கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

p.g.94ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் விருப்பத்திற்குரிய மாணவனும் நாற்பது ஆண்டுகள் எம் கல்லூரியில் நல்லாசிரியராகப் பணியாற்றி இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.ஆர்.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நினைவுப் பேருiரையை பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருந்த பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் உட்பட்ட அனைவரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்திய முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே, 
பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, 
கௌரவ விருந்தினர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.ராசேந்திரன் அவர்களே, 
சிறப்பு விருந்தினர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே,

இக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்களே! அயல் பாடசாலை அதிபர்களே! பழைய மாணவர் சங்கச் செயலாளர் அவர்களே, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் அவர்களே, கல்லூரிக்கு வளஞ்சேர்க்கும் ஆசிரிய மணிகளே, கல்லூரிக்குப் பலமாக விளங்கும் பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, கல்லூரியை மறவாது வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் பழைய மாணவர்களே, பிறந்த மண்ணில் வாழ்ந்து எமது ஊருக்கும் பாடசாலைக்கும் உரமாக இருக்கும் பெற்றோர்களே! கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்களே, அனைவருக்கும் எனது இனிமையான காலை வணக்கம்.

நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக இப்பாடசாலையில் கல்வி கற்று சயம்பு உபாத்தியாயர் அவர்களினாலேயே இப்பாடசாலையில் 1915 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு நாற்பது ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினருக்கு நல்லாசியராகப் பணியாற்றி இன்றும் அவர் நாமம் மறவாத மாணவர்களைக் கொண்ட எனது தந்தையார் அமரர்.ஆர்.கந்தையா மாஸ்ரர் அவர்களின் இளைய மகளாக நானும் இக்கல்லூரியிலேயே கல்வி கற்று இக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணி செய்த காரணத்தினாலோ என்னவோ எனது அன்புக்கும் ஆசிக்குமுரிய எனது மாணவியாகிய இக்கல்லூரியின் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் இந்த நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்டார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.

ஈழமணித்திருநாட்டின் கல்விச் சிந்தனை உலகில் இரண்டு நூற்றாண்டுகளாகச் சைவசமயம் அந்நிய சக்திகளின் அசுரப்பிடியில் அகப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஒரு தலைவன் இன்றி இருளில் தவித்துக் கொண்டிருந்தது. இவ்வேளையில் விடிவெள்ளியாக உதித்தவரே நல்லூரின் நாவலர் பெருமான ஆவார். நாவலரின் காலம் 1822–1879 வரை ஆகும். ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ என்ற நூலில் நாவலரின் கருத்துக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “கல்வி அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” “ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுங்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக் கூடங்களிலேயே அனுப்பி லௌகிக நூல்களையும் நீதி நூல்களையும் சைவசமய நூல்களையும் படிப்பியுங்கள்.”

இவ்வாறான நாவலரின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்றவர் காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள். இவர் மல்லிகை என்னும் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் குட்டிப்புலம்(குமிழங்குளி) என்னும் குறிச்சியில் வாழ்ந்தவரும் ஆவார். இச்செயல்வீரன் ச.அருணாசலம் அவர்களின் காலம் 1864-1920 வரையாகும். சைவம் நீறுபூத்த நெருப்பாக மூடியிருந்த காலத்தில் எங்கள் காரைநகர் மகான் அருணாசலம் அவர்கள் சைவத்தை மூடியிருந்த அழுக்குச் சாம்பலை அகற்றி விட்டார்கள். இச்செயலை உலகம் அறியவில்லை. “இச்சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம” என்று அவரை நேரில் அறிந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசி அறியாத நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். த.கைலாசபிள்ளை அவர்களோ “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர் அருணாசலந்தான்” என்று வர்ணிக்கின்றார்.

ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள் சைவப்பெற்றோரின் பிள்ளைகள் தம் மதம் மாறி ஆங்கிலக் கல்வி கற்று அரச உத்தியோகம் என்ற மாய வலைக்குள் சிக்குவது கண்டு நெஞ்சம் பொறுக்காது புறப்பட்டார். தாம் தமக்கென வாழாது தம் சைவத்திற்கும் தமிழுக்குமாய் வாழத் துணிந்தார். தமது எண்ணத்தை ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை, சு.இராசரத்தினம் போன்ற பெரியாருடன் பகிர்ந்து அவர்களின் யோசனைகளையும் ஏற்று செயலாற்றினார். இப்பெரியார்களைக் காண்பதற்காக அதிகாலையில் காரைநகரில் இருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் செல்வார். செல்லும் வழியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பார்த்து காரைநகர் மாணக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்று மலாய் நாட்டுக்கு சென்று செல்வம் ஈட்டுவது பற்றிச் சிந்தித்து கவலையுற்றார்.

சைவமாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும என்ற எண்ணம் அருணாசல மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்புவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் கருத்தேற்றம் செய்யத் தொடங்கினார். இவரின் கருத்தினால் உற்சாகமடைந்த திரு.கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவினார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்த சயம்பு என்னும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் நிறைந்த ஆசானை அழைத்து வந்தார். திரு.கந்தர் லட்சுமணர் அவர்களின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே நல்லாசிரியர் சயம்பர் ஆவார்.

இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆங்கிலப் புலமை மிக்க பத்திரிகை ஆசிரியரும், ஆசிரியர் சங்க சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியவருமான திரு.N.சபாரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது “சைவப்பாடசாலைகளை அமைப்பதற்காகத் தனது செல்வம் அனைத்தையும் இழந்தவர் காரைநகர் பெருமகன் ச.அருணாசலம் அவர்கள். நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் இப்பெருமகனும் அவருக்கு உதவியாக இருந்த இரு சைவப்பெரியவர்களும் ஸ்ரீமான் சயம்பு அவர்களை சைவத்தின் பாதுகாவலராகக் கண்டனர். ஸ்ரீமான் சயம்பு அவர்கள் இன்று இந்த உன்னத கல்வி நிறுவனத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். (Chief among those who heard the clarion call of Navalar was the late S.Arunasalam of Karainagar who is still immortalized as No.2 to Navalar in founding Hindu School for Hindu Children all over the peninsula spending all his wealth and becoming a pauper in the process. It was he with the assistance of the Late.K.Ledchumananpillai and S.Kandappar two benefactors of the area that founded the School in 1888. The beginnings of the school are yet misty, but the founders, the great Trinity met their man in Saymboo, a Saiva Savant who is now regarded as the Father of this great enterprise.)

சைவப் பாரம்பரியமிக்க எமது ஊர் மக்கள் பரவசப்பட, மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க இவ்வித்தியாசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் ஆசிரியராக இருந்து பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தாம் வேறு வித்தியாசாலை வேறு என்று நினைத்ததில்லை. சைவ சமய பண்பாட்டிற்கு அமையாத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து சைவசமயக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்களை உருவாக்கினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை எனத்தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பநதமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று விளங்கியது.

இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகரதனில்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர் என்று போற்றுகிறார் வித்துவான் F.X.C நடராசா

சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தன்னலங்கருதாது பொதுநல நோக்கோடு ஆங்கிலக் கல்வியைப் போதித்து வந்தார். சயம்புச் சட்டம்பியார் கல்வியை மாத்திரம் மாணக்கருக்கு ஊட்டினவரல்லர். ஒழுக்கத்தையும் கவனித்து வந்தார். சைவாசார முறைப்படி நெற்றியில் திருநீறு பொட்டுடன் மாணாக்கரை வரும்படி கட்டளையிடுவர். வெள்ளிக்கிழமை தோறும் மாணக்கரைக் காலையில் சிவன்கோயிலுக்கு வரவழைத்து கூட்டுவழிபாடு செய்வார்.

ஆங்கிலக் கல்வியைச் சயம்புச் சட்டம்பியார் கவனித்துவர அவருக்கு உறுதுணையாக அம்பலச்சட்டம்பியார் தமிழ்க்கல்வியைப் போதித்து வந்தார். தமிழ் இலக்கியத்தில் திறமைசாலியான அம்பலச் சட்டம்பியார் கணிதத்திலும் வல்லுநர். இந்த ஆங்கில பாடசாலையிற் கற்றுத் தேறிய யாவரும் தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தனர். வித்தியாலயம் படிப்படியாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஊர்மக்கள் உற்சாகமடைந்து ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் நிர்மாணித்துக் வழங்கினர். அவை யாழ் அரச அதிபராகக் கடமையாற்றிய Sir.W.Twynham அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

