Category: களபூமி தன்னை பிள்ளையார்
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
காரைநகர் களபூமி தன்னையம்பதி
திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம்
விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு
அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
ஈழவள நாட்டின் வட-மேற்பாகத்தின் காரைநகரின் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருளும் பொருட்டு களபூமி தன்னையம்பதியில் கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டு விளங்கும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 22ஆம் நாள்(07-07-2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து(10) தினங்கள் உற்சவம் நடைபெறுவதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் விநாயகப்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகைதந்து விநாயகப்பெருமானை தரிசித்து பேரின்பப் பெருவாழ்வை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வு!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அபிஷேக தீபாராதனையை தொடர்ந்து ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வும். விசேட சொற்பொழிவும் இடம்பெற இருப்பதால் அடியவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு :-அன்றைய தினம் அன்னதான நிகழ்வும் இடம்பெறும்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவம்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் காலை7.00 மணிக்கு பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் விநாயகப்பெருமானுக்கு பிடித்த மோதகம் ,வடை மற்றும் பல இனிப்பு பண்டங்களினால் படையல் படைக்கப்பட்டு மாலை6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனையினை தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் அறநெறி மாணவர்களும் சக்தி மேம்பாட்டு கழக மாணவர்களும் இணைந்து வழங்கிய கலைநிகழ்வுகளும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு எம்பெருமான் வீதியை வரும் காட்சியும் இடம்பெற்றன.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம் காலை 9.00 மணிக்கு மூல மூர்த்திக்கு சங்காபிஷேகமும் பரிபாலன மூர்த்திகளுக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம் பெற்றன.மாலை விசேட பயனை நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் மற்றும் விநாயகப்பெருமானுக்கு பொன்னூஞ்சல் பாடல் பாடப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் ஆலய அறநெறி மாணவர்களுக்கு பிரபல வர்த்தகர் அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய விளம்பி வருஷம் 2018 அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய விளம்பி வருஷம் 2018 அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
விநாயகப்பொருமான் அடியார்களே!
ஈழத்தின் திருநாட்டின் வடபால் திசையில் அமைந்துள்ள காரைநகரில் உதயன் உதிக்கின்ற திசையில் அமைந்துள்ள தன்னையம்பதியில் ஆலமர தல விருட்ஷத்துடன் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு திருவருள் பலித்துக்கொண்டு விளங்கும் தன்னை சித்தி விநாயகப்பொருமானின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நிகழ்வும் மங்களகரமான விளம்பி வருஷம் ஆனித்திங்கள் 4ஆம் நாள் (18/06/2018) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவம் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது. தினமும் முற்பகல் 9.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 8.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும் .இக் காலங்களில் அடியார்கள் அனைவரும் ஆசாரசீடர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து அபிஷேக ஆராதனைகளுடம் உட்சவத்தைக்கண்டு தரிசனம் செய்து இஷ்டசித்திகளை பெற்ருயிமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/03/2018 புதன்கிழமை இடம்பெற்ற சதுர்த்தி உற்சவம்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சதுர்த்தி உற்சவம் 21/03/2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று சாமி வீதியுலா வரும் காட்சியும் அதனை தொடர்ந்து அறநெறி மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள் மற்றும் முத்தமிழ் பேரவையின் கலை நிகழ்வுகளும் தன்னை சித்தி விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.
இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று புத்தகவடிவில்- காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு
இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று புத்தகவடிவில்-
காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு
காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் மீது இரு நூற்றாண்டுகளுக்குமுன்னர் பாடப்பெற்ற நூல் தன்னை யமக அந்தாதி ஆகும். இந்நூல் இயற்றியவர்கள் மேருகிரி ஐயர் மரபில் வந்த முத்தமிழ் வித்தகராக விளங்கிய முருகேசுஐயர் அவர்களும், அவரின் புதல்வர் கார்த்திகேயப் புலவர் ஆவர்களும் ஆவர். சிறந்த புலவராகிய முருகேசுஐயர் நாவலரின் ஆசிரியராகிய இருபாலை சேனாதிராய முதலியாரின் நண்பர். ஆறுமுகநாவலர் காலத்தில் வாழ்ந்த கார்திகேயப் புலவர் காரைநகரில் சைவமும் தமிழும் வளர்த்த பெரும் புலவர்.
ஓல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் காரைநகரில் வாழ்ந்த முருகேசையரின் பாட்டனரான சங்கீத சுப்பையரினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தொடங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இவரது சந்ததியினரான முருகேசையரையும் கார்த்திகேயப் புலவரையும் தன்னை யமக அந்தாதி பாடவைத்து இந்த இலக்கிய மரபை தொடரச் செய்ததினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தழைத்தோங்கச் செய்தவர் தன்னையம்பதியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் என்றால் மிகையாகாது. தமிழ் நாட்டில் வெளிவந்த அந்தாதி இலக்கியம் என்னும் நூலில் தன்னை யமக அந்தாதி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை, இதன் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டும்.
