2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்திருந்தன. இப்பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த செல்வி. மயூரி சுப்பிரமணியம் 3A சித்திகளைப் பெற்று வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்து காரைநகர் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞானத் துறையில் பயின்ற செல்வி.மயூரி சுப்பிரமணியம் உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A தர சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதன்மை மாணவியாகவும்; மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்று விளங்குகின்றார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் செல்வி.மயூரி சுப்பிரமணியம் 8A,1S சித்திகளைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசிலுடன் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகும் சாத்தியப்பாடுள்ள இந்த காரைநகரைச் சேர்ந்த மாணவி காரைநகர் தங்கோடை சல்லை தம்பையா பாக்கியம் தம்பதிகளின் மகன் சுப்பிரமணியம் மற்றும் மருதடி பேரம்பலம்(காலஞ்சென்ற ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிகாரி) கனகாம்பிகை தம்பதிகளின் மகள் புனிதவதி ஆகியோரின் மூத்த மகளாவார்.
பாடசாலையில் பல சாதனைகளைப் படைத்த செல்வி.மயூரி பல சிரமங்களின் மத்தியிலும் தம்மைப் பெற்றோர் படிக்க வைத்ததாகவும் தாம் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்பதே தன் தந்தையின் கனவு எனவும் தமது இந்த வெற்றிக்கு தமது பெற்றோரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
காரை அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வி.மயூரி சுப்பிரமணியம் அவர்களின் சாதனைகளை பாராட்டுவதோடு மேலும் சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.