உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015

                       ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
                                     எழுமைக்கும் ஏமாப் புடைத்து

     உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக

           சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்

                                மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015

                  ஆளுமை வளர்ச்சியே ஊர் வளர்ச்சி. ஊரபிவிருத்தியென்பது அவ்வூரின் இளந் தலைமுறையின் ஆளுமை விருத்தியிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அத்தகைய ஆளுமைகளினாலேயே ஊருக்கு வளர்ச்சியையும் நற்பெயரையும் ஈட்டித்தரமுடியும். காரைநகர் அபிவிருத்தி பற்றிய திட்டமிடலின் திருவாசகமாக, கால்கோளாக மேற்கூறிய கொள்கை நிலைப்பாட்டை எமது சபை நிர்வாகம் பின்பற்றிவருகிறது.

அதனடிப்படையிலேயே கட்டுரைப்போட்டிகள், நூல் வெளியீடுகள், விவாத அரங்குகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், பாடசாலைகளுக்கான பௌதீக மற்றும் ஆளணி வளங்களை மேம்படுத்தல் என்பனவற்றை எமது சபை இயன்ற அளவு துரிதகதியில் முன்னெடுத்து வருகிறது.     

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை கடந்த மார்கழி மாதம் நான்காம் திகதி 10ம் அகவையை நிறைவு செய்திருந்தது. இதனையொட்டி புலத்திலும் தாயகத்திலும் வாழும் காரைநகர் மாணவ மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி – 2014 நடாத்தப்பட்டது யாவரும் அறிந்ததே. அம்முயற்சி மாணவர்களிடையும், அறிவுசார் சமூகத்தினரிடையும் வரவேற்;பைப் பெற்றிருந்தது. இதனால் இப் போட்டியை வருடா வருடம் காரைநகர் மணிவாசகர் சபையுடன் இணைந்து நடாத்துவதென எமது சபை தீர்மானித்துள்ளது.

எமது கிராமத்தின் எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும், புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஒன்றிணைக்கும்; வண்ணமும் (கோடைகால விடுமுறையில்) புலம்பெயர் மாணாக்கர் கலந்து கொள்ளக்கூடிய விதமாகவும்; இக் கட்டுரைப் போட்டி எதிர்வரும் (ஆங்கில) ஆவணி மாதத்தில் காரைநகர் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நடராசா மண்டபத்தில் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம். 

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கடந்த வருடம் 11ஆம்,12ஆம்,13ஆம் ஆண்டு மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். போட்டி இம்முறை மூன்று பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     
கட்டுரைப் போட்டியை மிகத்திறமையாக நடாத்துவதற்கு எமது சபையால் கலை, கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பெயர் விபரம் வருமாறு:

(1)    பண்டிதர்  திரு.மு.சு. வேலாயுதபிள்ளை    (ஓய்வு நிலை அதிபர்)
(2)    பண்டிதை செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் (ஓய்வு நிலை ஆசிரியர்)
(3)    கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் (ஆங்கில இணைப்பேராசிரியர்,மடவளபு            பல்கலைக்கழகம், எதியோப்பியா)
(4)    திருமதி. தாரணி சிவசண்முகநாதசர்மா (சரஸ்வதி வித்தியாலய அதிபர் சுவிஸ்)
(5)    திரு. அருணாசலம் வரதராஜன் (பிரதி அதிபர், சித்தி விநாயகர் வித்தியாலயம், கூமாங்குளம், வவுனியா)
             
       இவர்கள் எமது சபையின் கோரிக்கைக்கிணங்க பரீட்சைக்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு செயல்படுவார்கள். 

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2014-கட்டுரைப் போட்டி

சென்ற வருடம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரை நாளின் போது பண்டிதை, கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம்  அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
முதல் மூன்று வெற்றியளர்களுக்குக் கேடயங்களும், பணப்பரிசில்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.

