தான். றிச்மண்ட் கில். கனடா ரொறன்ரோ மாநகரின்  பெரியகோயில். பெருமாளும் சங்குகக்ர தாரியாக எதிரே தாயார் மகாலஷ்மி.
வாங்கோ! வாங்கோ! என்ற படியே புரோகிதர் வாசலில் வரவேற்றார். அவாளும் வந்திருக்காளா! ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கேள்? குழந்தைங்க எல்லாம் சேமமா இருக்காளா?
ஏதோ! அவன் கிருபை. ஓகோ! என்று இல்லாவிட்டாலும் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!
வருத்தப்படாதீங்கோ! பெருமாள் பாத்துக்குவார் சுத்திக்கும்பிட்டுட்டு வாங்கோ என்ற படியே பவ்யமாகப் போனார் புரோகிதர்.
இந்தத் திருமண நாளுக்கு றிச்மண்ட் கில் போ என்று மனது பிடிவாதம் பிடித்தது. கட்டளையிட்டது. மனதின் கட்டளைக்கு புத்தி அடிபணிந்தது.  நன்றாக கிலுக்கிப் பார்த்து நிறைய இளநீரோடு வாங்கிய தேங்காய் பழம் பாக்கு வெற்றிலை மாம்பழம் விளாம்பழம் கரும்பு பட்டுத் துண்டு இத்தியாதி இத்தியாதி என தட்டம் தடல் புடலாக இருந்தது என்பதை விட மனதிற்கு திருப்தியாக இருந்தது.
வாகன தரிப்பிடம் உள்ளிட்ட கோயில் வளாகம் மாலை நேர கதிரவனின் அரவணைப்பில் ஆழ்ந்து போயிருந்தது. ஆள் அரவமற்ற நிலையில் ஆண்டவன் சந்நிதியில் குடும்பமாய் நிற்பது அது தான் முதல் தடவை. அர்ச்சனை தட்டை பிள்ளையார் சந்நிதியில் வைத்துவிட்டு கைகள் தலை மேல் கூப்பியபடி ஒரு தடவை சுற்றிவந்து தோப்புக்கரணம் போட்;டது.
என்ன புரோகிதர் இன்று பெருமாள் சந்நிதியில்…………. சாதாரணமாக ஓடித்திரிபவர். பூஜை முடிந்ததும் வாங்கோ. நான் இங்கே தான் இருக்கேன். இடையில் வந்து மீண்டும் பவ்யமாக சொல்லிவிட்டுப்போனார். புரோகிதர் தான் சொன்னாரா? அல்லது அந்தப் புருஸோத்தமன் தான் சொன்னானா?
என் மனையாள் குறிப்பறிந்து. அப்பா! பெருமாளுக்கு அர்ச்சனை சீட்டு வாங்கவில்லை. பொருங்கோ! ஓட்டமும் நடையுமாய். கண்ணன் என் இஸ்டதெய்வம் என்பதை சொல்லாமலே தெரிந்து கொண்டவள். சந்நிதியில் சீட்டுடன் பிரசன்னமானதும் புரோகிதர்  சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேஷம்……….. என் மனமும் இதயசுத்தியோடு கண்களில் ஈரம் வடிய சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேஷம்……………. புரோகிதர் துளசி தீர்த்தத்தை கைகளில் விட்டபடியே இன்று என்ன திருமண நாளா என்றுதும் மனைவியும் பிள்ளைகளும் என்னைப்பார்க்க நான் புரோகிதரின் காலடியில் சாஸ்டாங்கமாய். நல்லாய் இருங்கோ! பெருமாள் பாத்துக்குவார் என திருவாய் மொழிந்தார்.
என்னை வரவழைத்து ஆசி கொடுத்து அனுப்பியது மட்டுமா செய்தான்.
அது ஒரு நடுநிசி கடந்த நேரம். பிரம்ம முகூர்த்தம். நான் ஸ்ரீ மகாலஷ்மி தாயாரை சேவித்துவிட்டு திரும்புகின்றேன். ஸ்ரீ என்பதே செல்வம் பெருமை கீர்த்தி புகழ் அதை விட தாயாரின் அன்புக்கு பாத்திரமானவர். அதனால் தான் என் பிள்ளைகளுக்கும் அவள் பெயரையே ஆதாரமாக்கினேன்.  பரிபூரண திருமேனியாய் வாய்குள் யசோதாவிற்கு உலகையே காட்டியவன் போர்க்களத்தில் அர்சசுனனுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தவன் அதே நின்ற திருக்கோலத்தில் பிரம்மாண்ட ரூபமாய் பின் சிறிதாகி அதே மூர்த்தியோடு ஜக்கியமான காட்சி.
பெருமாளே நீ ஏழைப்பங்காளன். அர்ச்சுனக்கு மட்டுமல்ல எனக்கும்தான் தோழன். நண்பனாய் சேவகனாய் நல் ஆசிரியனாய் அதற்கும் மேலாய்…..
கண்ணா! றிச்மண்ட் கில் பெருமாளே! உன்னை நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு!
நீ தான் இஸ்ட தெய்வம். நீ தான் குல தெய்வம்.
நீ இருக்க இனி என்ன வேண்டும். நீ தான் வேண்டும்.
சாந்தாகாரம் புஜக சயணம் பத்மநாபம் சுரேஷம்……….

கணபதிப்பிள்ளை ரஞ்சன்.