கலங்கரைவிளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம். ( எஸ்.கே.சதாசிவம் )

கலங்கரைவிளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம்
      ( எஸ்.கே.சதாசிவம் )

S.K.Satha

ப்பல் திசை மாறாது வருவதற்காக துறைமுகத்தில் ஒரு குறிகாட்டியாக இருக்கும் வெளிச்சவீடானது பண்டைய காலத்தில் இருந்தமை பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் பண்டைய காலத்தில் எவ்வாறு கலங்கரை விளக்குகள் அமைக்கப்பட்டன என கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறப்பாக் கூறியுள்ளார்.


'வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்தியை வேற்றருந் சென்னி
வின் பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலக்கு சுடர் நெகிழி
உரவு நீர் அழுவத்து ஒரு கலம் கரையும் துறை.
(பெரும்பாண் 346 – 356)


என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது கலங்கரை நிலையம் உயரமான கட்டடமாக இருந்;;தது. அதுசாந்து பூசப்பட்டு தளவரிசை உள்ளதாய் இருந்;தது மட்டுமல்லாமல் அதில் தீயிட்டு எரித்தனர் அல்லது உச்சியில் ஏறி விளக்கு வைப்பதற்கு ஏணிப்படிகள் இருந்தன என கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்ட விதம் கூறப்படுகின்றது.

வெளிச்சவீடுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கலங்கரை விளக்கம் தீபஸ்தம்பம்  கோரி என எனப் பலவாறு அழைக்கப்பட்டது. 

கலங்கரை விளக்கம் கடலை மூடிய இருள்படலத்தை கிழித்து எங்கும் பேரொளி பரப்பி கடலில் செல்லுகின்ற மரக்கலங்களுக்குத் துறைமுகம் இருக்கின்ற இடத்தையும் அவை செல்ல வேண்டிய வழியையும் காட்டுவன என ஈழத்துச் சிதம்பர புராணம் இயற்றிய புலவர்மனி சோ. இளமுருகனார் குறிப்பிட்டுள்ளார். 

  •  கலம் – மரக்கலம்,. கலங்கரை விளக்கம்:- கடலில் பயணம்செய்யும் மரக்கலங்களுக்கும் ஏனைய கப்பல்களுக்கும் கரையினைக் காட்டும் வெளிச்சம்.
  • Light House: – A tower or other building that contains a strong light to warn and guide ships near the coast.

கடல் வழி அல்லது உள்ளுர் நீர் நிலைகளின் போக்குவரத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்படும் உயர்ந்த ஒடுங்கிய கோபுர (Tower) வடிவிலான அல்லது அது போன்ற அமைப்புடைய கட்டிடங்களின் உச்சியில் அமைக்கப்பட்ட விளக்குகள் (எரிவாயு, மின்சாரம், எண்ணெய் போன்றன ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் இயக்கப்படுவது) வில்லைகள் மூலம் வெளிப்படும் ஒளி (Light)  நீண்டதூரம் பிரகாசிக்ககூடிய வல்லமை உடையது. இவ்வாறு வெளிப்படும் வெளிச்சம் கடல்வழி அல்லது உள்ளுர் நீர்நிலைகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பயணம் செய்யும் சரியான திசையைக் காட்டும் திறன் கொண்டவை. இவ்வாறான அம்சங்கள் பொருந்திய கட்டிடங்கள் வெளிச்சவீடுகள் என்று அழைக்கப்படும்.