                                                  2014 சாதனையாளர்கள்
   
    முதலாம் பரிசு பெற்றவர்களான செல்வன் நிசாந்தன் ஜெயபாலசிங்கம் கொழும்பு இந்துக்கல்லூரி, மற்றும் செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன்  கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி காரைநகர் ஆகியோருக்கு காரை இளவறிஞர் விருதும்;, 

இரண்டாம் பரிசு பெற்ற செல்வி சாந்தினி கனகலிங்கம்  காரை இளஞ்சுடர் விருதும், 

மூன்றாம் பரிசு பெற்ற செல்வி டீனோஜா நவரட்ணராஜா காரைத்தென்றல் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.  பங்குபற்றிய ஏனைய மாணவர்களுக்கு   புத்தகங்களும் திறமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 


                                                               நன்றிகள்

       கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை ஒருங்கமைத்த  காரைநகர் மாணிவாசகர் சபைத் தலைவர் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்கள் , பண்டிதை, கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம அவர்கள், எமது சபையின் செயலாளர் திரு.த.தயாபரன் ஆகியோருக்கும். மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய சிம்மய மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரமச்சாரி சைதன்னியசுவாமிகள் அவர்களுக்கும், ஒய்வு பெற்ற வடமாகண கல்விப்பணிப்பாளர் திரு க.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், தமிழருவி த.சிவகுமாரன் அவர்களுக்கும், மாணிவாசகர் சபைச் செயலாளர் திரு.து.நாகேந்திரம் அவர்களுக்கும், லண்டன் நலன் புரிச்சங்க போஷகர் திரு.ப.தவராஜா அவர்களுக்கும், கலாநிதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், திருமதி தில்லையம்பலவாணர் அவர்களுக்கும் மாணவர்கள் சார்பாக நன்றியுரை வழங்கிய செல்வன் நிசாந்தன் ஜெயபாலசிங்கம் ஆகியோருக்கும் எமது சபையின் நன்றிகளும், பராட்டுதல்களும். இந் நிகழ்வை www.sivantv.com இணையத்தள தொலைக்காட்சியில் நிகழ்வுகள் தளத்தில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோவில் மணிவாசகர் விழா மலர் 02 நான்காம்பக்கத்தில் பார்த்து மகிழலாம். மேற்கூறிய போட்டியில் பங்குபற்றிய, மற்றும் பரிசுபெற்ற கட்டுரைகள் அனைத்தும் இவ்விணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டன. இவ்வருடமும் போட்டியாளர்களின் அனைத்துக் கட்டுரைகளும் இவ்விணைய தளத்தில் வெளிவரும்.  

                                                  கட்டுரைப் போட்டி 2015

இவ்வருடத்திற்கான விண்ணப்பபடிவத்தை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.  

எமது ஊரின் கல்வி வளர்ச்சியையே சிரமேற்கொண்டு தொண்டாற்றும் அதிபர்களாகிய, ஆசிரியர்களாகிய உங்களுடைய ஊக்குவித்தலோடும், பெற்றோர்களுடைய ஆதரவோடும் நம் மாணவச் செல்வங்களைப் புலமையாளர்களாக்கும் இக்கடினமான முயற்சியில் எம்மோடு கைகோர்த்து உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒற்றுமை, தன்நம்பிக்கை, நல்லெண்ணம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்பனவே இன்றைய எமது தேவைகள். 

                கட்டுரைப் போட்டிக்கான விபரங்களும் விதிமுறைகளும்

திகதி: ஆங்கில மாதம் ஆவணி 2, 9, 16 ஞாயிற்றுக்கிழமை. (மேற்குறித்த திகதிகளில் சரியான திகதி இவ்விணைய தளத்தில் பின்னர் அறியத்தரப்படும்)

நேரம்: காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை

இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.

இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள்.
 
(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

    போட்டியில் பங்குபற்றும் மாணக்கர் கீழ்காணும் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது பாடசாலை அதிபர்களிடமோ, அல்லது karaithenral2014@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கோ 10.07.2015க்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

    போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.

    சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள எட்டுத் தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம். 

    கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.

    கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக 
அ. பிரிவு மூன்று பக்கங்களிலும், 
ஆ. பிரிவு நான்கு பக்கங்களிலும் மற்றும் 
இ. பிரிவு ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.

    கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும்.

    தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாளின் போது மணிவாசகர் சபையினரால் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம். 

    இவ்வருடம் மேலதிகமான மாணவர் ஊக்குவிப்புத் திட்டமாக 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பும் மார்கழித் திங்கள் திருவெம்பாவை விழாவின் ஆதிரைநாளில் செய்ய இருக்கின்றோம். இது காரை இளம் சமுதாயத்தினரை எம் ஊரின் எதிர்கால அபிவிருத்திக்காக ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாகவும் அமையும் என்பது எமது எண்ணம். 

    இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாகப்  ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மாணாக்கர் தம் விபரங்களையும், பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.com  அனுப்பலாம்.

    மேற்குறித்த பரிசு பெறுவதற்கான இரண்டாவது தகுதியாக அவர்கள் சு.கா.அ.சபையின் 2015 ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியிலும் பங்கு பற்றுதல் வேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான பரிசுத்தொகை   (சுவிஸ் பிராங்குகளில்) விபரம் பின்பு அறியத்தரப்படும். 

    விண்ணப்பங்களை எதிர் வரும் 10-07-2015 க்கு முன்பதாக பாடசாலை அதிபர்கள் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது கீழே காணப்படும் விண்ணப்ப வாயிலூடாகவோ அனுப்பமுடியும்.

    காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுகளில் பிறந்து வாழும் காரை மாணவச் செல்வங்களும் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டும் என்பது எமது அவா. அதற்கான சிறப்புத் தேவைகள், தடங்கல்கள், விருப்பங்கள், கருத்துக்கள் இருப்பின் எமக்கு அறியத்தரவும். உங்கள் விருப்புக்கள் தேவைகள் கருத்தில் கொள்ளப்படும். அதற்கேற்ற வகையில் எம்மால் முடிந்த அளவு ஏற்பாடுகளை மாற்றியமைக்க முயற்சிப்போம். தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு இடம் கொடுக்கும் என நம்புகிறோம். குறிப்பாக கணிசமான மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அதே நாடுகளில் அதே நேரத்தில் போட்டிக்கான ஒழுங்குகளை மேற்கௌ;ளவும் அதிகளவான மாணக்கரின் இலங்கைக்கான பயணத்தேதியை ஒட்டி ஊரில் போட்டிக்கான திகதியை இறுதி செய்யவும் எமது சபை முயற்சிக்கும்.     

                                                           செயற் திட்டக் கூற்று

              இந்த யுகம் அறிவுக்கான யுகம். அறிவே அனைத்து ஆற்றலும் (Knowledge is power) என்பதற்கு இணங்க எமது மண் சார்ந்த வரலாறு, மொழி, பண்பாடு, மதம், கலை, இலக்கியம், மரபு சார்ந்த மருத்துவ அறிவு, விளையாட்டுத்துறை என்பன தொடர்பான அறிவையும் திறன்களையும் தற்காலத்தின் தேவையோடிணைந்த வகையில் எம்மரபு முன்மொழியும் அறக்கோட்பாடுகளின் வழி எமது இளையோரிடம் வளர்ப்பதே காலம் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. அதுவே நம் அபிவிருத்தித் திட்டங்களை சரியான முறையில் கொண்டு செல்வதற்கான முதற் படி, அதற்கான முதன்மையான குறைந்த பட்ச வேலைத்திட்டம். அதை நிறைவு செய்ய நாம் எடுத்திருக்கும் இம்முயற்சி சிறு துளியளவே. இது தொடர்பான ஆலோசனைகளை அனைத்துத் தரப்பினரிடமுமிருந்தும் எதிர்பார்க்கிறோம். தங்கள் ஆலோசனைகள் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளப்படும். 

                             நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.

                                                               நன்றி


                                                                                                                   இங்ஙனம்,
                                                                                       சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                 ஆனி 2015