சமூக மேம்பாட்டின் ஒளிவிளக்கு அணைந்தது.

சமூக மேம்பாட்டின் ஒளிவிளக்கு அணைந்தது.

காரைநகரில் தனது சிறு வயதில் இருந்தே தான் கல்வி பயின்ற பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் நடக்கும் விழாக்களையும் கலை நிகழ்வுகளையும் திறமையாக நடாத்துவதற்கு முன்னின்று உழைத்தவர் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள். ஒரு இனத்தின் மொழி, கலை, கல்வி, மேம்பாடுகளை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு தன்னாலான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்ற உயர்ந்த எண்ணக்கருவோடு வாழ்ந்தவர்.

சிறந்த கல்விமானாய் திகழ்ந்த கென்னடி அவர்கள் தழிழர்களின் ஆன்மீகம், கலை இலக்கியம், அரசியல் ஆகியவற்றின் மூலக்கருக்களை தெளிந்த சிந்தனையோடு தன்னகத்தே வைத்துக் கொண்டு சமூகத்திற்கான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து கொண்டு வந்தார்கள்.

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் ஆங்கில் இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் (11-08-2013) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ விஷ்ணு துர்க்கைஅம்மன் ஆலயத்தில் எமது சபையால் ஓழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அன்றில் இருந்து எமது சபையுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்தார்கள். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இலத்திரனியல் மூலமான மேற்பிரிவு மாணக்கரின் கட்டுரைப் போட்டிக்கான தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார்கள்.

2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவர்களுடையே அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உருவாக்கம் பெறுவதற்கும்,எமது சபைக்கு ஆலோசனை வழங்கியும் அதனை செயற்படுத்தினாரகள். அதன் இணைப்பாளராகவிருந்து பல விதமான திறன்கள் சார்ந்த போட்டிகளை நடாத்துவதற்கு நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தார்கள். இக் குழுவின் மூலம் 2015ஆம் ஆண்டு மாணக்கர்களுக்கான கட்டுரைப்போட்டி (அ)கீழ்ப்பிரிவு, (ஆ) மத்தியபிரிவு (இ) மேற் பிரிவு என விரிவாக்கம் பெற்று வெகு சிறப்பாக நடைபெறவதற்கும் தனது பங்களிபை வழங்கி இருந்தார்கள்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மைகண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்தமகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து எமதுசபையினரால் ஓழுங்குசெய்யப்பட்ட அமரரது நூற்றாண்டுவிழாவும், “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்புவெளியீடும் கடந்த 17.07.2016இல் .Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில இணைப் பேராசிரியர் அமரர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்பின் ஆசிரியராக சேவையாற்றி இத் தொகுப்பு சிறப்பாக வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

2016ஆம் ஆண்டிலிருந்து மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளராக சேவையாற்றி வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக “தியாகத்திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, பொதுஅறிவு – வினாடிவினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளிலும் நடாத்தி அனைத்துப் போட்டிகளும் சிறப்பாக நடைபெறுவதற்கு தனது நேரடியான பிரசன்னத்துடன் ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள்.

எமது சபையின் மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு “தியாகத் திறன் வேள்வி-2017” இல் சுவிஸ் நாதன் அவர்களது முழமையான அனுசரணையுடன் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சியை அறிமுகப்படுத்தி நாடகப் போட்டியையும் நடாத்த தீர்மானித்தது. முதற் பரிசுரூபாய் ஆறுபதாயிரம், இரண்டாம் பரிசுரூபாய் நாற்பதாயிரம், மூன்றாம் பரிசுரூபாய் பத்தாயிரம் எனவும் அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர் கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம் எனவும் அக்குழு அறிவித்திருந்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே மாணவர்களின் ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டியை நடாத்தத் தீர்மானித்தது.

வருடாந்தம் நடாத்தப்படும் தியாகத்திறன் வேள்வியின் ஓர் அங்கமாக இது இடம்பெற்றாலும் நாடகப் போட்டி மட்டும் பாடசாலைக்கு வெளியே உள்ள பரந்துபட்ட மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமானதாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நம் காரைச் சமூகத்தின் சிந்தனைப் போக்கு கலையுணர்வு சமூகஉறவு ஆகிய தளங்களில் புது இரத்தம் பாய்ச்சும் நோக்கிலேயே நாம் நாடகப் போட்டிகளை நடாத்தினோம்.

கடந்த ஆடி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் காரைநகருக்கு நேரடியாகச் சென்று இந் நாடகப் போட்டி, மற்றும் மாணவரின் அனைத்துப் போட்டிகளையும் சிறப்பாக நடாத்தியிருந்தாரகள். எமது வேண்டுகோளையேற்று கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு தலைமையேற்றும் அதனை சிறப்பாக நடாத்துவதற்கும் தனது ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.

ஊரின் கல்விமான்களையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமது சபையின் நோக்குகளில் ஒன்றாகும்.

எமது சபையால் நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் எழுதி வந்தார்கள்

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கு கடந்த 03.12.2017இல் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் எமது சபையால் மதிப்பளிக்கப்பட்டது. கலாபூஷணம் பண்டிதை. சோ. யோகலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்) அவர்களால் வாழ்த்துரை எழுதி வாழ்த்துரைக்கப்பட்டு திரு.ஆறுமுகம் சிவசோதி (முன்னாள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்) அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கப்பட்டது.

அமரர் நல்லதம்பி விஜயரத்தினம், சிவயோகம் விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் இளைய மகன் ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக சுவிற்சர்லாந்திலும், காரைநகரிலும் எமது சபையுடன் சேர்ந்து செயலாற்றி இருந்தாரகள், அவர்களது செயற்பாட்டின் நிழற்படங்களை கீழே காணலாம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

இங்ஙனம்
சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
16.01.2018