தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை
தீவுக்கு விலாசம் தேடித் தந்த தியாகன்
தீவுக்கு விலாசம் தேடித் தந்த தியாகன் நீ !
நீ தேடித் தந்த விலாசத்தை தொலைத்ததால்
அறிவுத் தபால்கள் மிக அரிதாகவே ஊருக்குள் வருகின்றன !
படித்தவன் என்பதனால் பதவிகள் உன்னிடம் பாடம் கேட்டன
வந்து பல்லிளித்த பணம் பல்லுடைபட்டுப் போய் பதுங்கிக் கொண்டது !
வியாபரிகள் விளைந்த ஊரில் பிறந்தாலும்
அரசியலில் வியாபாரமும் வியாபாரத்தில் அரசியலும்
உனக்கு கடைசிவரை விளங்கவேயில்லை
அதனால் நீ விரித்த சந்தையில்
வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கினாய் !
நேர்மையைத் தத்தெடுத்த ஞானக் கிறுக்கன் நீ
அதனால் நேராகவே நடக்கத் தெரிந்தவன்!
உன் நடையை ஞானம் உள்ளவர்கள் மட்டுமே விளங்கிக் கொண்டனர் !
ஞானத்தை முறுக்கிய உன் முஷ்டிக்குள்
முடக்கிக் கொண்டதால் முட்டாள்கள்
பல சமயங்களில் உன்னிடம் மூக்குடைபட்டனர் !
அபிவிருத்தி அரசியல் விளக்கேற்றி
அரசியல் அபிவிருத்தி வெளிச்சம் பெறலாம்
என்பதை விளங்காத வீணர்கள்
அன்று விளக்கை உடைத்ததால்
இன்றும் விடியா இருளுக்குள்
வெளிச்சத்தை தேடுகிறோம் !
ஆக்கியோன்: சைவப்புலவர் பத்மானந்தன்
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
25 – 05 – 2017