காரைநகர் கோவளம் விளையாட்டு கழக தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடர் 2018 இல் கோவளம் அணி சம்பியன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக கோவளம் விளையாட்டு கழகம் நாடாத்தி வரும் மென்பந்து சுற்றுத்தொடரின் 2018 இல் கோவளம் விளையாட்டு கழகம் கிண்ணத்தினை கைப்பற்றியது.கடந்த மாதம் 22 23 24 29 30 திகதிகளில் காரைநகரில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
காரைநகரில் லீக்முறையில் நடைபெறும் ஒரே ஒரு போட்டித்தொடரான இவ் சுற்றுத்தொடரில் இம்முறை 11 அணிகள் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டியில் காரைச்சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து கோவளம் விளையாட்டுகழகம் மோதியது.நாணய சுழற்சியில் கோவளம் விளையாட்டு கழக அணித்தலைவர் அருட்குமரன் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ய கோவள விளையாட்டு கழகமானது நிர்ணயிக்கப்பட்ட பத்து பந்து பரிமாற்றங்களில் ஏழு இலக்குகளை இழந்து எழுபத்து நான்கு ஓட்டங்களை பெற்றது.அந்த அணி சார்பாக சயந்தன் இருபத்தொரு ஓட்டங்களையும் மயூரன் பதினேழு ஓட்டங்களை பெற காரைச்சலஞ்சஸ் அணி சார்பாக விநோதன் இரு இலக்குகளை கைப்பற்றியிருந்தார்.எழுபத்தைந்து ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய காரைச்சலஞ்சஸ் பத்து பந்துபரிமாற்றங்களில் எட்டு இலக்கினை இழந்து நாற்பத்தொன்பது ஓட்டங்களை மாத்திரமே பெற இருபத்தைந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்று கோவளம் விளையாட்டு கழகம் இந்த ஆண்டுக்கான தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடரினுடைய கிண்ணத்தை தனதாக்கியது.
போட்டியின் ஆட்டநாயகனாக 4ஓட்டங்களிற்கு 3 இலக்குகளைக் கைப்பற்றிய கோவளம் விளையாட்டுகழக வீரர் சிவகுமார் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை தொடர் ஆட்ட நாயகனாக காரைச்சலஞ்சஸ் கழக அணித்தலைவர் விநோதன் தெரிவானார்.பிரதம விருந்தினராக காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் கலந்து கொண்டு கிண்ணத்தை வழங்கி வைத்தார் அத்துடன் கலாநிதி விளையாட்டு கழக வீரர் தர்சன் இந்த ஆண்டு தொடரில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரராகவும் அதே கழகத்தை சேர்ந்த சயந்தன் அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரராகவும் தெரிவானதுடன் இப்போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தினை கலாநிதி விளையாட்டுக்கழகம் கைப்பற்றியது.இந்த ஆண்டு மென்பந்து சுற்றுதொடர் தொலைதொடர்பு அனுசரணையாளராகmobitel இணைந்திருந்ததுடன் கோவளம் விளையாட்டு கழக முன்னாள் வீரர்கள், தலைவர்கள்,காரை மண்ணை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் அனுசரணையை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.