காரைநகர் மணிவாசகர் சபையினரின் திருவாதவூரடிகள் புராண படனம்
ஈழத்துச் சிதம்பர வளாகத்தில் அமைந்துள்ள காரைநகர் மணிவாசக சபை மணிமண்டபம் புதுப்பொலிவு பெற்று இருப்பதுடன் மேலும் இம் முறை அம் மணிமண்டபத்தில் திருவெம்பாவை உற்சவ காலங்களில் திருவாதவூரடிகள் புராண படனம் நிகழ்வு நடைபெற ஆரம்பமாகியுள்ளது. 02-01-2017 பி.ப 2.00 மணிக்கு மிகவும் பக்தி பூர்வமாக சபைத்தலைவர் திரு.வே.முருகமூர்த்தி மற்றும் "அடியார்க்கு அமுதூட்டும் அண்ணல்", திரு.க.கு.சிவபாலன் ஆகியோராலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புராண படனச் சிறப்பு
புராணபடனம் யாழ்ப்பாணத்தில் நல்லை நகர் ஆறுமுகநாவலரால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சைவசமய மரபிலேயே புராணபடனத்தினை ஆரம்பித்தவர் நாவலர் பெருமானே ஆவார். யாழ்ப்பாணத்து ஆலயங்களில் கந்தபுராணத்தினைப் படிக்கச் செய்து யாழ்ப்பாணத்தை கந்தபுராண கலாசாரமாக்கியவர் நாவலர் பெருமானே ஆவார். இப் புராணபடன மூலம் சைவசமயக் கருத்துக்கள், சிறந்த தமிழ் இலக்கண அறிவு பாடல்களுக்கான தெளிவு தருவிளக்கங்கள் யாவற்றையும் கேட்கலாம்.
நாவலர் காலத்தில் அவரது மருமகன் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளை அவர்கள் புராணங்களுக்கு கருத்துக் கூறும் போது எள்ளுப் போட்டால் இடமில்லாத அளவுக்கு அடியார் கூட்டம் இருப்பார்கள். அது மட்டுமன்றி எத்தனையோ பண்டிதர்கள், வித்துவான்களும் பொன்னம்பலபிள்ளை அவர்களின் பயன் சொல்வதை கேட்டு குறிப்புக்கள் எடுப்பார்கள் இவற்றில் இருந்து புராண படன சிறப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அறியக் கூடியதாகவுள்ளது.