கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி சென்ற புதன்கிழமை (பெப்.5.2014) அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக காரைநகரில் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்தவரும், வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.க.சத்தியபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.குணநாதன் அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ஏ.விஜயகுமார் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக யோகா ரான்ஸ்போட் உரிமையாளர் திரு.ந.யோகநாதன் அவர்களும், கிராம சேவையாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அலையன்ஸ் நிறுவன முகாமையாளர் திரு.கோ.சிறிவரதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில்; இன்றைய இவ்விளையாட்டு நிகழ்வானது பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் 100 வீதம் மாணவர்களும்; கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்று கூறினார்.
எமது பாடசாலை மாணவர்கள் கடந்த ஆண்டு வலயமட்டத்தில் பல விளையாட்டு சாதனைகளை தடகள நிகழ்வுகள், பெருவிளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்களில் பதிவாக்கி உள்ளனர், அவ்வகையில் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சாமினி சிவராஐ; அவர்களுக்கு சிறப்புப் பாராட்டைத் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாண்டும் 20 மாணவர்கள் கோட்டமட்ட சதுரங்கப் பொட்டியில் பங்குபற்றி அதில் 10 மாணவர்கள் வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண:டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
இன்றைய விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய பயிரிக்கூடலைச் சேர்ந்த திரு.ஸ்ரீஸ்கந்தராஜா பாஸ்கர்(பிரான்ஸ்), இடைப்பிட்டியைச் சேர்ந்த திரு.சண்முகம் சிவஞானம், கொம்பாவோடை, களபூமியைச் சேர்ந்த திரு.கந்தையா ஆறுமுகம் ஆகியோருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
மற்றும் இப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. சாமினி சிவராஜ் இடமாற்றம் பெற்றுச் செல்ல இருப்பதால் பொருத்தமான உடற்கல்வி ஆசிரியரைப் பெற்றுத்தருமாறு பிரதிக் கல்விப்பணிப்பாளர், வடமாகாணம், தீவகவலயம் ஆகியோரிடம் வேண்டிக் கொண்டார்.
பாடசாலையில் ஒரு உள்ளக விளையாட்டு அரங்கம் இல்லாமல் இருப்பதனால் அதனை அமைப்பதற்கு பழைய மாணவர்கள், புலம்பெயர் பழைய மாணவர்கள் உதவியை இப்பாடசாலை வேண்டிநிற்கின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளில் கல்லூரியின் பழையமாணவர் சங்கங்கள் புலம்பெயர் காரை அமைப்புகள், நலன்விரும்பிகள், கல்வித்திணைக்களத்தின் இணைப்பாடவிதான செயற்பாட்டு உதவிகள் என்பன பெரும் உதவிகளாக அமைந்தன. மேலும் பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய மேற்கூறிய அமைப்புகளின் உதவியைப் பாடசாலை வேண்டி நிற்கின்றது என்றும் கூறினார்.
பிரதமவிருந்தினர் திரு.க.சத்தியபாலன் அவர்கள் தனது உரையில், இவ்விளையாட்டுப்போட்டி தாம் எதிர்பார்த்ததிற்கு மேலாக மிகவும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது என்றும் பாடசாலை மாணவர்கள் 100 வீதம் கலந்துகொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சம் என்றும் கூறினார்.
சிறப்புவிருந்தினர் திரு.இ.குணநாதன் தனது உரையில் இவ்விளையாட்டு நிகழ்வில் நேரமுகாமைத்துவம் சிறப்பாகப் பேணப்பட்டமையும் சுற்றாடல் முன்னோடிக்குழு, சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பியல்பாகும் எனக் குறிப்பிட்டார்.
நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு சயம்பு இல்லம்( 569 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்( 545 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் நடராசா இல்லம(441 புள்ளிகள்); மூன்றாம் இடத்தையும், பாரதி இல்லம்( 342 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணியின் காட்சிப்படுத்தல் நகரப்பாடசாலையின் தரத்தையும் மிஞ்சியதாகக் காணப்பட்டதாகவும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.