வெளிச்சவீடுகள் ஆபத்தான கற்பாறைகள், கூட்டமாகச் செல்லும் பெரிய மீன் இனங்கள் என்பனவற்றைக் காட்டி கப்பல்கள் துறைமுகங்களுக்குள் நுழைய வழிகாட்டுவன. ஒருகாலத்தில் அதிகமாக பயன்பாட்டில் இருந்த வெளிச்சவீடுகள் பராமரிப்பதற்கான செலவீனங்கள் காரணமாகவும் மின் அணு முறையிலான கப்பல் செலுத்தும் முறைமை (Electronic navigational systems), புவிசார் இடமறியும் கருவி (Global position system G.P.S) அறிமுகம் செய்யப்பட்டமையினாலும் வெளிச்சவீடுகளின் செயற்பாடுகள் குறைவடைந்தன. தற்போது வடபுல மீனவர்களும் புவிசார் இடமறியும் கருவியை (G.P.S) உபயோகித்து தம் தொழில்சார் நடவடிக்கைகள  மேற்கொள்கின்றனர். வெளிச்சவீடுகள் ஆகாய விமானங்களுக்கும் சரியான திசைகாட்டுவதிலும் உதவியாக இருந்தன. 

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வெளிச்சவீடுகள் கட்டப்பட்டன. இந்த வெளிச்சவீடுகள் இம்பீரியல் வெளிச்சவீட்டு சேவையினால் (Imperial Light house service)  இயக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. 

சில வெளிச்ச வீடுகளைப் பார்த்துக்கொள்வதற்கான அலுவலர்கள் (Keepers) பணியாற்றினர். வரலாற்றில் காலனித்துவ ஆட்சியாளரின் குறியீடாக வெளிச்சவீடுகள் உள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் இலங்கைக் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட வெளிச்சவீடுகள் படிப்படியாக கையளிக்கப்பட்டு1976 இல் முழுமையான கையளிப்பு நிறைவு பெற்றது. இலங்கைத் துறைமுக அதிகார சபையின் (Sri lanka Port Authority – SLPA)  கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான வெளிச்சவீடுகள் கொண்டுவரப்பட்ட போதிலும், மிகுதியான வெளிச்சவீடுகள் இலங்கைக் கடற்படையின் (Sri lanka Navy) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இலங்கையில் 25 வெளிச்சவீடுகள் இருக்கின்ற போதிலும் 16 வெளிச்சவீடுகள் செயற்படும் நிலையில் உள்ளன.இவற்றில் நான்கு சர்வதேச வெளிச்சவீடுகள்.

கோவளம் வெளிச்சவீடு 

காரைநகரில் நீண்டு உயர்ந்து வரிசை வரிசையாக அமைந்த பயன்தரு தென்னை மரத் தோப்புக்கள் நிறைந்த கோவளம் எனப்படும் வளமான குறிச்சியில் கோவளம் வெளிச்சவீடு அமைந்துள்ளது. பார்ப்பவர்கள் பிரமிக்கத்தக்க கம்பீரமான தோற்றம் மிக்கது. கோவளம் வெளிச்சவீடு தொடர்பான ஆவணங்களில் Kovilan Point Light house is a Light house on the island of Karaitivu in northern Srilanka.  எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவளம் வெளிச்சவீட்டிற்கான நிலையம் 1899ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1916 ஆம்ஆண்டு கட்டப்பட்ட கோவளம் வெளிச்சவீடு 30 மீற்றர் (98 அடி) உயரம் உடையது. சதுரவடிவிலான அடித்தளமும் உருளை வடிவிலான கோபுரமும் முருகைக்கற்களால் (Coral Stones) ஆனது. வெளிச்சவீட்டின் 15 அடி 6 அங்குலம் உடைய சதுர வடிவிலான அடித்தளத்தின் மீது 18 அடி உருளை வடிவிலான 69 அடி உயரமுடைய கோபுரத்தின் மேற்பகுதியில் கண்ணாடியில் வடிவமைக்கப்பட்ட விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.. அடித்தளத்தில் இருந்து விளக்கு வரையிலான உயரம் 86 அடி 7 அங்குலம். 

