காரைநகர் கல்வி வரலாற்றில் முக்கியமான நாள் இன்று. இன்றைய நாள் காரைநகரின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்களில் ஒன்று இவ்வாறு தெரிவித்தார் காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்.
கனடா காரை கலாசார மன்றத்தின் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகளுக்கான அடிப்படை அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய நிதியத்தின் நிரந்தர வைப்பு பத்திர கையளிப்பு நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 05.05.2015 இன்று செவ்வாய்கிழமை மாலை 2 மணியளவில் காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி காரியாலயத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர், காரைநகர் அபிவிருத்திச் சபையினர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து பேசுகையில் கனடா காரை கலாசார மன்றமானது காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சிப் பரீட்சை நடாத்துவது உட்பட பல்வேறு அத்தியாவசிய கற்றல் தேவைகளுக்கான உதவிகளைத் தாராளமாக வழங்கி காரைநகர் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கின்றனர். அவர்களது கல்விச் சேவையினை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. அவர்களுக்கு எனது சார்பாகவும் பாடசாலை அதிபர்கள் சார்பாகவும் முதற்கண் நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அவர்கள் செய்துள்ள மகத்தான கைங்கரியத்தினை பாடசாலை அதிபர்கள் சரியான முறையில் பயன்படுத்தி உச்சப்பயனைப் பெறவேண்டும். இதுவே நாம் அவர்களுக்குச் செய்கின்ற கைம்மாறாகும்.
இங்கு உரையாற்றிய வேரப்பிட்டி ஸ்ரீ கனேசா வித்தியாலய அதிபர் திரு இளங்கோ அவர்கள் தனது உரையில் கனடா காரை கலாசார மன்றத்தின் சாதனை என்றே இதனைச் சொல்லவேண்டும் இவ்வாறான ஒரு காரியத்தினை செய்வது என்பது இமாலய சாதனையாகும்.
தொண்டு நிறவனங்கள் நிதி சேகரிக்கும் முறையை நான் அறிந்திருக்கின்றேன் அவர்கள் சிறுக சிறுக பலரிடம் மிகமிகக் கடினப்பட்டே பணத்தினைச் சேகரிக்கின்றார்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம்தான் இன்று எங்களது பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. அதனை மிகச் சிறந்த முறையில் மிகப் பயனுள்ள முறையில் செலவு செய்தல் வேண்டும்.
கனடா கலாசார மன்றத்தின் நிர்;வாக சபையினர் என்னை தொடர்பு கொண்டு எமது பாடசாலைக்கு செய்ய வேண்டிய உதவி என்ன? என கடந்த வருடம் கேட்டார்கள் எமது பாடசாலைக்குத் தேவையான உதவியினைக் கேட்டிருந்தேன். அவர்கள் உடனடியாகவே அந்த உதவியினை காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றித் தந்தார்கள். அப்போது எண்ணினேன் கூடிய உதவிகளைக் கேட்டிருக்கலாம் என்று. பின்னர் ஏனைய பாடசாலைகளுக்கும் நான் நினைத்தது போன்றே கூடிய உதவிகளை வழங்கியிருந்ததை அறிந்தேன். இவ்வாறு காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றுகின்ற பணி பாராட்டுக்குரியது என்றார்.
தொடர்ந்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் உரையாற்றுகையில் இன்றைய நாளினை எனது வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாளாகவே கருதுகின்றேன். இந்த மகத்தான சேவையை இன்றைய நாளில் மேற்கொள்ள உதவிய அந்த இறைவனுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
கனடா காரை கலாசார மன்றத்தின் கல்விபணி நீங்கள் அறியாத ஒன்றல்ல கடந்த வருடமும் காரைநகர் பாடசாலைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 40 இலட்சம் ரூபா வரை வழங்கி உள்ளார்கள்.
இன்று காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 10 பாடசாலைகளுக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பிலிடப்படுகின்றது. இன்னமும் இரண்டு பாடசாலைகளிற்கான நிதியினை இன்னமும் சில வாரங்களில் வைப்பில்இட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இவ்வாறு வைப்பில் இடப்பட்டுள்ள நிதியில் இருந்து அதன் வட்டிப் பணத்தினை ஆறு மாதங்களுக்கு ஒரு தடைவ உங்கள் உங்கள் பாடசாலைகளின் அபிவிருத்திக் கணக்கில் லைப்பிலிடப்படும். அதன் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5ம் திகதியும், மே 5ம் திகதியும் வட்டிப்பணம் பாடசாலை அபிவிருத்திக் கணக்குகளில் தேசிய சேமிப்பு வங்கியினால் வைப்பிலிடப்படும். அந்தப் பணத்தினை அதிபர்களாகிய நீங்கள் பாடசாலையின் கற்றல் செயற்பாட்டிற்காக ஏற்கனவே தீர்மானித்த திட்டங்களுக்குச் செலவு செய்ய முடியும்.
வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு கனடாவில் வதியும் அந்தப் பாடசாலைப் பழைய மாணவர் ஒருவர் பத்து இலட்சம் ரூபாவினையும் வழங்க முன்வந்துள்ளார். அவருடைய பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதும் ஒரு சில நாள்களில் வழங்க முடியும். அதே போன்று பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலைக்கான நிதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கொழும்பு ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளது, அந்த பணம் அடுத்த மாதம் 12ம் திகதி முதிர்வடைந்ததும் எமது வங்கிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அன்றைய தினமே பாலாவோடை இ.த.க.பாடசாலைக்கான நிலையான வைப்பினை மேற்கொண்டு வழங்குவதற்கும் கனடா காரை கலாசார மன்றத்தினால் எமக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் திட்டமும் அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்ததுடன் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து செயலாளர் இ.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.