Return to செயற்பாட்டு அறிக்கைகள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011–பெப்ரவரி 2012 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
நிர்வாகசபையில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களின் ஊர்ப்பற்று, அர்ப்பணிப்பு, செயற்திறன் ஆகியனவும், கடந்த கால நிர்வாகசபை உறுப்பினர்களின் வழிகாட்டுதலும், அனுபவமும், ஆதரவும் இணைந்து செயலாற்றியதன் காரணமாக இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததையிட்டு மனநிறைவடைகின்றோம். மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி இவ்வேலைத்திட்டங்களை நிறைவேற்ற உதவிய கனடா வாழ் காரைநகர் மக்கள், நலன் விரும்பிகள், வர்த்தகப்பெருமக்கள், அனைவருக்கும் மன்றம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மன்றத்தின் செயற்குழு இக்காலப்பகுதியில் 15 தடவைகள் கூடி, மன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுத்துச் செயலாற்றியுள்ளது. இக்கூட்டங்களை நடாத்துவதற்கு தமது காரியாலயத்தை தந்துதவிய தலைவர் திரு. ரவி ரவீந்திரன் அவர்களுக்கு எமது மன்றம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

 karainagar.com இணையத்தளம் இக்கால கட்டப்பகுதியில் மேன்மேலும் விரிவுபடுத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் உலகம் வாழ் காரை மக்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விணையத்தளத்தின் தினசரி பார்வையாளர்கள் சராசரி 3000க்கு மேல் அதிகரித்துள்ளது. இவவிணையத்தளத்தின் பலபகுதிகள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மரணஅறிவித்தல் பகுதியையும் அதிகமாக மக்கள் பாவித்துவருகின்றனர். அதிகரித்துவரும் நிதிஅன்பளிப்புக்கள் மக்கள் கருத்துக்கள் இதில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியன. குறிப்பாக சுதர்சன் என்பவருடைய புற்றுநோய் சிகிச்சைக்கான அன்பளிப்பு நிதி  PayPal மூலம் உலகம் வாழ் காரை மக்களால் வழங்கப்பட்ட தொகையே மிகக்கூடுதலான தொகையாக இருந்தமை இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. அத்துடன் தமது அங்கத்துவப்பணத்தையும் இதனூடாக செலுத்தும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காரை மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது இணையத்தளத்திலே அவர்களுக்கெனத் தனித்தனியான பகுதிகள் அமைக்கப்பட்டு புதிய வடிவத்தில் 2013 தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்விணையத்தளத்தின் பலபகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுவருகின்றன.  இவ்விணையத்தளத்தில் தமது நேரங்களை செலவுசெய்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப உதவியாளர் திரு.விமலராசா குலசேகரம், கே.கே.எலெக்ரோனிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த 2011 நொவெம்பர் மாதத்திலிருந்து ஆகஸ்ட் 2012 காலப்பகுதியில் காரைநகரிலுள்ள பாடசாலைகளுக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கங்களை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றபோது முதன் முதலாக கூட்டம் GTA Square Hall இல் நடைபெற்றது. காரைநகரின் பிரதான பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் அமைப்பதற்கு 3 இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். களபூமி சுந்தரமுர்த்திநாயனார் வித்தியாலயமும் அதன் சார்ந்த பாடசாலைகளுக்கும் திரு. குகனேசபவான் சிவசுப்பிரமணியம், இந்துக்கல்லூரிக்கு – திரு. சிவகுமார் கனகசுந்தரம், யாழ்ரன் கல்லூரிக்கு திரு. மார்க்கண்டு செந்தில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் களபூமிப் பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கம் திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம் தலைமையில் அமைக்கப்பட்டது. யாழ்ரன் கல்லூரிக்கு எமது மன்றம் முனைந்த போது அக்கல்லூரி பழையமாணவாகள் முன்வராததால் அக்காரியம் தடைப்பட்டது.
காரைநகர் இந்துக்கல்லூரிக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைப்பதில் எமது மன்றம் தீவிரமாக ஈடுபட்டு திரு.தர்மலிங்கம் திருச்செல்வம் அவர்களை தலைமையாகக் கொண்டு பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. அதன் பிற்பாடும் காரை இந்துக்கல்லூரிக்கு பழையமாணவர் சங்த்தின் சார்பில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பணத்தில் ரூ65,000.00 இந்துக்கல்லூரியின் விளையாட்டுப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிற்பாடு ஒருசிலரின் தலையீட்டால் இம்மன்றம் கலைந்துபோனது. அதனையடுத்து காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அமைப்பதில் இணைப்பாளர் திரு.சிவகுமாரனுடன் மன்றத்திற்கும் திருப்திகரமான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில பழையமாணவர்கள் சேர்ந்து தனியாக காரை இந்துக்கல்லூரிக்கு மன்றம் அமைத்தனர். கனடா காரை கலாச்சார மன்றத்துடன் இணைந்த காரை இந்துக்கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கம் அமைக்கும் முயற்சியில் மன்றத்துடன் இணைந்து செயலாற்றிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் அவர்கள் செலவிட்ட மதிப்பிடப்பிட முடியாத நேரங்களுக்கும் எமது வருத்தத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரை வசந்தம் 2011: 09-10-2011 இல் பதிரோவது ஆண்டாக ஸ்காபரோ நகரிலுள்ள சீனக் கலாச்சார கலை அரங்கத்தில் கலை மணமும், காரை மண்ணின் மணமும் பரப்பி கலை ரசிகர்களை வசீகரித்துச் சென்றது. பல தமிழ் விழாக்களுள் தமிழ் ஊடகங்களினாலும், கலை ஆர்வலர்களாலும் பாராட்டுக்களைப் பெற்ற தரமும், சுவையும் மிகுந்த முன்னணிக் கலை விழாக்களுள் ஒன்றாக கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கி வரும் காரை வசந்தம் கலை விழா அமையப் பெற்று விளங்குவது காரைநகர் மக்களுக்கு பெருமை தருவதாகும். கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருந்தார். இவ்விழாவில் வழமைபோல வாழ்த்துச் செய்திகள், விளம்பரங்கள் அடங்கிய விழாமலரும் வெளியிடப்பட்டது.

