கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!
தகவல் தொழில் நுட்ப உலகில் வடபுலத்தை ஒர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge Competition நான்காவது ஆண்டாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இம்முறை வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான போட்டி நடைபெற்றது.
பங்கு பற்றிய அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web Application, Hardware Application எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர்.
இந்த வகையில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களைக் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிக் கொண்டனர்.
பேருந்து ஒன்றின் மிதிபலகையில் பயணிஒருவர் நிற்கும் போது சாரதிக்கு சிவப்பு சமிக்ஞையும், அப்பயணி இரண்டாவது மிதிபடியைத் தாண்டும்போது மஞ்சள் சமிக்ஞையும், மூன்றாவது மிதிபடியைத் தாண்டியபின் பச்சைசமிக்ஞையும் காட்டும் வகையிலும், ஒவ்வொரு பயணியும் பேருந்துக்குள் உட்செல்லும்போது கணக்கெடுக்கக் கூடியவகையிலும் வன்பொருள் தீர்வை வடிவமைத்த மேற்படி கல்லூரி அணி வடமாகாணத்தின் மிகச்சிறந்த வன்பொருள் தீர்வு (Best Hardware Application) வடிவமைப்பாளர்களுக்கான வெற்றிக் கேடயத்தை தமதாக்கி இவ்வாண்டும் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் சிறந்த Web Application வடிவமைப்பிற்காக மேற்படி கல்லூரியின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புச் சான்றிதழ்களை (Merit Certificate) பெற்றுக் கொண்டன.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பாடத்துறை கடந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நடைபெற்ற Yarl Geek Challenge Season-3 போட்டியிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு Best Hardware Application Team எனும் சாதனையை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தட்டிக் கொண்டமையும் இவ்வருடமும் அதே சாதனையை மேற்படி கல்லூரியே முறியடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Yarl Geek Challenge போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் பயிற்றுவித்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் பௌதிக விஞ்ஞானத்துறை ஆசிரியர் திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோரும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குமுரியவர்கள்.
இவ்வணியினருக்கான பரிசினை Yarl IT Hub நிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன அவர்களுடன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் படத்தில் காணலாம்.
மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.