காரைநகர் வரலாற்றில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு விளங்கும் களபூமி திக்கரைக்கு அண்மையில் அமைந்துள்ள தன்னை பிள்ளையார் ஆலயம் கடந்த பல தசாப்தங்களாக பொலிவிளந்த நிலையிலும் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய நிலையிலும் காணப்பட்டது. 2010ம் ஆண்டு இப்பகுதியில் வசித்து வருபவர்களாலும், அவர்களது வழித்தோன்றல்கலாலும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலின் வரலாற்று சிறப்பு கருதியும், ஆகம முறைகளை தழுவியும் மூலஸ்தானம், அர்த்தமண்டபம் என்பன முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 வருட காலமாக நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளை தொடர்ந்து இவ்வருடம் கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு திருப்பணி சபையினர் முயற்சி செய்து வருகின்றன. தற்போதைய திருப்பணி வேலைகளையும் கருங்கற்களினால் அமைக்கப்பட்டு வரும் மூலஸ்தான தூபி மற்றும் கோயில் சுற்றுப்புறங்களின் காட்சிகள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.
யமக அந்தாதி பாடல் பெற்ற
தன்னை வரசித்தி விநாயகர் ஆலயம்
திருமூல நாயனாரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட ஈழமண்டலத்தின் வடபாலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் திருக்கோயில்கள் நிறைந்துள்ள காரைநகரில் மேழிச் செல்வம் மிக்க களபூமியில் நெல்வயல்கள் சூழ விளங்குவது தன்னைப் பிள்ளையார் திருப்பதியாகும்.
இவ்வாலயம் களபூமி திக்கரை முருமூர்த்தி கோயிலுக்கு மிகவும் அண்மையில், கிழக்கு திசையில் உள்ளது. சுமார் மூன்று நூற்றாண்டுகள் புராதனமுடைய இக்கோயில் காரைநகரிலுள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
இக்கோயிலின் வரலாறு தொடர்பாக அறியப்படுவது யாதெனில், இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு முன்னர் இராமேஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள கணபதி திட்டு என்னும் கிராமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து வந்த சில அந்தணர் குடும்பங்கள் வள்ளங்களில் தம்மோடு கொண்டு வந்த பிள்ளையார் விக்கிரகத்தை உடுவில் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் விக்கிரகம் வந்த வள்ளம் காரைநகர் களபூமி கிழக்குப் பகுதியைச் சென்றடைந்து தங்கி விட்டது,
ஆகவே அந்த அந்தணர் குடும்பங்களும் அவ்விடத்திலேயே குடில் அமைத்து பிள்ளையாரைப் பிரதிட்டை செய்து விட்டு தாங்களும் அருகாமையில் குடிசைகள் அமைத்து வாழலாயினர். காலப்போக்கில் அருள் மிகுந்த இவ்விநாயகரின் பெருமையை ஊர் மக்கள் யாவரும் அறிந்தனர். மக்கள் ஒன்று சேர்ந்து குடிசைக் கோயிலை கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்றாவாறு விருத்தி செய்து கும்பாபிடேகம் செய்வித்தனர்.
இக்கோயிலுக்கு பெருமை கொடுக்கக் கூடியது இக்கோயிலின் பெயரிலுள்ள பழந்தமிழ் பிரபந்தமான தன்னை யமக அந்தாதி. ஆரம்ப காலத்தில் இக்கோயில் அர்ச்சகராக இருந்தவர் பிரம்மஸ்ரீ கா. முருகேச ஐயர் ஆவர். இவர் தன்னைப் பிள்ளையார் மீது தன்னை யமக அந்தாதி பாடியுள்ளார். இந்த அந்தாதியின் முதல் எழுபது செய்யுள்களுமே இவராற் பாடப் பெற்றன. மற்றைய முப்பது செய்யுள்களும் இவரது மகன் கார்த்திகேயப் புலவரால் பாடப் பெற்றவை யாகும். இவ்வந்தாதி நீண்ட காலமாக ஏட்டுச் சுவடியாகவே இருந்தது. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் பெரு முயற்சியினால் புலவர்மணி, பண்டிதர், கலாபூஷணம் வட்டுக்கோட்டையூர் க. மயில்வாகனனார் அவர்களின் உரையுடன் 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அறிஞர் ஒருவரால் எழுதப்பட்ட அந்தாதி இலக்கியம் என்னும் நூலில் தன்னை யமக அந்தாதியும் குறிப்பிடப்பட்டிருப்பது இதன் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டும்.
தன்னை யமக அந்தாதி, 18ம் நூற்றாண்டில் சின்னத்தம்பி புலவர் இயற்றிய கல்வளை யமக அந்தாதி மற்றும் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெல்லிப்பழை பொன்னம்பலம்பிள்ளை இயற்றிய மாவை யமக அந்தாதி போன்ற நூல்களை ஒத்தது. கல்வளை, மாவை என்ற சொற்கள் யமகமாகக் கொண்ட பாடல்கள் முறையே கல்வளை யமக அச்தாதியிலும், மாவை யமக அந்தாதியிலும் உள்ளது போல் தன்னை என்ற சொல்லை யமகமாகக் கொண்ட பின்வரும் பாடலை யமக அந்தாதியில் காணலாம்.
தன்னையன் போடு துதிப்பா ரகத்தினிற் சார்த்திடுநா
தன்னையன் போற்று தகர் வாகனற்குத் தனிபின்றிய
தன்னை யன்போத வுருவானவன் தனியேற்குத் துணை
தன்னையன் போர்புரி யங்குச பாசம் தரித்தவனே. (8)
தன்னை யமக அந்தாதியின் உள்ள பின்வரும் பாடல் இவ்வாலயத்தின் தல விருட்சங்களின் சிறப்பை விளக்குகின்றது. பரிசம்பு-நாவல். மிகவும் அண்மைக் காலம் வரையில் இவ்வாலயத்தைச் சூழ நாவல் மரங்களைக்; காணக்கூடியதாக இருந்தது. இன்று ஆலயத்தின் முற்பக்கத்தில் பல விழுதுகளுடன் கூடிய ஆலமரங்கள் இக்கோயிலின் பழைமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
பரிசம்பு காணத்தென் னற்களித் தோற்கருள் பாலிக்கும்
பரிசம்பு காதலன் மெய்யன்பினோடு பணியிலினிப்
பரிசம்பு காமற் கதிகொடுப்பான் பருத்துத் தளைத்துப்
பரிசம்பு கராகி றேங்கிடுந் தன்னைப் பழம் பொருளே. (33)
சித்திரைக் கஞ்சி, விநாயகர் சதுர்த்தி, பிள்ளையார் கதை போன்ற திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற இவ்வாலயம் பல ஆண்டு களாக எவ்வித திருப்பணிகளும் செய்யாமையினால் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்தது. 1-4-2010 இல் பாலஸ்தான கும்பாபிடேகம் நடைபெற்று புனர் நிர்மான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத் திருப்பணி சபையினர் புனர் நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்து 2015ம் ஆண்டளவில் கும்பாபிடேகம் நடத்துவதற்கு ஊர் மக்களின் ஆதரவுடன் கடினமாக உழைத்து வருகின்றனர். இத்திருப்பணியில் அன்பர்கள் இணைந்து தன்னை விநாயகர் திருவருள் பெறுவீராக.
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.