காரைவசந்தம் 2012: 07.10.2012 பன்னிரண்டாவது ஆண்டாக அதே சீனக் கலாச்சார கலைஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த டாக்டர் கனகமலர் சிறீகாந்தா அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக இலண்டனிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்திருந்த ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா மற்றும் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.பரமநாதர் தவராஜா அவர்களும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத் தலைவர்  திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்களும் சிறப்பித்திருந்தமை வரலாறு காணாத பெருமை என்றே சொல்லவேண்டும். அத்துடன் ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தாவின் வருகையும் அவருடன் சார்ந்த இலங்கையின் புகழ்பூத்த வானொலிக்கலைஞர்கள், தொலைக்காட்சிக் கலைஞர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தமை காரைவசந்தம் என்னும் விழா பல்வேறு கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைய வாய்ப்பாக இருந்தமை மேலும் சிறப்பு. அத்துடன் ஒவ்வொரு காரை வசந்தங்களிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் காரைநகர் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வழமைபோல இவ்விழாவிலும் விழாமலர் வெளியிடப்பட்டது. இவ்விழாக்களுக்கு விளம்பர அனுசரணை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆருத்திரா தரிசனம் – கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் கனடா றிச்மண்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற ஆருத்திரா அபிஷேகமும், ஆருத்திரா தரிசனமும் கடந்த 2012ம் ஆண்டிலேயே இரு விழாக்களும் மிகசிறப்பாக நடாத்தப்பட்டிருந்தது. அதிகாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கான காரைநகரைச் சேர்ந்த அடியார்கள் உள்ளிட்டோர் எம்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டு இன்புற்று அருள்பெற ஆலய மண்டபத்தில் கூடியிருந்தனர். அடியவர்களினால் கொண்டுவரப்பட்டிருந்த பெருமளவிலான அபிஷேகத் திரவியங்களினால் நடைபெற்ற சிறப்பான அபிஷேகத்தைத் தொடர்ந்து தரிசனக்காட்சி இடம்பெற்றது.

