காரைநகர் பாடசாலைகள் – 2
சுப்பிரமணியம் வித்தியாசாலை
கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த மார்கழி திருவெம்பாவை உற்சவ காலத்தில் காரைநகர் விஜயத்தின் போது காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் நேரடியாக சென்று பாடசாலைகளின் நிலமைகளை அவதானித்து வந்திருந்தனர். அந்த வகையில் ஏற்கெனவே சடையாளி பாடசாலை விபரம் எடுத்துவரப்பட்டிருந்தது. இதோ சுப்பிரமணியம் வித்தியாசாலை பாடசாலை விஜயத்தின் போது பெற்றுக்கொண்ட விடயங்கள்.
சுப்பிரமணியம் வித்தியாசாலை காரைநகர் பிரதான வீதியில் புதுறோட்டிற்கும் சக்கலாவோடைக்கும் இடையில் அமைந்துள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயமாக 1971ம் ஆண்டு முதல் காரைநகர் இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த இப்பாடசாலை 2012ம் ஆண்டு முதல் தனித்து இயங்கும் வகையில் கல்வித் திணைக்கழத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் அதிபராக திருமதி கௌ.அருள்மொழி அவர்கள் 06.01.2012 முதல் கடமையாற்றி வருகின்றார். 31.12.2014 அன்று நடைபெற்ற கோட்ட கல்வி அதிகாரி பணிமனையில் நடைபெற்ற அதிபர்கள் சந்திப்பின் போது அதிபர் அவர்கள் கனடா காரை கலாசார மன்றத்தினரிடம் கடந்த பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட பல வேண்டுகோள்களிற்கு எவ்வித பதிலும் கிடைத்திராத காரணத்தினால் மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்துடனான தொடர்புகளை கொண்டிருக்கவில்லையெனவும் ஆனாலும் 2014ம் ஆண்டு ஆரம்பத்தில் கனடா காரை கலாசார மன்றம் தொடர்பு கொண்டு நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரை தமது பாடசாலைக்கு அனுப்பியதாகவும் அதன் பின்னர் தமது வேண்டுகோளினை முன்வைத்ததாகவும் தெரிவித்ததுடன் அதன் பின்னர் மெல்லக்கற்போருக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு 85,000 ரூபாய்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.
பாடசாலையின் தற்போதைய உடனடி தேவையாக கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வகுப்பறை நிலங்கள் வெகுவாக உழுத்து போயுள்ள நிலையில் உடனடியாக நிலம் கொத்தி புனரமைக்கப்படவேண்டும் எனவும், மேற்கு பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் புறாக்கள் குடிகொண்டு அசுத்தப்படுத்தி வருவதால் அவற்றினை உட்புகாதவாறு கம்பி வலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மேற்கொண்டு மெல்ல கற்கும் மாணவர்களிற்கான மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க வருடாந்தம் நிதியுதவி அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கனடா காரை கலாசார மன்றம் வழங்கவுள்ள 10 இலட்சம் நிரந்தர வைப்பு நிதியத்தின் மூலம் ஓரளவு இத்தேவைகளை பூர்த்தி செய்யகூடிய வசதிகள் கிடைக்கப்பெறும் என கருதினாலும் எமது பாடசாலையில் 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கும் மேற்கொண்டு நிதி உதவி வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியோடு கிழக்கு பகுதி கட்டிடம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கனடாவில் இருந்து DR.கலைச்சந்திரன் உதவியோடு களஞ்சிய அறை கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கனடா காரை கலாசார மன்றத்தின் 10 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பு திட்டத்திற்கான நிதி உதவி தற்போதைய நிர்வாக சபையின் நிர்வாக காலம் நிறைவடைவதற்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அதனை சிறந்த முறையில் செயற்படுத்துவதுடன் தொடர்ந்தும் பாடசாலையின் செயற்பாடுகள் மற்றும் தேவைகளை கனடா காரை கலாசார மன்றத்த்திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு விடைபெற்றனர் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர்.