வெளிச்சவீட்டின் கிழக்குவாயில் ஊடாகச் சென்று உட்பகுதியில் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ள ஏணிகள் மூலம் வெளிச்சவீட்டின் பலகணிக்குச் சென்று அடையலாம். வெளிச்சவீடு பாதுகாப்பாக செயற்படுநிலையில் இருந்தபொழுது மேலே ஏறிச் சென்று பார்வையிடக் கூடியதாக இருந்தது. வெளிச்சவீட்டின் உச்சியில் இருந்து கடற்பரப்பையும்; காரைநகரையும் பார்வையிடக்கூடியதாகப் பலகணி (open gallery)  அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு 30 செக்கனுக்கு 2 வெள்ளை ஒளியைப் பாய்ச்சும் இவ் ஒளி 11 கடல் மைல் தூரத்திற்குச் செல்லும் (Range 11 Nautic miles ) செல்லும். முதலாவது வெளிச்சம் காரைதீவின் வடமேற்கு மூலையில் இருந்து ஒரு கம்பத்தில் இருந்து காட்டப்பட்டது. வெளிச்சவீடு செயற்படு நிலையில் இருந்த போது எரிவாயுவின் மூலம் ஒளியூட்டப்பட்டது. இவ் வெளிச்சவீடு ஒளிரும் பொழுது கசூரினாக் கடற்கரையில் நின்று சிறப்பாக அவதானிக்க முடியும். வெளிச்சவீட்டுக்கு அருகாமையில் பாதுகாவலர்கள் (Keepers) கடமை நிமித்தம் வசித்த விடுதியும் காணப்படுகின்றது.


காரைநகர் வெளிச்சவீடு காரைநகரின் பழம் பெருமையின் சின்னமாக அல்லது வரலாற்று அடையாளமாக (Symbol of old glory or landmark) தொல் பொருள் பெறுமதிமிக்கதான (Archeological value) வரலாற்றுச் சிறப்பு மிக்க (Historical importance) கட்டுமானமாகும்.

    இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கின்ற பாக்குடாவில் ஒரு முனையை இந்த வெளிச்சவீடு அடையாளப்படுத்தும். காரைநகரில் வெளிச்சவீடு அமைக்கப்பட்டமையால் பூகோள ரீதியில் நமது கிராமத்தின் கோவளம் முனை பெற்றுள்ள முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக உள்ளது.

    யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள பலமான இலங்கைக் கடற்படையின் பிரசித்தமான கடல்வழிப்பாதையில் பெறுமதியான பெரிய அளவிலான வகிபாகத்தை காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை வெளிச்சவீடுகள் கொண்டுள்ளன. 

இவ்வூரின் வடமேற்கு கடற்கரையில் வானுற உயர்ந்த பேரொளி உடையதாய் 'உயிர்களின் அறியாமையாகிய இருளை நீக்கி செல்கதி காட்டும் திருவருள் போல' ஆழ்கடலில் செல்லும் மரக்கலங்களுக்கெல்லாம் அடையும் துறைக்கு வழிகாட்டுவதாய் அமைந்திருக்கின்றது ஒரு கலங்கரை விளக்கம் என ஈழத்துச் சிதம்பரம் எனும் நூலை எழுதிய சிவ ஸ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்துச் சிதம்பர புராணத்தை இயற்றிய புலவர்மணி சோ. இளமுருகனார் காரை நாட்டின் வடமேற்குப் பக்கமாக கடலை அடுத்துள்ள பகுதி கோவளம் எனப்படும். கி.பி. 1284 இல் மாக்கோப்போலோ சீனத்திலிருந்து மேலைத்தேசங்களுக்குப் போகும் வழியில், யாழ்ப்பாணத் துறைமுகம் ஒன்றிலே தாம் தங்கியதாகவும் அதன் பெயர் கோளம் என்றும் அங்கே சீனம் முதலிய தேசங்களிலிருந்து கப்பல்கள் வணிகம் செய்யும் பொருட்டு வந்துபோயின என்றும் கூறியுள்ளார். இவர் கூறிய கோளம் என்ற பெயரே கோவளம் என மாற்றமடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது உறுதிப்படுத்தப்படுமாயின் காரைநகர் கோவளம் கடற்கரையைக் குறிக்கும்.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஒளிபரப்பாது அமைதியாக ஒளிராது இருக்கும் காரைநகர் வெளிச்சவீட்டினை புனரமைப்பதற்கான பணிகள் வெற்றி பெற்று வெளிச்சவீடு கடல் பயணத்திற்கு ஒளிவீசுவது மாத்திரமன்றி காரைநகர் கால் நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலமைக்கு மீண்டும் திரும்பிடவும் ஒளிபரப்ப வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