இவ்வாண்டுகளில் ஏற்கனவே எமது மன்றத்தால் மக்களின் அனுசரனையுடன் அமைத்துக்கொடுக்கப்பட்ட விசேட திருவாசியில் விசேட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடேசப் பெருமான் விசேட தவில் நாதஸ்வர இசை முழங்க ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தது. இவ்ஆருத்திரா தரிசனங்களுக்கு வருகைதந்த அடியார்கள் மற்றும் பல்வேறு உதவிகள் செய்த அனைத்து மன்ற தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 சென்ற ஜனவரி 8இல் நடைபெற்ற திருவாதிரை உற்சவத்தில் காரைநகரின் கலைஞன் நிஷாந் நந்தகுமார் குழுவினர் இசை நிகழ்ச்சி வழங்கினர். திரு.லக்கிராஜா அவர்கள் பிரதான அனுசரணையாளராக திருவிழாவிற்கான பூசைக்கும் மற்றும் அடியார்களுக்கு வழங்கிய பிரசாதத்திற்கும் நிதியுதவியாக $2000டொலர்களை வழங்கியிருந்தார். அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் இரண்டாவது தடவையாகவும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

டிசெம்பர் 28இல் நடைபெற்ற விழாவில் திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆன்மீக சொற்பொழிவும் இடம் பெற்றன. அத்துடன் மன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்த 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டிக் கலண்டரும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதான அனுசரணையாக அர்ச்சனாஸ் ஸ்தாபன உரிமையாளர் திரு. P.S.சுதாகரன் அவர்கள் சுவாமி அலங்காரத்திற்குத் தேவையான பூக்களை இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைக் கொண்டாட்டம்(கோடை கால ஒன்றுகூடல்) – 2011, 2012: இவ்விரு ஆண்டுகளும் வழமைபோல சென்ற யூலை 17ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பலநூற்றுக்கணக்கான காரைநகர் மக்கள் கூடி மகிழ்ந்த சிறப்பு நிகழ்வாக இது அமைந்திருந்தது. வழமைபோல இவ்வாண்டும் வந்திருந்த மக்கள் அனைவரும் அவர்களின் நகர வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய இல்லங்களாக பிரிக்கப்பட்டு இவ்வில்லங்களுக்கிடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. கிளித்தட்டு, உதைபந்தாட்டம், கயிறிழுத்தல், விநோதஉடை உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறுவர்கள், இளையோர், வளர்ந்தோர், முதியோர் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர். காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை மன்றத் தொண்டர்கள் பல்வேறுபட்ட உணவுவகைகளைத் தயாரித்து பரிமாறிக்கொண்டிருந்தனர். பலர் குழுக்களாக மரநிழல்களில் கூடி ஊரின் நினைவுகளையும், செய்திகளையும் பகிர்ந்து அளவளாவி மகிழ்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. இறுதியில் அதிகபுள்ளிகளைப்பெற்ற இல்லங்களிற்கும், வெற்றி பெற்றவர்களிற்கும் கேடயங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன. இவ்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் உதவிகள் பல செய்த தொண்டர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குளிர்கால ஒன்றுகூடல் 2011 – மக்களின் வேண்டகோளிற்கிணங்க குளிர்கால ஒன்றுகூடல் 2011 டிசெம்பர் 25ம்திகதி Baba Banquet Hall இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது தனிப்பட்ட முறையில் பணம் சேகரிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. குறிப்பாக இவ்விழா மூலம் குழந்தைகள் மிகவும் சந்தோசமான அனுபவத்தைப் பெற்றிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

குளிர்கால ஒன்றுகூடல் 2012: இவ்வருடம் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உற்சவம் காரணமாக விழா நடாத்த முடியவில்லை.

தன்னியக்கத் தொலைபேசி – மன்றத்தின் அறிவித்தல்கள் அனைத்தையும் மக்களுக்கு அறியத்தரும் வகையில் தன்னியக்க தொலைபேசி சேவை அறிமுகப்;படுத்தப்பட்டு மக்களிடம் மிகுந்த பாராட்டையும் பெற்றுள்ளது. இச்சேவையானது விரிவுபடுத்தப்பட்டு லண்டன், சுவிஸ் காரை மன்றங்களுக்கும் கட்டண அடிப்படையில் சேவை வழங்கி  வருகின்றோம்.

