கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆரம்ப பாடசாலைகளிற்கு நிர்ந்தர வைப்பில் 10 இலட்சம் ரூபாய்கள் இட்டு வழங்குவது தொடர்பாக திட்டமிடும் செயற்பாட்டுக்கான கூட்டம் 31.12.2014 அன்று காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீ விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
காரைநகர் பாடசாலைகளின் அனைத்து அதிபர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் திரு.எஸ் கெங்காதரன், கலாநிதி ஆ.தியாகராசா அறக்கட்டளை தலைவர் திரு.வே.சபாலிங்கம் மற்றும் செய்தியாளர்களுடன் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா, செயலாளர் திரு.தீசன் திரவியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கனடா காரை கலாசார மன்றத்தின் இத்திட்டம் தொடர்பாக கோட்ட கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டதோடு, கனடாவில் வாழும்; காரைநகர் மக்கள் பலரும் காரை மண்ணிற்கு வந்து செல்வதையும் தமது தாய் மண்ணினை மறவாது பலவித உதவிகளை வழங்கி ஊர் சிறப்புற செயலாற்றுவதாகவும் அதனையிட்டு தாம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி இணையத்தளம் ஊடாக கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், தற்போதைய நிர்வாக சபையினரால் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான திட்டத்தை முன்வைத்து பலத்த சிரமங்களிற்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளிற்கான இவ்வுதவியினை வழங்க முன்வந்துள்ளதாகவும், இந்நிதியினை ஆரம்ப பாடசாலை அதிபர்கள் மிகவும் கவனமாகவும், பொறுப்புணர்வுடனும் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிறார்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கனடா காரை கலாசார மன்றத்தின் நல்லெண்ணத்தை மேற்கொண்டு பெறுவதற்கும் ஏற்ற வகையில் பாடசாலை அதிபர்கள் இந்நிதியினை கையாள வேண்டும் எனவும் அதிபர்களை கேட்டுக் கொண்டார்.
யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவின் நிதி பிரமாணங்களை தெளிவுற தெரியப்படுத்தியதுடன், கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகள் மூலம் காரைநகர் பாடசாலைகளிற்கான உதவிகள் கிடைக்கப்பெற்று வருவது குறித்து மகிழ்ச்சியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
காரை இந்து அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் ஆரம்ப பாடசாலைகளிற்கு மட்டுமன்றி உயர்தர பாடசாலைகளான இந்துக் கல்லூரிக்கும், யாழ்ற்ரன் கல்லூரிக்கும் இது போன்ற நிரந்தர வைப்பு நிதியத்தினை உருவாக்கி பாடசாலை செயற்பாடுகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என வேண்டுகோளினை முன்வைத்ததுடன், கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக பல்லூடக கற்பித்தல் அறையினை பெற்றுக் கொண்டமைக்காக மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆரம்ப பாடசாலை அதிபர்களின் கருத்துக்கள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கனடா காரை கலாசார மன்றத்தினால் ஒவ்வொரு ஆரம்ப பாடசாலைகளிற்கும் வைப்பில் இடப்படவுள்ள 10 இலட்சம் ரூபா நிதி தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கோட்ட கல்வி பணிப்பாளரினால், வலய கல்வி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் அனுமதியுடன் பாடசாலை அதிபர்களிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், ஆரம்ப பாடசாலை அதிபர்கள் இத்தீர்மானங்களை கருத்தில் கொண்டு மன்றத்தினால் வைப்பில் இடப்படும் நிதியினை பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் கோட்ட கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
கோட்ட கல்வி அதிகாரி, அதிபர்கள், வங்கி முகாமையாளர் மற்றும் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. கனடா-காரை கலாசார மன்றத்தினால் வைப்பில் இடப்படும் பணம் SDA (School Develepment Association – பாடசாலை அபிவிருத்தி குழு) இன் பெயரில் வலய கல்வி பணிப்பாளர் அனுமதியுடன் SDA நிதி பிரமானங்களுக்கு அமைவாக 3 மாதத்திற்குரிய நிலையான வைப்பில் இடப்படுவதாகவும், மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கிடைக்கப்பெறும் வங்கி வட்டி SDA நடைமுறை கணக்கிற்கு வங்கியினால் வரவு வைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2. நிலையான வைப்பில் உள்ள முதலீட்டு பணமான ரூ10 இலட்சத்தினை SDA எக்காரணம் கொண்டும் எடுக்க முடியாது, எனினும் முக்கியமான சரியான காரணங்களுடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபையின் அனுமதியை முதலில் பெற்று, வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியுடனும் SDA இன் நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.
3. நடைமுறை கணக்கிற்கு வரும் வங்கி வட்டிப்பணமானது பின்வரும் நியதிகளுக்கு அமைய அதிபர்கள் செலவு செய்ய வேண்டும். இப்பணம் தொடர்பாக கனடா-காரை கலாசார மன்றத்திற்கு அறிவிக்கும் பொறுப்பு அதிபர் பிரத்தியேகமான ஒரு கட்டுப்பாட்டு பேரேட்டினை பேணி தவணைக்கு ஒரு தடவை அதிபர் இந்நிதி தொடர்பான வரவு செலவு அறிக்கையை கோட்ட கல்வி பணிப்பாளருக்கும், கனடா காரை கலாசார மன்றத்திற்கும், காரைநகர் அபிவிருத்தி சபைக்கும் அனுப்புதல் வேண்டும்.
நிதியினை செலவளிக்கும் நியதிகள்:
– நேரடியாக கற்றல், கற்பித்தில் செயற்பாடுகளுக்கு 50%
(மேலதிக வகுப்புகளிற்கான ஆசிரியர் நிவேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புகளிற்கான ஆசிரியர் நிவேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்கள்).
– இணைப்பாடவிதான செயற்பாடுகள் (Co Curricular Activities) 20%
(விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகள்)
– மேலதிக மின்கட்டணம் மற்றும் சிறு திருத்த வேலைகள் 20%
– சுகாதாரம், உணவு, குடிநீர் கட்டணம் 10%
4. வருடத்திற்கு ஒரு தடவை பாடசாலை அதிபர்களின் கூட்டத்தில் இந்நியதிகள் கனடா காரை கலாசார மன்றத்தின் அனுமதியுடன் அதிபர்களினால் பாடசாலைகளின் தேவைகளிற்கு அமைவாக மாற்றிக்கொள்ள முடியும் எனவும் தீர்மானிக்கப்படுகின்றது.
கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர், செயலாளர் காரைநகரில் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் விஜயம் செய்து பாடசாலைகளின் நிலமைகளை அவதானித்துள்ளதுடன், பாடசாலைகளின் நிலவரம் தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு அறியத்தருவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-கனடா காரை கலாசார மன்றம்