2927

 

காங்கேசன்துறை வெளிச்சவீடு

 

காங்கேசன்துறை வெளிச்சவீடு 1893ம் ஆண்டு கட்டப்பட்டது. 22 மீற்றர் உயரமுடைய இவ் வெளிச்சவீடு கவனிப்பாரற்று உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமையை அறிந்து கொள்வதற்கான அடையாளச் சின்னமான இவ் வெளிச்சவீட்டை இலங்கை காலாட்படையின் பொறியியலாளர்களும் (Sri lanka Army Engineers) 5 வது பொறியியல் சேவை படைப்பிரிவினரும் 5th Engineer Services Regiment of sri lanka Army) தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனருத்தாரணம் செய்தார்கள். வெளிச்சவீட்டின் மேலே திறந்த பலகணி (open gallery) அமைக்கப்பட்டுள்ளது. விளக்கின் (Lantern) உச்சி தொப்பி போன்ற அமைப்பினாலான செம்பு கலந்த (Copper mixed) உலோகத்தால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றில் கடல்சார்ந்த செயற்பாட்டில் பிரித்தானியா கலைஞர்களினதும் பொறியியலாளர்களினதும் முயற்சிகளை நினைவு கொள்வனவாக இவ்வெளிச்சவீடு அமைந்துள்ளது.

KKS

 

கோவளம்


காரைநகரின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்றுச் சிறப்பு அம்சங்கள் கோவளம் பகுதியில் உண்டு. ஈழத்துச் சிதம்பர புராணத்தை இயற்றிய புலவர்மணி சோ. இளமுருகனால் கோவளம் பற்றி பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார் 'கரை மருங்கின் றெங்கடந்த நெடுங்காடு' கடற்கரையோரத்தில் தென்னைகள் நெருங்கி வளர்ந்த பெரிய தென்னந்தோட்டங்கள் நிறைந்த இடம் கோவளம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2425

ஆங்கிலேயர், ஐரோப்பியர் போன்ற வெள்ளை இனத்தவர் பலர் குதிரை வண்டிகளில் வந்து கோவளம் கடற்கரைப் பகுதியில் சில நாட்கள் தங்கிச் சுகம் பெற்றுச் செல்வர் என்று அந்நாட்டவர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

    அந்தி மாலையில் வானம் செக்கர் படர்ந்த அழகான செவ்வானமாகக் காணப்படும். இக்காட்சியை மேற்குக் கடற்கரைகளில் காணலாம். ஞாயிறு சில காலம் மகரக்கோட்டிலும் (மார்கழி 21) சில காலம் கற்கடகக் கோட்டிலும் (ஆனி 21) நிற்றலாய் ஒரு தன்மையாய் காணமுடியாது. கோவளக் கடற்கரையில் இரண்டு காலங்களில் இக் காட்சியை காணக்கூடியதாக இருக்கும். இக்காட்சியை எக்காலத்திலும் ஒரே தன்மையிற் காணக்கூடியவாறு அழகு அழியாமல் உயிர்ப்புள்ள ஓவியமாக  கோவளத்தின் மேற்கே உள்ள வானத்தில் பிரமதேவன் தீட்டிவைத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார். 

சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெற்றவர்கள்; தாங்கள் வாழும் காலப்பகுதியில் பிரபல்யம் பெற்ற வசதிகளைக் கொண்ட வீடுகளை அமைப்பது வழக்கம். ஒரு நூற்றாண்டுக்கு அண்மிய காலப்பகுதிக்குரிய பெரிய பல்வேறு அமைப்பிலான வீடுகள் கோவளம் பகுதியில் காணப்படுகின்றன. அவ்வக் காலப்பகுதிக்குரியனவும், அவரவர் அந்தஸ்தை விளக்குவனவாகவும், அவரவர் குடும்பத்தின் வரலாற்றுப் பதிவுகளை கொண்ட பல வீடுகளைக் கண்ணுற்ற பொழுது காத்திரமான அப்பெரிய மனிதர்களின் சமூகப் பெறுமானத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது. பல எண்ணிக்கையான தென்னை மரங்கள், பனை மரங்கள், வேறு பயன்தரு மரங்களும் இன்றைய மழை காலத்தில் செழிப்பாக மகிழ்வுடன்  தங்கள் சொந்தக்காரர்களின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன.


பேப்பர் சுவாமிகள்


காரைநகர் பற்றிக் குறிப்பாகக் கோவளம் குறிச்சி பற்றி எழுதும் போது பேப்பர் சுவாமிகளின் வரலாறு எழுதாவிடின் அவ்வெழுத்து முற்றுப்பெறாத ஒன்றாகவே அமையும். பேப்பர் சுவாமிகள் என மக்கள் மத்தியில் பிரபல்யம் மிக்க இவர்; வீரபாகு வேலுப்பிள்ளை முருகேசு    ( V.V. முருகேசு) எனும் இயற் பெயர் கொண்டவர். கடலலைகள் தாலாட்டும் இயற்கை எழில் மிக்க அமைதியான சூழலில் ஆச்சிரமம் அமைத்து தவவாழ்வு வாழ்ந்த ஞானி பேப்பர் சுவாமிகள் தன்னை நாடிவருபவர்களின் எண்ணஓட்டங்களைச் சொல்லும் வல்லமை மிக்க ஞானம் கைவரப் பெற்றவர். தன் இறுதிக் காலத்தில் நண்டுப்பாழி எனும் குறிச்சியில் தவவாழ்வு வாழ்ந்து சமாதியானவர். ஞானியர் சித்தர் வரிசையில் நமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்தவர் வரிசையில் முதன்மையானர்.

    பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தியின் மரணத்தை எதிர்வு கூறியதன் மூலம் இந்திய ஆட்சியாளர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர். சுவாமிகள் அனுப்பிய தபால் அட்டை ( Post Card) இந்தியாவிலுள்ள நூதன சாலை ( Museum) ஒன்றில் பேணப்படுவதாகச் செய்திகள் இருந்த போதிலும் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. இலங்கையில் இந்தியாவின் உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிய திரு.V.V. கிரி தனது பதவிக்காலத்தில் பல தடவைகள் பேப்பர் சுவாமிகளின் தரிசனத்திற்காக வருகை தருபவர். பின்னர் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர். பேப்பர் சுவாமிகளுக்கு சமஷ்கிருத மொழியில் இருந்த ஆர்வத்தை அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் சுவாமிகளுக்கு ஒரு தொகுதி சமஷ்கிருத நூல்களை அன்பளிப்புச் செய்தார்.

பாரததேசத்தின் சுதந்திர போராட்ட வீரர் J.C குமரப்பா நோயுற்ற வேளை சுவாமிகளின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து ஆசி பெற்று குணமாகியவர். திரு குமரப்பா நோயின் நிமித்தம் தனியான குடிசையில் வசிக்க வேண்டிய தேவை இருந்தமையால் தனியாக குடிசையில் வசித்தார். அவர் வாழ்ந்த குடிசை ஆச்சிரமத்திற்கு அயலில் இருந்தது. அக்குடிசை குமரப்பா குடிசை என அழைக்கப்பட்டது. (Kumarappa Cottage

    யாழ்ப்பாணத்து சட்டத்தரணிகள், கல்வி மான்கள் அரச அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள் சஞ்சலம் மிக்க வேளைகளில் சுவாமிகளின் ஆசி பெறுவதற்காக ஆச்சிரமத்திற்காக வருகை தருவது வழக்கம். 
 இங்கிலாந்து தேசத்து நாளேடுகளில் நிரூபராக, கட்டுரையாளராக பணியாற்றியவர். செழுமையும், புலமையும் மிக்க ஆங்கில எழுத்தாற்றல் பேப்பர் சுவாமிகளுக்கு அரசியல் வாதிகள் மத்தியிலும் உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. 