மன்றத்திற்கான நிரந்தர தொலைபேசி: 21.05.2011 மன்றத்திற்கான நிரந்தரமான தொலைபேசி இலக்கம் சேவையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 416 642 4912 என்ற இலக்கத்தை அழுத்துவதன் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் தனித்தனியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் திறன் போட்டிகள்: சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித்திறனை வளர்க்கவும் சமய ஈடுபாட்டினை ஊக்குவிக்கவும் என மன்றம் நடாத்திவரும் தமிழ்மொழித்திறன், பண்ணிசைப் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளும் Scarborough Civic Centre இல் நடைபெற்றன. 2011ம் ஆண்டில் 5-17வயதுக்குட்பட்ட 51மாணவர்களும், 2012ம் ஆண்டில் 47மாணவர்களும்  பங்குபற்றியிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகளும், பங்குபற்றிய மாணவர்களுக்கான பாராட்டுவிருதுகளும் காரைவசந்தம் கலைவிழாவில் வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு முதலிடம் பெற்ற மாணவர்கள் கலைவிழாவில் தமது பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தனர். இப்போட்டிகளில் பங்குபற்றும் சிறுவர்கள் அனைவரும் தமது ஆர்வத்துடன் பண்பான ஒத்துழைப்பை போட்டி நடாத்துபவர்களுக்கு வழங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற, மற்றும் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.!

மன்றத்தினால் காரைநகருக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள்: காரைநகருக்கு தேவையான உதவிகளை இனம்கண்டு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளம் வாயிலாக தெரியப்படுத்தியிருந்தபோது ஊர்ப்பற்றும் நல்லிதயமும் படைத்த பல கனடா வாழ் காரை மாதாவின் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து உதவிகளை வழங்குவது அனைவரையும் உளம் பூரிக்கச் செய்துவிட்டது. கனடா-காரை கலாச்சார மன்றமானது எமது உறவுகளின் நலனில் அக்கறையோடு பணியாற்றி வருகின்ற எமக்கான மன்றம் என்ற உணர்வுடன் மன்றத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வைத்து தமது உதவிகளை மன்றத்திற்கூடாக வழங்கி மன்ற வளர்ச்சிக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களின் பணி பாராட்டிற்கும் நன்றிக்குமுரியதாகும். காரை வசந்தம் மற்றும் அன்பளிப்புக்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலிருந்து காரைநகரில்  அரச உதவிகள் கிடைக்க முடியாத, அவசியம் தேவைப்பட்ட பணிகளிற்கும் மன்றத்தினால் உதவப்பட்டுள்ளது. மன்றத்தின் தீர்மானத்திற்கமைய இந்த உதவிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையூடாகவே வழங்கப்பட்டு பணிகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

• பெப்ரவரி 2011: திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பாடசாலைகள் நான்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களிற்கு கற்கைச் செலவுக்காக மாதாந்தம் ஐநூறு ரூபா வீதம் ஒரு ஆண்டிற்கு காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அப்பணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக போதிய ஆதாரம் இல்லாததால் 2012 ஆம் ஆண்டிற்கான திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் பணம் அனுப்பி வைக்கப்படவில்லை. இவ்வுதவியை வழங்கிய குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம் இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கான உதவியை தமது தாயார் பெயரில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 • வன்னி யுத்தத்தின்போது தனது பெற்றோர்களைப் பறிகொடுத்த அனாதரவான ஒன்றரை வயதுடைய நகுல்ராஜ் நக்கீரன் என்ற குழந்தையினைப் பராமரிக்கும் செலவாக மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயினை திரு.லக்கிராஜா அவர்கள் பெருமனதோடு வழங்கி வருகின்றார். அப்பணங்களும் தகுந்த முறையில் அந்தச் சிறுவனுக்கு 2012 டிசெம்பர் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளன.

 • பெப்ரவரி 2011: கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆதரவில் காரைநகரில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக்கோட்டம் நடாத்தியது. இதற்கு எமது மன்றம் சுமார் 107,950.00 அனுப்பி வைத்தது.

