உ
சிவமயம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும்,
காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்தும்
தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019
அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் ஊர்ப்பணியை நினைவுகூரும் முகமாக “தியாகத் திறன் வேள்வி” என்ற மகுடத்துடனும் எமது சபையின் உயரிய நோக்கான “ஆளுயர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடனும் நாம் இப்போட்டிகளை வருடாந்தரம் நடத்துகின்றோம். அறிவே அனைத்து ஆற்றலும் என்பதற்கிணங்க நாம் காரை மண்ணின் மாணாக்கரின் ஆளுமையை வளர்க்கவென இப்போட்டிகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தி வருகின்றோம்.
எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு தோளோடு தோள் நின்று 2014ஆம் ஆண்டில் இருந்து 2017வரையான காலப்பகுதிகளில் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களையே சாரும். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் கடந்த ஜந்தாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
மேற்படி போட்டியினை நடாத்தும் பொருட்டு போட்டிக்கான இணைப்பாளர்களாகிய திரு.ப.விக்னேஸ்வரன், திருமு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் காரை அபிவிருத்திச்சபை நிர்வாகத்தினரும் இணைந்து 05.09.2019ஆம் திகதி காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாணவர் நூலகத்தில் 13 பாடசாலை அதிபர்களையும் வரவழைத்து கடந்த வருடங்களை விட இவ்வருடம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பங்குபற்ற வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து இதற்கான ஆதரவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன் தியாகத்திறன் வேள்விப்போட்டிக்கான தலைப்புக்களும் வழங்கப்பட்டு அதிபர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு அன்றைய தினமே சகல பாடசாலைகளுக்கும் போட்டி தொடர்பான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு 27.09.2019 ற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடசாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் பிரகாரம் பொதுஅறிவு, திருக்குறள், கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகளை அந்தந்தப் பாடசாலைகளிலும் வாய்மொழிப் போட்டிகளான பேச்சு, பொதுஅறிவு வினாடிவினா, திருக்குறள் மனனம், தனிஇசை, குழுஇசை ஆகியவற்றை காரைநகர் இந்துக்கல்லூரியிலும் நடத்துவதற்கான திகதியும் நேர அட்டவணையும் அனுப்பப்பட்டு அப்போட்டிகளை நடத்துவதற்குரிய மேற்பார்வையாளர்களாக எமது ஊரைச் சேர்ந்த கல்வியாளர்களும் வெளியூரைச் சேர்ந்த கல்வியாளர்களும் மற்றும் பிரதேச செயலகம், பிரதேசசபை ஆகியவற்றில் பணிபுரியும் இத்துறை சார்ந்த மத்தியஸ்தர்களையும் பெற்று 14.10.2019 – பொதுஅறிவு, 16.10.2019 – திருக்குறள், 17.10.2019 – கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகள் 11 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் திறம்பட நடாத்தப்பட்டது.
நடாத்தப்பட்ட திருக்குறள், பொதுஅறிவு ஆகிய எழுத்துப் போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்குரிய வாய்மொழிப் போட்டிகளும் பேச்சு, தனிஇசை, குழுஇசை ஆகிய போட்டிகளும் காரைநகர் இந்துக் கல்லூரியில் பின்வரும் தினங்களில் நடைபெற்றது.
23.10.2019 – பேச்சு ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு
24.10.2019 – திருக்குறள் மனனம் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு
25.10.2019 – பொதுஅறிவு வினாடிவினா ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு
28.10.2019 – தனிஇசை, குழுஇசை ஆரம்பப்பிரிவு
கடந்த வருடம் இப் போட்டிகளுக்கு 497 மாணவர்கள் பங்குபற்றினர். இவ்வருடம் இப்போட்டியினை 13 பாடசாலைகள் மட்டத்தில் மேற்கொண்டதன் பயனாக 1643 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள் என்பது சிறப்பம்சமாகும்.
தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019 நடாத்த வேண்டிய போட்டிகளுக்கான நேரசூசி கீழே காணலாம் போட்டிகள் யாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்
போட்டிக்குழு இணைப்பாளர்கள்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
10.11.2019