    அமெரிக்காவின் தாவரவியற் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய  பேராசிரியர் விஞ்ஞான பாட செயலமர்வுக்கு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வருகை தந்த போது பேப்பர் சுவாமிகளை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பேப்பர் சுவாமிகளைத் தரிசித்த பின் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவருடன் பின்வருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார் அவ்வாசிரியர்.

சுவாமிகள் தான் அறிந்திராத பல பத்திரிகைகள் பற்றி தன்னிடம் வினவியதாகவும் வேறும் பல முக்கியமான உலக விடயங்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்தமை தன்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய தாகவும் உங்கள் கிராமத்தில் மிகப்பெறுமதியான சுவாமிகள் வாழ்ந்து கொண்டிருப் பதையிட்டு நீங்கள் பெருமை அடையவேண்டும் எனக் குறிப்பிட்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.

சுவாமிகளிடம் ஆங்கிலம், கணிதம் பயின்ற இளைஞர்கள் பிற்காலத்தில் அப்பாடங்களைத் திறமையாகக் கற்பித்து பெருமையடைந்தார்கள். ஒரு நாள் ஆச்சிரமத்தில் உணவுப்பொருட்கள் இல்லாமையை சுவாமிகளிடம் தெரிவிக்கத் தயங்கி நின்ற மாணவர்களைப் பார்த்து சுவாமிகள் உணவுப்பொருட்கள் பாதி வழிக்கு வந்துவிட்ட உணவைச் சமைப்பதற்கான பாத்திரங்களை தயார் செய்யுமாறு கூறினார். சிறிது நேரத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வாகனம் ஆச்சிரமத்திற்குத் தேவையான சமையல் பொருட்களுடன் வந்து சேர்ந்தது. சுவாமிகளின் அருட் பேற்றை ஏற்கனவே உணர்ந்திருந்த மாணவர்கள் இச்சம்பவத்தின் பின் மேலும் பக்தியுடன் நடக்கலாயினர்.

    ஆச்சிரமத்தில் அதிக எண்ணிக்கையான தோசைகள் சுடவேண்டிய தேவை இருந்தமையால் சுடுபவர் தோசை சுடும்பொழுது ஈரப்பசுமை மிக்க துணியை நெஞ்சில் கட்டி அடுப்பின் செம்மையில் இருந்து தனனைப் பாதுகாப்பது வழக்கம்.

     பேப்பர் சுவாமிகள் சமாதி அடைந்த பின்னர் 1990 வரை சுவாமிகளின் சமாதியை தரிசிக்க வருகை தருகின்ற வலிகாமத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் பேப்பர் சுவாமிகளின் சமாதி காரைநகருக்கு பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் சக்தி உடையது எனக் கூறினார்.

    திரு. ஆ. தியாகராஜா அவர்கள் காலையில் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று சுவாமிகளுக்கு உரிய கடிதங்களைப் பெற்ற வந்து சுவாமிகளிடம் கையளித்த பின்னரே பாடசாலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர். 
சுவாமிகள் நயினாதீவு நாகபூ10சணி அம்பாளை குலதெய்வமாக வணங்கியவர்.  அடிக்கடி நயினாதீவு சென்று அம்பாளை வழிபடும் வழக்கத்தைக் கொண்டவர்.

    திருஞானசம்பந்த சுவாமிகள் திருவீழிமிழலையில் வீற்றிருந்த இறைவன் புகழ்பாடி பதிகங்கள் பாடியவர். பேப்பர் சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமத்திலும் திருவீழி மரம் இருந்தது. திருவீழி மரத்தின் கீழ் இருந்து சுவாமிகள் ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அவரின் கலந்துரையாடல்கள் சிந்தனைகள் யாவும் இம்மரத்தின் கீழே நடைபெற்றது. இம்மரத்தின் கீழ் அமர்ந்து செயற்படுவதன் மூலம் ஆன்மீக இன்பத்தை அனுபவித்தார். ஆன்மீக உள்ளுணர்வுகள் வெளிப்படுவதற்கு இம்மர நிழல் சுவாமிகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது.