 • 30.05.2011இல் காரைநகர் ஈழத்துச்சிதம்பர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிதிசேகரிப்பில் பல காரை அன்பர்கள் தம்மாலான நிதியுதவிகளை வழங்கியிருந்தனர். சுமார் 5இலட்சம் ரூபாய்கள($4283.00) அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 • காரைஒளி சஞ்சிகை: 23.01.2011 இல் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சிப்பாதையில் மற்றுமோர் முக்கிய பதிவாக முதன் முதலாக காரைஒளி சஞ்சிகை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சஞ்சிகையானது காரைநகர் செய்திகளையும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் செய்திகளையும் தாங்கியதாக முழுவர்ணப் பதிப்பாக வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகையை வெளியிட்டு வைப்பதற்காக வெளியீட்டு விழா கனடா செல்வச் சந்நிதி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மன்றத்தின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

 • அத்துடன் அதன் இரண்டாவது சஞ்சிகை 30.06.2011இலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காரைநகர் மாணவர் நூலகத் திட்டம்- நாகரீகமும், நவீன தொழில்நுட்பங்களும் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் காரைநகரில் ஓர் மாணவர் நூலகம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்று கல்வி ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டது. சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை கல்வி சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்துறை சார்ந்த நூல்களும், நவீன கற்றல் உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டு காரை அபிவிருத்திச் சபையினரால் அமைக்கப்படவுள்ள இந்நூல் நிலையத் திட்டத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது முழு ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதுடன் இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்தியிருந்தது. இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல சாத்தியமான வழிகளில் உதவிகள் புரிந்திடவும், நிதி சேகரிக்கவும் என உபகுழு ஒன்று திரு. அமிர்தலிங்கம் நடராஜா அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இயங்கிவருவது நீங்கள் அறிந்ததே. இத்திட்டத்திற்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் பெருவரவேற்பை வழங்கி சுமார் $14,332.00 டொலர்கள் நிதியுதவியினை வழங்கி ஆதரவளித்தார்கள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இத்திட்டத்திற்கு தமது முழுமையான ஈடுபாட்டினை வழங்கி கனடாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் உள்ள காரை மன்றங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள வசதி செய்துகொடுத்த எமது இணைப்பாளர் திரு.நடராஜா அமிர்தலிங்கம் அவர்களுக்கு எமது மன்றம் தனது பிரத்தியேகமான மனப்பூர்வமான நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 29.07.2011 இல் இத்திட்டத்தின் ஆரம்பகட்ட கட்டுமாணிப்பணியை ஆரம்பிக்கும் முகமாக
• முதற்கட்ட நிதியாக $1726.00 டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
• இரண்டாவது கட்டமாக $10,000.00 டொலர்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
• மூன்றாவது கட்டமாக 03.02.2013 இல் $2586.00 டொலர்களும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதுவரையில் மொத்தம் 54பேரிடமிருந்து $14,332.00டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

• 05.11.2011 இல் தோப்புக்காடு பாடசாலைக்கு அலுமாரி வாங்குவதற்காக 30,000.00ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

 • 05.11.2011 இல் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு காரை அபிவிருத்திச் சபையால் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு அனுசரணையாக 50,000.00ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • 24.12.2011 கனடா காரை கலாச்சார மன்றத்தினால் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் GTA Square மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம் அவர்களை தலைவராக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மற்றும் களபூமியிலுள்ள சிறிய பாடசாலைகள் ஆகியனவற்றை விசேடமாக கவனிப்பதற்கு பழைய மாணவர் சங்கம் ஒன்று எமது மன்றத்துடன் இணைந்து செயலாற்றக்கூடியதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக பின்னர் அவை இயங்கமுடியாத நிலைமைகள் ஏற்பட்டது.

 • 07.01.2012காரைநகர் மணிவாசகர் சபைக்கு 25ஆயிரும் ரூபாய்களும் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு 50ஆயிரம் ரூபாய்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

 • 21.01.2012இல் எமது மன்றத்தால் கடந்த இரண்டு வருடங்களாக காரைநகரில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக் கோட்டத்தினர் நடாத்தி வருகின்றனர். இவ்விசேட பயிற்சிப் பட்டறைகளுக்கு ஆரம்ப ஆயத்தங்களை(வினாத்தாள்) வழங்குவதற்கு 50,000ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• 16.02.2012 இல் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா வைத்தியசாலைகளில் பாவிக்கப்பட்ட கட்டில் ஒன்று அமரர் வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் காரைநகரிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அணுகியிருந்தார்கள். எமது மன்றம் இதற்கான அனுப்பும் செலவை ஏற்று $425.00 டொலர்கள் செலவழித்து அனுப்பி வைத்தது.