‘சயம்புச்சட்டம்பியார் என்பவர் காரைநகருக்கு வந்திலரேல் இப்போது காரைநகரிற் பெருங்குடிமக்களாகத் திகழும் மலாய்நாட்டு பெஞ்சனியர்மார் தோன்றியிருக்கவே மாட்டார்கள்.’ என்று காரைநகர் மான்மியம் என்ற நூலில் வித்துவான் F.X.C நடராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். சயம்பு உபாத்தியாயரிடம் ஆங்கிலக் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரச உயர்பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்தனர். காலப்போக்கில் வெளியூர் மாணவர்களும் வந்து கற்கத் தொடங்கினர். மாணவர் தொகை கூடியது. வித்தியாலயத்தின் மனேஜராக திரு.வி.காசிப்பிள்ளை அவர்களும் உள்ளுர் மனேஜராக பெரியார் முத்து சயம்பு அவர்களும் பணியாற்றினர்.

125 ஆண்டுகளைக் கடந்து தளர்வின்றித் தன்னிகரற்ற கல்விப்பணியாற்றி ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது காரை இந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம். இப்பெருமைமிகு கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் இதுவரை காலமும் 25 நல்லதிபர்கள் தமது தடங்களைப் பதித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வளர்ச்சிப்படிகளை நோக்கும்போது

1. இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சிவத்திரு.ஈ.கே.சிவசுப்பிரமணிய ஐயர்B.A அவர்களின் காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைவதைக் கண்ட அரசினர் 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக ஆக்கினர்.

2. பாடசாலையின் வெள்ளி விழா 07.09.1912 அன்று மனேஜர் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. பெரியார் முத்து சயம்பு அவர்கள் 1918 ஆம் ஆண்டில் பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். எனினும் அவரே உள்ளுர் மனேஜராகத் தொடர்ந்து இருந்தார்.

4. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இக்கல்லூரியின் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மனேஜராக பெரும்பணியாற்றி தம்மை இக்கல்லூரிக்கு அர்ப்பணித்த ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

5. முதன் முதலாக எமது காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திருவாளர் பொ.வேலுப்பிள்ளை (பொன்னுடையார் வேலுப்பிள்ளை) அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (இவர் யாழ்ப்பாணம், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய மருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் இ.கனகசுந்தரம், கனடா பல்கலைக்கழக இரசாயனவியல்துறைப் பேராசிரியர் தி.சிவகுமாரன் ஆகியோரின் பேரன் ஆவார்)

6. சிவத்திரு அ.சீதாராமஐயர் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் 1934 ஆம் ஆண்டு J.S.C பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களுள் 13மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் ஒருவர் வடமாகாணத்திலேயே முதற்பிரிவிலும் சித்தியெய்தினர். இதே காலத்தில் இப்பாடசாலையிலிருந்து திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றனர். இதனால் பாடசாலையின் புகழ் மேலோங்கியது.

7. திரு A .கனகசபை B.A அவர்கள் அதிபராகப் பத்து ஆண்டுகள் (1936-1946)பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஸ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் S.S.C வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர் தொகையும் ஐந்நூறைத் தாண்டிவிட்டது.

8. அதியுயர் அதிபர்தர பதவியைப் பெற்ற காரைநகரின் முதன்மைப் பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா வலம் வந்தார். இப்பெருமகன் சேவையாற்றிய காலத்தையே கல்லூரியின் ‘பொற்காலம’; எனப்போற்றலாம் என்று மூதறிஞர் தத்துவக்கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஐந்து ஆண்டுகள்(1941-1945) ஆசிரியராகவும் இருபத்தைந்து ஆண்டுகள்(1946-1970) அதிபராகவம் சேவையாற்றிய இவர் ‘வெள்ளிவிழா அதிபர்’ எனவும் போற்றப்படுகின்றார். இவரின் காலத்திலேயே இக்கல்லூரியின் வைரவிழா 1950.09.19, 20, 21 ம் திகதிகளிலும் பவளவிழா 1963 ஆம் ஆண்டும் முத்துவிழா 1968 ஆம் ஆண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. மலேசியா சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்நிலையம், நடாராஜா ஞாபாகார்த்த மண்டபம் அதனை அண்டிய நிலம் என்பன அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் பெறப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான அக்காலத்தில் விஞ்ஞான ஆங்கிலப்புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். இவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் கல்வித்தரம் உயர்ந்து கல்லூரியின் புகழ் எங்கும் பரவியது. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதிபர் ஆ.தியாகராசா பாடசாலையை கல்லூரி என்ற உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார். (Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was the architect of its collegiate status)

