கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை
காரைநகர்ப் பாடசாலைகளில் இருந்து இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை மூலம் நடைபெற்ற இப்பாசறையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய காரை அபிவிருத்திச்சபையின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் தாற்பரியங்கள் பற்றி மிகச்சிறந்த முறையில் எடுத்துக்கூறினார்.மேலும் அவர் கனடா காரை கலாச்சார மன்றம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கட்கு பயிற்சிப்பரீட்சைகள் வைப்பது வழக்கம் ஆனால் இம்முறை மாகாணக்கல்வித்திணைக்களம் மற்றும் வலயக்கல்வித்திணைக்களம் என்பவற்றின் பரீட்சைகள் கூடுதலாக இருப்பதனால் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கமைவாக இம்மாணவர் முகாம் நடாத்தப்பட்டது.
யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனது உரையில் இம்முகாமை சிறந்த முறையில் நடாத்துவதற்கு அனுசரணையாக இருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு காரைநகர் கோட்ட அதிபர் ஆசிரியர்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவித்தார். மேலும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேச மூர்த்தி மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் திரு க.மணிமார்பன் ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர்.
இம்முகாம் வடமாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு..A.S .சற்குணராசா அவர்களின் நெறிப்படுத்தலில் 10 வளவாளர்களினால் இம்மாணவர் முகாம் நல்ல முறையில் நடைபெற்றது.இம்முகாம் மாணவர்கட்கு பெரிதும் பயனுடையதாக இருந்தமை பற்றி பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.