 • 18.02.2012 எமது மன்றத்தால் $604.78டொலர்கள் பெறுமதியான Laptop Computer ஒன்று காரைநகர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 • 08.02.2012இல் காரைநகர் இந்துக்கல்லூரியின் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிக்கு எமது மன்றத்தால் 65,000ரூபாய்கள் அப்போது தற்காலிகமாக மன்றத்துடன் இயங்கிய காரை இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கி அப்பணம் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

• ''முதுசங்களைத் தேடி' என்னும் தலைப்பில் கனடா காரை கலாச்சார மன்றமும் காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து நீண்ட கால செயற்திட்டம ஒன்றினை முதன்முறையாக முன்னெடுத்துள்ளனர். அதாவது எங்கள் முன்னோரின் அரிய ஆக்கங்களையும் அவர்கள் பற்றிய தகவல்களையும் மீள உலகெங்கும வாழும் எங்கள் ஊர் மக்கள் முன்கொண்டு வருதலேயாகும்.  இத்தேடல் பயணத்தில் அனைத்துக் காரை மன்றங்களும் இணைந்துள்ளன. இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி முதுசங்களைத் தேடி என்னும் திட்டத்தின் ஊடாக மீண்டும் இன்னும் ஒரு நல்ல படைப்பை வெளிக்கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படும். இதில் முதலாவதாக 'காரைநகர் மான்மியம்' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டுவிழா  7.02.2012இல் காரைநகரில் ஈழத்துச்சிதம்பர இரதோற்சவநாளில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரை வசந்தம் 2012 விழாவிலும் இந்நூல் வெளியிடப்பட்டது. கனடாவில் வெளியிடப்பட்டது. இதில் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற பணம் முழுவதும் லண்டன் காரை நலன்புரிச்சங்கத்தினரால் முதுசங்களைத் தேடி நிதியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

 • மே. 2012: சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவுக்கு 50,000ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • யாழ்ரன் கல்லூரியில் கணினி ஆசிரியர்களின் சம்பளம் வழங்கவென முதல் 6மாதத்திற்கான வேதனங்களை காரை நலன்புரிச்சங்கமும் அடுத்த 6மாதத்திற்கான வேதனங்களை கனடா காரை கலாச்சார மன்றமும் வழங்க இணங்கியதற்கிணங்க 80,000 ரூபாய்கள்(ஜுலை 2012 மாதம் தொடக்கம் டிசெம்பர் 2012 வரை) அனுப்பிவைக்கப்பட்டது.

 • அத்துடன் யாழ்ரன் கல்லூரிக்கு கொம்பியூட்டர் அறைக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துவதற்காக மேலும் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

 • 26.12.2012 கனடா காரை கலாச்சார மன்றம், லண்டன் காரை நலன்புரிச் சங்கங்கம் ஆகியனவற்றின் ஆதரவில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்று நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு எமது மன்றம் சார்பில் 30ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• திருமதி. இரத்தினபூபதி சோமசுந்தரம் அவர்கள் கடந்த வருடம் மறைந்த தமது கணவர் அமரர் சோமசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நன்கொடையாக சுமார் $3000.00 டொலர்களை எமது மன்றத்திற்கு வழங்கியிருந்தார். இவ்வுதவிப்பணம் முழுவதும் கட்டாயமாக வறியோர்களையே சென்றடைய வேண்டுமென்ற அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கீழ்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* காரைநகர் மாணவர் நூலகத்திற்கு அன்பளிப்பாக $2000.00 டொலர்களும்

 * காரைநகர் அரசாங்க அதிபர் பணிமனையினால் சர்வதேச வறிய சிறுவர்கள், முதியோர் தினத்தையொட்டி சுமார் 1இலட்சம் ரூபா பெறுமதிக்கு வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் முதியோர்களுக்கு உடுபிடவைகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை காரை அரசாங்க அதிபர் நேரடியாக வறியோர்களை இனம்கண்டு இவ்வுதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

* களபூமி விளானையில் இயங்கிவரும் திருமதி. ராசமலர் நடராசா அவர்கள் நடாத்திவரும் விளானை முத்தமிழ் பேரவைக்கு ரூபா20,000.00 வழங்கப்பட்டது. இப்பேரவையில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவச சங்கீத, மிருதங்க. பரதநாட்டிய வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

* மற்றும் வாழ்வாதார வசதி குறைந்த அருட்செல்வி என்கின்ற வறிய குடும்பத்தினரிற்கு ரூபா 10,000.00 வழங்கப்பட்டது.

