நாற்புறமும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழிலோடு கம்பீரமாக காட்சிதருகின்றது காரை மண். யாழ்ப்பாண குடாநாட்டின் பெருநிலப்பரப்போடு இணைக்கின்ற பொன்னாலை பாலத்தை கடந்து உள்ளே நுழைகின்றபோது ” காரைநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது ” என்கின்ற மகுட வாசகத்தோடு கூடிய வரவேற்பு வளைவு 11.06.2018 அன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சமய அனுஷ்டானங்களுக்கு பின்னர் ஆடவல்லான் நடராஜப் பெருமான் திருவுருவ சிலையை வீணாகான குரு முதல்வர் வாசுதேவ குருக்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நினைவுக்கல் மற்றும் நுழைவாசல் நாடா ஆகியவற்றை சிறுவர் விவகார பிரதி அமைச்சர் திருமதி .விஜயகலா மகேஸ்வரன் , மாநகர சபை ஆணையாளர் திரு . ஜெயசீலன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.
காரை மண்ணின் அழகை மேம்படுத்தும் பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது என்கின்ற பிரதான நுழைவாசல் நிர்மாணப் பணிகள் 2008ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு , சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுமுகமான சூழ்நிலையால் கசூரினா கடற்கரைக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகளையும், ஈழத்து சிதம்பர உற்சவ நிகழ்வுகளை தரிசிக்க செல்லும் அடியவர்களையும் மற்றும் உள்ளூர் , வெளியூர் வாசிகள் அனைவரையும் இந்த அலங்கார வளைவு வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
காரைநகர் வரவேற்பு வளைவு தொடர்பாக முன்னர் எடுத்துவரப்பட்ட செய்தி பார்வையிட கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும்.