    நான் பத்து வயது சிறுவனாக இருந்த போது தந்தையாருடன் பேப்பர் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்குச் சென்றிருக்கின்றேன். அமைதியான சூழலில் இருந்த ஆச்சிரமம் நினைவில் இருக்கின்ற பொழுதும் எழுதுவதற்காக எதுவும் ஞாபகத்தில் இல்லை.

    பேப்பர் சுவாமிகளின் காலத்தில் இளைஞர்களாக இருந்து இன்று வரலாற்றுப் பதிவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரியவர்களும் சுவாமிகளைப் பக்தி சிரத்தையுடன் நினைவில் வைத்திருக்கின்ற பெரியவர்களும் இன்றும் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று தரிசனம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பெரியவர்களும் மேற்கூறிய அனைத்தையும் தெரிவித்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இப்பெரியார்களின் கருத்துக்கள் பெறுமதிமிக்க பேப்பர் சுவாமிகள் வரலாற்றை இன்றைய இளம் சமூகம் அறிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது

பேப்பர் சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள நண்டுப்பாழி

Ko3 Ko4

காரைநகரின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக பாதுகாக்கப்படவேண்டிய இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோவளம்


இந்தியாவின் தென் மாகாணங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் (State) திருவனந்தபுரத்திற்கு 17 கிலோமீற்றர் தொலைவில் கோவளம் எனும் கிராமம் அமைந்துள்ளது. அமைதியான மீன்பிடிக் கிராமமாகக் காணப்பட்ட கோவளம் பகுதி 1930 களில் சுற்றுலா மையமாக அறிமுகப்படுத்தப்பட்டு 1970 களில் சுற்றுலாத்துறையில் பிரபல்யமான இடத்தைப் பெற்றுக் கொண்டது. திருவாங்கூர் மேன்மை தங்கிய மகாராணி கோவளம் பகுதியில் உள்ள கற்பாறை ஒன்றில் அரண்மனை ஒன்றினை அமைத்ததன் மூலம் கோவளம் பிரபல்யம் பெற்றது.

இந்தியாவுக்கு வருகை தரும் மேற்கத்தைய நாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் கோவளம் கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது

File source: http://wikitravel.org/shared/File:Kovalam_Banner.jpg

File source: http://wikitravel.org/shared/File:Kovalam_Banner.jpg

 

S.K.Satha

திரு. எஸ்.கே சதாசிவம் ஆசிரியர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம்   காரை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கோல் காப்பாளர் என்ற நிலையில் அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம், வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின்  பயிற்றுவிப்பாளர். தொழிற்சங்க அலுவலராக பணியாற்றியவர் கல்விக்கட்டமைப்பில் பல பதவிகளை வகித்தவர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தின் (German Technical Cooperation GTZ ) வடகிழக்குமாகாண செயற்றிட்டங்களில் கடமையாற்றியவர்.

2 comments

    • sathasivam.s.k. on December 2, 2015 at 11:47 am

    Thank u for u comments

    • Thirukumaran. on November 29, 2015 at 9:05 am

    Thank you so much for these details of OUR LAND MARK GLORY OF LIGHT HOUSE. When i was at my small age (till 16 years), i studied in Karainagar..During those days i used to wonder about this LIGHT HOUSE. When ever my friends and me visits Casuarina Beach, This beach and THARAVAI ground was our play grounds.From THARAVAI ground i could see the flashing beam of this LIGHT house through the Palmyra trees far away. Remembering now about “PAPER SAMY” now. When my aunt came from Singapore on holiday visit she stayed with us, Once we all went and met this SWAMY. I was about 12 or 13 years old then i think. He was a good ASTROLOGER. and i vaguely remember him.

Comments have been disabled.