9. அதிபர் திரு P.S குமாரசாமி அவர்கள் குறுகிய காலத்தில் (1970-1971) சீரிய முறையிலும் அதிபர் திரு A.நடராஐh அவர்கள் காலத்தில்(1971-1973) சமயவிழாக்களை நடத்தியும் கல்வி, விளiயாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றும் கல்லூரி விளங்கியது.1971 இல் இவ் வித்தியாலத்தின் கனிஸ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைத்துக் கொள்ளப்பட்டது. திரு.K.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் (1973-1974)கணிதம், பௌதீகவியல் பாடங்களைக் கற்பித்துக்கொண்டே அதிபர் கடமையையும் செய்து கணித விஞ்ஞானத்துறையை மிளிரச்செய்தார்.

10. அதிபர் திரு.K.K.நடராஜா அவர்கள் சிறந்த கணித ஆசிரியராகவம் சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றிய காலத்தில் (1974-1978) 120 வரையான மாணவர்கள் உயர்தரவகுப்பில் கல்வி கற்றனர். இவ்வகுப்புகளுக்கு சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்குத் தெரிவாகச் செய்து கல்லூரியின் புகழை உயர்த்தினார். இவர்காலத்தில் வடக்குப்பகுதி இரண்டு மாடி நிர்வாக மையக் கட்டிடம், நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம், மைதான சுற்று மதில், நீர் சேகரிப்புத்தாங்கி என்பனவும், மைதான புனரமைப்பு என்பனவற்றையும் செய்து கல்லூரியின் பௌதிக வளம் அதிகளவில் விருத்தி கண்டது. 1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம் பெரியார் முத்து சயம்பு அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்பு விழா செய்து கௌரவம் வழங்கியது.

11. அதிபர் திரு.வே.தர்மசீலன் அவர்கள் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியாராகவும் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடனும் பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார். இவர் காலத்தில்(1978-1980) சிறப்பாகப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

12. அதிபர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் குறுகிய காலத்தில் (1981) அதிபர் பதவியை அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். பன்மொழிப்புலமை மிக்க சிறந்த ஆசிரியர். எழுத்தாளர், நாடறிந்த கவிஞருமாவார்.

13. அதிபர் திரு.S.பத்மநாதன் இரு தடவைகள்(1981-1983,1985-1988) இக்கல்லூரியின் அணிசெய் தலைவராகச் சேவையாற்றினார். இவர்காலத்தில் தமிழக அறிஞர்களை அழைத்து பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நடாராசா மண்டபத்தில் சரஸ்வதி கருவறை கோயில் முகப்புத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

14. கல்லூரியில் 25 ஆண்டுகள் அதிபராகவும் பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்தது.

15. அதிபர் சிவஸ்ரீ A.K சர்மா அவர்கள் 1983-1985 வரை அதிபராகப் பணியாற்றினார். புன்னகையும் வசீகர வாக்கும் கொண்ட இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார்.

16. அதிபர் திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்களின் காலத்தில் (1988-1991) இக்கல்லூரி கொத்தணித் தலைமைப் பாடசாலையாக்கப்பட்டது. காரைநகரின் 14பாடசாலைகளின் கொத்தணி அதிபாராக திரு.மு.திருநீலகண்டசிவம் விளங்கினார். பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து கல்லூரியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17. அதிபர் திரு.S.R.S.தேவதாசன் அவர்கள் கல்லூரியின் அதிபராகவும் காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் சேவையாற்றினார். இவரது காலத்தில்(1991-1993) போர்ச்சூழலில் காரைநகருக்கு வெளியே பாடசாலை இடம்பெயர்ந்து இயங்கவேண்டி நேரிட்டமையால் தளர்வு ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும்.

18. கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த திருமதி. தேவநாயகி பாலசிங்கம் பெறுகின்றார். இவர் காலத்தில்(1993-1998) இடம்பெயர்ந்த சூழலில் ஏனைய பாடசாலைகள் போன்று கல்லூரியைத் தளரவிடாது கட்டிக் காத்து 1996 இல் மீண்டும் சொந்த மண்ணில் கல்லூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும்.

19. அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் காலத்தில் (1998-2005)கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்விச்செயற்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது. ஆங்கிலக்கல்விக்கும், கணனிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். கல்லூரி தீவக வலயத்தில் முன்னணிப் பாடசாலையாக விளங்கியது.

20. அதிபர் திரு.கா.குமாரவேலு காலத்தில் (2005-2008) கனிஷ்ட பாடசாலையில் கட்டிடங்களைப் புனரமைத்ததோடு கிணறு அமைக்கப்பட்டு குழாய்நீர் விநியோகம் செய்யப்பட்டது. இவர்காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன.

21. அதிபர் திரு.A.குமரேசமூர்த்தி இக்கல்லுரியின் அதிபராக (2008-2010) சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார்.

22. அதிபர் திரு.பொன் சிவானந்தராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில்(2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஒரு ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது.

23.  2012 இல் ஆயிரம் பாடசாலை செயற்றிட்டத்தில் இக்கல்லூரி சேர்வதற்காக இதன் கனிஷ்ட பிரிவாகிய சுப்பிரமணிய வித்தியாசாலை மீண்டும் தனியாக இயங்கும் ஆரம்ப பாடசாலையாகியது.

24. இரண்டாவது பெண் அதிபராகிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின்125 ஆவது ஆண்டு விழா, நாட்டின் மேதகு ஜனாதிபதி வருகை ஆகிய வரலாற்று நிகழ்வுகளை குறுகிய காலத்தில் எதிர்கொண்டு சிறப்பாக நிறைவேற்றினார். பௌதீக வளவிருத்திகளாக மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், பல்லூடக மண்டப விருத்தி, நிறுவுநர் சயம்பு சிலை புனரமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச சாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மிகவும் பாதுகாப்பும் அழகும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த சூழலாக மாறியுள்ளது. மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பரீட்சைகளில் சித்திபெறும் சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு இணையான ஆளுமை விருத்திச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர். புலம்பெயர் பழையமாணவர்களின் பார்வை எம் கல்லூரியின் பக்கம் திரும்பியுள்ளது. பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை, கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்காக 1.5 மில்லியன் ரூபா கனடாவில் வதியும் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். தீவகவலயத்தில் தொடர்ந்து முன்னணி வகித்துவரும எம்கல்லூரி விரைவில் ஒரு தேசியபாடசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறுகுபோல் வேரூன்றி ஆல் போல் தளைத்து காரைநகரின் கலங்கரை விளக்கமாக அறிவொளி வீசும் பழமையும் பாரம்பரியமும் மிக்க இக்கல்லூரியில் பணியாற்றிய நல்லதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லரென இக்கல்லூரியைத் தேசிய மட்டங்களில் கூட போட்டிபோடக் கூடிய நிலைக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களே! உங்கள் வாழ்நாளில் பாடசாலைக் காலம் பொன்னானது. அன்பு, அடக்கம், நேர்மை ஆகிய அணிகலன்களை அணிந்து மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி உயர்ந்த எண்ணங்களை எண்ணி விடாமுயற்சியுடன் உழைத்து உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கனிவாக வேண்டுகின்றேன்.

ஆசிரியர்களே! உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கற்பித்தலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் இக்கல்லூரியில் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது. மேலும் இவ்வாறு சாதனை படைத்து கல்லூரிக்கு வளஞ்சேர்க்க உங்களை வாழ்த்துகின்றேன். பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியை மறவாது உங்கள் ஆதரவை வழங்கி வருவது இக்கல்லூரிக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவினை நான் போற்றுகின்றேன்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே! குறுகிய காலத்தில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற உங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கல்லூரியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடராசப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

To Thine own self be True.
உனக்கு நீயே உண்மையாய் இரு.

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி 
வணக்கம்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா 
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் 
ஆங்கிலத்துறை 
காரைநகர்