கனடா ஆதிசிவன் ஆலயத்தில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொங்கல் விழா 15.01.2016 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கனடா காரை கலாச்சாரமன்றத்தின் சார்பாக திரு. கந்தையா யோகேஸ்வரன்
அவர்கள் இணைப்பாளராக இந்நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.
சிறுவர்களின் கலைநிகழ்வாக இன்னிசை கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு நிகழ்வாகதமிழரும் தைபொங்கலும் பற்றி ரொறன்ரோ தமிழ் கல்விச் சபை
அதிபராக கடமையாற்றும் திரு.பொன்னையா விவேகானந்தன் அவர்களின்
சொற்பொழிவும்இடம்பெற்றது. தமிழ் மொழியே உலகின் மிகவும் பழைமையான மொழி என்பதையும் கனடாவில் வாழும் நாம், ஏன் எமது பிள்ளைகளிற்கு தமிழ்மொழி கற்பிக்க வேண்டும் எனவும் விளக்கினார். ஆவலுடன் சிறார்கள் அதனை செவிமடுத்ததை காண கூடியதாக இருந்தது. நிகழ்சிகள் யாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
ஆதிசிவன் ஆலய பரிபாலகரும் பல் மருத்துவ நிபுணருமான ஆதிகணபதிசோமசுந்தரம் அவர்கள் தமது உரையில் கனடா காரை கலாசாரமன்றம் கனடாவில் வாழும் காரைநகர் மக்களின் பிள்ளைகளிற்கு தமிழ் சமயத்தை வளர்ப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் தமது உரையில் ஊர் மன்றங்களால் சேகரிக்கப்படும் நிதியில் பெரும் பகுதி இங்கு கனடாவில் வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகளிற்கு தமிழ்,சமயத்தை வளர்ப்பதற்கு பயன் படுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.
2014 ஆம் ஆண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பொங்கல் விழா இவ்வருடம் மிகவும் பக்தி பூர்வமாகவும் அதிகளவு மக்கள் கலந்து கொள்ளவும், சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பதானது இனிவரும் காலங்களில் கனடா காரை மக்கள் தமது பிள்ளைகளிற்கு தமிழரின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான தைபொங்கல் நிகழ்வினை மேலும் ஆர்வத்துடன் எடுத்துச்செல்வார்கள் என்பதற்கு இவ்விழா எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.