வெகு சிறப்பாக நடைபெற்ற செல்வி டக்ஷனா ஞானகாந்தன் செல்வி கோசலா ஞானகாந்தன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்
திரு.திருமதி ஞானகாந்தன் அனுசூயா தம்பதிகளின் புதல்விகளும் "இன்னிசை வேந்தர்" சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கத்தின் மாணவிகளுமாகிய செல்வி டக்ஷனா, செல்வி கோசலா சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் சென்ற 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் இசைக் கலா மன்றத்தினால் 1120,Tapscott Roadஇல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகிய தமிழ் கலை அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் இசைக் கலா மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி பிரதம விருந்தினராகவும் பிரபல குழந்தை மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் சிறப்பு விருந்தினராகவும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல வீடு விற்பனை முகவரும் எழுத்தாளருமான திரு.சாம் சிவதாசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு அரங்கேற்ற நிகழ்வை சிறப்பித்தனர்.
அரங்கேற்ற சகோதரிகள் கடினமான உருப்படிகளைத் தெரிவுசெய்து சுருதியைப் பேணி தாளம் தப்பாது அவற்றினை பாடியதுடன் எவ்வித சோர்வுமின்றி தொடர்ச்சியாக மூன்று மணி நேரமாகப் பாடி சபையோரை அசத்தியிருந்தனர். ஒவ்வொரு உருப்படியும் பாடி முடிந்ததும் மண்டபத்தில் எதிரொலித்த பலத்த கரகோசம் இசைச் சகோதரிகள் தமது ஆற்றல் மிக்க இனிமையான இசையால் சபையோரை வசப்படுத்தியிருந்தமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. கனடாவிலுள்ள பிரபலம் மிக்க இசை நடனக் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், இசை மாணவர்கள், இசை ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்களால் அரங்கேற்ற மண்டபம் நிரம்பியிருந்தது. சங்கீத வித்துவான் தனதேவி மித்திரதேவா வயலினும் "சங்கீத கலாவித்தகர்" ரதிரூபன் பரஞ்சோதி மிருதங்கமும் "மிருதங்க ஜோதி" ரமணன் இந்திரகுமார் கடமும் திரு.சேயோன் அரியரட்ணம் மோர்சிங்கும் அரங்கேற்ற நங்கைகளின் சகோதரி நர்மிதா ஞானகாந்தன் தம்புராவும் இசைத்து அவர்களின் இனிமையான இசைக்கு உன்னதம் சேர்த்திருந்தனர். சபையில் உரையாற்றிய விருந்தினர்கள் இசைச் சகோதரிகளின் இசை ஆற்றலையும் அவர்களை சிறப்பாக தயார்படுத்திவிட்டிருந்த அவர்களின் குருவான தமிழ் இசை உலகின் புகழ்பூத்த மூத்த முன்னணிக் கலைஞரான சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களையும் அவரது துணைவியார் திருமதி ரஞ்சனா மற்றும் புதல்வி திருமதி கானப்பிரியா மயூரன் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டியிருந்தனர்.
தமிழ் இசைக் கலா மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி அவர்களும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா அவர்களும் செல்வவிநாயகர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஆலயத்தின் பிரமத குருவும் செல்விகளுக்கு பாரட்டு விருது வழங்கி மதிப்பளித்தனர். அரங்கேற்ற நிகழ்வுகளை பிரபல வானொலி மற்றும் அரங்க அறிவிப்பாளர் திரு.பா.ஞானபண்டிதன அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கியதுடன் ஆங்கிலத்திலான அறிவிப்புக்களை செல்வி. றேனிசாகி கமலநாதன் செய்திருந்தார்.