காரை அன்னை சைவ உலகிற்களித்த ஞானமுனி பேப்பர் சுவாமி என்றழைக்கப்படும் சுவாமி முருகேசுப் பெருமான்
அன்றும், இன்றும், தெய்வீக மணமும், ஆன்மீக சிந்தனையும், கலாச்சார விழுமியங்களும் தவழ்கின்ற கிராமமாக திகழ்கின்றது காரைமண். காரணம் என்னவென்றால் இம்மண்ணில் பழமையும், அற்புதங்கள் நிறைந்த ஆலயங்களது அருளாட்சி ஒருபுறமும், மறுபுறத்தில் இம்மண்ணில் காலத்திற்குகாலம் அவதரித்த ஞானிகள், புலவர்கள், தலைசிறந்த அறிவியலாளர்கள் போன்றோர் அளித்திட்ட அருட்செயல்கள் எனலாம்.
இந்த வகையில் சைவ சித்தாந்தம் எமக்களித்த மணிவாசகரைப் போன்று, காரை மண்ணுடைய சுவாமி முருகேசுப் பெருமானும் சைவ சித்தாந்த ஞானியாவார். கோவளக் கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் அயற்பகுதியில் பர்ணசாலை அமைத்து பிறவிப் பெருங்கடலில் தத்தளித்து அலைந்துலையும் மானிடப்பிறவிகளைப் பிறவித் துயரிலிருந்து கரையேற்றி, சைவ சித்தாந்தம் என்னும் அருமருந்து ஊட்டி நின்றவர் முருகேசு சுவாமிகள் ஆவார். எவ்வுயுறும் ஈ டேற வேண்டும் என்னும் இரங்கு கருணை கொண்டவராக திகழ்ந்திருக்கிறார்.
காரை மண்ணில் வாழ்ந்து,தன்னைஅண்டி வந்தோர்க்கு உய்யும் வழிகாட்டியாக மற்றும் அதிசயிக்கத்தக்க அற்புதங்கள் செய்து சமாதியடைந்த சுவாமி முருகேசுப் பெருமான் வணக்கத்துக்கு உரியவராகின்றார். அன்னாரின் நினைவாக 2018 ஆவணி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வு மகாநாடும் ” காரை தீபம் தந்த ஞான தீபம்” நூல் வெளியீடும் நடைபெற்றமை சிறப்பிற்குரியதொன்றாகும்.
இத்தகைய மகானுக்கு கோவளப் பெருந்துறையை சேர்ந்த ஞான முனியின் பகுதி புனிதபிரதேசமாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர் அன்னாரின் அறக்கட் டளையினர். அவர்களின் அன்னாரைப் பற்றிய நினைவுகளும், வேண்டுகோள்களும் உங்களுக்காக எடுத்து வரப்படுகின்றது .
பேப்பர் சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள நண்டுப்பாழி
Swami Murukesanar (2)