• டிசெம்பர் திருவாதிரை உற்சவ காலத்தில் காரைநகரில் வழமைபோல் மன்றத்தால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டுவரும் உதவியாக மாணிக்கவாசகர் அன்னதானசபைக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • அத்துடன் மணிவாசகர் சபைக்கு 25,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு பாடசாலையின் அபிவிருத்திக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்படும் உறவுக்குக் கரம் கொடுப்போம்…. திட்டத்தின் கீழ் மீண்டும் மூவருக்கு உதவித்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* காநைகரைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவம் கொண்ட கனகலிங்கம் சுதர்சன்  எனபவரது இரத்தப்புற்றுநோய் சிகிச்சைக்கு மிகக்குறுகிய காலத்திற்குள் கனடா, மற்றும் உலகம் வாழ் காரை மக்களும் வழங்கிய அன்பளிப்புக்கள் மூலம் பெறபட்ட நிதியான $12,443 டொலர்கள் அவருக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

* இத்திட்டத்தின் கீழ் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திரு.கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன்(இவருக்கு இருதயத்தில் துவார சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது) என்பவருக்கு சுமார் 92,800 ரூபாய்கள் நேற்று எமது மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 *மற்றவர் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29. இவருக்கான சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகளுக்கு கனடா வாழ் அன்புள்ளங்கள் வழங்கிய $725.00 டொலர்கள்(92,800 ரூபாய்கள்) முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவிகளை தாமாக முன்வந்து சேகரித்துத் தந்த அன்புள்ளங்களுக்கும் மற்றும் தனியாக வழங்கிய அன்புள்ளங்களுக்கும் எமது அன்புகனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

• அஞ்சலி – மன்ற கொள்கைக்கு அமைய இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்ற உறுப்பினர்கள் நேரில் சமூகமளித்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 • இதில் முக்கிய விடயமாக ஜனவரி 2011இல் எமது மன்றத்தின் ஆஸ்தான வித்துவானும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கீதத்தைப் பாடியவருமான எமது காரை மண்ணைச் சேர்ந்த கலைஞன் சங்கீத பூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

 • அத்துடன் ஜனவரி 2012இல் எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.கருணாகரன் அவர்களின் மறைவு செய்தியும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. எமது மன்றம் அன்னாரின் மறைவுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது நன்றிகள்: எமது நிர்வாகசபை கடந்த 4வருடங்களாக இம்மன்றத்தில் பல இன்னோரன்ன சேவைகளை வழங்கியிருந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கால கட்டப்பகுதியில் எமது மன்றத்தின் மாபெரும் வளர்ச்சியானது காரைநகர் மக்கள் அனைவரையும் சற்றே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதே நிஜமாகும். இக்கால கட்டப்பகுதியில் இணையத்தளம்  மூலம் எமது மன்றம் பாரிய வளர்ச்சியடைந்தமை பெரு வெற்றியாகும்.

 • தயவுசெய்து இனிவரும் காலங்களில் வரும் நிர்வாக சபைகளும் கடமை தவறாது இம்மன்றத்தின் செயற்பாட்டில் தன்னலம் கருதாது செயற்பட்டு வருங்காலத்தில் நாமும் எமது எதிர்கால சந்ததியினரும் ஓர் ஒற்றுமைபெற்ற சமுதாயமாக மாற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

• இக்கால கட்டத்தில் என்னுடன் சகல விதத்திலும் ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து சக நிர்வாகசபை உறுப்பினர்கள், போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

• மற்றும் பல வழிகளிலும் உதவி செய்த, விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், தொண்டர்கள், பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

"Working together is success"

மலர். குழந்தைவேலு
செயலாளர்-கனடா காரை கலாச்சார மன்றம்
24.02.2013.

Leave a Reply