எதிர்வரும் சனிக்கிழமை கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் சைவசித்தாந்த ஜோதி, தமிழ் சுடர், சிவத்தமிழ்காவலர் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து 25.10.2016 இன்று கனடா வந்திறங்கினார். கனடா காரை கலாச்சார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இவ்வரவேற்பில் கலந்து கொண்டனர்.
காரை வசந்தம் நிகழ்வுகள் இவ்வருடம் நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த காரை மண்ணின் பெயர் விளங்க வைத்த பெரியவர்களான மூதறிஞர் க. வைத்தீஸ்வரகுருக்கள், கலாநிதி ஆ.தியாகராசா மற்றும் காரை மண்ணின் அடையாள சின்னங்களாக விளங்கும் சைவ மகா சபை, கோவளம் வெளிச்ச வீடு ஆகியய மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் நினைவு கூரும் வகையில் நடைபெறவுள்ளது.
கனடா வாழ் காரைநகர் சிறார்கள் பலரது கலை படைப்புக்கள் மேடையேறவுள்ளன. காரை வசந்தம் விழா மலர் பிரத்தியேகமாக காரைநகர் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் முழுமையான விளக்கங்களுடனும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வரலாற்று பதிவாக நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தினையும் தாங்கி கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொக்கிஷமாக, காரைநகர் பாடசாலைகளின் நிலமைகளை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையிலும் வெளிவரவுள்ளது.
கனடாவில் தீபாவளி தினமான 29.10.2016 அன்று வீசவுள்ள காரை வசந்தம் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தீமைகள் பல புரிந்த நரகாசுரனை அழித்த இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.