காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001