மிக நீண்டகாலமாக ஏட்டுச் சுவடியிலிருந்த தன்னை யமக அந்தாதியை உரையுடன் வெளியிடவேண்டும் என்றுகார்த்திகேயப் புலவரின் வழித்தோன்றலும் காரைநகரில் தோன்றிய பழைய இலக்கிய நூல்கள் புத்தகவடிவில் காண்பதற்குக் காரணமாக இருந்தவரும் ஆகிய சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் விழைந்தார்கள். இவரது பெருமுயற்சியினால் பண்டிதமணி க. மயில்வாகனனாரின் உரையுடன் 2004 ஆம் ஆண்டு இந்நூல் அச்சிடப் பெற்றது. இந்நூல் வெளியிடுவதற்கான சகலவசதிகளையும் தன்னை பிள்ளையார் ஆலய அன்பரான அமரர் சி. தம்பிராசா (முன்னாள் உபஅதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி) அவர்கள் செய்து உதவினார்கள்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற தன்னைப் பிள்ளையார் ஆலயமுன்றலில் 15-10-2017 அன்று இந்நூல் அறிமுகம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது.
தன்னை யமக அந்தாதியை அறிமுகம் செய்து யாழ் உதயன் பத்திரிகையில் நூல்வரிசை என்ற பகுதியில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதிய கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.
தன்னையமகஅந்தாதி
கலாபூஷணம் சைவப் புலவர் சு. செல்லத்துரை
களபூமி காரைநகர்தன்னையம்பதிவிநாயகப் பெருமான் மீது இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்டது இந்நூல். சிவத்திரு முருகேசையரால் தொடங்கப் பெற்றுக் குறையாயிருந்த இந்நூலை அவர்மகன் கார்த்திகேயப்புலவர் தனது பதினெட்டாவது வயதில் பூர்த்தி செய்தார் என அறியமுடிகிறது. இதுவரை காலமும் ஏட்டில் கையெழுத்துப் பிரதியாயிருந்த இந்நூல், காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பிராசா தம்பதியினரால் அச்சேற்றி வெளியிடப் பெற்றிருக்கிறது.
இந்நூலுக்குப் புலவர்மணி பண்டிதர் கலாபூஷணம் வட்டுக்கோட்டையூர் க. மயில்வாகனனார் உரையெழுதியுள்ளார். வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் கனதியான அணிந்துரை வரைந்துள்ளார். உரையாசிரியரின் முன்னுரையும், இவ்வணிந்துரையும் நூலைப் படிப்போரை நூலின்பால் வழிப்படுத்தவல்லனவாக அமைந்துள்ளன.
மொழியைச் சாணக்கியத்துடன் கையாளும் ஆளுமையும், ஆற்றலும் வாய்ந்த வித்துவம் நிறைந்த புலவர்களால் பாடப்படுவது “யமகஅந்தாதி”. இது மடக்கு எனவும் சொல்லப்பபடும்.
அந்தாதி என்பது தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். அது ஒரு செய்யுளின் இறுதியில் நின்றசீராவது, சீரின் உறுப்பாவது அடுத்துவரும் செய்யுளுக்கு முதலாகவரச் செய்யப்படுவதாகும். (முதற் பாடலின் அந்தம் அடுத்தபாடலில் வருவதாகும்)
யமகஅந்தாதி என்பதுமுதல் எழுத்துத் தொடங்கி அடுத்துவரும் பத்தெழுத்து ஈறாக ஓர் அடிபோல் நான்குஅடிகளும் பாடப்படுவதாகும். ஓர் அடியில் வந்தபொருள் மற்றோர்அடியில் வருதலும் கூடாது. ஒவ்வோர் அடியிலும் பொருள் வேறுபட்டு இருத்தல் வேண்டும்.
நமது ஈழத்திலக்கிய பாரம்பரியத்திலே மரபுவழிப் பாடல்களைப் புலமையாக்கம் எனவும் இக்காலப் பாடல்களை எளிமையாக்கம் எனவும், இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவர். புலமையாக்கத்தின் பண்புக் கூறுகளாக வித்துவம், சமக்காரம், புலமை, இலக்கணம், கொள்கைப் பிடிப்பு, மரபுமீறாமை, பண்பாடுணர்வு என்பன இடம் பெறுகின்றனஎன்பதற்கு இந்நூல் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
பாட்டுடைத் தலைவராகிய தன்னைவிநாயகப் பெருமானின் மூர்த்தி,தல, தீர்த்த விசேடங்களைக் கருப்பொருளாக்கி ஆலயவரலாற்றுப் பெருமையை அகப்பொருள் துறையில் வைத்து, மரபு வழிதவறாது பாடப்பட்ட இந்நூல் புலமைக்கு அணிகலனாகும்.
இத்தகு புலமை வாய்ந்தோர் இன்றும் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்நூலின் உரையாசிரியர் புலவர்மணி மயில்வாகனனார் வகுத்துள்ள உரையே சான்றாகும். அவர்கள், மூலபாடம், சந்திபிரிப்பு, கொண்டு கூட்டுபதவுரை, குறிப்புரை என ஐவகைப்பட்ட நோக்குநிலைநின்று விளங்கக் கூறியுள்ளமை படிப்போர்க்கு உபகாரமாயுள்ளது.
தமிழ் இலக்கியமரபுவழிச் செழுமைக்கும்,தமிழ்ப் புலவர்களின் அளவிடற்கரிய புலமைக்கும், பக்திமேன்மைக்கும் வளந்தரும் இந்நூலை ஏட்டுருவிலிருந்து அச்சேற்றிய வெளியீட்டாளர்களின் பணியும் போற்றுதற்குரியது.
- 1
- 2