புலவரின் கவித்துவத்தையும் காரை மண்ணின் மகத்துவத்தையும் வெளிப்படுத்திய காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா
கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் விழாவில் ஆசியுரையினை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் வாழ்த்துரைகளை வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன், காரைநகர் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன், காரை இந்துவின் முன்னாள் ஆசிரியை கலாபூசணம், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலர் கவிஞர் வே.குமாரசுவாமி ஆகியோரும் நூலின் அறிமுகவுரையினை சிவத்தமிழ் காவலர் ஆ.செந்தில்நாதனும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தழிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்தினார்கள்.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தமது வெளியீட்டுரையில், காரைநகரை ஒரு புண்ணியபூமியாகத் தாம் பார்ப்பதாகவும், கலைமகளும் திருமகளும் ஒன்றாக வீற்றிருக்கும் செழிப்பும் சிறப்பும் மிக்க இடங்களில் ஒன்றாக காரைநகர் இருப்பதாகவும் குறிப்பிட்டார். உள்ளத்தைத் தொடாத இலக்கியமோ கவிதையோ நீடித்து நிலைக்கமாட்டாது. நாகமுத்து புலவருடைய கவிதைகளின் இத்தொகுப்பானது உள்ளத்தைத் தொடுவதாக அமைந்துள்ளதென அவர் மேலும் தமது உரையில் கூறினார்.
யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் நூலினை வெளியிட்டு வைக்க கௌரவப் பிரதியை செல்வி இராணி வைத்தீசுவரக்குருக்கள் பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதிகளை கல்விக்காருண்யன் E.S.P நாகரத்தினம், கலைமாடக்கோன் ச.சிவஞானம், காரை இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவர் திரு.சி.நேசேந்திரம், யோகா ரான்ஸ்போட் உரிமையாளர் திரு.ந.யோகநாதன், சிவம் மோட்டர்ஸ் உரிமையாளர் திரு.ச.சிவகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூல் ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார். அவர் தமது ஆய்வுரையில் நாகமுத்து புலவர் சமயம், சமூகம் சார்ந்து தமது கவிதைகளைத் தந்துள்ளார் என்றும் புலவருடைய பாட்டுத்திறத்தை சமூகம் சார்ந்து தந்துள்ள 53 கும்மிப் பாடல்களும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார். இக்கும்மிப் பாடல்களில் திருக்குறளைப் புலவர் பொதித்து வைத்துள்ளமை புலவருக்கு திருக்குறளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் இத்தொகுப்பின் வெளியீடானது சிறந்த வரலாற்றுப் பதிவு என்பதுடன் புலவருடைய நாமம் வையம் உள்ளவரை வாழும் எனவும் குறிப்பிட்டார். மேலும் எந்தத்துறை சார்ந்தாலும் அத்துறை சார்ந்து முதன்மையானவர்களைக் காரைநர் மண் தந்துள்ளது எனவும் திரு.லலீசன் குறிப்பிட்டார்.
கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஆகியோர் அனுப்பி வைத்த வாழ்த்துரைகளை காரை இந்து மாணவன் செல்வன் கனகலிங்கம் விநோதன் வாசித்தார்.
முதன்மை விருந்தினராக சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ள இருந்த போதிலும் வேலைப்பழு காரணமாகக் கலந்துகொள்ளாதுவிடினும் தனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பிவைத்திருந்தார். இவ்வாழ்த்துச் செய்தியை தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் வாசித்தார்.
நன்றியுரையினை நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான கனக சிவகுமாரனும் வழங்கினர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொள்ள அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.